search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brother"

    • சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.
    • சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் நாயுடு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 56). இவர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்து வந்தார். இவரது இளைய சகோதரர் சந்திரசேகரன் (52). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, வாய்மொழியாக பாகப்பிரி வினை செய்து கொண்ட னர். இதில் சந்திரசேகரன் தனக்குப் பிரிந்த பாகத்தை, சிக்கத்தம்பூர் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த கிருஷ்ண மூர்த்தி, தன்னுடைய தம்பியான சந்திரசேகரனை கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்பொழு து சந்திரசேகரன் அருகில் இந்த ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து தப்பினார். அச்சம்பவத்தின் போது சந்திரசேகரனின் மாமியாரின் மூன்று கைவிரல்கள் வெட்டப்பட்டது.

    இந்த வழக்கில் இறந்த கிருஷ்ணமூர்த்தி சிறை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று கிருஷ்ணமூர்த்தி ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு சென்று கறந்த பாலினை விற்றுவிட்டு, மீண்டும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெருமாள் பாளையம் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்பொழுது சாலையோரம் மறைந்திருந்த சந்திரசேகரன், அவரது இருசக்கர வாகனத்தை மறித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓடினார். பின்னால் துரத்தி சென்ற சந்திரசேகரன் கிருஷ்ண மூர்த்தியை தலை மற்றும் வலது கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலேயே அமர்ந்திருந்த சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைதான சந்திரசேகரன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் சொத்து பிரச்சினையில் தன்னை கொலை செய்ய முயன்றதோடு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். துறையூர் அருகே நிலத்தகராறில் தம்பியே அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர்
    • ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம் நத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் சதீஷ்குமார் (27), மோகன்குமார் (24). இருவரும் தறிதொழில் செய்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு துட்டம்பட்டி பைபாஸ் அருவங்காடு பகுதியை சேர்ந்த மார்க்கண்டன் மகன் விக்னேஷ் (24) என்பவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு சேலை கொடுத்துள்ளனர். அதில் ரூ.8 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டு ரூ.1500 பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று சதீஷ்குமார், மோகன்குமார் ஆகியோர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று பாக்கி தொகையை கேட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த சூரி கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை தலை மற்றும் கையில் வெட்டினார். இதை மோகன்குமார் தடுக்க முயன்றபோது அவரையும் கத்தியால் தலை மற்றும் கை பகுதியில் வெட்டி காயப்படுத்தினார்.

    இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • கலகலப்பான குடும்ப படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
    • 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார்.

    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.

    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகி வருகிறது.

    'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், 'கே ஜி எஃப்', 'புஷ்பா' புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

     

    'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த 'மாறன்', ஜிவி பிரகாஷ் நடித்த 'செம' மற்றும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    'பிரதர்' குறித்து பேசிய இயக்குநர் எம். ராஜேஷ், "ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை பதித்து வந்தாலும் 'ஜெயம்', 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்', மற்றும் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை. இந்த வரிசையில் 'பிரதர்' இணையும் என்பதில் சந்தேகம் இல்லை," என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கலகலப்பான குடும்ப கதைக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி மீண்டும் திரும்பும் இத்திரைப்படம் 6 முதல் 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் அமையும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.

    ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்ட நிலையில் இப்படம் குறித்த மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். 

    • பங்குச்சந்தையில் பணம் இழந்ததால் கைவரிசை
    • வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் 2 பேரும் சிக்கினர்

    கோவை,

    கோவை கணபதி தெய்வநாயகி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது30). இவர் சங்கனூர் பகுதியில் பேக்கரி மற்றும் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி பிரேம்குமார் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றார்.

    பின்னர் மறுநாள் கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்றபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் கொள்ளையர்களின் நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    கொள்ளையர்களைப் பிடிக்க உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செல்வி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நகைகளை கொள்ளையடித்தவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் கண்காணிப்பு காமிராவில் பதிவான வாகன பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.

    விசாரணையில் நகைகளை கொள்ளையடித்தது பிரேம்குமாரின் சித்தப்பா மகன் மரிய அமிர்தம் (37) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து உதவி கமிஷனர் பார்த்திபன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    பிரேம்குமார் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டுக்கு சென்ற மரிய அமிர்தம் தொழில் முறையிலான கொள்ளையர்கள் திருடுவது போன்று வீட்டு பீரோவில் இருந்த உடைமைகளை களைத்து போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். சொந்தமாக தொழில் செய்து வரும் மரிய அமிர்தம் பங்குச் சந்தையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து உள்ளார். எனவே அவர் அதனை ஈடு செய்யும் வகையில் தனது சொந்த பெரியப்பா மகன் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மேலும் கணபதி வ.உ.சி. நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த யூசூப் (47) என்பவர்களையும் கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து காரமடையில் பதுங்கி இருந்த அவர்களை கைது செய்துள்ளோம்.

