search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property"

    • சொத்துப் பிரச்சினை தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
    • தெரு வாசிகள் கார்வேட்டிநகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஸ்ரீகாளஹஸ்தி

    சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் குருவமந்தடி (வயது 80). இவருக்கு 2 மனைவிகள் உண்டு. முதல் மனைவிக்கு ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார். முதல் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து, குருவமந்தடி 2-வதாக மங்கம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகள்கள் உண்டு. 2 மகள்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி விட்டது. முதல் மனைவியின் மகன் முரளி தனது மனைவியோடு சேர்ந்து, தந்தையின் சொத்தை சித்திக்கு தெரியாமல் தன்னுடைய பெயருக்கு மாற்றி கொண்டதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து மங்கம்மாவின் மகள்கள் நீதி வேண்டி கோர்ட்டை நாடினர். கோர்ட்டில் சொத்துப் பிரச்சினை தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    இந்தநிலையில் குருவமந்தடி உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென உயிரிழந்தார். தனது தந்தை உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட 2 மகள்களும் கிராமத்துக்கு வந்தனர். அவர்கள், தந்தையின் சொத்துப் பிரச்சினையைத் தீர்க்கும் வரை தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்த விட மாட்டோம், எனக் கூறி தடுத்தனர்.

    அதன் காரணமாக உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்களும், தெருவாசிகளும் கடந்த 3 நாட்களாக குருவமந்தடியின் உடலை வீட்டிலேயே வைத்திருந்தனர். இதனால் கார்வேட்டிநகரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தெரு வாசிகள் கார்வேட்டிநகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தெருவாசிகள் உதவியோடு நேற்று குருவமந்தடியின் 2 மகள்களுக்கும், மகனுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். இதையடுத்து குருவமந்தடியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

    • வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.
    • காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காங்கயம் : 

    வருகிற 30 ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் வணிகக் கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கயம் நகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்பு கடந்த ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் சொத்துவரி செலுத்துவதற்கு இம்மாதம் 30 ந் தேதி கடைசி நாளாகும். அதற்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால், எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் வணிக கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். தவிர, வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.எனவே மேற்கண்ட நடவடிக்கைகளை தவிா்ப்பதற்கு காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    • கடந்த 40 நாட்களுக்கு மேலாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
    • விடுமுறையில் வந்த அவர் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியம், பொன்னிவாடி கிராமத்தில் உள்ளது நல்லதங்காள் ஓடை அணை.இப்பகுதியில் உள்ள காலியிடத்தில், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. ஓடையின் நீர்த்தேக்க பகுதியில், சீமைக்கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்த போது, வீ த லீடர்ஸ் என்ற அமைப்பை துவக்கினார். பொன்னிவாடி கிராமத்தில் உள்ள அந்த அமைப்பின் கிளை சார்பில் சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணி நடந்துவருகிறது.

    சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்து கடந்த 40 நாட்களுக்கு மேலாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. மூலனூர் அருகே கோணேரிப்பட்டி கிராமத்தில் இருந்து, ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற பால்ராசு, தற்போது இமாச்சலபிரதேசம் சிம்லா மாவட்ட கலெக்டராக இருக்கிறார். விடுமுறையில் வந்த அவர் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    பால்ராசு கூறுகையில், அணைக்கட்டு மொத்தம் 937 ஏக்கரில் அமைந்துள்ளது.அவற்றில் 800 ஏக்கர் அளவுக்கு சீமைக்கருவேல மரம் வளர்ந்துள்ளது. அவற்றை முழுமையாக அகற்றி நீர்நிலையை பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகள் தான் அழியாத சொத்து.அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கம் 'நமது சொத்து' என்று பராமரிக்க வேண்டும் என்றார்.

    • முதுமையில் மனம் நோகாமல் பெற்றோரை பிள்ளைகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • பெற்றோருக்கு இருக்கும் கடமை உணர்வு, சட்ட ரீதியாக பிள்ளைகளுக்கும் உண்டு.

    சென்னை :

    சென்னையை சேர்ந்த நாகராஜன், சரோஜா தம்பதி. நாகராஜன் விமானப்படையில் அதிகாரியாகவும், சரோஜா நர்சாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு ராஜசேகர், ராஜேஷ் என்று 2 மகன்கள்.

