search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகா சிவராத்திரி"

    • இவ்வாண்டு கூடுதலாக 2 சிவத்திருத்தலங்கள் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • கோவில்களில் வருகிற 8-ந் தேதி மகா சிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், "மகா சிவராத்திரி விழா கடந்தாண்டு 5 சிவத் திருத்தலங்கள் சார்பாக பெருவிழாவாக ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடத்தப்பட்டதை போல், இவ்வாண்டு கூடுதலாக 2 சிவத்திருத்தலங்கள் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இந்தாண்டு கூடுதலாக மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களையும் சேர்த்து 7 கோவில்களில் வருகிற 8-ந் தேதி மகா சிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

    சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் நடத்தப்படும் மகா சிவராத்திரி பெருவிழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வருகிற 8-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்.

    கோயம்புத்தூர்:

    உலகின் மிகப் பிரம்மாண்டமான மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    ஈஷாவில் 30-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.

    சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்துக் கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.


    இந்நிலையில், ஈஷாவில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

    ஈஷா மகா சிவராத்திரி விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    திரையரங்க வரலாற்றில் முதல் முறையாக ஈஷா மகா சிவராத்திரி விழா பி.வி.ஆர். ஐநாக்ஸ் (PVR Inox)திரையங்குகளில் மார்ச் 8-ம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உட்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட PVR Inox திரையரங்குகளில் மகா சிவராத்திரி விழா நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை இவ்விழா ஒளிபரப்பு செய்யப்படும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்.

    கோயம்புத்தூர்:

    உலகின் மிகப் பிரம்மாண்டமான மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மகா சிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கிச் செல்வதற்கு உதவி புரிகிறது. இந்த நோக்கத்தில் தான் மகா சிவராத்திரி விழா நம் பாரத கலாசாரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஈஷாவில் 30-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.

    சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்துக் கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

    இதில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மகாலிங்கம், பஞ்சாபி இசைக்கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசைக்கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசைக்கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்ஜித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் (தனிஷ்க் சிங்) உள்ளிட்ட தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதவிர, ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த இசை மற்றும் நடனக்குழுவினரும் அரங்கை அதிர செய்ய உள்ளனர்.

    ஈஷா மகா சிவராத்திரி விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.

    கோவை தவிர்த்து மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உள்பட தமிழ்நாட்டில் 36 இடங்களில் இவ்விழா நேரலை ஒளிபரப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    • சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.
    • சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி' என்று வழிபடுகிறோம்.

    சக்தியை வழிபட நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்னும் ஒரு நாள் முக்கியமானதாக இருக்கிறது. இந்த நாளில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.

     மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் கால பூஜை, இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை இரண்டாவது கால பூஜை, இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை நான்காவது கால பூஜை. இதில் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை லிங்கோத்பவ காலமாகும். இதை ஞாபகப்படுத்தும் விதமாக சிவாலயங்களில் கர்ப்பக் கிரக (வெளிப்புறத்தில்) கோஷ்டத்தில் லிங்கோத்பவர் மூர்த்தி காட்சி தருவதைப் பார்க்க முடியும்.

    சிவராத்திரியை ஐந்து வகையாக சொல்வார்கள். அது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி' என்று வழிபடுகிறோம்.

    அன்றைய தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து மாலை முதல் மறுநாள் காலை வரை நான்கு யாமங்களிலும் ஸ்ரீ ருத்ர மகா மந்திரங்களை சொல்லி,11 திரவியங்களால் (வாசனை தைலம், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர் சுத்தமான நீர் கொண்டு அல்லது விபூதி கொண்டு அபிஷேகம் செய்யப்படும்) சிவபெருமானை அபிஷேகித்து வழிபடுவார்கள்.

