என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "refugees"
- கடந்த சில வாரங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.
- இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர்.
ராமேசுவரம்:
இலங்கையில் இருந்து படகு மூலம் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்புடன் மண்டபம் முகாமிற்கு அழைத்து சென்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில வாரங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.
அவர்களிடம் போலீசாரும், வெளியுறவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பின்பு அவர்களை மண்டபம் முகாமில் அமைந்துள்ள இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பம் வாரியாக தனித்தனி வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் இன்று இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர்.
அவர்களை குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் அரிச்சல் முனையில் அகதிகள் வந்திறங்கிய பகுதிக்கு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில் மட்டக் களப்பு பகுதியை சேர்ந்த கஜேந்திரன்(45),அவரது மகன் சஜித்மேனன்(8) சிவனேசுவரன்(49) என்பது தெரியவந்தது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் போதிய வருவாயின்றி தவிப்பதாகவும் இதனால் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து, மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் மண்டபம் முகாமிலில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
- 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.
- இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மியுபோபா:
நமது பக்கத்து நாடான வங்காள தேசத்தில் வசித்து வரும் ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இவர்கள் சட்டவிரோத மாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்து வருகின்றனர். இந்நிலையில் வங்காள தேசத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் படகில் இந்தோனேஷியா சென்று கொண்டிருந்தனர். இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.
இதனால் படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இது பற்றி அறிந்ததும் இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை.அவர்களை கடலோர படையினர் தேடி வருகின்றனர்.
- வாழ்வாதாரத்திற்காக ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்
- வெளியேற பாகிஸ்தான் விதித்த கெடு நவம்பர் 1-உடன் முடிவுக்கு வந்தது
1979ல் ஆப்கானிஸ்தானை ரஷியா ஆக்கிரமித்தது. 1979லிருந்து 1989 வரை அமெரிக்க உதவியுடன் ஆப்கானிஸ்தான் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வந்தது. பல வருடங்கள் நடைபெற்ற இந்த போரின் விளைவாக பொருளாதாரம் சீர்குலைந்து அந்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்ததால், வாழ்வாதார காரணங்களுக்காக அங்கிருந்து பலர் வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.
கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து மேலும் பலர் அந்நாட்டிலிருந்து அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில், சமீப காலமாக பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகப்பெரும் சரிவை கண்டுள்ளது. இதனால் அந்நாட்டிற்கு கடன் வழங்கும் உலக நிதி அமைப்புகள் அரசின் செலவினங்களை கட்டுப்படுத்தும்படி நிர்ப்பந்தப்படுத்தி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்றுடன் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற ஆப்கானியர்களுக்கு பாகிஸ்தான் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்தது.
எந்த ஆவணங்களும் இல்லாமல் பாகிஸ்தானில் தங்கியுள்ளவர்கள் முதற்கட்டமாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் அகதிகளுக்கான அட்டை வைத்துள்ளவர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆனால், அட்டை வைத்துள்ளவர்களும் குறி வைக்கப்படுவதாக பல அகதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 2 மாத காலத்தில் சுமார் 2 லட்சம் ஆப்கானியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டனர்.
வெளியேற்றப்படும் ஆப்கானியர்களில் பெரும்பாலானோர் கூலிப்பணிகளில் ஈடுபட்டு வறுமையில் வாழ்ந்து வந்ததால், அவர்களிடம் சேமிப்புகளோ, வேறு பொருட்களோ இல்லாமல் கேள்விக்குறியாகும் எதிர்காலத்துடன் டிரக்குகளில் அடைக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் எல்லையில் கொண்டு விடப்படுகின்றனர். அவர்களின் கண்ணீர் கதைகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பெண்களுக்கு கடுமையான கோட்பாடுகளை வலியுறுத்தும் தலிபான் ஆட்சி நடைபெறுவதால் அங்கு செல்ல அஞ்சும் மக்கள், பாகிஸ்தானில் வசிக்க இயலாமல் செய்வதறியாது தவிக்கின்றனர்.
புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் என சுமார் 4 லட்சம் ஆப்கானியர் பாகிஸ்தானில் வசிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தலிபான் அரசாங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால், 40 ஆண்டு காலம் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்கு இடம் கொடுத்து விட்டதாகவும், இனியும் அதை தொடர முடியாது எனவும் பாகிஸ்தான் திட்டவட்டமாக பதிலளித்தது.
- உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தானில் 17 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
- முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கிருந்து ஏராளமானோர் அகதிகளாக அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாகிஸ்தானில் அனுமதியில்லாமல் தங்கியுள்ள 17 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையே தான் ஆப்கானிஸ்தான் அகதிகள், பாகிஸ்தானில் இருந்து வெளியேற உத்தரவிட்டு உள்ளது.