    மூத்த மகன் ராஜசேகர் ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தங்கள் பெயரில் இருந்த வீட்டை இவரது பெயரில் நிபந்தனையுடன் பெற்றோர் எழுதி வைத்தனர். தங்களது கடைசி காலம் வரை மருத்துவ செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மூத்த மகன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    கடந்த 2012-ம் ஆண்டு நாகராஜன் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 4 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டார். அப்போது மூத்த மகன் ராஜசேகரை தொடர்பு கொண்டபோது, அவர் எந்த உதவியும் செய்யவில்லை. பல லட்சம் ரூபாயை சரோஜா செலவு செய்து, கணவரை காப்பாற்றியுள்ளார். பின்னர் சரோஜா உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது, உதவி கேட்டு, மூத்த மகனுக்கு தந்தை இ-மெயில் கடிதம் அனுப்பியுள்ளார். அதற்கு எந்த பதிலும் இல்லை. இதனால், சரோஜா ஆஸ்பத்திரியிலும், அவரது கணவர் நாகராஜன் முதியோர் இல்லத்திலும் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அதனால், அவர் பெயரில் எழுதி வைத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை நாகராஜனும், சரோஜாவும் 2014-ம் ஆண்டு ரத்து செய்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பறிபோனதால், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ராஜசேகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்தது தவறு என்று தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், நாகராஜன், சரோஜா ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் சாரதா விவேக் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை ஏன்நோற்றான் கொல் எனும் சொல்" என்ற திருக்குறளை உதாரணமாக கூறி நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    பெற்றோருக்கு இருக்கும் கடமை உணர்வு, சட்ட ரீதியாக பிள்ளைகளுக்கும் உண்டு. முதுமையில் மனம் நோகாமல் பெற்றோரை பிள்ளைகள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், இதை பெரும்பாலான பிள்ளைகள் ஏற்க மறுப்பது வேதனையாக உள்ளது. இந்த வழக்கில் மூத்த மகனின் செயல்பாடு இரக்கமற்றது ஆகும்.

    அவருக்கு தந்தை அனுப்பிய இ-மெயிலில், "அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க டாக்டர்கள் கூறுகின்றனர். அப்படி ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டால், நான் எங்கே போவது? முதியோர் இல்லத்துக்கு போகவா? தம்பி ராஜேஷ் போன் எடுக்கவில்லை. எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. என்ன செய்வது? உடனே சொல்" என்று கூறியுள்ளார்.

    ஆனால், இந்த இ-மெயில் கடிதத்துக்கு மூத்த மகன் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. பெற்றோரை கடைசி காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பை மகன் மறந்து விட்டான். தனக்கு எழுதி வைத்த செட்டில்மெண்ட் படி, வீட்டு வாடகையை மட்டுமே பெற்றோர் சாகும் வரை வசூலிக்கலாம். அதற்காக செட்டில்மெண்ட்டை ரத்து செய்ய முடியாது என்று மகன் தரப்பில் வாதிடப்பட்டது.

    ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம், பிரிவு 23-ன்படி, பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை சட்ட ரீதியாக ரத்து செய்ய பெற்றோருக்கு முழு உரிமை உண்டு.

    இந்த வழக்கில் தாயும், தந்தையும் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது அவர்களை மகன் கவனிக்கவில்லை. பணம் கொடுத்து உதவி செய்யவும் இல்லை. எனவே, மகனுக்கு எழுதி வைத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்தது சரியானதுதான்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    • நகராட்சி சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் காரைக்குடி நகர்மன்றத்தலைவர் உறுதியளித்துள்ளார்.
    • காரைக்குடி நகர்மன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது.

    காரைக்குடி

    காரைக்குடி நகர்மன்ற கூட்டம் தலைவர் முத்துதுரை தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் குணசேகரன், ஆணையாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

    குணசேகரன் (துணைத்தலைவர்) :- சூடாமணிபுரம், தேவஸ்தான பகுதி, அண்ணாநகர், சேர்வார் ஊரணி பகுதிக ளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்க ளுக்கு வரி போட வேண்டும்.

    அன்னை மைக்கேல் (தி.மு.க. கவுன்சிலர்) :- காரைக்குடியில் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி வாங்குவதில் புரோக்கர்களின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் அவப்பெயர் ஏற்படுகிறது. சாலையோர மீன் கடைகளால் சுகா தாரக்கேடு நிலவுகிறது. நல்லதண்ணீர் ஊரணி அருகே ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.

    குருபாலு (அ.தி.மு.க. கவுன்சிலர்) :- அண்ணாநகர் பகுதியில் வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும். சாலை அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும்.

    கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளித்தனர்.

    கூட்டத்தில் இறுதியாக தலைவர் முத்துதுரை பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் காரைக்குடி நகராட்சியில் சாலைப்பணிகளுக்கு ரூ. 10 கோடியும், தெருவிளக்கு அமைக்க ரூ. 3 கோடியும் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.

    கடந்த ஆட்சியில் நகராட்சியின் இழந்த சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதே முதல் கடமை.

    ஊரகத்துறையில் சாதனை புரிந்து ஜனாதிபதி விருது பெற்ற அமைச்சர் பெரியகருப்பனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் பொறியாளர் கோவிந்தராஜ், நகரமைப்பு அலுவலர் மாலதி, நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

    • திருமங்கலத்தில் சொத்து மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு போலீஸ் ஐ.ஜி.யிடம் புகார் செய்யப்பட்டது.
    • குறைத்து மதிப்பீடு செய்து பத்திரப்பதிவு செய்து உள்ளனர்.

    மதுரை

    தென் மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ரா கார்க்கிடம் திருமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் வினோத்குமார் என்பவர் புகார் மனு கொடுத்தார். அதில் திருமங்கலத்தைச் சேர்ந்த சிலர் அங்குள்ள சார்பதிவாளர் அலுவ லகத்தில் ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.40 லட்சம் என்று குறைத்து மதிப்பீடு செய்து பத்திரப்பதிவு செய்து உள்ளனர்.

    இதனால் பத்திரப்பதிவு மற்றும் வருமான வரித்துறைக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து புகார் மனு அனுப்பினேன். அவர்கள் என் மீது ரூ.20 கோடி மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் கூறி வருகின்றனர்.

    திருமங்கலம் சார்பதி வாளர் அலுவலகத்தில் மோசடியாக பதிவு செய்தவர்களின் பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும். என் மீது பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    • களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70).
    • அவரது 3-வது மகன் இசக்கிப்பாண்டிக்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70). இவருக்கும், அவரது 3-வது மகன் இசக்கிப்பாண்டிக்கும் சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

    இந்த தகராறில் ஏற்கனவே இசக்கிமுத்து, சண்முகத்தாயையும், இசக்கிபாண்டி, தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர்கள் களக்காடு போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிபாண்டியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகத்தாய் அங்குள்ள புரோட்டா கடை முன்பு நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த இசக்கிப்பாண்டி சொத்தை எனக்கு எப்போது எழுதி தருவாய் எனக் கேட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது தாயாரான சண்முகத்தாயை தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூதாட்டியை தாக்கிய மகனை தேடி வருகிறார்.

    • 5 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டு தற்பொழுது 50 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் மட்டுமே உள்ளது.
    • தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப கமிஷன் உயர்த்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏஐ) எல்ஐசி முகவர்களின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை அளித்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முகவர்க ளின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை கைவிட கோரியும், எல்ஐசியை தனியார் மையமாக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை கோட்ட பொருளாளர் திருவாரூர் கருணாநிதி பேசுகையில் எல் ஐ சி முகவர்கள் இல்லாத நிலையை இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையும், மத்திய அரசும் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

    பிஎஸ்என்எல் இந்திய விமான கட்டுப்பாடு உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி வருகி ன்றனர்.இதேபோல் எல்ஐசி தனியார் மையமாக ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

    எல்ஐசி தொடங்கப்பட்ட பொழுது 1956ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையை தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.

    5 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டு தற்பொழுது 50 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் மட்டுமே உள்ளது.

    இந்த வளர்ச்சி முகவர்களால் ஏற்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில் எல்ஐசிஐ தனியார் மையமாக முயற்சித்த போது பல்வேறு போராட்டத்தில் இந்த சங்கம் ஈடுபட்டு எல்ஐசி யும் அதனால் பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகளையும் தக்க வைத்துள்ளோம்.

    ஆனால் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப கமிஷன் உயர்த்த வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை.

    புதிய பாலிசிகளுக்கு 20% கமிஷன் வழங்க வேண்டும், புதுப்பித்தலுக்கு ஐந்து சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும்.

    ஆனால் ஐ ஆர் ஏ டி ஐ சொல்வதைக் கேட்டு எல்ஐசி கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.

    குறிப்பாக பொதுமக்களின் உறுதி அளிக்கப்பட்ட உரிமம் தொகை வழங்கக்கூடாது என்பதில் முயற்சி செய்து வருகின்றனர்.

    எல்ஐசி முகவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் 5 லட்சம் முகவர்கள் இன்று பணி இழந்து சென்றுள்ளனர்.

    அனைத்து முகவர் சங்கங்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றால் எல்ஐசி என்ற ஒரு நிறுவனம் இல்லாத நிலை ஏற்படும் என்றார்.

    இதில் நூற்றுக்கு மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோட்ட துணைத் தலைவர் முனுசாமி, மாவட்ட செயலாளர் பழனிவேல் பொருளாளர் கார்த்திகேயன், பொறு ப்பாளர்கள் சரவணன் அன்புமணி ஜவகர் சீனிவாசன் ஆறுமுகம் கலாதேவி மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் கபிலன் பரமேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் ராஜேந்திரன் நன்றி உரையாற்றினார்.