    கோவையில் நகை கொள்ளை சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்து விட்டு செல்ல வேண்டும்.

    இதனால் ரோந்து பணியில் போலீசார் அந்த வீட்டை கண்காணிப்பதன் மூலம் கொள்ளை சம்பவங்களை குறைக்க முடியும். மேலும் வீட்டை பூட்டும் போது வெளிப்பக்கமாக பூட்டு தெரியும் படி பூட்டாமல் உள்பக்கமாக பூட்ட வேண்டும். பூட்டு வெளியே தெரிந்தால் அது வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு கொள்ளையர்கள் கண்களை உறுத்தும். எனவே கொள்ளை சம்பவங்களை குறைக்க மக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அவருடன் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் செல்வி உள்ளிட்ட போலீசார் இருந்தனர்.  

    • உறவினர்களுக்கு பயந்து காதலர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    • வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி கமிட்டியார்காலனியைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 23) .இவர் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். உறவினர்களுக்கு பயந்து காதலர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் ரஞ்சினியின் தாய்மாமா கிருஷ்ணசாமி மற்றும் தினேஷ்,கோபி ஆகியோர் மதன்குமாரின் அண்ணன் நரேந்திரன் வீட்டுக்கு சென்று உன் தம்பி எப்படிடா எங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அடித்துள்ளனர். இதில் நரேந்திரன் காயம் அடைந்தார்.

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். காயம் அடைந்த நரேந்திரன் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    • தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் வாடகை கார் ஓட்டும் டிரைவராக உள்ளார்.
    • பின்னர் உரிய வாடகைகயை தரும்படி டிரைவர் வெங்கடேஷ் கேட்டார். இதில் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த டிரைவரை அரிவாளால் வெட்டினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஊனத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 25). வாடகை கார் ஓட்டும் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த சின்னகண்ணு (55), அவரது குடும்பத்தினர், காரை வாடகைக்கு எடுத்தனர். பின்னர் உரிய வாடகைகயை தரும்படி டிரைவர் வெங்கடேஷ் கேட்டார். இதில் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த சின்னகண்ணு, இவரது மகன்கள் மணிகண்டன் (28), சிவா (20) ஆகியோர் டிரைவரை அரிவாளால் வெட்டினர். காயம் அடைந்த வெங்கடேஷ் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்படி தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், சிவா ஆகியோரை கைது செய்தனர்.

    • சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் அண்ணன், தம்பி மீது 4 பேர் சரமாரியாக தாக்கினர்.
    • போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் நேற்று இரவு வீட்டுக்கு செல்வதற்காக புட்டாநாயக்க தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் ஆனந்த் வழி பாதையை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் என கூறினார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த 4 பேர் ஆனந்தை சரமாரியாக தாக்கினர்.

    இதை அறிந்த ஆனந்தின் சகோதரர்கள் கார்த்திக் மற்றும் முரளி இருவரும் வந்தனர். எதிர் தரப்பை சேர்ந்த 4 வாலிபர்களின் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் கார்த்திக் முரளியை பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.

    பலத்த காயம் அடைந்த கார்த்தி மற்றும் முரளி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு நிலவியது. அந்த காட்சிகளை வைத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

    • சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொண்டையம்பாளையம் ஊராட்சி இந்திராபுரம் புதுகாலனி பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

    போலீசார் விசாரணையில் கொண்டையம்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த அண்ணன், தம்பியான முத்துக்குமார் (22), அன்பழகன் (19) என்பதும் இவர்கள் வைத்திருந்த பையில் இருந்த பாலிதீன் கவரில் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி இருவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • சொத்து சம்பந்தமாக சகோதரர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
    • வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பம்பாளையத்தை சேர்ந்த சகோதரர்கள் பாலசுப்ரமணியம், வேல்மணி.இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று சொத்து சம்பந்தமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் பாலசுப்பிரமணியத்தின் உதட்டை வேல்மணி கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மதுரை வாலிபர் கொலை வழக்கில் பெற்றோருடன் சேர்ந்து சகோதரரும் கழுத்தை நெரித்து கொன்றது அம்பலமானது.
    • வீட்டில் கிடந்த ஸ்கிப்பிங் கயிறால், மாரிச்செல்வத்தின் கழுத்தை இறுக்கி கீழே தள்ள முயன்றேன்.

    மதுரை

    மதுரை சொக்கலிங்க நகர் மெயின் ரோட்டை சேர்ந்த மாரிசெல்வம் (வயது 27) என்பவர் வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து பொன்மேனி கிராம நிர்வாக அதிகாரி சுந்தரபாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில், எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது படுகொலை செய்யப்பட்ட மாரி செல்வத்தின் தந்தை நாகராஜன், தாய் குருவம்மாள் ஆகியோர் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள், "மாரிச்செல்வம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். எங்களையும் சரமாரியாக தாக்கினார். நாங்கள் அவரை கழுத்தை நெரித்து கொன்றோம்" என்று தெரிவித்தனர்.

