

மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் தனது மகன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேரப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கமல்நாத்தின் உதவியாளரும், காங்கிரஸ் தலைவர்களும் மறுத்தனர். என்றாலும் கமல்நாத்தும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்து டெல்லியில் தங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்யும் முயற்சியை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜிதேந்திரசிங் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் போபால் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களிடம் தற்போதைய பிரச்சினைகள் பற்றி விரிவாக பேசினார். காங்கிரசில் இருந்து விலக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். என்றாலும் கமல்நாத் எத்தகைய முடிவு எடுப்பார் என்று தெரியாததால் குழப்பம் நீடிக்கிறது.