     மகா சிவராத்திரி பிறந்த கதை

    ஒரு கிருத யுகத்தில் இந்திரன் தனது ஐராவதம் என்னும் யானை மீது ஏறி வந்துகொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் தனக்கு மகாலட்சுமி அளித்த மாலையை, இந்திரனுக்கு கொடுத்தார். அதை இந்திரன் தன் கையால் வாங்காமல் தன் வாகனமாகிய ஐராவதத்தை வாங்கச் சொல்ல, யானையோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி தன் காலில் போட்டு மிதித்தது. இதனால் கோபம் அடைந்த துர்வாச முனிவர், இந்திரன் தன் செல்வத்தை இழந்துபோவான் என்று சபித்தார். அதன்படி செல்வத்தை இழந்துபோன இந்திரன், பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டு, இழந்த செல்வத்தைப் பெற முயற்சித்தான். இந்திரன் பூஜித்த காலமே மகா சிவராத்திரி என்கிறார்கள்.

     அதே நேரத்தில் இன்னொரு கதையும் சொல்வார்கள். அசுரர்கள் இறந்து விட்டால் அவர்களுக்கு குருவாக இருக்கக்கூடிய சுக்ராச்சாரியார், தனக்கு தெரிந்த `மிருத்த சஞ்ஜீவினி' மந்திரத்தால் அவர்களை பிழைக்க வைத்து விடுவார். எனவே தேவர்கள், தாங்களும் இறக்காமல் இருக்க ஏதாவது வழி உண்டா என்று பிரம்மாவிடம் கேட்டனர். அதற்காக பாற்கடல் உள்ளிருக்கும் அமிர்தத்தை எடுக்க யோசனை கூறப்பட்டது. அதன்படி தேவர்கள் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முற்பட்டனர். ஆனால் தேவர்களால் பாற்கடலைக் கடைய முடியவில்லை. எனவே துணைக்கு அசுரர்களையும் அழைத்தனர். அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைவதாகவும், கிடைக்கும் அமிர்தத்தை பகிர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.

    வாசுகி பாம்பின் தலைப் பகுதியை அசுரர்களும், வால் பகுதியை தேவர்களும் பிடித்து மந்தார மலையைக் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினர். அப்பொழுது பாற்கடலின் உள்ளிருந்து காமதேனு, கற்பக தரு, ஐராவதம், கவுஸ்துபம் என்ற மணி, லட்சுமி தேவி, சந்திரன் போன்றோர் வெளிவர ஆரம்பித்தனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்பாக ஆலகாலம் என்ற விஷம் வெளிப்பட்டது. இதன் சக்தியால் அனைத்து உலகங்களும் வெப்பத்தில் தகித்தது. இதைக் கண்டு பார்வதி தேவி, பரமேஸ்வரனிடம் முறையிட்டார்.

    உடனே பரமேஸ்வரன் அந்த ஆலகால விஷத்தை எடுத்து உண்டார். உலகத்தையே காத்தருளும் சிவனை, ஆலகால விஷம் என்ன செய்து விட முடியும்? ஆனாலும் மயங்கி சரிவதுபோல் தோற்றம் கொண்டார், நீலகண்டர். இதைக் கண்ட தேவர்கள் பயந்து, "சுவாமி தாங்கள் கண் விழித்து எங்களை காக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்தனர். தேவர்கள் அவ்வாறு சிவபெருமானை பூஜித்த அந்த காலமே `மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.

     மகா சிவராத்திரி விரத பலன்

    முன்பொரு சமயம் வேதங்கள் நன்றாக கற்ற ஒரு அந்தணர், அவர் இல்லத்தில் கிளிகள் வளர்த்து வந்தார். கூண்டில் அடைத்து கிளி வளர்த்த தோஷத்தாலும், அதன் மேல் உள்ள பற்றாலும், இறக்கும் பொழுது கிளிகளின் நினைவாகவே இறந்தார். மறுஜென்மத்தில் அவர் வேடனாக பிறந்து, காட்டில் வேட்டையாடி தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ஒரு முறை காட்டில் வேட்டையாட சென்றபோது, வேடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

    எனவே விலங்குகளைத் தேடி நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றுவிட்டான். இருள் சூழும் நேரம் ஆகிவிட்டதால் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அப்போது தாகம் எடுக்க, வில் -அம்புகளை தரையில் வைத்து விட்டு ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்க இறங்கினான்.

