search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர்"

    • கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம்
    • விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர்

    உத்தரபிரதேசத்தில் 2022 டிசம்பரில் கரிஷ்மா என்ற பெண் விகாஸ் என்பவரை திருமணம் செய்தார். பின்பு இந்த ஜோடி கிரேட்டர் நொய்டாவில் உள்ள விகாஸ் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், வரதட்சணை கொடுமையால் கரிஷ்மா அவரது கணவர் மற்றும் கணவரது குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    இது தொடர்பாக கரிஷ்மாவின் சகோதரர் தீபக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கரிஷ்மாவின் திருமணத்தின் போது விகாசின் குடும்பத்தினருக்கு ₹ 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ஒரு எஸ்யூவி காரை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால், விகாசின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக இன்னும் அதிக வரதட்சணை கேட்டு கரிஷ்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.

    இந்நிலையில், கரிஷ்மாவிற்கு ஒரு பெண் குழந்தையைப் பிறந்துள்ளது. அதன்பிறகும் விகாஸ் குடும்பத்தினரின் அதிக வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். அதனால் கரிஷிமாவின் குடும்பத்தினர் விகாஸ் குடும்பத்திற்கு கூடுதலாக ₹10 லட்சம் கொடுத்தனர். அதன்பின்பும் இந்த கொடுமை முடிவுக்கு வரவில்லை.

    அண்மையில், விகாஸ் குடும்பத்தினர் ஒரு ஃபார்ச்சூனர் கார் மற்றும் கூடுதலாக ₹ 21 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதனை கரிஷ்மா குடும்பத்தினரால் கொடுக்கமுடியவில்லை.

    இந்நிலையில், மார்ச் 29 அன்று கரிஷ்மா எங்களை தொடர்பு கொண்டு விகாஸ் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்தார். உடனே நாங்கள் விகாஸ் வீட்டிற்கு சென்று பார்க்கையில் கரிஷ்மா இறந்து கிடந்தார். கரிஷ்மாவை அவரது கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரில், விகாஸ், அவரது தந்தை சோம்பல் பதி, அவரது தாய் ராகேஷ், சகோதரி ரிங்கி மற்றும் சகோதரர்கள் சுனில் மற்றும் அனில் ஆகியோர் மீது வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் விகாஸ் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் விரைந்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், முஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புடானில் உள்ள நைத்துவா கிராமத்தில், மது அருந்துவதை தடுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட முனீஸ் சக்சேனா மதுவுக்கு அடிமையானவர். நேற்று இரவு முனீஸ் சக்சேனா குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.

    அவரது மனைவி ஷனோ (40), முனீஸ் மேலும் மது அருந்துவதை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ், தனது மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து, ஷனோ மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷனோவின் மாமியார் முன்னி தேவி, ஷனோவை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில், அவருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது.

    ஷனோ தீயில் எரிவதை கண்டு அவரது குழந்தைகள் கத்தி கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் தீயை அணைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஷவேனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அவரது மாமியார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினர்.

