search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pune"

    • திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள்
    • போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.

    திருநங்கைகள் யாசகம் பெறுவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி திருநங்கைகள் யாசகம் பெற முயன்றால், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயின்றவர், பயிற்றுவிப்பவர் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன
    • விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை

    மகாராஷ்டிரா மாநில புனே மாவட்டத்தில் உள்ளது பாராமதி தாலுக்கா.

    பாராமதியில் விமான ஓட்டுதல் பயிற்சி அளிக்கும் ரெட் பேர்ட் விமான பயிற்சி நிறுவனம் (Red Bird Flight Training Academy) எனும் நிறுவனத்திற்கு சொந்தமான டெக்னாம் விடி-ஆர்பிடி (Tecnam VT-RBT) விமானம் ஒன்று, நேற்று காலை 08:00 மணியளவில் அம்மாவட்டத்தின் கோஜுபாவி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு வயலில் கீழே விழுந்து நொறுங்கியது.

    அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    ஆனால், அவ்விமானத்தில் பயிற்சி பெற்று கொண்டிருந்த விமானி ஒருவருக்கும் அவருக்கு பயிற்றுவிப்பவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அவசரமாக தரையிறங்க முற்பட்ட போது இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

    கடந்த 19 அன்று பாராமதி தாலுகாவில் ஒரு விமானம் கீழே விழுந்தது என்பதும் அச்சம்பவம் நடந்து 4 நாட்களில் அதே போன்ற இரண்டாவது சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மராட்டிய மாநிலம் புனேயில் ரூ.30 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கி சென்றனர்.
    புனே:

    மராட்டிய மாநிலம் புனே போசரி போராடே வஸ்தி பகுதியில் பொதுத்துறை வங்கி ஒன்றுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்றுமுன்தினம் காலை அந்த பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்தார்.

    அவர் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றபோது, அங்கு ஏ.டி.எம். எந்திரம் மாயமாகி இருப்பதை கண்டு திடுக்கிட்டார். ஏ.டி.எம். எந்திரம் பெயர்க்கப்பட்டு இருப்பதற்கான சுவடு இருந்தது. இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசாரும், வங்கி அதிகாரிகளும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பணத்துடன் ஏ.டி.எம். எந்திரம் கொள்ளைபோனது தெரியவந்தது.

    நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கண்காணிப்பு கேமரா வயர்களை துண்டித்துவிட்டு, கியாஸ் கட்டர் மூலம் வெட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து அலாக்காக தூக்கி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்றது தெரிந்தது.

    கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.30 லட்சம் பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துணிகர கொள்ளையில் 4 முதல் 5 பேர் வரை ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கூறினர்.

    இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா வயர்களை கொள்ளையர்கள் துண்டித்து சென்று விட்டதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
    பாராளுமன்ற தேர்தலில் மாதுரி தீட்சித்தை புனே தொகுதி வேட்பாளராக களம் இறக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. #MadhuriDixit #BJP
    மும்பை:

    வருகிற 2019-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க ஆளும் பா.ஜனதா கட்சி இப்போதே தயாராகி விட்டது.

    முதல் கட்டமாக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. தற்போதைய எம்.பி.க்கள் பலர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார்கள்.

    இதனால் எம்.பி.க்களின் செயல்பாடுகள், தொகுதியில் அவர்களுக்கு உள்ள நற்பெயர் போன்றவை குறித்து கட்சி மேலிடம் புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறது. செயல்பாடு சரியில்லாத எம்.பி.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

    இதில் மராட்டிய மாநிலம் புனே தொகுதியின் தற்போதைய பா.ஜனதா எம்.பி.யான அனில் ஷிரோலேயின் செயல்பாடு சரியில்லை என்றும், அவர் மீது தொகுதி மக்களிடையே அதிருப்தி நிலவுவதாகவும் கட்சி மேலிடத்துக்கு தெரிய வந்துள்ளது.

    அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால் வெற்றி வாய்பை பா.ஜனதா இழந்து விடும், தகுதியான சக்தி வாய்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து பிரபல நடிகை மாதுரி தீட்சித்தை புனே பாராளுமன்ற தொகுதியில் நிறுத்துவது பற்றி பா.ஜனதா வேட்பாளர் தேர்வு குழு ஆலோசித்து வருகிறது.

    ஹேமமாலினிக்கு அடுத்தபடியாக இந்திப்பட உலகில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தார். அவர் சினிமாவை விட்டு விலகினாலும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அவருக்கு ரசிகர்களிடையே இன்னும் மவுசு குறையவில்லை. அவரது நிகழ்ச்சிக்கு கூட்டம் கூடுகிறது.

    மேலும் மராத்தி மொழி பேசும் நடிகை என்பதால் மராத்தி மக்களை கவரலாம் என்றும் பா.ஜனதா மேலிடத்துக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதுரி தீட்சித் பா.ஜனதாவில் உறுப்பினராக உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவரது பிரசார கூட்டத்துக்கு கடுமையான கூட்டம் கூடியது.

    எனவே மாதுரி தீட்சித்தை புனே தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறக்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா மும்பையில் மாதுரி தீட்சித் வீட்டுக்கு சென்று அவரது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அதற்கு மாதுரி தீட்சித்தும் சம்மதித்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் பா.ஜனதா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #ParliamentElection
    மகாராஷ்டிராவில் உள்ள சின்ஹகட் கோட்டை அருகே ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தாக்கில் விழுந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Maharashtra #SelfieKills
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புகழ்பெற்ற சின்ஹகட் கோட்டை பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாகும். இங்கு வரும் மக்கள் கோட்டையின் கம்பீரத்தையும், மலையின் மீது இருந்து இயற்கையின் அழகையும் ரசிப்பது வழக்கம். அதேசமயம், இங்கு ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்று பலர் தங்கள் உயிரை பணையம் வைத்துள்ளனர்.

    அதேபோல், இந்த சின்ஹகட் கோட்டைக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் செல்பி எடுக்க முயன்றுள்ளார். கோட்டையின் விளிம்பில் சென்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.



    அப்போது எதிர்ப்பாரதவிதமாக அந்த நபர் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் உடனே மீட்புப்படைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மீட்புப்படையினர் பள்ளத்தாக்கில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். #Maharashtra #SelfieKills
    இந்தியாவில் போக்குவரத்து வழிமுறைகளை ஒழுங்குப்படுத்துவதற்கு புதிய எடுத்துக் காட்டாக பூனே நகர போக்குவரத்து காவல் துறை அமைந்திருக்கிறது. #TrafficViolation



    பொது மக்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வைக்க பூனே நகர போக்குவரத்துக் காவல் துறை மிகவும் கடுமையாக இருக்கிறது. போக்குவரத்து காவல் துறையின் துணை ஆணையர் தேஜஸ்வி சத்புட் விதிகளை மீறுவோர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். 

    இவரது கடுமையான நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டாக பூனே நகர போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை இருக்கிறது. இதுவரை போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ.22.55 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக பூனே நகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. 

    நேம் அன்ட் ஷேம் எனும் திட்டத்தை பூனே நகர போக்குவரத்து காவல் துறை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதில் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் புகைப்படம் மற்றும் இதர விவரங்களை காவல் துறையின் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்படுகின்றன. இத்துடன் விதிமீறுபவர்களின் டாப் 200 பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.




    விதிமீறுவோர் சிக்கினால், விதிமீறலுக்கு ஏற்ப அபராத தொகை அவர்களுக்கு இ-செல்லான்கள் மூலம் அனுப்பப்படுகிறது. அதன் பின் அபராத தொகையை போக்குவரத்து காவல் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செலுத்த வேண்டும். 