    அந்த வேளையில் வேடனை தாக்க ஒரு புலி பாய்ந்து வந்தது. இதனால் பதறிப்போன வேடன், வில்-அம்புகளை எடுக்க முடியாமல் அவசரமாக ஓடி பக்கத்தில் இருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான். இரவு முழுவதும் புலி அந்த மரத்தை சுற்றி வந்தது.

    வேடனுக்கு கை, கால் எல்லாம் நடுக்கமாக இருந்தது. பசியால் தலை சுற்றியது. எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் அந்த மரத்தின் கிளைகளைப் பற்றிய படியே இருந்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் கீழே பார்த்தபோது, புலி அங்கே இல்லை. இதையடுத்து வேடன் கீழே இறங்கி வந்தான். பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த வேடன் வயது முதிர்ச்சியால் இறந்தான்.

    அந்த வேடனின் ஆன்மா எமலோகம் சென்றது. அங்கே எமனிடம் `இந்த வேடனின் வாழ்வில் பாவங்கள் எதுவும் இல்லை' என்று சித்திரகுப்தன் கூறினார். தன் வாழ்நாளில் பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாப கணக்கில் எதுவும் இல்லை என்றது, எமதர்மனுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    வேடன் செய்த புண்ணியம் என்ன என்று பார்க்க, முன்பு புலிக்கு பயந்து வேடன் ஏறி அமர்ந்தது, வில்வ மரம் ஆகும். அன்றைய தினம் மகா சிவராத்திரி. பயத்தில் கைகள் நடுங்க கிளைகளைப் பற்றி இருந்ததால், அந்த நடுக்கத்தில் வில்வ இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தன.

    வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது. அந்த சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகள் விழுந்தன. மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல், வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது என்பதை எமதர்மனும், சித்திரகுப்தனும் அறிந்தனர். வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களை கூட போக்கும் தன்மை கொண்டது, மகா சிவராத்திரி வழிபாடு.

    மகா சிவராத்திரி அன்று உபவாசம் இருத்தல் (சாப்பிடாமல் இருப்பது), பூஜை செய்வது, தூங்காது இருத்தல் ஆகியவை முக்கியமானவை. சிவராத்திரி அன்று உணவு தவிர்க்க முடியாதவர்கள், பால், பழம், வேகவைத்த பொருள் சாப்பிட்டு உபவாசம் இருக்கலாம். பகலிலும், இரவிலும் தூங்காமல் இருப்பது, புண்ணியத்தை தரும் சிவலிங்கத்தை பூஜிப்பது, சுவாமியை சிவாலயம் சென்று தரிசிப்பது மிக விசேஷமானது. 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி தொடங்கி 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி வரை சிவராத்திரி தினம். அன்றைய தினம் இரவு கண் முழிப்பது மிக அவசியம். விளக்கேற்றுவதும், அபிஷேகப் பொருட்கள் கொடுப்பதும் மிகுந்த புண்ணியத்தை தரும்.

    மகா சிவராத்திரியில் சொல்ல வேண்டிய மந்திரம்

    அரிதிலும் அரிதான அனைவரும் ஜெபிக்க வேண்டிய மோட்சத்தைத் தரும் சிவ பஞ்சாட்சர மகா மந்திரம், 'ஓம் நமசிவாய'. இந்த மந்திரத்தை நம் சக்திக்கேற்றபடி 108 அல்லது 1008 முறை மகா சிவராத்திரி அன்று ஜெபிக்கலாம். சக்தி பஞ்சாட்சரி மந்திரம், `ஓம் ஹ்ரீம் நமசிவாய'. இதனையும் தங்களின் சக்திக்கேற்ப ஜெபிக்கலாம்.