    • வேறு வாலிபருடன் பழகியதால் ஆத்திரம்
    • இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி செல்போன் மூலமாக இளம்பெண் அவருடன் பேசி வந்தார். இது இளம்பெண்ணின் கணவருக்கு மனைவி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியுடன் பேசும் வாலிபருக்கு தொடர்பு கொண்டு நீ எப்படி எனது மனைவியிடம் பேசலாம் என கேட்டார். அதற்கு அந்த வாலிபர் உன் மனைவியிடமே இதனை கேள் என கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனையடுத்து இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் கணவர் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து தனது மனைவியின் கழுத்தில் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம் பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார்.
    • உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் சந்தைப்பேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த 2022 டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்த பின்னர் மனைவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு தினமும் அவரை அடித்து துன்புறுத்தியதால், திருமணமான 4 மாதத்தில் உமா மகேஸ்வரி கணவரை பிரிந்து தாயார் தனலெட்சுமியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தாயாருடன் சாலையில் நடந்து சென்ற உமாமகேஸ்வரியை மாரிமுத்து தனது நண்பர்களுடன் வந்து காரில் கடத்திச் சென்றார். இதுகுறித்து, தனலெட்சுமி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். உமாமகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது தாய் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில் மகேஸ்வரி தான் சென்னையில் உள்ளதாக தாயாருக்கு தகவல் அளித்ததன் பேரில் மயிலாடுதுறை போலீசார் உமாமகேஸ்வரியை மீட்டு மயிலாடுதுறை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், போலீசாரிடம் உமாமகேஸ்வரி அளித்துள்ள வாக்குமூலத்தில், தன்னை காரில் கடத்திய கணவன் மாரிமுத்து, மயக்க மருந்து கொடுத்து மயக்கமடைய செய்தார். தொடர்ந்து ராமநாதபுரம் அழைத்து சென்று தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அங்கு தர்கா ஒன்றில் மாந்திரீகம் செய்தார். பின்னர் சென்னை அழைத்து சென்று தர்காவில் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கோடங்கி பூஜை செய்தார். அவருடன் வாழ மறுத்ததால் சென்னையில் நடுரோட்டில் விட்டு விட்டு சென்றுவிட்டார் தெரிவித்துள்ளார்.

    கணவன் தன்னை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக உமாமகேஸ்வரி கூறியதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயாருடன் அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுகிறார். உமா மகேஸ்வரியை கடத்திய கணவன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தவித்து வந்த நிலையில் தலைமறைவான ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.
    • காவி உடை அணிந்து சாமியாராக மாறியது ஓட்டேரி போலீசுக்கு தற்போது தெரியவந்தது.

    சென்னை:

    சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது மனைவி வாணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தார். இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    காதல் திருமணம் செய்து கொண்டு 16 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த ரமேஷ் மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் தலையில் கல்லை தூக்கி போட்டு அவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இதனால் ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தவித்து வந்த நிலையில் தலைமறைவான ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.

    போலீசார் தீவிரமாக தேடியும் ரமேஷ் சிக்காமல் ஊர் ஊராக சென்று பதுங்கினார். இதன் பின்னர் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு தாடி வளர்க்க தொடங்கினார். பின்னர் காவி உடை அணிந்து சாமியாராக மாறியது ஓட்டேரி போலீசுக்கு தற்போது தெரியவந்தது.

    இதையடுத்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ரமேஷை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இணை கமிஷனர் ரம்யா பாரதி, துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சாமியாராக மாறிய ரமேஷை பிடிக்க களத்தில் இறங்கினர்.

    திருவண்ணாமலை, வடலூர், சதுரகிரி உள்பட சாமியார்கள் அதிகமாக தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று ரமேஷ் காவி உடையில் அடையாளம் மாறிப்போய் யாசகம் கேட்டு அந்த பணத்தை வைத்து சாப்பிட்டு வந்தது தெரிய வந்தது.

    இந்நிலையில் ரமேஷ், தனது நண்பரான இன்னொரு சாமியாரின் செல்போன் எண்ணில் இருந்து நண்பரின் செல்போனுக்கு 'கூகுள் பே' மூலமாக பணம் அனுப்பியது தெரிய வந்தது. இந்த பணத்தை தனது மகன்களிடம் கொடுத்து விடுமாறு நண்பரிடம் போன் செய்து ரமேஷ் கூறியதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சாமியாரின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர்.

    இந்நிலையில் ரமேஷ் சாமியார் வேடத்தில் சென்னைக்கு வந்திருப்பதும், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆசிரமத்துக்கு செல்ல இருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே போலீசார் கண்காணித்தனர். அப்போது இன்று அதி காலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதிக்கு வந்த ரமேஷை இன்ஸ்பெக் டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
    • நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார்.

    கோவை:

    கணவன்-மனைவி அன்பு என்பது ஆத்மார்த்தமானது. அன்பான மனைவிக்கு கணவனிடம் உள்ள அன்பு போற்றத்தக்கது. ஏதோ ஒரு காரணத்தால் தங்கள் துணை இறந்த பிறகு அவர்களை மறக்க முடியாமல் தவிக்கும் கணவன், மனைவியை இன்றும் பார்க்கிறோம்.

