search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வெட்டு"

    • கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது.
    • கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கிருஷ்ணகிரி மாவட்டம், காமன் தொட்டி உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியை ஜெயலட்சுமி, ஆகியோர் தொல்லியல்துறை சார்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தங்கம்மாள்புரத்தில் இருந்து வருசநாடு செல்லும் வழியில் உள்ள ஜி.ஆர்.டி. பண்ணை உச்சிப்பிள்ளையார் கோவில் இருக்கும் இடத்தில், கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம், பேச்சியம்மன் சிலை, அய்யனார் சிலை, தட்சிணாமூர்த்தி சிலை போன்ற பழமையான சிற்பங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.


    தலையில் ஜூவால கிரீடம், இடது கையில் ஒரு பெண்ணை பிடித்து வயிற்றைக் கீறிய நிலையிலும், வலது கையில் ஒரு குழந்தையை ஏந்திய நிலையிலும் பயமுறுத்தும் கண்கள், அகன்ற மூக்கு, நீளமான வாய், பெரிய காதுகள், பெரிய பரந்த பாதங்கள், மார்புக்கூடு எலும்புகள் தெரியும் வகையில், பார்ப்போரை பயமுறுத்தும் வகையில் பேச்சியம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேச்சு அம்மன் என்பதே பேச்சியம்மன் என்று மருவி விட்டது. கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறுத்தோற்றமாக கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டால் மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பேச்சி அம்மனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளிலும் பேச்சியம்மன் வழிபாடு காணப்படுகிறது.

    பொதுவாக அய்யனார் நிலை மண்டலமர்வு எனும் உத்குடி ஆசனத்தில் சிற்பம் வடிவமைப்பதுண்டு. ஆனால் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது. தலையில் விரித்த அலங்கார ஜடாபாரம், தனித்தனி இழைகளாக சுருண்டு அழகுற அமைந்துள்ளது. முத்துப்பட்டம், வட்டமான பத்திர குண்டலம், கண்டசரம், சரபள்ளி, சவடி, பூணூல், உத்தரபந்தம், கடகம், கைவளை, காப்பு, இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அணிந்து அழகுற அய்யனார் அமர்ந்திருக்கிறார்.

    இவர் சிவபெருமானின் மகன் என்றும் கிராமங்களில் வசிக்கும் எளிய மக்களை காக்க வந்தவர் என்றும் நம்பப்படுகிறது. சங்க காலம் முதலே தமிழகத்தில் அய்யனார் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி வடிவமானது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில் அமர்ந்துள்ளார். பூணூல் அணியப்பட்டுள்ளது. கரந்தை மகுடம், கைகளில் வளையல், கால்களில் வீரக் கழல், கால்விரல் அணிகள், அபய வரத முத்திரையுடன் பின் வலது கையில் மழு உள்ளது. இடது மேற்கையில் மான் உருவம் சிதைந்துள்ளது. சாந்த சொரூப நிலையில் சிற்பம் உள்ளது.


    "தெக்கினான்" என்றும் தென்முகக் கடவுள் என்றும் அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். மேற்கண்ட சிற்பங்கள் பாண்டியர் காலத்துக்கே உரிய சிற்ப நுட்பத்தோடும் உச்சபட்ச நயத்தோடும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

    மற்றொரு சிலையான சிவலிங்கம், பத்ம பீடம் (பிரம்மா பகுதி) அதாவது தாமரைப் பூ கவிழ்ந்த நிலை, அதற்கு மேல் ஆவுடை உள்ளது. பெருவுடையார் (லிங்கபாணம்) இல்லாமல் உள்ளது.

    கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதில், மதுரை சொக்கநாதருக்கும் பார்வதி அம்மனுக்கும் நெய்விளக்கு தானமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட சிலைகள் மற்றும் கல்வெட்டு மூலம் இந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது உறுதி செய்யப்படுகிறது. பாண்டியர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை தொடர் வழிபாட்டில் இக்கோவில் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்று கூறினர்.

    • மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜை செய்து வழிபடும் பண்பாடு இம்மண்ணுக்கு உரியது.
    • தமிழகத்திலேயே தருமபுரியை கல்வெட்டு பூமி என சொல்வதுண்டு.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் காடுகளையும் காடுகளையொட்டிய வாழ்வியலை உள்ளடக்கய பூமி. தமிழ் நிலங்களில் குறிஞ்சியும், முல்லையும் நிரம்பியிருந்தாலும் முல்லை பூமியாக இருக்கிறது. இங்கு ஆதிகாலம் தொட்டே கால்நடைகளை மேய்பதும், வளர்பதும், மேட்டு நிலங்களை பண்படுத்தியும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலத்தில் பொங்கல் திருவிழா காலம் காலமாக ஆட்டுப்பட்டி பொங்கல் மாட்டுப்பட்டி பொங்கல் என பட்டிப் பொங்கல் மிக பிரசக்தி பெற்றது.

    ஆடுகளை காட்டில் மேய்ந்துவிட்டு வந்து அடைக்கப்படும் பட்டியிலும் விவசாயமாடுகள் வாழும் வீடான பட்டியிலும் பொங்கல் வைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் இந்த மண்ணில் பொங்கல் திருவிழாவில் கால்நடைகளுக்கு நன்றி சொல்லி மரியாதை செலுத்தும் மாட்டுப்பொங்கலை வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி சிறப்பு பூஜை செய்து வழிபடும் பண்பாடு இம்மண்ணுக்கு உரியது.

    தமிழகத்திலேயே தருமபுரியை கல்வெட்டு பூமி என சொல்வதுண்டு. இப்போது வாழ்வியலை புத்தகத்தில் பதிவு செய்வது போல அக்கால கல்வெட்டில் ஆட்சியாளர்களை பற்றிய குறிப்புகளும் தாம் வாழும் காலத்திய அடையாளங்களையும் கல்வெட்டில்பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் உழவுத்தொழில் செய்யும் கல்வெட்டு இருப்பது ஆச்சரியம்தானே!

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திலிருந்து ஏரியூர் செல்லும் சாலையில் இருக்கிறது அளேபுரம்.

    குளத்தங்கரையை தாண்டி அளேபுரத்திற்கு செல்லும் வழியில் இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

    இந்த கல்வெட்டில் ஏர் உழும் காட்சியை கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழகத்திலேயே ஏர் உழுதலை போன்ற கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

    பொங்கல் திருநாளில் உழவுக்கு உதவிய மாடுக ளுக்கு மரியாதை செலுத்தும் இந்த நேரத்தில் இந்த கல்வெட்டிற்கும் நாம் மரியாதை செலுத்துவோம்.

    • எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
    • தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம் தேரூர் குறண்டியில் கோரக்கர் சித்தர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷ விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று கோரக்கர் சித்தரை வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த கோவிலின் தெற்கு பகுதியில் பழங்கால தமிழ் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, இதனைகன்னியா குமரி அருகே உள்ள கொட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுந்தர்என்பவர் இந்த கோவிலுக்கு சென்று இருந்தபோது இந்தகல்வெட்டை கண்டுபிடித்து உள்ளார்.

    மேலும் இந்த கல் வெட்டை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து கள ஆய்வு செய்து, எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்ட தொல்லியல்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் குறண்டி கோரக்கர் சித்தர் கோவிலை புனரமைக்க இது வழிவகுக்கும் என்றும் பக்தர்கள் கோவிலின் தொன்மையை தெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.

    • தங்கம்மாள்புரம் பகுதியில் கி.பி.13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.
    • குலசேகரபாண்டியனின் ஆட்சி தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இடிந்த சிவன் கோவில் இருந்தது என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வந்தது.

    போடி:

    தேனி மாவட்டம் போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியின் முதல்வர் சிவக்குமாரின் வழிகாட்டுதலின் படி, கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் மாணிக்கராஜ், திண்டுக்கல் நல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் இணைந்து தொல்லியல் சார்ந்த ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

    கொடைக்கானல் மன்னவனூர் அரசுமேல்நிலைப்பள்ளி யின் ஆசிரியர் பழனிமுருகன் கொடுத்த தகவலின்படி தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கி.பி.13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.

    இது குறித்து ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி இணைப் பேராசிரியர் மாணிக்கராஜ், நல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் கூறியதாவது:-

    தேனி மாவட்டம் பண்டைய காலத்தில் அழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக காரணங்களுக்காக அழநாட்டை பல சிறு சிறு நாடுகளாகப் பிரித்தனர். அதன்படி மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியான இன்றைய வருசநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

    இந்தப்பகுதியில் முதுமக்கள் தாழி, பெருங் கற்கால கல்லறைகள், பழைய புதிய கற்கருவிகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கி.பி.13ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த குலசேகரபாண்டியன் (கி.பி. 1297) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று வருசநாடு தங்கம்மாள்புரம் பொட்டியம்மன் கோவில் அருகே கண்டறியப்பட்டது.