    ஸ்ரீ குரு தாரக பஞ்சாட்சரி மந்திரம், 'ஓம் ஓங்காராய நம சிவாய, ஓம் நகாராய நமசிவாய, ஓம் மகாராய நமசிவாய, ஓம் சிகாராய நமசிவாய, ஓம் வகாராய நமசிவாய, ஓம் யகாராய நமசிவாய, ஓம் நம ஸ்ரீகுருதேவாய பரம புருஷாய ஸர்வ தேவதா வசீகராய ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்த்ர ச்சேதனாய த்ரைலோக்யம் வசமானய ஸ்வாஹா' என்ற மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.

    • உபவாசம் இருந்து பட்ச சிவராத்திரியில் சிவபெருமானை வழிபட வேண்டும்.
    • சிவன் என்றால் மங்களம் என்று பொருள்.

    சிவபெருமானுக்கே உரிய சிவராத்திரி 5 வகையாக கூறப்பட்டு இருக்கிறது.

    முதலாவதாக நித்திய சிவராத்திரி:

    நித்திய சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வரும். மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.

    இரண்டாவதாக பட்ச சிவராத்திரி:

    தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருந்து பட்ச சிவராத்திரியில் சிவபெருமானை வழிபட வேண்டும்.

    மூன்றாவது மாத சிவராத்திரி:

    மாத சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வரும். சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.

    நான்காவது யோக சிவராத்திரி:

    திங்கட்கிழமை அன்று பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.

    ஐந்தாவது மகா சிவராத்திரி:

    பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பெளர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும்.

    ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவருக்கு ஏற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்தசி. இந்த சதுர்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பெளர்ணமி. தொடக்கம் முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.

    எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.

    • கோவில் தரிசனம் கோடி புண்ணியம்.
    • மகா சிவராத்திரி அன்று 4 கால வேளைகளில் வழிபட வேண்டிய ஆலயங்கள்.

    கோவில் தரிசனம் கோடி புண்ணியம். வீட்டில் இருந்தே சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டாலும், சிவராத்திரி விழாக்களை நடத்தும் திருக்கோவில்களை தரிசிப்பது கூடுதல் பலனைத் தரும். மகா சிவராத்திரி அன்று 4 கால வேளைகளிலும் வழி படக்கூடிய 4 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

     தென்குடி திட்டை

    பாவம் போக்கும் சிவராத்திரி அன்று கும்பகோணம்-தஞ்சாவூர் வழியில் உள்ள திட்டைத் திருக்கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. ஒரு யுக முடிவில் உயிரினங்கள் யாவும் அழிந்தன. உலகு நீரில் மூழ்கியபோது ஒரு திட்டையான இடத்தில் பரமசிவனும் பார்வதியும் வசிஷ்டேஸ்வரர், உலக நாயகியாகத் தோன்றி உலகைக் காத்தனர்.

    அந்த மேட்டுப் பகுதியே திட்டைத் திருத்தலமாகும். இங்கே குரு பகவானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இத்தல மூலவர் மீது எப்போதும் நீர் விழுந்து கொண்டிருக்கும். இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி அன்று முதல் கால பூஜையில் வழிபாடு செய்யலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தென்குடி திட்டை.

     தேவராயன் பேட்டை

    ஒரு பிரளய காலத்தில், ஒரு அரக்கன் பிரம்மனிடமிருந்து படைப்புத் தொழில் புரிவதற்கான வேதங்களைத் திருடிச்சென்று கடலுக்கு அடியில் மறைத்து விட்டான். திருமால் மச்சாவதாரம் (மீன்) எடுத்து, வேதங்களை மீட்டார். ஆனால் அசுரனைக் கொன்ற தோஷத்தின் காரணமாக அவரால் சுய உருவை அடைய முடியவில்லை.