தற்போது உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தானில் 17 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு தலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வாரம் மஸ்தூங் நகரில் நடந்த மத நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 52 பேர் பலியானார்கள். இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தும் தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்காக இரு நாடுகளும் சண்டையிட்டு வருகின்றன
- 2020ல் 6 வாரங்கள் நடைபெற்ற போரில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர்
ஐரோப்பாவிலிருந்து ஆசிய கண்டம் வரை ஐக்கிய சோவியத் சோஷலிஸ குடியரசு எனும் பெயரில் ஒருங்கிணைந்த பல நாடுகளுடன் 1922ல் இருந்த வந்த கூட்டமைப்பு, 1991ல் 15 நாடுகளாக உடைந்தது.
இவற்றில் அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கருங்கடலுக்கும் கேஸ்பியன் கடலுக்குமிடையே உள்ள தெற்கு காகஸஸ் மலைப்பகுதியையொட்டி உள்ள நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்கு உரிமை கொண்டாடி போர் நடைபெற்று வருகிறது.
2020ல் 6 வாரங்களாக நடைபெற்ற மிக பெரிய போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மக்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியிலிருந்து அர்மேனியாவிற்குள் அகதிகளாக நுழைந்திருக்கின்றனர். கடந்த வாரம், இப்பகுதியை அஜர்பைஜான் கைப்பற்றியதிலிருந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தில் தங்கள் உடைமைகளை விட்டு விட்டு அர்மேனியாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அப்பகுதியில் காலங்காலமாக வசித்து வந்த அர்மேனியர்களை அஜர்பைஜான்வாசிகளாக மாற்ற போவதாக அஜர்பைஜான் எச்சரித்திருந்தது.
இவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தர அர்மேனியா முன் வந்திருக்கிறது.
- தாக்குதல் காரணமாக உக்ரைனியர்கள் ரஷியாவிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்
- அவர்கள் தவிப்பதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என்றார் ஒரு ரஷிய பெண்மணி
2022 பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷியாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது.
ரஷியாவில் இப்போர் குறித்து ரஷியாவையோ, அதிபர் விளாடிமிர் புதினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷியாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.
ராணுவ தாக்குதல் காரணமாக ரஷியாவிற்கோ அல்லது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷிய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர்.
"இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரெயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷியர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை," என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷிய பெண்மணி தெரிவித்தார்.
"எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்" என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷிய பெண் கூறினார்.
2022 டிசம்பர் மாதமே ரஷியாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 லட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை தமிழர்களை அகதிகளாக அங்கரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
- வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும்.
ராமநாதபுரம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் இன்று வரை 200-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களை தற்போது வரை அகதிகளாக பதியாமல் அவர்களுக்கு தமிழக அரசு உணவு, தங்குமி டம் மட்டும்வழங்கி வருகிறது.இலங்கையில் இருந்து வந்துள்ள தங்களை அகதிகளாக பதிய வேண்டும் என இலங்கை தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது குறித்து முகாமில் உள்ள தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, மத்திய அரசு சார்பில் தற்போது வரை அகதிகளாக பதிவு செய்ய எந்த விதமான அதிகாரப்பூர்வ உத்தரவும் வரவில்லை. எனவே மனிதாபிமான அடிப்படையில் தான் அவர்களை தற்போது இங்கு தங்க வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதே நிலை நீடித்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 24-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள் அண்ணா துரை, அருள், கருணாநிதி, மனோகரன், ராமலிங்கம், விசுவநாதன் உள்ளிட்டவர்கள் வந்து இருந்தனர். பின்னர் இந்த குழுவினர் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்றனர்.
அங்கு வசிக்கக்கூடிய இலங்கை தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். இலங்கை தமிழர்களை அகதிகளாக பதிவு செய்ய கலெக்டருக்கு இக்குழு பரிந்துரை செய்தது.