    இதில் குலசேகரபாண்டியனின் ஆட்சி தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு இடிந்த சிவன் கோவில் இருந்தது என்பது இந்த கல்வெட்டின் மூலம் தெரிய வந்தது.

    இந்த கல்வெட்டு முழுமையாக கிடைக்கப்பெறாததால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. இருப்பினும் பாண்டிய மன்னன் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    • 4 -ம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி தமிழ் கல்வெட்டும் பழங்கால வெண்கோட்டுரு ஓவியங்களும் உள்ளன.
    • இந்த நினைவுச் சின்னத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியை அடுத்த நெகனூர் பட்டி கிராமத்தில் குன்றின் மீதுள்ள அடுக்குப் பாறையில் சமணப்படுக்கையும் 4 -ம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி தமிழ் கல்வெட்டும் பழங்கால வெண்கோட்டுரு ஓவியங்களும் உள்ளன. இந்த பாறைகளின் அருகே வெடிவைத்து கல் உடைத்ததில் பாறையில் விரிசல் ஏற்பட்டது.இது குறித்து கடந்த 2020 -ம் ஆண்டு விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் தமிழ்நாடு தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றார். தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் நெகனூர்பட்டி மற்றும் தொண்டூர் கிராமத்தில் உள்ள கிராமிய கல்வெட்டு களை பாதுகாக்கப்பட்ட வரலாற்று நினைவு சின்னமாக அறிவித்தார். தற்போது இந்த நினைவுச் சின்னத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில் சின்னம் உள்ள இடத்திலிருந்து 300மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டுமானமும் வெடி வைத்தலும் செய்யக்கூடாது. ஆனால் 87 மீட்டர் தூரத்தில் பாறைகளை வெடிவைத்து உடைத்து வருகின்றனர். இதையடுத்து நேற்று தமிழ்நாடு தொல்லியல் துறை சென்னை அலுவ லகத்தை சேர்ந்த உதவி பொறியாளர் ராஜேஷ் இந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார் பின்னர் அவர் இது குறித்து செஞ்சி தாசில்தாரிடமும், போலீசிலும் அவர் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தாசில்தார் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் ஜமீனா, கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வை யிட்டனர். யாரேனும் வெடி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கல்வெட்டுகளில் உள்ள செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறினார்.
    • முன்னதாக தமிழ்த் துறைத்தலைவி ரஞ்சனி அனைவரையும் வரவேற்றார்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை ஒருங்கிணைப்பில் தமிழ் கல்வெட்டுகள் மற்றும் மரபிலக்கணக் கோட்பாடுகள் என்னும் பொருண்மை யிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கில் தமிழ் கல்வெட்டுகள் மற்றும் மரபிலக்கணக் கோட்பாடுகள் என்னும் தலைப்பில் தமிழ்நாடு நடுவண் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ரவி கல்வெட்டுகள் மற்றும் கல்வெட்டுகளில் மக்கள் அறிந்து கொள்ளும் பல்வேறு வகையான செய்திகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறினார்.

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைப் பேராசிரியர் பெருமாள் மாணவ மாணவிகள் இலக்கணம் பயில்வதால் ஏற்படும் சிறப்புகள் பற்றியும் காலம் காலமாக இலக்கணம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் ஆற்றல் உடையது என்பதைப் பற்றி சொற்பொழிவு ஆற்றினார்.

    இந்நிகழ்வில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவகுருநாதன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து.

    கல்லூரி தாளாளர் வெங்கட்ராஜுலு செயலர் சுந்தர் ராஜு ,முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்விக் குழுமத்தின் இயக்குநரும்,மகரிஷி வித்யா மந்திர்சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர், த. விஜய சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். மேலும் இந் நிகழ்வில் துணை முதல்வர் (கல்விசார்) எஸ். நெல்லிவனம், துணை முதல்வர் (நிர்வாகம்) பவித்ரா வாழ்த்துரை வழங்கினர்.

    இக்கல்லூரியின் தமிழ்த் துறைத்தலைவி ரஞ்சனி வரவேற்றார்.

    முடிவில் தமிழ்த் துறை துணைதலைவர் கிருஷ்ண ராஜ் நன்றி கூறினார்.

