search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sonia Gandhi"

    • ராகுல், பிரியங்கா உள்பட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரசின் மத்திய தேர்தல் குழுவுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
    • வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் தினத்தன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அட்டவணை இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதற்கு முன்னாக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட பாரதிய ஜனதா கட்சி தயாராகி உள்ளது. நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா மத்திய குழு விடிய விடிய ஆலோசனை நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது.

    பாரதிய ஜனதாவின் முதல் வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்பட சுமார் 120 பேர் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியும் தயாராகி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் மிக விரைவில் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

    இதற்காக காங்கிரஸ் செயற்குழுவும் மத்திய தேர்தல் குழுவும் அடுத்த வாரம் டெல்லியில் கூட இருக்கின்றன. காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுல் முன்னிலையில் நடக்கும் இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு ஏற்கனவே ஆய்வு குழு அமைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆய்வு குழுக்கள் ஒவ்வொரு தொகுதியிலும் ஆய்வு செய்து தலா 3 வேட்பாளர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.

    அந்த 3 பேரில் இருந்து ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய காங்கிரஸ் செயற்குழு மற்றும் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

    காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலில் சுமார் 100 பேர் இடம் பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. முதல் வேட்பாளர் பட்டியலில் கேரளா, மத்திய பிரதேசம், கோவா, ராஜஸ்தான், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று தெரிகிறது.

    பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆய்வு குழுக்கள் வேட்பாளர்களை துல்லியமாக தேர்வு செய்து விட்டன. கூட்டணி கட்சிகள் இருக்கும் மாநிலங்களில் மட்டும் வேட்பாளர் பெயர் விவரங்கள் சற்று தாமதமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தடவை பெரும்பாலான தொகுதிகளில் கள ஆய்வு செய்து குழுக்கள் மூலம் வேட்பாளர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த குழுக்கள் மாநில தலைவர்களிடமும், பொறுப்பாளர்களிடமும் பேசி ஆலோசித்துள்ளது.

    அதன் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடத்துக்கு ஆய்வு குழுக்கள் வேட்பாளர்களை பரிந்துரைத்து உள்ளன. காங்கிரஸ் சார்பில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். எனவே வேட்பாளர் தேர்வில் எந்த குழப்பமும் வராது. வேட்பாளர்கள் தேர்வு பயனுள்ளதாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் சுனில் தலைமையில் தேர்தல் நிபுணர்கள் நாடு முழுவதும் சர்வே நடத்தி அறிக்கை கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையிலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். கேரளாவில் தற்போது இருக்கும் 15 காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் என அந்த குழு பரிந்துரை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    உத்தரபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர், உத்தரகாண்ட், அரியானா மாநிலங்களில் ஆய்வு குழுக்கள் அடுத்த வாரம் ஆய்வு செய்து வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை கொடுக்க உள்ளன. தோழமை கட்சிகள் வலிமையாக இருக்கும் மாநிலங்களில் இன்னும் 10 நாட்களில் இறுதி முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர்.


    ராகுல், பிரியங்கா உள்பட நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் காங்கிரசின் மத்திய தேர்தல் குழுவுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் தினத்தன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. விவசாயிகள், ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து காங்கிரஸ் வாக்குறுதிகளை வெளியிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே அடுத்த வாரம் நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் தொடர்பான வியூகங்களும் வகுக்கப்பட உள்ளன. குறிப்பாக அதிரடி பிரசாரத்தை கையில் எடுப்பதற்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதனால் அடுத்த வாரம் நடை பெற உள்ள காங்கிரஸ் செயற்குழு மற்றும் மத்திய தேர்தல் குழு கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன.

    • திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.
    • தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.

    இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    அங்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை நேரில் சந்திக்கிறார்.

    • சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.
    • அவர் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ கட்சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி தலைவருமான சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்காக அவர் மனுதாக்கல் செய்தார். அப்போது அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் இருந்தனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வானார்.

    சோனியா காந்தி கடந்த 1999 -ம் ஆண்டில் இருந்து மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். தற்போது முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகி இருக்கிறார்.

    • 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.
    • 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பிப்ரவரி 5-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை அறிந்து வருகின்றனர்.

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்-பாராளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ் நாட்டின் கருத்துக்கள் என்ற தலைப்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகின்றனர்.