    • சொத்து சம்பந்தமாக சகோதரர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
    • வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பம்பாளையத்தை சேர்ந்த சகோதரர்கள் பாலசுப்ரமணியம், வேல்மணி.இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று சொத்து சம்பந்தமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் பாலசுப்பிரமணியத்தின் உதட்டை வேல்மணி கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • பிரதமர் மோடியிடம் எந்த அசையா சொத்தும் இல்லை. வாகனமும் இல்லை.
    • கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதியம் ஆகியவற்றில் எந்த முதலீடும் இல்லை.

    புதுடெல்லி :

    கடந்த மார்ச் 31-ந் தேதி வரையிலான கடந்த நிதி ஆண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விவரம், பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய ஆண்டை விட அவரது அசையும் சொத்துகள் ரூ.26 லட்சத்து 13 ஆயிரம் உயர்ந்துள்ளது. தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 23 லட்சம். அவற்றில் பெரும்பாலானவை வங்கி டெபாசிட்கள் ஆகும்.

    கடந்த 2002-ம் ஆண்டு, குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, காந்திநகரில் வேறு 3 பேருடன் சேர்ந்து ஒரு வீட்டு மனையை மோடி வாங்கி இருந்தார். அதில் 4 பேருக்கும் சமபங்கு உள்ளது. தனது ஒரே அசையும் சொத்தான அந்த நிலத்தில் தனது பங்கை அவர் நன்கொடையாக அளித்து விட்டார். அதனால் அவரிடம் எந்த அசையா சொத்தும் இல்லை. வாகனமும் இல்லை.

    கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதியம் ஆகியவற்றில் எந்த முதலீடும் இல்லை. கைவசம் ரொக்கமாக ரூ.35 ஆயிரத்து 250 வைத்துள்ளார். அஞ்சலகத்தில் ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்களும், ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள எல்.ஐ.சி. பாலிசிகளும், ரூ.1 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்களும் வைத்துள்ளார்.

    ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனக்கு ரூ.2 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.2 கோடியே 97 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாக கணக்கு சமர்ப்பித்துள்ளார்.

    • அகல்யாவின் பெற்றோர் விவசாய நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.
    • சொத்தில் பங்கு வாங்கி வராததால் கம்பியால் அடித்து கொன்றேன் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி ஊராட்சி கரிகாலன் குட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 34), கம்ப்ரசர் டிராக்டர் மூலம் கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

    2-வது திருமணம்

    இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியாபுரத்தை சேர்ந்த அகல்யா (29) என்பவரை 2-வதாக திருமணம் செய்தார். 2 மாதங்களுக்கு முன்பு அகல்யாவின் பெற்றோர் விவசாய நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

    அந்த நிலத்தை விற்பனை செய்தால் அதற்குரிய பங்கு தொகை கேட்டு வாங்கி வரும் படி அகல்யாவிடம் மணிகண்டன் கூறினார். இது தொடர்பாக கடந்த மாதம் 14-ந் தேதி அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்கு வாதமாக மாறியது. அப்போது ஆத்திரம் அடைந்த மணிகண்டன் இரும்பு கம்பியால் மனைவியை தாக்கினார். இதில் காயம் அடைந்த அகல்யா வீட்டில் இருந்தார்.

    தகவல் அறிந்த அவரது பெற்றோர் அகல்யாவை மீட்டு கடந்த மாதம் 17-ந் தேதி துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    பரபரப்பு வாக்குமூலம்

    இது குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவர் கூறி இருப்பதாவது, மனைவியின் பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு ஏற்கனவே கூறி வந்தேன், இந்த நிலையில் பெற்றோர் விவசாய நிலத்தை விற்பதை அறிந்த நான் அதில் பங்கு தொகையை வாங்கி வரும் படி கூறினேன்.

    ஆனால் அதற்கும் மறுத்த அவர் என்னிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் இரும்பு கம்பியால் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைக்க போலீசார்நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையால் பயனடைந்தவர்களில் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் உத்தரவின்படி சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் அறிவுறுத்தலின்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்த மாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்ததாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டு 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 85 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்த ரூ.6 லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான 66 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், கஞ்சா வியாபாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி சார்ந்த புலன் விசாரணை மேற்கொண்டு அவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் அதனால் பயன் அடையும் அவர்களது குடும்பத்தினரின் வங்கி கணக்குகள் என மொத்தம் 54 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, கடந்த காலங்களில் இதுபோன்று கஞ்சா மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அதனால் பயன் அடைந்த அவர்களது குடும்பத்தாரின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கவும் தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த அதிரடி நடவடிக்கை தொடரும். கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கி வைப்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் எனது பிரத்யேக செல்போன் எண்ணான 7603846847 மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 04567-230759 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×