    இக்கருத்தரங்கில் அனைத்து துறைப் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    • தேவர் முக்குளம் கிராமத்தில், வணிகக்குழு கல்வெட்டினை புதிதாய் கண்டு பிடித்துள்ளது.
    • வணிகக் குழு கல்வெட்டு, கோவிலை பிரித்துக் கட்டியபோது கீழே தனியே வைக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர் முக்குளம் கிரா மத்தில், வணிகக்குழு கல் வெட்டினை புதிதாய் கண்டு பிடித்துள்ளது.

    இங்குள்ள பள்ளி கொண்ட பெருமாள் கோவில் கூரையில் வைத்துக் கட்டப்பட்டிருந்த முதலாம் ராஜேந்திரசோழனின் 18-ம் ஆட்சியாண்டை சேர்ந்த வணிகக் குழு கல்வெட்டு, கோவிலை பிரித்துக் கட்டியபோது கீழே தனியே வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    இந்த கல்வெட்டு 11-ம் நூற்றாண்டில் தேவர் முக்குளத்தினரின் சிறந்த வணிக தளமாக இருந்துள்ளது. அங்கு பல்வேறு வணிக குழுக்கள் இருந்து, அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு என வீரர்படைகளை வைத்து உள்ளனர். மேலும் அந்த வீரர்கள் தங்குவதற்கு என வீரப்பட்ட ணம் இங்கு இருந்ததை இந்த கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுப்பணியில் பிரகாஷ், தலைவர் நாராயண மூர்த்தி, சதானந்த கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன், வரலாற்று ஆசிரியர் ரவி, தேவர் முக்குளம் சிங்காரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வீரனின் தியாகத்தை போற்றும் கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் கட்டனூர் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வா ளர்களான செல்ல பாண்டி யன், ஆய்வாளர்.ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் போன்றோர் ஆய்வு மேற்கொண்ட போது பழமையான நடுகல்லை தெப்பக்குளத்திற்குள் கண்டறிந்தனர். இந்த நடுகல் பற்றி அவர்கள் கூறிய தாவது:-

    பொதுவாக நடுகல் எடுக்கும் மரபு நமது முன்னோர்கள் பன்னெடுங்காலமாகவே பின்பற்றிவருகின்றனர். போர்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைபவர்களுக்கும், பொதுகாரியம் கருதி உயிர் துறப்பவர்களுக்கும் அவரின் தியாகத்தை போற்றி நடுகல் எடுத்து வழிபடுவர். அந்த வகையில் தற்போது நாங்கள் கண்டறிந்த நடுகல்லானது நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கி உள்ளனர். அதில் வீரன் ஒருவன் தலைப்பகுதி இடது புறம் சரிந்த கொண்டையுடனும், நீண்ட காதுகளும், மார்பில் ஆபரணங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இடையில் இடைக்கச்சையும் அதில் குறுவாள் சொருகியபடியும் நின்ற கோளத்தில் வணங்கியபடி சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது.

    சிற்பத்தின் மேலே கிடைமட்டமாக 14 வரிகளும், மேலிருந்து கீழாக இரண்டு வரிகளும் என 16 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள எழுத்துக்கள் முற்றிலும் சேதமாகியுள்ளதால் பொருள் அறிவதில் சிரமம் உள்ளது. ஆயினும் சில வரிகள் வாசிக்கும்படி உள்ளது. அவற்றில் வெகு தானிய (பகுதானிய) வருடம் என்று தமிழ் வருடங்கள் அறுபதில் 12 வது வருடமாக வரும் வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆனி மாதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்லிற்கு சேதம் விளைவிப்பருக்கு கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவான் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவற்றை வைத்து பார்க்கும் போது இவ்வீரன் ஊரின் நன்மை பயக்கும் செயலில் ஈடுபட்டு இறந்திருக்க வேண்டும். அவரின் தியாகத்தை போற்றும் விதமாக இந்த நடுகல்லை நிறுவி இருக்க வேண்டும். இந்நடுகல்லை தற்போது சீர்காழியை சேர்ந்தவர்களும்,இவ்வூர் பொதுமக்களும் வழிபட்டு வருகின்றனர் என்றும் இந்நடுகல்லின் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி சமயங்களில் சிறப்பு ஹோமங்களும் இங்கு நடக்கின்றன.

    பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திரு என்றால் செல்வம் என்று பொருள். தங்களது பெயரிலேயே 'திரு'வைக் கொண்டுள்ள இறைவனும், இறைவியும்; தங்களை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் 'திரு'வுக்குக் குறைவராமல் பார்த்துக்கொள்ளும் தலம், சென்னை மணலியில் அமைந்துள்ளது.

    பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கோயிலுக்கு தெற்குப் பார்த்த பெரிய நுழைவு வாயில். வாழ்வில் வரும் தடைகளைத் தகர்த்து, வெற்றிகளைத் தரும் விநாயகன் அரச மரத்தடியில் உள்ளார். செல்வ கணபதி என்னும் திருநாமம் கொண்டுள்ள இவரின் இருபுறமும் நாகர்கள் அருள்கின்றனர். பின், மூலவர் சன்னதி வருகிறது. மகாமண்டபத்தில் பலிபீடம், நந்தியைக் கடந்தால் அர்த்த மண்டபம். அங்கே அதிகார நந்தி, பிரதோஷ நாயகர் மற்றும் வள்ளி, தேவசேனையுடன் முருகர் ஆகியோரின் உற்சவ விக்ரகங்கள் உள்ளன. மூலவரின் கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை ஆகியோர் அருள்கின்றனர்.

    கருவறையில் மூலவர் திருவுடைநாதர் நாகாபரணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். ஆவணி மாதம் ஆதவன் தனது கிரணங்களினால் இவரை பூஜை செய்வாராம். தினமும் இரண்டு கால அபிஷேகம் நடைபெறும் ஈசனுக்கு, கார்த்திகை மாதம் நான்கு திங்கட்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கடைசி திங்களன்று 108 சங்காபிஷேகமும் உண்டு.

    அது தவிர பிரதோஷம், மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, சோமவாரம் தோறும் சிவசகஸ்ர நாம பாராயணம், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் என பல விசேஷ நாட்கள் இங்கு சிறப்பிக்கப்படுகின்றன.

    கடன் தொல்லையால் அவதிப்படுவோர் மூலவரை மனமுருக வேண்ட, படிப்படியாய் அத்தொல்லை தீருவதாக நம்பப்படுகிறது. தம்மை வணங்கும் பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் எல்லா தடைகளையும் தகர்த்தெறியும் வல்லமை மிக்கவராம் இவர்.

    பிராகார வலம் வருகையில், கருவறைக்குப் பின்புறம் வரசித்தி விநாயகரை தனி சன்னதியில் தரிசிக்கலாம். இவருக்கு முன்னால் பலிபீடமும், மூஞ்சுறு வாகனமும் உள்ளது. சங்கடகர சதுர்த்தியில் இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன.

    மூலவருக்கு இடதுபுறம் தனி சன்னதியில் வள்ளியுடன் தேவசேனை சமேத சுப்ரமணியசுவாமி அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே மயில் வாகனம், பலிபீடம் உள்ளது. மாத கிருத்திகை, ஆடி, தை கிருத்திகைகளில் சிறப்பு அலங்காரம், விபூதி காப்பு, சந்தனக் காப்பும், கந்தர்சஷ்டியில் திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தன்று 108 பால்குட அபிஷேகமும் இவருக்கு விமரிசையாக நடக்கிறதாம்.

    முருகப் பெருமானுக்கு அருகில் கயிலாசநாதர் லிங்க வடிவில் அருள்கிறார். எல்லோராலும் கயிலைப் பயணம் சென்றிட முடியாது என்பதால், நான் உங்களுக்காக இங்கே இருக்கிறேன் என்று கூறும் பெரிய பாணலிங்கம்.

    மூலவருக்கு எதிரில், தெற்குப் பார்த்த சன்னதியில் திருவுடைநாயகி என்னும் திருநாமத்துடன் அம்பாள் அருள்கிறாள். ஸ்வர்ணபுரீஸ்வரி என்ற திருப்பெயரும் கொண்டுள்ள இவள், மிகுந்த வரப்பிரசாதி.

    அன்புததும்பும் அழகான கண்கள், கருணையே உருவான தீட்சண்யமான பார்வை, மெல்லிய உதடு, கொடிபோல் அழகான இடை, நலமருளும் நாற்கரங்கள் என அழகிய திருக்கோலத்துடன் ஆட்சிபுரியும் அம்மனை நாள் பூராவும் அலுக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    இவளுக்கு பௌர்ணமி அன்று அபிஷேகம், சித்ரா பௌர்ணமியன்று திருவிளக்கு பூஜை, நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம், ஆடிப்பூரத்தன்று வளையல்காப்பு, சாகம்பரி அலங்காரம், 108 பால்குட அபிஷேகம், ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் என வருடம் முழுதும் பல விழாக்கள் நடக்கின்றன.