    அதேபோல் இறந்த தன் மனைவியை மறக்க முடியாமல் அவரது கல்லறைக்கு தினமும் சென்று வழிபட்டு வருகிறார் கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி. கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவரது மனைவி சரோஜினி. இவர் கணவர் சுப்பிரமணியன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இதனால் இவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் சரோஜினி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார். தினமும் அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் அவரது கல்லறைக்கு சுப்பிரமணியன் செல்லத் தொடங்கினார். தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக காலையில் சரோஜினியின் கல்லறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டார். அங்கு கல்லறை முன்பு விளக்கேற்றி வழிபட்டு விட்டு வேலைக்கு செல்வார்.

    பின்னர் மாலையிலும் கல்லறைக்கு சென்று வணங்குவார். அப்போது அன்று நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார். சரோஜினி இறந்தாலும் தன்னுடனேயே வாழ்வதாக எண்ணி இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

    தனது மனைவி மீது சுப்பிரமணியன் கொண்டுள்ள அன்பை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதுபற்றி சுப்பிரமணியன் கூறுகையில் என் மனைவி சரோஜினி, அதிக பாசத்துடன் என்னை கவனித்து வருகிறார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. ஷாஜகான் தனது மனைவிக்காக தாஜ்மகால் கட்டியது போல் எனது மனைவிக்காக நானும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது. விரைவில் அதனை செய்து முடிப்பேன் என்றார்.

    • கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு
    • போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்டம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனது மகனுடன் நாகர்கோவிலில் உள்ள துணிக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் இன்று காலை வந்தனர். கலெக்டர் அலுவலகம் பகுதியில் வந்த போது கணவன்-மனைவிக்கிடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவன் திடீரென மனைவியை ஹெல்மெட்டால் தாக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் கணவன்-மனைவிக்கு அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • கணவர் மூர்த்தியின் பிணம் வனப்பகுதியில் உடம்பில் குண்டு காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • எனது கணவரை சுட்டு கொன்ற கும்பலை சேர்ந்தவர் அடிக்கடி தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை, குறிப்பாக காட்டுப்பன்றிகளை வேட்டை ஆடுவார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே காக்கம் பாடி மலை கிரா மத்தை சேர்ந்த மெய்யன் மகன் மூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், மூர்த்தி ஆடு களுக்கு இலை வெட்டுவதற்காக வனப்பகுதிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மேலும் மூர்த்திக்கு அடிக்கடி வலிப்பு வருவது வழக்கம். இதனால் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று அவரது வீட்டினர் தேடி வந்தனர்.

    இதனிடையே அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள சமுத்திரகாடு என்னும் வனப்பகுதியில் மூர்த்தி இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஏற்காடு போலீசார் மூர்த்தி உடலை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதனிடையே சம்பவம் நடந்து 2 மாதங்களுக்கு பின்னர் மூர்த்தி கொலை செய்யப்பட்டதாகவும், அவரை 8 பேர் கொண்ட கும்பல் சுட்டு கொன்றுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் ஏற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் மூர்த்தியின் மனைவி மணிமேகலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்கள் வீட்டில் 10 ஆடுகள் வளர்த்து வருகிறோம். என் கணவர் தினமும் காட்டிற்கு சென்று ஆடுகளுக்கு இலை தழைகளை வெட்டி எடுத்து வருவார். கடந்த 18-4-2023 அன்று வழக்கம் போல என்னுடைய கணவர் மற்றும் வேலு என்பவர் மேய்ச்சலுக்கு சென்றனர். ஆனால் அதன் பின்னர் என் கணவர் மூர்த்தி வீடு திரும்பவில்லை.

    இதை அடுத்து 19-4-2023 அன்று காலை முதல், என்னுடைய உறவினர்களுடன் சேர்ந்த என் கணவரை தேடினேன். அப்போது, கணவர் மூர்த்தியின் பிணம் வனப்பகுதியில் உடம்பில் குண்டு காயங்களுடன் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று, தலையிலும் விலாவிலும் குண்டு அடிபட்ட என் கணவரின் உடலை பார்த்தோம்.

