search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்ச் 8-ல் ஈஷாவில் உலகின் மிகப் பிரம்மாண்ட மகா சிவராத்திரி விழா
    X

    மார்ச் 8-ல் ஈஷாவில் உலகின் மிகப் பிரம்மாண்ட மகா சிவராத்திரி விழா

    • மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்.

    கோயம்புத்தூர்:

    உலகின் மிகப் பிரம்மாண்டமான மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    மகா சிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கிச் செல்வதற்கு உதவி புரிகிறது. இந்த நோக்கத்தில் தான் மகா சிவராத்திரி விழா நம் பாரத கலாசாரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஈஷாவில் 30-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது.

    சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    இந்த விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்துக் கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

    இதில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மகாலிங்கம், பஞ்சாபி இசைக்கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசைக்கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசைக்கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்ஜித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் (தனிஷ்க் சிங்) உள்ளிட்ட தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதவிர, ஆப்பிரிக்கா, லெபனான், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த இசை மற்றும் நடனக்குழுவினரும் அரங்கை அதிர செய்ய உள்ளனர்.

    ஈஷா மகா சிவராத்திரி விழா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.

    கோவை தவிர்த்து மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாகர்கோவில் உள்பட தமிழ்நாட்டில் 36 இடங்களில் இவ்விழா நேரலை ஒளிபரப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    Next Story
    ×