    திருமணத்தடைகளை நீக்குவதில் இவளின் பங்கு மகத்தானது. நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள், அவர்களின் நட்சத்திர நாளில் மஞ்சள் பூசிய தேங்காயைக் கொண்டு வந்து அம்மன் காலடியில் வைத்து, அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். பூஜிக்கப்பட்ட அத்தேங்காயை வீட்டில் வைத்துக் கொண்டால், வெகு விரைவில் அப்பெண்களுக்கு திருமணம் நடந்துவிடுவதாகச் சொல்கிறார்கள்.

    இக்கோயிலில் அருள்புரியும் காலபைரவர் அழகே உருவானவர். இவருக்கு தேய்பிறை அஷ்டமியில் முந்திரி மாலை, ஏலக்காய் மாலை சாத்தப்படுகிறது. மனக்கவலை, வியாபாரத்தில் கஷ்டம் போன்றவற்றை நீக்கியருள்பவராம் இவர்.

    நவகிரகங்கள், தங்கள் வாகனங்களுடன் நின்ற கோலத்தில் அருள்கின்றனர். குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி சமயங்களில் சிறப்பு ஹோமங்களும் இங்கு நடக்கின்றன.

    மகாமண்டபத்தில், வடக்கு நோக்கி அனுமன் தரிசனம் தருகிறார். இவருக்கு மூல நட்சத்திரம் அன்றும், சனிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை, துளசி மாலை சாத்தப்படுவதுடன், வெண்ணெய்க்காப்பு, சிந்தூர அலங்காரம் ஆகியவையும் உண்டு.

    நாடி பரிகாரத்தலமாகக் கருதப்படும் இவ்வாலயத்தில், பன்னிரண்டடி உயரத்தில் ஆகாசலிங்கம் ஒன்று பிரமாண்டமாகக் காணப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல, மேல்கூரை இல்லாமல் காணப்படும் இச்சிவலிங்கம், கோயிலுக்கு எதிரேயுள்ள பாழடைந்த குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். இத்தலத்தின் தல விருட்சம், வன்னி.

    வடசென்னைப் பகுதியில், மணலி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில், பாரதி சாலையில் இக்கோயில் உள்ளது.

    • அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது.
    • மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குத்தாலம்:

    நாடு சுதந்திரம் பெற்றபோது அதன் அடையாளமாக திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தங்க செங்கோல் செய்யப்பட்டு மவுண்ட்பேட்டனிடம் கொடுத்து அதன் பிறகு அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கியதாக வரலாறு.

    அதன் பிறகு அலகாபாத் மியூசியத்தில் இருந்த அந்த தங்க செங்கோல் தற்போது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் தனி விமானத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோலை வழங்கினர்.

    ஆனால், 1947-ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு நடைபெறவில்லை என்றும், இதுகுறித்து மடத்தில் எந்த பதிவேடும் இல்லை என்றும் பல்வேறு தரப்பினர் சர்ச்சைகள் எழுப்பினர்.

    இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பாராளுமன்றத்தில் செங்கோல் கொடுத்த நிகழ்வை நினைவூட்டும் வகையிலும் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் இடமான ஒடுக்கத்தின் வெளிச்சுவற்றில் கல்வெட்டாக பொறித்து அதனை திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தனது ஜென்ம நட்சத்திரமான வைகாசி பூரட்டாதியான நேற்று அந்த கல்வெட்டை திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் அறிஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை அருகே 1000 ஆண்டுக்கு முந்தைய நீர்ப்பாசன வசதி அமைப்புக்கான ஆதார கல்வெட்டு கண்டுபிடிக்கபட்டது
    • புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராசேந்திரன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை)குளத்து குடியிருப்பு கிராமத்தில் பழமையான பாலம் இருப்பது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பூமி. ஞானசிவம் அளித்த தகவலின் பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராசேந்திரன் ஆகியோர் அங்கு கள ஆய்வு செய்தனர். அப்போது பாலத்தில் இருந்த கல்வெட்டை படியெடுத்தனர். இதில் திருவாடுதுறை ஆதீனத்தின் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிான் என்பாரின் உத்தரவுபடிக்கு பாலம் கட்டப்பட்டது என அதில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