    வயதான பெற்றோரால், மாரிச்செல்வத்தை எப்படி கொலை செய்ய முடியும்? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    மாரிசெல்வத்தின் சகோதரர் மயில்ராஜிக்கு திருமணம் ஆகிவிட்டது. குடும்பத்துடன் முதல் மாடியில் வசித்து வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். போலீசார் மயில்ராஜிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

    சகோதரன் மாரிசெல்வத்தை கொன்றது எப்படி? என்பது குறித்து போலீசாரிடம் மயில்ராஜ் கூறுகையில், "எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான சொத்தை 15 நாட்களுக்கு முன்பு விற்றோம். அதில் சம பங்கு வேண்டும் என்று மாரிச்செல்வம் கேட்டு தகராறு செய்தார். இதன் காரணமாக எனக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    மாரிச்செல்வம் நேற்று நள்ளிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அவர் எங்களிடம் சொத்தில் பங்கு கேட்டு மீண்டும் தகராறு செய்தார். நான் அவரை சமாதானம் செய்தேன். அவர் என்னை சரமாரியாக தாக்கினார். பெற்றோர் எனக்கு ஆதரவாக பேசினர். இதனால் மாரிச்செல்வம் அவர்களையும் சரமாரியாக தாக்க ஆரம்பித்தார். இது என்னை ஆத்திரப்பட வைத்தது.

    வீட்டில் கிடந்த ஸ்கிப்பிங் கயிறால், மாரிச்செல்வத்தின் கழுத்தை இறுக்கி கீழே தள்ள முயன்றேன். இதில் அவர் இறந்து விட்டார் என்று தெரிவித்து உள்ளார்.

    இதனை தொடர்ந்து மாரி செல்வத்தை, பெற்றோருடன் சேர்ந்து சகோதரரை கழுத்தை நெரித்து கொன்றதாக, மயில்ராஜை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்று 17 வயது சிறுவளை தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை முனிசிபல் காலனி கல்யாண் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன். இவருக்கும் மேல் அலங்கத்தைசேர்ந்த சரத்குமார் (28), அவரது தம்பி மதன்குமார்(22) மற்றும் கிரிதரன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று சிறுவன் தஞ்சை மேலவீதி அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். 

    அப்போது அங்கு வந்த சரத்குமார் உள்ளிட்ட 3 பேரும் சிறுவனை தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தூக்கினர்.
    பின்னர் சிறிய தூரம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவாறே சிறுவனை சரமாரியாக தாக்கி விட்டு தள்ளி விட்டு சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சிறுவன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரி ன்பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமார், அவரது தம்பி மதன் குமாரை கைது செய்தனர். கிரிதரனை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கள்ளக்காதல் காரணமாக மனைவியை கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ஐகுந்தம் அருகே உள்ள வெப்பாளம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 31).

    கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணமாகி கஸ்தூரி (28) என்ற மனைவியும், அரசு (8), தமிழ்(5) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    கோவிந்தராஜின் பெற்றோர்கள் கிட்டம் பட்டியில் வசித்து வருகின்றனர். அவர்களுடன் கோவிந்தராஜின் தம்பி சின்னசாமியும் வசித்து வருகிறார்.

    கோவிந்தராஜின் மனைவி கஸ்தூரிக்கும், அவரது கொழுந்தனுமான சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது தெரியவந்தது.

    இதனை கண்ட கோவிந்தராஜ் அவரது மனைவி கஸ்தூரியை பலமுறை கண்டித்ததாக தெரியவந்தது. ஆனாலும், அதனை கண்டு கொள்ளாத கஸ்தூரி மீண்டும் சின்னசாமியுடம் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக நேற்று இரவு மீண்டும் கோவிந்த ராஜிக்கும், கஸ்தூரிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது கஸ்தூரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கோவிந்தராஜ் போலீசாரிடம் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது அவர் போலீசாரிடம், தனது மனைவி கஸ்தூரிக்கும், தம்பி சின்னசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து நான் பலமுறை எனது மனைவியை கண்டித்தேன். ஆனால் அவர் எதையும் கேட்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கஸ்தூரியை சரமாரியாக வெட்டினேன். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    எனது குடும்பத்தை காப்பற்ற எனது தம்பி சின்னசாமி இருப்பான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவனால் எனது குடும்பம் சிதைந்து விட்டது. தற்போது நான் கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றால் தவித்து நிற்கும் எனது குழந்தைகளை இனி யார் காப்பாற்றுவார்கள்? என்று கண்ணீர் மல்க கூறினார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதல் காரணமாக மனைவியை கட்டிட மேஸ்திரி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×