search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property"

    நல்லம்பள்ளி அருகே சொத்தை பிரித்து தரும்படி மாமியார் மற்றும் மனைவி அடிக்கடி தொந்தரவு செய்ததால் கல்லூரி மாணவர் மாயமானார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சாமிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் அரவிந்த் (வயது 21).

    இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இந்த நிலையில் அதேகல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வரும் தாமரைக்கொடி என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். 

    பின்னர், தாமரைக்கொடி வீட்டிலேயே அரவிந்த் தங்கி வந்தார். இதனைத் தொடர்ந்து தாமரைக்கொடியும், அவரது தாயும் சேர்ந்து அரவிந்தனிடம் அவரது சொத்துக்களை அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பிரித்து வாங்கும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி அரவிந்த் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு தொலைபேசியில் அழைத்து எனது மனைவியும், மாமியாரும் சொத்தை பிரித்து தரும்படி, தொந்தரவு செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார். பின்னர் அரவிந்த் தொலைபேசியின் அழைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து அரவிந்த் அவரது மனைவி வீட்டிற்கும் செல்லவில்லை, அவரது தந்தை வீட்டிற்க்கும் செல்லவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி பல இடங்களில் தேடிப்பார்த்தும் அரவிந்த் கிடைக்கவில்லை. இது குறித்து பொம்மிடி காவல் நிலையத்தில் எனது மகனை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் கைதான இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் முன்னாள் மனைவிக்கு சொந்தமாக பாரிஸ் நகரில் உள்ள ரூ. 5.83 கோடி மதிப்பிலான சொத்து முடக்கப்பட்டது. #VVIPChopper #ChristianMichel #Michelsexwife
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 
     
    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் துபாயில் இருந்ததால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இதைதொடர்ந்து, கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த 22-12-2018 அன்று துபாயில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மூன்றுமாத காலமாக அடுத்தடுத்து ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். தற்போது, அவர் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

    அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடம் இருந்து இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் சுமார் 225 கோடி ரூபாய் கமிஷனாக பெற்றதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மேற்கண்ட தொகையில் 5 கோடியே 83 லட்சத்து 40 ஆயிரத்து 422 ரூபாயை பாரிஸ் நகரில் தங்கியிருந்த தனது முன்னாள் மனைவி வலேரி என்பவரின் வங்கி கணக்குக்கு கிறிஸ்டியன் மைக்கேல் முன்னர் அனுப்பி இருந்தது இந்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

    அந்தப் பணத்தை வைத்து பாரிஸ் நகரின் விக்டர் ஹுகோ பகுதியில் உள்ள 45-வது நிழற்சாலையில் வீட்டுடன் கூடிய ஒரு சொத்தினை கிறிஸ்டியன் மைக்கேலின் முன்னாள் மனைவி வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், மேற்படி சொத்தினை கையகப்படுத்த இந்தியாவை சேர்ந்த பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர். 

    கள்ளத்தனமான பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகல் விரைவில் பிரான்ஸ் அரசின் அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் எடுக்கும் நடவடிக்கையின் மூலம் இந்த சொத்து முடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #VVIPChopper #ChristianMichel #Michelsexwife
    போடி அருகே போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை அபகரித்த 9 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள தேவாரம் டி.கே.வி. பள்ளி தெருவை சேர்ந்தவர்கள் ஜெயராமன்(65), தங்கராஜ் (53), பாபு (39). இவர்களுக்கு தேவாரம் வட்ட ஓடை புலத்தில் புஞ்சை நிலம் இருந்துள்ளது.

    அந்த நிலத்தை தேவாரம் பகுதியை சேர்ந்த ராஜா (37), இவரது தந்தை ஈஸ்வரன் (60), இதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் (62), ராஜகோபால் (70), கனகராஜ் (54), ராகவன் (60), பாஸ்கரன் (60), தங்கம் (60), மாணிக்கம் (60) ஆகியோர் சேர்ந்து பத்திர எழுத்தர் முருகன் (50) என்பவர் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து கடந்த 2011-ம் ஆண்டு ராஜாவின் பெயரில் பத்திரம் பதிவு செய்து சொத்துக்களை அபகரித்துள்ளனர்.

    இதுகுறித்து ஜெயராமன் தரப்பினர் தேவாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் தேவாரம் போலீசார் 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில் இந்த வழக்கில் தொடர்புடைய மாணிக்கம் இறந்து விட்டார். மீதியுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதி மணிவாசகன் தனது தீர்ப்பில், போலியான ஆட்கள், ஆவணங்கள் மூலம் சொத்தை அபகரிக்க முயன்ற ராஜாவுக்கு நான்கு பிரிவுகளின் கீழ் தலா இரண்டு ஆண்டுகள் வீதம் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஈஸ்வரன், கனகராஜ் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வீதம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், ஜெயராமன், ராஜகோபால், ராகவன், பாஸ்கரன், முருகன், தங்கம் ஆகியோருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் தலா 4 ஆண்டுகள் மற்றும் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews
    சொத்துக்களை வாங்குபவர்கள் இனி 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் செலுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ITDept ##ITnotice #cashransaction
    புதுடெல்லி:

    கணக்கில் வராத பணம், கருப்புப்பணம் மற்றும் சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகளை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



    அவ்வகையில், இனிமேல் சொத்துக்களை வாங்குபவர்கள் இனி 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் செலுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ITDept ##ITnotice #cashransaction #propertypurchase
    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஊழல் வழக்கில் சிக்கியதையடுத்து அவரது சொத்துக்களை முடக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது. #AsifAliZardari
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. பதவி வகித்த போது ரூ.22 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஒரு விசாரணை குழு அமைத்தது.

    அந்த குழு சர்தாரி, அவரது சகோதரி பர்யால்தர்புர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.

    அதுகுறித்த அறிக்கை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி சர்தாரி, அவரது தங்கை பர்யால் தர்பூர் மற்றும் சர்தாரி குரூப் சொத்துக்களை முடக்க பரிந்துரை செய்துள்ளது.

    அவற்றில், சர்தாரி, பெயரில் உள்ள வங்கி கணக்குகள், கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற பிலாவல் ஹவுசுக்கு சொந்தமான 5 பிளாட்டுகள், அமெரிக்கா மற்றும் துபாயில் உள்ள சொத்துக்கள் அடங்கும். #AsifAliZardari
    அசையா சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதில் கவனமாக இல்லையென்றால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
    நிலத்தில் முதலீடு செய்வது தான் இன்றைக்கு நல்ல முதலீடாக கருதப்படுகிறது. ஆனால், அசையா சொத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இதில் கவனமாக இல்லையென்றால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

    அப்படியென்றால், சொத்தை வாங்கும்போது எந்தெந்த வி‌ஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? சொத்தின் உரிமையாளர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அந்த சொத்தை நேரடியாக வாங்க முடியாது. நீதிமன்றத்தின் அனுமதி கட்டாயம் தேவை. அதிகாரம் பெற்ற முகவரிடம் (பவர்) சொத்து வாங்குவதாக இருந்தால், நிலத்தை அல்லது சொத்தை விற்பதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். சில நேரம் விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மட்டும் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கலாம்.

    எனவே, ஆவணத்தை கவனமாகப் படிக்கவும். அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இல்லையென்றால், அந்த அதிகாரம் செல்லுபடியாகாது. நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்துடன் சொத்து விற்கப்படுகிறதா என்று பார்க்கவும். வாரிசு சான்றிதழ் மூலம் யாரெல்லாம் வாரிசுகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். வாரிசுதாரர்களில், சொத்துக்கு உரிமையுள்ளவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், உயர் நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் மூலம் தான் சொத்துப் பரிமாற்றம் நிகழ வேண்டும்.



    எப்போதும் சொத்தின் மூல ஆவணத்தை மட்டுமே நம்ப வேண்டும். எனவே, மூல ஆவணத்தைப் பார்க்காமல் முன்பணம் செலுத்த வேண்டாம். மூல ஆவணம் இல்லை என்றால் சொத்து அடமானத்தில் வைக்கப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும்கூட, நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி, வரைபட அனுமதி உள்பட அனைத்து விதமான அனுமதிகளையும் சரிபார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைபடத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருந்தால், பின்னாளில் பிரச்சினைகள் எழும். சலுகை விலையில் கிடைக்கிறது என கருதி அவசர அவசரமாக வாங்கி, அவதிப்படுவதை தவிருங்கள். பிரச்சினை வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என இந்த வி‌ஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

    அனுமதிக்கப்பட்ட அளவைவிட அரையடி அதிகம் இருந்தாலும் பிரச்சினைதான். பத்திரப்பதிவுக்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில் முன்பணம், விற்பனை தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தையும் குறிப்பிட வேண்டும்.

    நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும்போது உரிமை, உடைமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதேபோல வில்லங்கச் சான்றிதழ் 30 ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள்வது உத்தமம்.
    சொத்துக்களை பெற்றுக்கொண்டு பெற்றோரை மகன்கள் தவிக்கவிட்டனர். இதையடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்து கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுத்தார்.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 75), விவசாயி. இவரது மனைவி பூங்காவனம் (63). இவர்களது மகன்கள் பழனி (40), செல்வம் (37). பழனி அரசு பஸ் கண்டக்டராகவும், செல்வம் கட்டிட தொழிலாளியாகவும் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 2 மகன்களுக்கும் சரி பாதியாக பிரித்து வழங்கி ‘செட்டில்மென்ட்’ பத்திரப்பதிவு மூலம் எழுதி வைத்தார்.

    அதன்பிறகு மகன்களின் நடவடிக்கைகள் மாறி, பெற்றோருக்கு சாப்பாடு போடாமல் தவிக்கவிட்டு உள்ளனர். இளைய மகன் செல்வம் அவரது தந்தையை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த கண்ணனும், அவரது மனைவி பூங்காவனமும் கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமியிடம் புகார் மனு அளித்தனர். இந்த மனு குறித்து விசாரிக்க உதவி கலெக்டர் (பொறுப்பு) உமாமகேஸ்வரியிடம் கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர் கண்ணனின் 2 மகன்களையும் அழைத்து விசாரணை நடத்தினார்.

    அப்போது மூத்த மகன் பழனி மட்டும் பெற்றோருக்கு ஜீவனாம்சம் தருவதாக தெரிவித்து உள்ளார். இளைய மகன் செல்வம் சொத்துக்களை தர மறுத்துவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை கலெக்டரிடம் உதவி கலெக்டர் ஒப்படைத்தார்.

    இதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின் கீழ் கண்ணன் அவரது மகன்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இளைய மகன் செல்வம் வேறொருவருக்கு விற்ற நிலத்தின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து மீண்டும் 5 ஏக்கர் நிலமும் விவசாயி கண்ணன் பெயரில் 2.15 ஏக்கரும், பூங்காவனம் பெயரில் 2.85 ஏக்கரும் பட்டா மாற்றம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கண்ணன், அவரது மனைவி பூங்காவனத்திடம் நிலத்தின் உரிமைக்கான பட்டாவை கலெக்டர் வழங்கினார். கண்ணீர்விட்டு அழுத இருவரும், கலெக்டரிடம் நன்றி தெரிவித்தனர். அப்போது உங்கள் மகன்களால் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு ஆறுதல் கூறினார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    வயது முதிர்ந்த காலத்தில் பெற்றோரை பாதுகாப்பது மகன்களின் கடமை. பெற்றோரை தவிக்கவிடும் மகன்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். நிலம் கிடைத்தால் உழைத்து வாழ்வோம் என்ற முதியவர்களின் தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது. சட்டப்படி சொத்துக்களை மீட்டு ஒப்படைத்திருக்கிறோம். உரிய பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படும்.

    இதன்பிறகு தாங்கள் விரும்பும் நபர்களுக்கு இந்த சொத்துக்களை வழங்கும் உரிமை பெற்றோருக்கு கிடைத்திருக்கிறது.

    முதிர்வயதில் இதுபோன்ற துயரத்தில் தவிப்போர் புகார் அளித்தால் உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார். 
    சேர்ந்தமரம் அருகே சொத்தை எழுதி தராததால் மலையில் இருந்து விழுந்து வாலிபர் உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    புளியங்குடி:

    சுரண்டை அருகே உள்ள கடையாலூருட்டியை சேர்ந்த மகாராஜன் மகன் சேர்ம செல்வன் (வயது20). இவர் கேரளாவில் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் சேர்ந்தமரத்தை அடுத்த வீரசிகாமணி விலக்கில் இருந்து பாம்புகோவில் செல்லும் வழியில் மலைக்குன்றின் கீழே ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேர்மசெல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். சேர்மசெல்வனின் தந்தைக்கு 2 மனைவிகள், 4 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் சேர்ம செல்வனின் தந்தை அப்பகுதியில் 10 சென்ட் இடம் வாங்கினாராம். அதில் 5 சென்ட் இடத்தை தனக்கு எழுதி தருமாறு சேர்ம செல்வன் தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து சேர்ம செல்வன் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சேர்மசெல்வன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பெங்களூரில் சொத்துக்காக கணவரை கொலை செய்ய திட்டமிட்ட மனைவி மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பெங்களூரு எச்.ஏ.எல். பகுதிக்குட்பட்ட காளப்பா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரா(48). இவரது மனைவி முனிரத்தினம்மா(45). இவர்களுக்கு சேதன்(20), அபிஷேக்(19) என்ற இரு மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரா, சரக்கு வேன் டிரைவர் ஆவார்.

    இந்த நிலையில், பெங்களூரு அருகே கித்தேகானஹள்ளி என்ற இடத்தில், ராமச்சந்திரா 8 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டார். இந்த சொத்தை, மனைவி முனிரத்தினம்மா தங்களுக்கு தருமாறு கணவரிடம் கேட்டார்.

    இதுதொடர்பாக கணவன்-மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, முனி ரத்தினம்மா கோபித்துக் கொண்டு, தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அத்துடன் சொத்துக்காக, நீதிமன்றத்தில் வழக்கும் போட்டார்.

    கடந்த 5-ந் தேதி இரவு, சில மர்ம நபர்கள், ராமச்சந்திராவை தொடர்பு கொண்டு, வாடகைக்கு வேன் வேண்டும் என்றும், எச்.ஏ.எல். கேட் அருகே வருமாறும் கூறினார்கள். இதையடுத்து அங்கு சென்ற ராமச்சந்திராவின் கை, கால்களை கட்டிப்போட்டும், தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியும் வேனில் கொண்டு சென்றனர்.

    பின்னர், கித்தேகானஹள்ளியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்து சொத்தை முனிரத்திம்மாவின் பெயரில் எழுதி தருமாறு கொலை மிரட்டல் விடுத்து, சித்ரவதை செய்தனர்.

    நேற்று முன்தினம் இரவு, ராமச்சந்திராவின் கதறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற ஒருவர், ராமச்சந்திரா அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த எச்.ஏ.எல். போலீசார், ராமச்சந்திராவை மீட்டனர். மேலும் அவர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக புகார் அளித்ததன்பேரில், மனைவி முனிரத்தினம்மா மற்றும் 2 மகன்கள், உறவினர் சிவகுமார்(42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ராயப்பேட்டையில் சொத்துவரியை செலுத்த நோட்டீஸ் அனுப்பியும் வரியை கட்டாத 5 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி 9-வது மண்டலத்திற்கு உட்பட்ட ராயப்பேட்டை ஒயிட் சாலை பகுதியில் 5 கடைகளின் உரிமையாளர்கள் முறையான சொத்துவரி மாநகராட்சிக்கு செலுத்தவில்லை.

    மேலும் தொழில் உரிமமும் பெறவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு சொத்துவரி நிலுவை தொகையினை மாநகராட்சிக்கு உடனே செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

    ஆனாலும் சொத்துவரி பாக்கி தொகை ரூ.22 லட்சம் செலுத்தப்படாமல் இருந்தது. சொத்துவரியை செலுத்த 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பிறகும் அவர்கள் செலுத்தவில்லை.

    இதனையடுத்து அந்த 5 கடைகளையும் இன்று மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கடையின் முகப்பு பகுதியில் எச்சரிக்கை நோட்டீசையும் ஒட்டினர். அவை டயர் விற்பனை செய்யக் கூடிய வியாபாரிகளின் கடைகளாகும். மாநகராட்சி அதிகாரிகள் லட்சுமி நாராயணன், தமிழ்செல்வன், சீனிவாசன், ராஜூ ஆகியோர் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சிக்கு 2014-ம் ஆண்டு முதல் சொத்துவரி செலுத்தவில்லை. மேலும் தொழில் உரிமமும் பெறவில்லை. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். #tamilnews
    பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் முகமது உசேனின் சொத்து மதிப்பு ரூ.40 ஆயிரத்து 300 கோடி என தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். #MohammedHussain #Pakistanelections
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற ஜூலை 25-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் முஷாபர்கார் என்.ஏ.-182 தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முகமது உசேன் என்கிற முன்னா ஷேக் போட்டியிடுகிறார்.

    இவர் தனது வேட்பு மனுவில் சொத்து மதிப்பு ரூ.40 ஆயிரத்து 300 கோடி என குறிப்பிட்டுள்ளார். அதில் 300 ஏக்கர் நிலம், மற்றும் தோட்டங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 வீடுகள் மற்றும் இதற்கான வீட்டு உபயோக பொருட்கள் இருப்பதாகவும், இவற்றுக்கு இதுவரை வரி செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இவரைப்போன்று எந்த ஒரு அரசியல்வாதியும் தனது சொத்து விவரத்தை வெளிப்படையாக கூறியதில்லை.



    இதுகுறித்து அவர் கூறும்போது, “தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் தங்களது சொத்து மதிப்பை பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். அதன்படி நான் எனது உண்மையான சொத்து விவரத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறேன்.

    அதுபோன்று பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார். #MohammedHussain #Pakistanelections
    திவாகரனுக்கும் எனக்கும் எந்த வித சொத்து தகராறும் இல்லை என்று டி.டி.வி. தினகரன் சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #Divakaran #dinakaran #karnatakagovernor

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக டி.டி.வி. தினகரன் நேற்றிரவு சேலத்திற்கு வந்தார். இன்று காலை சேலத்தில் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்ணன் தம்பி என்றால் சொத்து தகராறு வரும். எனது முன்னாள் மாமா திவாகரனுக்கும், எனக்கும் சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுவது ஏற்புடையது அல்ல, அவருக்கும் எனக்கும் எந்த வித சொத்து தகராறும் இல்லை.

    துரோக கும்பலுடன் அவர் சேர்ந்து விட்டார். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சுக்கு அவர் ஏஜெண்டாக செயல் படுகிறார். மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம்.


    கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் பெரும்பான்மையை முதலில் நிரூபிக்கும் படி கவர்னர் கூறி இருக்கலாம்.

    104 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றும் பெரும்பான்மை கிடைக்காததால் குழப்பம் நீடித்துள்ளது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவால் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு வரவேற்கதக்கது.

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்திலேயே பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது தொடர்பாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்.

    இது தொடர்பாக எங்கள் வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அ.தி.மு.க. வை சேர்ந்த பலரும் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். விரைவில் நிர்வாகிகளும் எங்கள் பக்கம் வருவார்கள்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் ஆகியோரிடம் பேசினேன். மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்ற உத்தரவை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 

    இவ்வாறு அவர் கூறினார். #Divakaran #dinakaran #karnatakagovernor

    ×