    இது குறித்து ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது, திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவில் வரலாற்று சிறப்பு மிக்க தலமாகும். ஆதீனத்தின் பதினேழாவது பட்டமாக இருந்த அம்பலவான தேசிகர் காலத்தில் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிரான் 1889 வருடம் ஆகஸ்டு மாதம் மக்களின் விவசாய பயன்பாட்டிற்காக, வெள்ளாற்றிலிருந்து வாத்தலையை(சிறு கால்வாய்) வெட்டி ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய்க்கு நீரைக்கொண்டு வந்துள்ளார்.

    குளத்துகுடியிருப்பு கிராம மக்கள் திருப்பெருந்துறை சென்று வருவதற்கு பாலத்தையும், பாலத்திலேயே சிறப்பான பலகை அடைப்பு முறையில் நீரின் போக்கைகட்டு ப்படுத்துவதற்கு கலிங்கு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார், போக்குவரத்து மற்றும் நீர் மேலாண்மை ஆகிய இரு தேவைகளையும் உணர்ந்து ஒரே கட்டுமானத்தில் இதனை நிறைவேற்றி உதவியுள்ளார். இது முழுக்க கருங்கல், செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டுமானமாக உள்ளது.

    மூன்றரை அடி உயரம் , ஒன்றரை அடி அகலத்துடன் உள்ள பலகைக்கல்லில், 14 வரிகளில் "சிவமயம் 1889 வருசம் ஆகஸ்டு மீ . விரோதி வருசம் ஆவணி மீம் இந்த வாத்தலையும் வெட்டி யிந்த கலுங்கு வேலையும் ட்றஸ்ட்டி கண்ணப்ப தம்பிறான் உத்திரவுபடி கட்டி முடித்தது" என்று பாலத்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டில் தகவலாக பொறிக்கப்பட்டுள்ளது.ஆதீனம் கல்வி , சமூக ஒற்றுமை , பொதுப்பணி , தமிழ் மொழி வளர்ச்சி என பல்வேறு பணிகளில் ஈடுபடுத் திக்கொண்டுள்ளதையும் , ஆன்மீகப்பணியோடு அறப்பணிகளையும் செய்துள்ளதை இப்புதிய கல்வெட்டு சான்று உறுதி செய்கிறது என்றார். ஆய்வின் போது தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் ந.ரமேஷ் குமார் உடனிருந்தார்,

    • 7 அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் இருபுறமும் 80 வரிகளில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது
    • குளத்தின் நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டும் என தகவல் பதிவு பொறிக்கப்பட்டுள்ளது

    கந்தர்வக்கோட்டை,

    கந்தர்வக்கோட்டை அருகே கலலுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சம்பட்டிப்பட்டியில் கல் பலகை நட்டிருப்பதாக குரும்பூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சேகர் அளித்த தகவலின் பேரில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளர் ஆ. மணிகண்டன் கல்வெட்டை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது,

    சம்பட்டிப்பட்டி கல்வெட்டில் 7 அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் உள்ள பலகைக் கல்லின் இருபுறமும் 80 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. ராசராச வளநாடு, ராசேந்திர சோழ வள நாடு, அன்பில் எனப்படும் அம்புக் கோவில் தெற்கிலூரில் காணியுடையார் மக்களில் திருமலைராய தொண்டைமானார் என்று குறிப்பிட்டு இருப்பதன் மூலம் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகமாக அம்புக்கோவிலை குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது.

    மேலும் இவ்வூரில் இருக்கும் பகவாந்ராயர் மற்றும் ராசிவராயர் ஆகியோருக்கு சம்பட்டிப்பட்டியில் அமைந்துள்ள பிரமன் வயலை மானியமாக வழங்கிய மன்னின் உத்தரவு, தாமிரத்தில் எழுதி சாசன மாக்கப்பட்டதையும், நிலத்தின் 4 எல்லைகளும் வாமன கோட்டுருவம் பொறிக்கப்பட்ட எல்லைகல் நடப்பட்டதையும் பொது ஆண்டு 1758-ல் பொறிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரம்ம குளத்தின் நீரை பயிருக்காக மட்டுமே பாய்ச்ச வேண்டும் என்றும்,

    இதற்கு இடையூறு செய்வோர் தோஷத்துக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தும் அந்த கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ×