search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு
    X

    தமிழ் எழுத்துக்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ள பழமையான கல்வெட்டு.

    15-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

    • அபிராமம் அருகே 15-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
    • இந்த கல்வெட்டு எழுத்தின் அமைப்பை வைத்து பார்க்கும்போது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள கீழக்கொடு மலூரில் பழமையான எழுத்து பொறித்த கல்வெட்டு இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த கருப்புராஜா கொடுத்த தகவலின்பேரில், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம், ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர். அது விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு என்பது தெரிய வந்தது.

    இது குறித்து கள ஆய்வு செய்தவர்கள் கூறியதாவது:-

    இந்த கல்வெட்டு கீழக்கொடுமலூரில் வடக்கு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் தேங்காய் உடைக்கும் படிக்கல்லாக இருந்து வந்துள்ளது. இதனால், கல்வெட்டின் மையப்பகுதி முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது.

    இந்த கல்வெட்டில் 9 வரிகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான வரிகள் சிதைந்து விட்டது. அவற்றில் சில வரிகள் மட்டும் தெளிவாக தமிழ் எழுத்துகள் இருந்தன. அதில் அந்தராயம் உபயம், மேற்கு, காடு, உட்பட்ட நிலத்தில் பழந்தே அராய்ச்சியும் வெட்டிபாட்ட என்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாக தெரிகிறது.

    இவற்றை வைத்து பார்க்கும்போது கல்வெட்டில் ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு துண்டு கல்வெட்டில், ஊரின் பெயரும் திசையின் பெயரும் இடத்தின் பெயரும் இடம்பெற்று இருப்பதால், நிலத்தின் 4 எல்லையைக் குறிக்கும் விதமாகவும், அந்த நிலத்தை இறையிலியாக கொடுத்ததற்கான ஆதாரமாக உபயம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது.

    மேலும், கல்வெட்டு இந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு விஜயநகர பேரரசு காலத்தில் நிவந்தம் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கல்வெட்டு எழுத்தின் அமைப்பை வைத்து பார்க்கும்போது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×