    திருமால், தேவராயன் பேட்டையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தோஷம் நீங்கி, சுயஉருவம் பெற்றார். இங்குள்ள மச்சபுரீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியின் இரண்டாவது கால வேளை பூஜையில் வழிபடலாம். தென்குடி திட்டையில் இருந்து தேவராயன்பேட்டை சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

     பாபநாசம்

    ராவணன், கரன், மாரீசன் போன்ற அரக்கர்களை கொன்றதால், ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் வழிபட்டாலும், முழுமையாக பாவம் நீங்கும் வகையில் பாபநாசம் ராமலிங்க சுவாமி கோவிலிலும் ராமபிரான் வழிபாடு செய்தார். இதற்காக அனுமனிடம் ஒரு சிவலிங்கம் கொண்டு வரச் சொன்னார். அனுமன் வர காலதாமதம் ஆனதால், சீதை ஆற்று மணலால் 107 சிவலிங்கம் செய்து, அவற்றிற்கு ராமன் பூஜை செய்து வழிபட்டார்.

    பின்பு அனுமன் கொண்டு வந்த சிவலிங்கமும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு, 108 சிவலிங்கங்களுக்கும் பூஜித்ததால், ராமரின் பாவம் முழுமையாக நீங்கியது. இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரியின் மூன்றாம் கால வேளை பூஜையில் பங்கேற்கலாம். தேவராயன்பேட்டையில் இருந்து பாபநாசம் திருத்தலம் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

     திருவைகாவூர்

    வேடன் ஒருவன், காட்டில் மான் ஒன்றை வேட்டையாட முயன்றான். அந்த மான் தப்பி ஓடி, வில்வவனேஸ்வரர் கோவிலில் தஞ்சம் புகுந்தது. அங்கு தவத்தில் இருந்த முனிவர், மானுக்கு அபயம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வேடன், முனிவரைத் தாக்க முயன்றான். முனிவர் சிவபெருமானை வணங்க, சிவன் ஒரு புலியை அனுப்பினார். புலி வேடனைத் துரத்தியது. புலிக்குப் பயந்து வில்வ மரத்தின் மீது ஏறினான். அன்றைய தினம் சிவராத்திரி.

    புலி மரத்தின் அடியிலேயே இருந்ததால், தூங்காமல் இருக்க மரத்தில் இருந்து வில்வ இலையை பறித்து கீழே போட்டுக் கொண்டே இருந்தான். வேடன் வில்வ இலையை கீழே போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. இதனால் மகா சிவராத்திரி அன்று, 4 கால வேளையிலும் தூங்காமல் இருந்து சிவனை பூஜித்த பலன் அவனுக்கு கிடைத்தது. இந்த நிகழ்வு நடந்த திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி அன்று நான்காம் கால வேளை பூஜையில் பங்கேற்று வழிபடலாம். பாபநாசத்தில் இருந்து திருவைகாவூர் திருத்தலம் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    • மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
    • சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

    மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.

    இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

    இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.

    சிவராத்திரி விரத வகைகள்

    சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

    நித்திய சிவராத்திரி

    மாத சிவராத்திரி

    பட்ச சிவராத்திரி

    யோக சிவராத்திரி

    மகா சிவராத்திரி

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும்.

    சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

    விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய்

    காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும்.

    அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி

    (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

    சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

    • பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி சமயங்களில் சிறப்பு ஹோமங்களும் இங்கு நடக்கின்றன.

    பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திரு என்றால் செல்வம் என்று பொருள். தங்களது பெயரிலேயே 'திரு'வைக் கொண்டுள்ள இறைவனும், இறைவியும்; தங்களை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் 'திரு'வுக்குக் குறைவராமல் பார்த்துக்கொள்ளும் தலம், சென்னை மணலியில் அமைந்துள்ளது.

    பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கோயிலுக்கு தெற்குப் பார்த்த பெரிய நுழைவு வாயில். வாழ்வில் வரும் தடைகளைத் தகர்த்து, வெற்றிகளைத் தரும் விநாயகன் அரச மரத்தடியில் உள்ளார். செல்வ கணபதி என்னும் திருநாமம் கொண்டுள்ள இவரின் இருபுறமும் நாகர்கள் அருள்கின்றனர். பின், மூலவர் சன்னதி வருகிறது. மகாமண்டபத்தில் பலிபீடம், நந்தியைக் கடந்தால் அர்த்த மண்டபம். அங்கே அதிகார நந்தி, பிரதோஷ நாயகர் மற்றும் வள்ளி, தேவசேனையுடன் முருகர் ஆகியோரின் உற்சவ விக்ரகங்கள் உள்ளன. மூலவரின் கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை ஆகியோர் அருள்கின்றனர்.