    விதிமீறியவர்களின் பட்டியலை சுவாரஸ்யப்படுத்தும் வகையில், ஒருவர் 32 முறை விதிமீறி முதலிடத்திலும் மற்றொருவர் 20 முறை என இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஜனவரி 1, 2018 முதல் கடுமையாக்கப்பட்ட விதிகள், ஆகஸ்டு 31, 2018 வரை மொத்தம் 10,18,560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பத்து லட்சம் வழக்குகளில் இதுவரை ரூ.22,54,62,250 வசூலிக்கப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    போக்குவரத்து விதிமீறுவோரில் பெரும்பாலானோர் சிக்னல்களில் நிறுத்தாமல் செல்வது, மக்கள் சாலையை கடக்கும் வழிகளை கடப்பது, நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவது, ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வது, சீட் பெல்ட் போடாமல் கார் பயணம் செய்வது, வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது உள்ளிட்டவை இருக்கிறது.
    மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து கேரளாவுக்கு 8 லட்சம் லிட்டர் குடிநீர், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தீபக் கப்பல் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. #KeralaRain #Keralaflood #NH183
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லத்தையும், தமிழ்நாட்டின் திண்டுக்கல் நகரத்தையும் இணைப்பது தேசிய நெடுஞ்சாலை எண்.183 ஆகும். மழை, வெள்ளத்தால் இந்த நெடுஞ்சாலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் கோட்டயம், குமுளி, இடுக்கி வழியாக வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.



    மழை, வெள்ளம் காரணமாக உணவுக்கு தவிக்கிற மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை கம்பம்மெட்டு வழியாக எடுத்துச்செல்ல முடியாத பரிதாப நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு இடையே பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். இதனால் மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து கேரளாவுக்கு 8 லட்சம் லிட்டர் குடிநீர், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். தீபக் கப்பல் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இந்த கப்பல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொச்சிக்கு சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #KeralaRain #Keralaflood #NH183
    மக்கள் கவலையின்றி வசிக்கும் சிறந்த நகரமாக மராட்டிய மாநிலத்தின் புனே முதலிடம் பிடித்துள்ளதாகவும், சென்னை நகருக்கு 14வது இடம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #LivingIndex #Pune #Chennai
    புதுடெல்லி:

    மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் கவலையும், நெருக்கடியும் இன்றி மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு வருகிறது. சிறந்த நிர்வாகம், சமூக நிறுவனங்கள், பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் கொல்கத்தா தவிர நாட்டின் 111 நகரங்கள் கலந்து கொண்டன.

    இந்த நகரங்களின் வரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் புரி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.

    இதில் மக்கள் கவலையின்றி வசிக்கும் சிறந்த நகரமாக மராட்டிய மாநிலத்தின் புனே முதலிடம் பிடித்தது. நவி மும்பைக்கு 2-வது இடம் கிடைத்தது. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை 3-வது இடத்தை பிடித்தது. இதைத்தொடர்ந்து திருப்பதி, சண்டிகார், தானே, ராய்ப்பூர், இந்தூர், விஜயவாடா, போபால் ஆகியவை முறையே 4 முதல் 10-வது இடங்களை பிடித்தன. சென்னை நகருக்கு இதில் 14-வது இடம் கிடைத்தது. நாட்டின் தேசிய தலைநகரான டெல்லி இந்த பட்டியலில் 65-வது இடத்தையே பிடித்தது. 
    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட 3 கோடி மதிப்பிலான 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Pune #DemonetisedCurrency
    மும்பை:

    மோடி தலைமையிலான மத்திய அரசு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்து அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதுடன், அதற்காக சிறிது கால அவகாசமும் வழங்கியது. கள்ள நோட்டுகளையும், கருப்பு பண பதுக்கலையும் தடுக்கவே இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், புனோ காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் 5 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.

    அவர்களிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். #Pune #DemonetisedCurrency
    பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால், மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் ஆடையின் நீளம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பன அறிவிப்பை பள்ளி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது #PuneSchool #BizarreOrder
    புனே :

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகத்தில் இருந்து நேற்று முன்தினம் பெற்றோர்களுக்கு ஒரு அறிவிப்பு வந்தது.