    பின்னர் இதுபற்றி ஏற்காடு போலீஸ் நிலையத்தில் கூறினேன். அங்கு இருந்த போலீஸ் அதிகாரி உண்மைக்கு புறம்பான எதை எதையோ எழுதிக் கொண்டு என்னிடமும், வேலு மற்றும் வேறு சில சாட்சியிடமும் கையொப்பம் வாங்கிக் கொண்டனர்.

    இது மட்டுமன்றி வேறு சில வெற்று காகிதங்களில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக்கொண்டு பின்னர் தேவைப்படும் என்று சொன்னார். அந்த நேரத்தில், என் கணவரை சுட்டு கொன்ற கள்ளத் துப்பாக்கி வைத்திருக்கும் கும்பல் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்தனர்.

    உடனே என்னை போலீஸ் அதிகாரி சரிமா நீ வீட்டுக்கு போ, நான் பார்த்துக் கொள்கிறேன், உன் கணவர் மூர்த்தியின் கொலைக்கு காரணமானவர்களுக்கு நான் உரிய தண்டனை வாங்கி தருகிறேன் என்று கூறி எங்களை போலீஸ் நிலையத்திலிருந்து விரைவாக அனுப்பிவிட்டார்.

    தற்போது என் கணவர் மரத்தில் ஏறி இலைகளை பறித்தபோது வலிப்பு வந்ததால், தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் எனது கணவரை சுட்டு கொன்ற கும்பலை சேர்ந்தவர் அடிக்கடி தடை செய்யப்பட்ட வனவிலங்குகளை, குறிப்பாக காட்டுப்பன்றிகளை வேட்டை ஆடுவார்.

    அவர் உள்பட 8 பேரும் வனப்பகுதியில் வேட்டையாடும் போது, அதன் அருகில் புறம்போக்கு நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த எனது கணவர், இதனை வன அதிகாரிகள், போலீசாரிடம் சொல்லி விடுவார் என்பதால் அவரை தடை செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டனர்.

    பின்னர் அதிகாரிகளின் துணையோடு, எங்கள் பழங்குடியினர் வழக்கத்திற்கு மாறாக குண்டு அடிபட்ட அவர் சடலத்தை எரித்து தடயங்களை அழித்துவிட்டனர். மேலும் போலீசார் உள்ளிட்ட அதி காரிகள் ரூ. 8 லட்சம் லஞசம் வாங்கி கொண்டு சாட்சிகளை மறைத்துவிட்டனர்.

    எனவே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சி.பி.சி.ஐடி போலீஸ் மூலமாக மறு விசாரணை செய்து 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் எனக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் உயிர் ஆபத்து இருப்பதால், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    • மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
    • போலீசார் ஜெயில் வாசல் முன்பே வேறொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர்.

    செங்கல்பட்டு:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சங்கராபுரத்தை சேர்ந்தவர் மோகன் (32). வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கும் விடுதிகளில் லேப்-டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனது.

    இந்த வழக்கு தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏகாட்டூர் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த மோகனை கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அவரது மனைவி, மகனுடன் வந்து இருந்தார். அவர்களுடன் வக்கீலும் இருந்தார்.

    ஜெயிலில் இருந்து மோகன் வெளிய வந்ததும் அவரை பாசத்துடன் மனைவி கட்டி அணைத்து வரவேற்றார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

    அப்போது அங்கு சாதாரண உடையில் இருந்த கேளம்பாக்கம் போலீசார் ஜெயில் வாசல் முன்பே வேறொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர். அவர்கள் மோகனை வலுக்கட்டாயமாக அவர்களது வாகனத்தில் ஏற்ற இழுத்து சென்றனர். இதனை கண்ட மோகனின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கணவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் அவரது வக்கீலும் பிடிவாரண்டு இல்லாமல் எப்படி கைது செய்யமுடியும்? பிடிவாரண்டை காட்டிவிட்டு மோகனை அழைத்து செல்லுங்கள் என்றார்.