    கருவறையில் மூலவர் திருவுடைநாதர் நாகாபரணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். ஆவணி மாதம் ஆதவன் தனது கிரணங்களினால் இவரை பூஜை செய்வாராம். தினமும் இரண்டு கால அபிஷேகம் நடைபெறும் ஈசனுக்கு, கார்த்திகை மாதம் நான்கு திங்கட்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கடைசி திங்களன்று 108 சங்காபிஷேகமும் உண்டு.

    அது தவிர பிரதோஷம், மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, சோமவாரம் தோறும் சிவசகஸ்ர நாம பாராயணம், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் என பல விசேஷ நாட்கள் இங்கு சிறப்பிக்கப்படுகின்றன.

    கடன் தொல்லையால் அவதிப்படுவோர் மூலவரை மனமுருக வேண்ட, படிப்படியாய் அத்தொல்லை தீருவதாக நம்பப்படுகிறது. தம்மை வணங்கும் பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் எல்லா தடைகளையும் தகர்த்தெறியும் வல்லமை மிக்கவராம் இவர்.

    பிராகார வலம் வருகையில், கருவறைக்குப் பின்புறம் வரசித்தி விநாயகரை தனி சன்னதியில் தரிசிக்கலாம். இவருக்கு முன்னால் பலிபீடமும், மூஞ்சுறு வாகனமும் உள்ளது. சங்கடகர சதுர்த்தியில் இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன.

    மூலவருக்கு இடதுபுறம் தனி சன்னதியில் வள்ளியுடன் தேவசேனை சமேத சுப்ரமணியசுவாமி அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே மயில் வாகனம், பலிபீடம் உள்ளது. மாத கிருத்திகை, ஆடி, தை கிருத்திகைகளில் சிறப்பு அலங்காரம், விபூதி காப்பு, சந்தனக் காப்பும், கந்தர்சஷ்டியில் திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தன்று 108 பால்குட அபிஷேகமும் இவருக்கு விமரிசையாக நடக்கிறதாம்.

    முருகப் பெருமானுக்கு அருகில் கயிலாசநாதர் லிங்க வடிவில் அருள்கிறார். எல்லோராலும் கயிலைப் பயணம் சென்றிட முடியாது என்பதால், நான் உங்களுக்காக இங்கே இருக்கிறேன் என்று கூறும் பெரிய பாணலிங்கம்.

    மூலவருக்கு எதிரில், தெற்குப் பார்த்த சன்னதியில் திருவுடைநாயகி என்னும் திருநாமத்துடன் அம்பாள் அருள்கிறாள். ஸ்வர்ணபுரீஸ்வரி என்ற திருப்பெயரும் கொண்டுள்ள இவள், மிகுந்த வரப்பிரசாதி.

    அன்புததும்பும் அழகான கண்கள், கருணையே உருவான தீட்சண்யமான பார்வை, மெல்லிய உதடு, கொடிபோல் அழகான இடை, நலமருளும் நாற்கரங்கள் என அழகிய திருக்கோலத்துடன் ஆட்சிபுரியும் அம்மனை நாள் பூராவும் அலுக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    இவளுக்கு பௌர்ணமி அன்று அபிஷேகம், சித்ரா பௌர்ணமியன்று திருவிளக்கு பூஜை, நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம், ஆடிப்பூரத்தன்று வளையல்காப்பு, சாகம்பரி அலங்காரம், 108 பால்குட அபிஷேகம், ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் என வருடம் முழுதும் பல விழாக்கள் நடக்கின்றன.

    திருமணத்தடைகளை நீக்குவதில் இவளின் பங்கு மகத்தானது. நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள், அவர்களின் நட்சத்திர நாளில் மஞ்சள் பூசிய தேங்காயைக் கொண்டு வந்து அம்மன் காலடியில் வைத்து, அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். பூஜிக்கப்பட்ட அத்தேங்காயை வீட்டில் வைத்துக் கொண்டால், வெகு விரைவில் அப்பெண்களுக்கு திருமணம் நடந்துவிடுவதாகச் சொல்கிறார்கள்.

    இக்கோயிலில் அருள்புரியும் காலபைரவர் அழகே உருவானவர். இவருக்கு தேய்பிறை அஷ்டமியில் முந்திரி மாலை, ஏலக்காய் மாலை சாத்தப்படுகிறது. மனக்கவலை, வியாபாரத்தில் கஷ்டம் போன்றவற்றை நீக்கியருள்பவராம் இவர்.

    நவகிரகங்கள், தங்கள் வாகனங்களுடன் நின்ற கோலத்தில் அருள்கின்றனர். குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி சமயங்களில் சிறப்பு ஹோமங்களும் இங்கு நடக்கின்றன.

    மகாமண்டபத்தில், வடக்கு நோக்கி அனுமன் தரிசனம் தருகிறார். இவருக்கு மூல நட்சத்திரம் அன்றும், சனிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை, துளசி மாலை சாத்தப்படுவதுடன், வெண்ணெய்க்காப்பு, சிந்தூர அலங்காரம் ஆகியவையும் உண்டு.

    நாடி பரிகாரத்தலமாகக் கருதப்படும் இவ்வாலயத்தில், பன்னிரண்டடி உயரத்தில் ஆகாசலிங்கம் ஒன்று பிரமாண்டமாகக் காணப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல, மேல்கூரை இல்லாமல் காணப்படும் இச்சிவலிங்கம், கோயிலுக்கு எதிரேயுள்ள பாழடைந்த குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். இத்தலத்தின் தல விருட்சம், வன்னி.

    வடசென்னைப் பகுதியில், மணலி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில், பாரதி சாலையில் இக்கோயில் உள்ளது.

    • திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன்பு நடந்தது
    • மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஏற்பாடு

    திருவண்ணாமலை:

    மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ் வரம், தவில் இசை சங்கம் சார்பில் 41-ம் ஆண்டு இசை விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நேற்று நடைபெற்றது.

    சங்கத்தின் தலைவரான நாதஸ் வர கலைமாமணி பிச்சாண்டி தலை மையில் 108 நாதஸ்வர மற்றும் தவில் இசை கலைஞர்களின் இசை விழா நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இசை விழா, 24 மணி நேரம் நடைபெற்று இன்று அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

    கவுரவத் தலைவர் பூபாலன், செயலாளர் ஏழுமலை, துணை கவுரவத் தலைவர் முருகேசன், துணை செயலாளர் கார்த்திகேயன், இணை தலைவர் பாலகணேசன் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்று, மங்கல இசை மற்றும் பல்வேறு ராகங்களில் வாசித்தனர். மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. இசை விழாவை, அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • விடிய விடிய ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை சிவனுக்கு வைத்து வழிபடும் நிகழ்வு மற்றும் சிறப்பு தீபராதனை நடந்தது

    திருவண்ணாமலை:

    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும்.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருமால் மற்றும் பிரம்மன் ஆகிய இருவரில் யார் பெரியவர் என போட்டி வந்த போது, நான் என்ற அகந்தை அடங்கினாலன்றி சிவ பரம்பொருளை காண முடியாது என்ற உண்மையை உலகிற்கும், திருமால் மற்றும் பிரம்மனுக்கு உணர்த்தும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவபொருமான் கூறினார்.

    திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியை குடைந்து சென்றும், பிரம்மன் அன்னபட்சியாக உருவெடுத்து முடியைக்காணவும் உயரப்பறந்து சென்றார்.