    பிப்ரவரி 5-ந் தேதி தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள், 6-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7-ந் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், 9-ந்தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள், 10-ந் தேதி காலையில் கோவை, நீலகிரி, பிற்பகலில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள், 11-ந் தேதி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.

    அடுத்தக்கட்டமாக 23-ந் தேதி வேலூர், ஆரணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளனர். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எழுத்துப்பூர்வமாகவும், தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள், ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகளை அனுப்புவதற்கான முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பதிவீடுகளுக்கான காலக்கெடு பிப்ரவரி 25-ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு மதிப்பீடு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு சென்று அதன்பிறகு அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையாக தயாரிக்கப்பட உள்ளது.

    இப்போது வணிகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், ஓட்டல் உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், மாற்று திறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரிலும், எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாகவும் தங்கள் கோரிக்கைகளை அளித்து வருகின்றனர்.

    இதுவரை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சந்தித்துள்ளனர். 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    கோரிக்கைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் மக்களிடம் இருந்து வந்துள்ளதுடன், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500க்கும் மேற்பட்ட கடிதங்களும் பெறப்பட்டு உள்ளதாக இக்குழுவினர் தெரிவி்த்துள்ளனர்.

    • காங்கிரஸ் கட்சி எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்திருக்கிறது.
    • காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (புதன்கிழமை) மாலையில் சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பதவியேற்கிறார். கே.எஸ்.அழகிரி அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.

    கே.எஸ்.அழகிரி திடீரென்று மாற்றப்பட்டதற்கு, பல்வேறு காரணங்கள் வலைதளங்களில் உலா வருகிறது. இதுபற்றி கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நான் தூய காங்கிரஸ்காரனாக இத்தனை ஆண்டு காலம் பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சி எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்திருக்கிறது.


    மிகவும் உயர்வான பொறுப்பாக மாநில தலைவர் பதவியை கட்சி மேலிடம் வழங்கியது. 50 ஆண்டுகாலத்தில் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருக்கு பிறகு 5 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவியில் நீடித்தவன் என்ற மனநிறைவுடன் இருக்கிறேன்.

    பொதுவாகவே இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புதிய தலைவர் பற்றிய பேச்சு அடிபடும். ஆனால் என்னை பொறுத்த வரை கடந்த 3 மாதமாகவே புதிய தலைவர் நியமனம் பற்றி கட்சி மேலிடம் ஆலோசனை செய்து வந்தது. இந்த மாற்றம் என்பது இயல்பான ஒன்றுதான். நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு உள்ளேன்.

    கட்சிக்குள் ஏதாவது பிரச்சினைகள் உருவாக்கலாமா? என்று வதந்திகளை பரப்புகிறார்கள். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த தவறான தகவல்களை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். கண்டு கொள்ளவும் மாட்டார்கள்.

    காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
    • கமல்நாத் எத்தகைய முடிவு எடுப்பார் என்று தெரியாததால் குழப்பம் நீடிக்கிறது.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் தனது மகன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேரப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கமல்நாத்தின் உதவியாளரும், காங்கிரஸ் தலைவர்களும் மறுத்தனர். என்றாலும் கமல்நாத்தும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து டெல்லியில் தங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்யும் முயற்சியை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.


    காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் போபால் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களிடம் தற்போதைய பிரச்சினைகள் பற்றி விரிவாக பேசினார். காங்கிரசில் இருந்து விலக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். என்றாலும் கமல்நாத் எத்தகைய முடிவு எடுப்பார் என்று தெரியாததால் குழப்பம் நீடிக்கிறது.

    • ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.
    • பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் கமல்ஹாசன் உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெறுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளோடு தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.

    இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை இதுவரை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு யாரும் அழைக்கவில்லை.

    இது தொடர்பாக தி.மு.க. முன்னணி தலைவர்கள் கூறும்போது, 'கமல்ஹாசன் கூட்டணியில் இருக்கிறாரா என்பது எங்களுக்கு தெரியாது. அது பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்து இருந்தனர். இதன் மூலம் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளாரா? என்கிற கேள்வி வலுப்பெற்றது.

    இந்த நிலையில் அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன் தனது 19 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அவரிடம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அமெரிக்காவில் இருந்து செய்தியோடு நான் வரவில்லை.


    இனி தான் செய்தியை உருவாக்க வேண்டும். இரண்டு நாட்களில் உங்களை சந்திக்கிறேன். அப்போது அனைத்து விஷயங்களுக்கும் பதில் அளிக்கிறேன். நல்ல செய்தியை தருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதன் மூலம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படாமலேயே உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி 7-ம் ஆண்டு தொடக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது இதுவரையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் இருந்து அழைப்பு வராதது பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கமல்ஹாசன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்துவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். எனவே வரும் நாட்களில் அது போன்ற சந்திப்பு நடந்து தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இடம் பெறுவது உறுதி செய்யப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


    இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.வினர் கூறும் போது கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு இடங்களை பகிர்ந்து கொடுப்பதிலேயே பெரிய சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக சேர உள்ள கமல்ஹாசன் கட்சிக்கு எப்படி இடங்களைபகிர்ந்து கொடுப்பது என்பது பெரிய பிரச்சினையாகவே உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியை பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சியுடன் அதிக நெருக்கமாக அந்த கட்சி உள்ளது அந்த கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.

    எனவே காங்கிரசுக்கு நாங்கள் ஒதுக்கும் இடத்தில் கமல்ஹாசன் ஒன்றோ அல்லது இரண்டு இடங்களையோ கேட்டு பெற்று போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார். ஒருவேளை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் கிடைக்காத பட்சத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி பாராளுமன்ற தேர்தல் களத்தில் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் கமல்ஹாசன் உள்ளார். இந்த கேள்விகள் அனைத்துக்கும் நாளை நடைபெறும் கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் விடை அளிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • 49.95 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.3 கிலோ தங்கம், 88 கிலோ வெள்ளியும் உள்ளது.
    • இத்தாலியில் பரம்பரை வீடு உள்ளதாகவும், அந்த சொத்தில் கிடைக்கும் பங்கீன் மதிப்பு 26.83 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி வருகிற பராளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்காக கடந்த புதன்கிழமை (நேற்றுமுன்தினம்) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் மொத்த சொத்த மதிப்பு 12.53 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார்.

    கைவசம் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மொத்த சொத்து மதிப்பு (அசையும் மற்றும் அசையா சொத்து) 12 கோடியே 53 லட்சத்து 76 ஆயிரத்து 822 ஆகும்.

    2014-ல் அவருடைய சொத்து மதிப்பு 9.28 கோடி ரூபாயாக இருந்தது. 2019-ல் 11.82 கோடி ரூபாயாக அதிகரித்தது. தற்போது 2024-ல் 12.53 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

    அசையும் சொத்து 6.38 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். ஜூவல்லரி, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் இருந்து கிடைக்கும் ராயல்டி, முதலீடுகள், பாண்டுகள், வங்கி டெபாசிஸ்ட், கையில் இருக்கும் ரொக்கத்தொகை ஆகியவை அடங்கும்.

    49.95 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.3 கிலோ தங்கம் இருப்பதாகவும், 88 கிலோ வெள்ளி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெள்ளியின் மதிப்பு 57.2  லட்சம்  ரூபாய் ஆகும்.

    இத்தாலியில்  பரம்பரை  வீடு உள்ளதாகவும், அவற்றில் தனக்கான பங்கீன் மதிப்பு 26.83 லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார். 2014 தேர்தலில் இதன் மதிப்பு 19.9 லட்சம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • முதுமை மற்றும் உடல்நல பிரச்சினைகளால் வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
    • உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு இருக்காது. இருப்பினும், எனது இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடனே இருக்கும்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, கடந்த 2004-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

    கடைசியாக, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் ரேபரேலியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் மக்களவை தேர்தல் வரும் நிலையில், சோனியாகாந்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாகும் மாநிலங்களவை இடத்துக்கு அவர் போட்டியிடுகிறார். இதனால், மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்பது உறுதியானது.

    இந்நிலையில், தனது ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு சோனியாகாந்தி இந்தியில் எழுதப்பட்ட ஒரு உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் இன்று அடைந்திருக்கும் நிலைக்கு காரணம் நீங்கள்தான் என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நம்பிக்கையை கவுரவிக்க என்னால் இயன்ற அளவுக்கு செயல்பட்டுள்ளேன்.

    தற்போது முதுமை மற்றும் உடல்நல பிரச்சினைகளால் வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். இந்த முடிவால், உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு இருக்காது. இருப்பினும், எனது இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடனே இருக்கும்.