    அதில், இனி மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் வெளியில்  அணியும் ஸ்கர்ட்டின் நீளம் உள்ளிட்ட விஷயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனால் அவற்றை பள்ளி நிர்வாகம் பொருட்படுத்தவே இல்லை.

    இதற்கிடையே, பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் நேரில் சென்று விசாரிக்க மாநில கல்வித்துறை துணை இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, அக்குழு விசாரித்துக் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டே தெரிவித்தார்.

    இந்நிலையில், பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால், மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் ஆடையின் நீளம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பான அறிவிப்பை பள்ளி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது

    பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் போராட்டம் நடத்தினர். சமூக வலை தளங்களிலும் இந்த அறிவிப்பு குறித்து விவாதம் நடத்தினர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தனது உத்தரவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
    #PuneSchool #BizarreOrder
    மகராஷ்டிரா மாநிலம் புனேவில் 1 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மும்பை:

    சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதுபோன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. தலைநகர் டெல்லியில் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. 

    இந்நிலையில், மகராஷ்டிரா மாநிலம் புனேவில் 1 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புனே நகரில் தமிழகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கூலி வேலை செய்து வருகிறது. அந்த குடும்பத்தினர் அங்குள்ள ஒரு பகுதியில் சாலையோரம் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருந்த அவர்கள் எழுந்த அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

    அந்த தம்பதி அருகே தூங்கிக்கொண்டிருந்த அவர்களது ஒரு வயது பெண் குழந்தை காணமல் போனது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    அப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவி பதிவை சோதித்த போது ஒருவர் அந்த குழந்தையை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் அப்பகுதிக்கு அருகில் இருந்து அந்த குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிசிடிவி பதிவுகளை வைத்து அக்குழந்தையை கடத்தி சென்ற மால்ஹரி பன்சோட் (22) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    புனேவில் பெண் வழக்கறிஞர் ஒருவர் ஆப்பிள் வாட்ச் கொடுத்த இறுதி நேர எச்சரிக்கை காரணமாக காப்பாற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. #AppleSmartWatch #AppleWatchSavesLife

    மும்பை:

    பிரபல அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமான ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பிள் வாட்சை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இது நமது உடலின் வெட்பநிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து பதிவு செய்து, வேறுபாடுகள் இருப்பின் உடனடியாக தெரிவிக்கும் திறன் கொண்டது.

    இந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் புனேவில் பெண் வழக்கறிஞர் ஒருவரின் உயிரை காப்பாற்றி உதவியுள்ளது. அந்த பெண்ணின் இதய துடிப்பின் வேகத்தை கணக்கிட்டு அதன் மூலம் அவரது உயிரை காப்பாற்றி இருக்கிறது. 

    புனேவை சேர்ந்தவர் ஆர்த்தி ஜொஜெல்கர் (53). வழக்கறிஞரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆப்பிள் வாட்சை வாங்கியுள்ளார். அந்த வாட்ச்சின் மூலம் தனது உடல்நிலை, இதயத்துடிப்பு ஆகியவற்றை கண்காணித்து வந்துள்ளார். மேலும், எப்போதெல்லாம் இதயம் மோசமாகிறது என்பதையும் கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அவரது ஆப்பிள் வாட்ச் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு அவரது இதயம் திடீரென்று வேகமாக துடிப்பதாக காட்டியிருக்கிறது. அந்த நேரத்தில் அவர் அலுவலக பிரச்சனை காரணமாக மோசமான மனநிலையில் இருந்திருக்கிறார். இதயம் திடீர் என்று வேகமாக துடிப்பதாக வாட்ச் காட்டியதை அடுத்து அவருக்கு சந்தேகம் வரவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது இதயம் நிமிடத்திற்கு 140 முறை துடித்துள்ளது.

    அந்த வாட்ச்சின் உதவியினால் வேகமாக மருத்துவமனைக்கு சென்றதால் அவர் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்திற்கு அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன சிஏஓ டிம் கூக்கிற்கு, நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே ஆப்பிள் வாட்ச் மூலம் சிலர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #AppleSmartWatch #AppleWatchSavesLife
    ×