    இருவரும் பல யூகங்களாக தேடியும் அடியையும், முடியையும் காண முடியாமல் தோல்வி அடைந்ததுடன் திருமால் தனது தவறை உணர்ந்து சிவனிடம் சென்று வழிபட்டார்.

    பிரம்மன் மேலும் பல யுகங்களாக சென்று முடியை காண முடியாத சூழலில் மேலிருந்து கீழே வந்த தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்தார்.

    இதனையறிந்த சிவபெருமான் நெருப்பு பிழம்பாக லிங்க வடிவாய் வெளியே வந்து அனைத்து தேவர்களுக்கும் நல்லாசி வழங்கியதுடன் பிரம்மனுக்கு பூலோகத்தில் கோவில்கள் இல்லை என்றும், பொய்சாட்சி கூறிய தாழம்பூ பூஜைக்குப் பயன்படாது என்று சாபம் அளித்து லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சியளித்தார். இந்த மகா சிவராத்திரி உருவான இடம் திருவண்ணாமலையாகும்.

    மகா சிவராத்தியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சன்னதி பின்புறம் மேற்குத் திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு நள்ளிரவில் 12 மணிக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், ருத்ராட்சம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் ஆராதனைகள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை சிவனுக்கு வைத்து வழிபடும் நிகழ்வு மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இந்த சிவராத்திரி விழாவில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லிங்கோத்பவரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    அதிகாலை வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • மகா சிவராத்திரியை முன்னிட்டு நீலகண்ட ஈஸ்வரன் அவதாரத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளினார்.
    • மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-மதுரை ரோட்டில் வரலாற்று சிறப்பு மிக்க பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி ஆலய வளாகத்தில் ஆதிவழிவிடும் விநாயகர் கோவில் உள்ளது. இங்கு மகாசிவராத்திரியையொட்டி அஷ்ட வரத ஆஞ்சநேயரின் விருப்பத்திற்கு இணங்க அவருடைய தோற்றத்தை சிவபெ ருமானுக்கே அர்ப்பணித்துக் கொண்டு சிவனாகவே காட்சியளித்த நீலகண்ட ஈஸ்வரனின் அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இரவு முழுவதும் சிவலாயங்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு சிவன் அவதாரத்தில் சிவராத்திரி பூஜைகள் விடியவிடிய நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அனுமனை வணங்கி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் பகுதியில் மகா சிவராத்திரி விழா வழிபாடு நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் சப்பாணி கோவில் தெருவில் உள்ள சப்பாணி கோவிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா சிவராத்திரி விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் முதல் வாரம் காப்பு கட்டி, விரதம் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் மகாசிவ ராத்திரி அன்று வைகை ஆற்றுக்கு சென்று சாமி பெட்டியுடன் கரகம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. வைத்தியநாதபுரம் அம்மன் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் வயல்காட்டுக்கு சென்று சாமி பெட்டி எடுத்து கரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர்.

    புட்டு விநாயகர் கோவிலில் 4 கால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. திரவுபதி அம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் நடைபெற்றது. இங்குள்ள கருப்பசாமிக்கு 12 வாசனை பொருட்களை கொண்டு அபிஷே கம், சிறப்பு பூஜை கள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பிரளய நாத சுவாமி கோவிலிலும் 4 கால பூஜை நடைபெற்றது. இதில் எம்.வி.எம். குழுமத்தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளியம்மாள், தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு பிரசாதப்பை வழங்கினர்.

    மேலரதவீதி அங்காள பரமேஸ்வரி சமேத வாலகுரு நாதன் கோவில், வைகை ஆற்றங்கரையில் உள்ள சாலை கருப்பண்ணசாமி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் திருவேடகம் ஏடகநாதர் கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், முதலைக் குளம் கம்ப காமாட்சி அம்மன் கருப்புசாமி கோவில், விக்கிரமங்கலம் கருப்பு கோவில், காடுபட்டி கோவில் வயக்காட்டு கருப்புசாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    ×