என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரத் பவார்"

    • பாராமதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் கூட வேண்டாம் என்று கட்சித் தலைமை வேண்டுகோள்

    தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இன்று பிற்பகல் புனேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை தொடர்பான பிரச்சினைகள், இருமல் மற்றும் காய்ச்சல் நீண்ட நாட்களாக இருந்துவந்த நிலையில், இன்று சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    முதலில் பாராமதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புனேயில் உள்ள ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். யாரும் பயப்பட வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரது மகளும், எம்பியுமான சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் கூட வேண்டாம் என்று கட்சித் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    சமீபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளில் சரத் பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அஜித் பவார் மனைவி சுனேத்ரா மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்.
    • சரத் பவார் குடும்பத்தினர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை.

    அஜித் பவார் மனைவி சுனேத்ரா மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், சரத் பவாரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரத் பவார் அளித்த பதில் பின்வருமாறு:-

    சுனேத்ரா துணை முதல்வரா பதவி ஏற்பது குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது. நாங்கள் செய்திகள் மூலமாக அதை தெரிந்து கொண்டோம். எனக்கும் எந்த தகவலும் தெரியாது.

    பிரபுல் பட்டேல், சுனித் தட்காரே போன்றோர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் குடும்பத்தினர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வது குறிதது இவர்கள் முடிவு செய்வார்கள்.

    தற்போது அவரது விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அஜித் பவார், ஷஷிகாந்த் ஷிண்டே, ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் இரண்டு கட்சிகளையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தனர். இணைப்பு தேதி கூட முடிவு செய்யப்பட்டுவிட்டது. பிப்ரவரி 12-ந்தேதி இணைக்க முடிவு செய்யப்பட்டது. துரதிருஷ்டவசமாக அதற்கு முன்னதாக அஜித் பவார் காலமாகிவிட்டார்.

    இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    மகாராஷ்டிர துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் கடந்த புதன்கிழமை புனே அருகே விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவரின் அரசியல் வாரிசு யார்? என்பதுதான் புதிய கேள்வியாக எழுந்தது. கட்சியின் பெரும்பான்மை தரப்பினர் கட்சியிலும், ஆட்சியிலும் அஜித் பவார் வகித்து வந்த பதவிகளை அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்செய் முண்டே ஆகியோர் சந்தித்தனர். அப்போது அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பால் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தோம். அப்போது சுனேத்ரா பவாரை துணை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவரை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து விட்டால், நாளையே கூட துணை முதல்-மந்திரி பதவி ஏற்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

    எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித் பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள். கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவி மற்றும் அதனை தொடர்ந்து துணை முதல்-மந்திரி பதவியை நிரப்புவதே தற்போது எங்களது முன்னுரிமை. அதன்படி தேசியவாத காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக சுனேத்ரா பவாரின் பெயர் முன்மொழியப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் மூலம் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. அதுவும் இன்று மாலை 5 மணிக்கு அவர் பதவி ஏற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.
    • மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டுச் சென்றார். பாராமதியில் தரையிறங்கும்போது, தரையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது. அஜித் பவாருடன் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர்.

    அவரது மறைவுக்கு தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் பவாரின் இறுதிச் சடங்கு நாளை முழு அரசு மரியாதையுடன் நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவருக்கு பார்த் மற்றும் ஜெய் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசு இன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அஜித் பவார் மரண விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என சரத் பவார் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்,"அஜித் பவாரின் விமான விபத்து முற்றிலும் எதிர்பாராத ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து மட்டுமே. இதை அரசியலாக்க வேண்டாம்.

    இது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு. இதை ஈடுசெய்வது கடினம். சிலர் இதை அரசியலாக்க முயற்சிப்பது, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது" என்றார்.

    • சரத் பவரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து பாஜக பக்கம் சென்றார்.
    • கட்சி உடைந்த பிறகு இருவரும் ஒரே மேடையில் தோன்றியது இதுவே முதல் முறை.

    மகாராஷ்டிராவில் புனே மாநகராட்சி மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிக்கு ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.

    கடந்த 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. சரத் பவரின் அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து பாஜக பக்கம் சென்றார். இன்னும் பாஜக கூட்டணியிலேயே உள்ளார்.

    மகாராஷ்டிராவின் துணை முதல்வராகவும் அஜித் பவார் உள்ளார். ஆனால் இதற்கு முரணாக நடப்பு மாநகராட்சி தேர்தலில் இரு அணிகளில் உள்ளவர்கள் கூட்டணி வைத்துள்ளனர்.

    புனேவில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அஜித்பவாரும், சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவும் ஒரே மேடையில் தோன்றி கூட்டுத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். கட்சி உடைந்த பிறகு இருவரும் ஒரே மேடையில் தோன்றியது இதுவே முதல் முறை. 

    • தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.
    • குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியவாத கட்சியை உடைத்து சரத் பவாரின் அண்னன் மகன் அஜித் பவார் பாஜகவுடன் கைகோர்த்து துணை முதல்வர் பதவி பெற்றார்.

    சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி வெற்றி பெற்றது. மீண்டும் அஜித் பவார் துணை முதல்வர் ஆனார்.

    அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பாஜக மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால், முதல் கட்டத் தேர்தலிலேயே மகாயுதியில் உள்ள பாஜக, ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.

    2-வது கட்டமாக புனே, பிம்ப்ரி சிஞ்ச்வட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில் பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சி தேர்தலில் சரத்பவார் கட்சியும், எதிரணியில் உள்ள அஜித் பவார் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்ததன் மூலம் குடும்பம் ஒன்றுபட்டுள்ளது என்று அஜித் பவார் இதை உறுதிப்படுத்தினார்.

    பிம்ப்ரி-சின்ச்வாட் எப்போதும் பவார் குடும்பத்தின் கோட்டையாகக் கருதப்பட்டது. இந்நிலையில் குடும்பப் பிளவால் வாக்குகள் சிதறுவதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

    ×