தற்போது புதியதாக இலங்கையில் இருந்து வரும் மக்களுக்கான மாதாந்திர உதவித்தொகை பெற்றுத்தர இலங்கை தமிழர் நல ஆணையரிடம் குழுவினர் பரிந்துரை செய்யும் எனவும் தெரிவித்தனர். இருப்பினும் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புதிதாக வந்த இலங்கை தமிழர்கள் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-
இலங்கையில் நாங்கள் பட்ட கஷ்டத்தை காட்டிலும் இங்கு நிம்மதியாக இருக்கிறோம். இங்கு வந்த பிறகுதான் பிள்ளைகளை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. எங்களை வெளியே வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு அதிகாரிகளை கேட்கிறோம். ஆனால் எங்களை வெளியே செல்ல அனு மதிக்கவில்லை. எங்களை வேலைக்கு போக அனுமதித்தால் தானே எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும். தொடர்ந்து பதிவு இல்லாமல் எங்களால் எத்தனை மாதம் இப்படி இருக்க முடியும். இலங்கையை விட இங்கு காய்கறி, அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. இருப்பினும் நாங்கள் வந்த நாள் முதல் இதுவரை வீட்டில் சமைக்கவில்லை. எங்களுக்கு 3 நேரமும் உணவு வழங்கப்படு கிறது. அந்த உணவை சாப்பிட்டு வருகிறோம். தற்போது அகதிகள் முகாமில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நாங்கள் அதிகாரியிடம் கூறியபோது, விரைவில் சரி செய்து தருவதாக தெரிவித்த னர். ஆனால் இதுவரை சரி செய்யவில்லை. எங்களுக்கு பாய், மின்விசிறி, தண்ணீர் குடம், உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் எங்களுக்கு எப்படி போதுமானதாக இருக்கும். எங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும். எனவே எங்களை உடனடியாக அகதிகளாக பதிவு செய்ய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அதிகாரிகளின் பேச்சை நம்பி வீட்டை இழந்து இலங்கை அகதிகள் தவிக்கிறார்கள்.
- கலெக்டர் ஆஷா அஜீத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கிலூரணியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 32 ஆண்டுகளுக்கு மேலாக 186 குடும்பங்களை சேர்ந்த இலங்கை தமிழர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் அங்கு வந்த அதிகாரிகளிடம் முதல்-அமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டி தரப்படும் என இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். எனவே தற்போதுள்ள வீட்டை இடித்து விட்டு சிறிது காலம் வெளியே தங்க வேண்டும் என கூறியுள்ளனர்.
புதிய வீடு கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறிய உறுதிமொழியால் முகாமில் இருந்த 52 குடும்பங்களை ேசர்ந்தவர்கள்புதிய வீடு கட்டுவதற்கு தங்கள் வீட்டை இடித்தனர். இதன் காரணமாக அவர்கள் வாடகை வீட்டில் குடியேறினர்.
இந்த நிலையில் அதிகாரிகள் கூறியபடி தற்போது வரை வீடுகள் கட்டி தரப்படவில்லை. இது தொடர்பாக கேட்டால் உரிய பதிலும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இலங்கை அகதிகள் தங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜீத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.
மேலும் அதிகாரிகள் கூறியபடி முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் உடனே வீடு கட்டி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனை நடத்தினர்.
- 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள பாலாட்டா அகதிகள் முகாமில் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனை நடத்தினர்.
அவர்கள் முகாமுக்குள் புல்டோசர் களுடன் புகுந்தனர். இதனால் இஸ்ரேல் ராணுவத்துக்கும்-பாலஸ்தீனர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
- கண்டக்டரை தாக்கிய அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
- சந்திரன் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார்.
மதுரை
தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்தவர் சந்திரன் (53). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக உள்ளார். நேற்று இரவு இவர் பணியில் இருந்த பஸ் பழங்காநத்தத்திற்கு வந்தது. அங்கு 2 பேர் ஏறினர். அவர்களிடம் சந்திரன் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார். அவர்கள் மறுத்தனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த இருவரும் கண்டக்டரை தாக்கினர். இது குறித்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கூத்தியார்குண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த துரைராஜ் மகன் அரவிந்தன் (22), திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சைந்தன் (31) ஆகியோரை கைது செய்தனர்.
- ஜம்முவில் மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ரகசிய தகவல் வெளியானது.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 அகதிகளை போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவிற்குள் நுழையும் அகதிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக சென்று புதிய அடையாளங்களை உருவாக்கி வசித்து வருகின்றன.
இந்நிலையில், இதுபோல் ஜம்முவில் மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ரகசிய தகவல் வெளியானது.
இதையடுத்து நர்வல் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 அகதிகளை கைது செய்தனர்.
- இலங்கை அகதிகள் முகாமில் 2 பேருக்கு பாட்டில் குத்து விழுந்தது.
- இது குறித்த புகாரின் பேரில் தமிழ் செல்வனை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ரூபன்(37). இவரது அண்ணன் மிஸ்ரோய்(42). ரூபன் மனைவி செல்வி. கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக 2 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
இதனால் செல்வியின் சித்தப்பா மகன் தமிழ்ச்செல்வன் தன்னுடைய அக்காவை பிரிந்து வாழ்வதால் ரூபனிடம் அடிக்கடி தகராறு செய்தார். நேற்று ரூபன் இந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது தமிழ்ச்செல்வன் குடிபோதையில் தகராறு செய்து ரூபனை பீர் பாட்டிலால் தலையில் அடித்தார்.
தடுக்க வந்த அண்ணன் மிஸ்ரோயையும் பாட்டிலால் குத்தினார். அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே ஓடிவிட்டார். காயம் அடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் தமிழ் செல்வனை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்