    கடந்த காலத்தை போலவே எதிர்காலத்தில் எனக்கும், என் குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ரேபரேலி தொகுதியில் சோனியாகாந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார்.
    • ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய மூவரும் எங்கு போட்டியிடுவார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.

    ஆனால் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. என்றாலும் உத்தரபிரதேசத்துக்கு செல்ல விரும்பாத அவர் வயநாடு தொகுதியில் போட்டியிடவே ஆர்வம் காட்டி உள்ளார்.

    சோனியா காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்வாகி இருந்தார். ஆனால் இந்த தடவை அந்த தொகுதியில் போட்டியிட அவர் விரும்பவில்லை.

    அதற்கு பதில் அவர் பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக முடிவு செய்துள்ளார். ராஜஸ்தான் அல்லது இமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மேல்சபை எம்.பி.யாக தேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    காங்கிரசின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த தொகுதி காங்கிரஸ் தலைவர்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.

    முன்னதாக பிரியங்கா தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. ராஜீவ்காந்தி உயிரிழந்த அந்த தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

    அவரை தமிழகத்துக்கு கொண்டுவர காங்கிரஸ் மூத்த தலைவர்களும் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் ராகுல் காந்தி ஏற்கனவே கேரளாவில் போட்டியிடுவதால் பிரியங்காவும் தென் இந்தியாவுக்கு வர சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

    ராகுல், பிரியங்கா தென் இந்திய மாநிலங்களில் கவனம் செலுத்தும்பட்சத்தில் வட மாநிலங்களில் காங்கிரசுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா ரேபரேலி தொகுதியில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

    • சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது.
    • இந்தியா கூட்டணியிலும் ராஷ்டீரிய லோக்தள் கட்சி இடம் பெற்று இருந்தது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் ஜெயந்த் சவுத்ரி தலைமையில் ராஷ்டீரிய லோக்தள் (ஆர்எல்டி) கட்சி இயங்கி வருகிறது.

    மறைந்த முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரனான ஜெயந்த் சவுத்ரிக்கு உத்தரபிரதேசத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் ஜாட்யின மக்களின் ஆதரவு உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் இணைந்து ராஷ்டீரிய லோக்தள் கட்சி செயல்பட்டு வந்தது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணியிலும் ராஷ்டீரிய லோக்தள் கட்சி இடம் பெற்று இருந்தது.


    சமீபத்தில் சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ஜெயந்த் சவுத்ரி நன்றி தெரிவித்தார். இதையடுத்து அவரது ராஷ்டீரிய லோக்தள் கட்சி அணிமாறும் என்று தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜெயந்த் சவுத்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் பா.ஜ.க. தலைமையிலான அணியில் சேர முடிவு செய்துள்ளார்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள 80 எம்.பி. தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஜெயந்த் சவுத்ரிக்கு கணிசமான செல்வாக்கு இருக்கிறது. எனவே அந்த தொகுதிகளில் சிலவற்றை அவரது கட்சிக்கு பா.ஜ.க. ஒதுக்கும் என்று தெரிகிறது.

    • சோனியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
    • சோனியாவை போல காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மேல்-சபை எம்.பி.யாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மேல்-சபையான மாநிலங்களவைக்கு எம்.பி.க்களை தேர்வு செய்ய பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து எம்.பி.க்களை தேர்வு செய்வார்கள். இந்த எம்.பி. தேர்தலுக்கான மனு தாக்கல் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. வருகிற 15-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    மாநிலங்களவை தேர்தலை சந்திக்கும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளர்களை அறிவிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் 10 மேல்-சபை எம்.பி.க்களை பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    இதற்கிடையே தற்போதைய மேல்-சபை தேர்தல் மூலம் சோனியா காந்தியை மேல்-சபை எம்.பி.யாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பினார்கள்.

    இதையடுத்து சோனியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேல்-சபை எம்.பி.யாக அவர் விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மேல்-சபைக்கு தேர்வாக விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனியாவை போல காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மேல்-சபை எம்.பி.யாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான் தெலுங்கானாவில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. மனுசிங்வி ராஜஸ்தானில் போட்டியிட உள்ளார்.

    மத்திய பிரதேசத்தில் இருந்து மேல்-சபைக்கு தேர்வாக கமல்நாத் ஆதரவு திரட்டி வருகிறார்.

    ×