    எனினும் இதனை போலீசார் கண்டு கொள்ளாமல் மோகனை தங்களது வாகனத்தில் ஏற்றி செல்வதில் மும்முரமாக இருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் கணவரை காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் மோகனின் மனைவி தவித்தார்.

    திடீரென அவர் தனது கணவர் மோகனை கட்டி அணைத்தபடி கதறி அழுதார். மேலும் தனது மகனையும் ஒரு கையில் வைத்தபடி போலீசாரிடம் கெஞ்சினார். இதனால் ஜெயில் வாசல் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. கணவரை காப்பாற்ற வேண்டும் என்ற மனைவியின் பாசப்போட்டம் அங்கிருந்தவர்களின் மனதை கனக்க செய்தது.

    இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் தவித்து நேரத்தில் கணவர் மோகனை அழைத்துக்கொண்டு அவரது மனைவி மகனுடன் வேறொரு காரில் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் மோகனை கைது செய்ய வந்த போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஏகாட்டூர் பகுதியில் உள்ள விடுதிகளில் 100-க்கும் மேற்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனதாக புகார்கள் வந்து உள்ளன. இதுபற்றி மோகனிடம் விசாரிக்க முடிவு செய்து வந்தோம் என்றனர்.

    • இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை.
    • எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ), மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த நித்யா (23) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் நித்யா அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். அதன் பின்னர் அவரது நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டது. 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக மூழ்கி இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் என்பவர் நித்யாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

    பின்னர் கணவருக்கு தெரியாமல் நீண்ட நேரம் அவருடன் அரட்டை அடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறிச்சென்ற நித்யா அதன் பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து புஷ்பராஜ் காதல் மனைவியை அவர் வேலை பார்க்கும் பள்ளி, தோழிகள், உறவினர்கள் வீடு உன தேடி வந்தார். ஆனால் நித்யா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மனைவியின் செல்போனிலிருந்து புஷ்பராஜூக்கு நள்ளிரவில் அழைப்பு வந்தது. உடனே புஷ்பராஜ் செல்போனை எடுத்துப் பேசினார். எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார். இதைக் கேட்டு புஷ்பராஜ் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்.

    பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில்,

    மாயமான நித்யா கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. அந்த இன்ஸ்டாகிராம் நண்பர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உறுதியாக தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.

    • அக்கா தேவி வீட்டிற்கு தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார்.
    • பல இடங்களில் தேடியுள்ளனர்.

    பல்லடம் :

    கோவை மாவட்டம், சூலூர் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). இவரது மனைவி கவிதா ( 29 ). இவர்களது மகன்கள் ரத்தீஷ்( 8 ), மிஜின்( 6 ) இந்த நிலையில் கடந்த 29- ந்தேதி பொங்கலூர் அருகே உள்ள வேலம்பட்டியில் வசிக்கும் கவிதாவின் அக்கா தேவி வீட்டிற்கு தனது 2 மகன்களுடன் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கவிதா மற்றும் அவரது 2 மகன்களுடன் வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து அவர்கள் பெருமாளுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக வேலம்பட்டி வந்த பெருமாள் இது குறித்து அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் எங்கு சென்றனர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • புஞ்சை புளியம்பட்டி அருகே 2 குழந்தைகளுடன் மனைவி மாயமானார் இதையடுத்து கணவர் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு:

    புளியம்பட்டி அடுத்துள்ள பனையம்பள்ளி, கே.வி.கே. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (34). இவர் ஆயில் மில்லில் பணியாற்றி வருகின்றார்.

    இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு திவாகர் (11), தியாகு(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்வத்தன்று வழக்கம் போல ராஜேந்திரன் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் புளியம்பட்டி போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக்கிராமம் ஊசிமலையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவிதா(35).

    இவர்களுக்கு 1 மகன், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த கவிதா சம்வத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து கணவர் முருகன் பர்கூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னர்.

    ×