search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை தமிழர்கள்"

    • மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
    • இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக சிறையில் 32 ஆண்டு கால நீண்ட சிறை வாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், முருகன், சாந்தன் ஆகியோர் 11.11.2022 அன்று சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உடல்நலக் குறைவால் மரணமடைந்து உள்ளது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    32 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை இழந்தவர்கள், விடுதலைக் காற்றை சுவாசிக்கப் போகிறோம் என்று பெருமூச்சு விடும்பொழுது, மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

    முகாமில் அடைக்கப்படுவதற்கு முன்பே கூட, எந்த நாட்டிற்கு செல்லப்போகிறீர்கள் என்று அவர்களுடைய விருப்பத்தை அரசு அதிகாரிகள் கேட்டபொழுது, அவர்கள் இலங்கை சென்றால் ஆபத்து மற்றும் தங்களுக்கு அங்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை என்றும், அதனால் வெளிநாடுகளில் வாழும் தங்களுடைய குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் ராபர்ட் பயாஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், தி.மு.க. அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இலங்கை தமிழர்களை அகதிகளாக அங்கரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
    • வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும்.

    ராமநாதபுரம்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் இன்று வரை 200-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களை தற்போது வரை அகதிகளாக பதியாமல் அவர்களுக்கு தமிழக அரசு உணவு, தங்குமி டம் மட்டும்வழங்கி வருகிறது.இலங்கையில் இருந்து வந்துள்ள தங்களை அகதிகளாக பதிய வேண்டும் என இலங்கை தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இது குறித்து முகாமில் உள்ள தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, மத்திய அரசு சார்பில் தற்போது வரை அகதிகளாக பதிவு செய்ய எந்த விதமான அதிகாரப்பூர்வ உத்தரவும் வரவில்லை. எனவே மனிதாபிமான அடிப்படையில் தான் அவர்களை தற்போது இங்கு தங்க வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதே நிலை நீடித்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த மாதம் 24-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள் அண்ணா துரை, அருள், கருணாநிதி, மனோகரன், ராமலிங்கம், விசுவநாதன் உள்ளிட்டவர்கள் வந்து இருந்தனர். பின்னர் இந்த குழுவினர் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்றனர்.

    அங்கு வசிக்கக்கூடிய இலங்கை தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். இலங்கை தமிழர்களை அகதிகளாக பதிவு செய்ய கலெக்டருக்கு இக்குழு பரிந்துரை செய்தது.

    தற்போது புதியதாக இலங்கையில் இருந்து வரும் மக்களுக்கான மாதாந்திர உதவித்தொகை பெற்றுத்தர இலங்கை தமிழர் நல ஆணையரிடம் குழுவினர் பரிந்துரை செய்யும் எனவும் தெரிவித்தனர். இருப்பினும் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இதுகுறித்து மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புதிதாக வந்த இலங்கை தமிழர்கள் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-

    இலங்கையில் நாங்கள் பட்ட கஷ்டத்தை காட்டிலும் இங்கு நிம்மதியாக இருக்கிறோம். இங்கு வந்த பிறகுதான் பிள்ளைகளை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. எங்களை வெளியே வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு அதிகாரிகளை கேட்கிறோம். ஆனால் எங்களை வெளியே செல்ல அனு மதிக்கவில்லை. எங்களை வேலைக்கு போக அனுமதித்தால் தானே எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும். தொடர்ந்து பதிவு இல்லாமல் எங்களால் எத்தனை மாதம் இப்படி இருக்க முடியும். இலங்கையை விட இங்கு காய்கறி, அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. இருப்பினும் நாங்கள் வந்த நாள் முதல் இதுவரை வீட்டில் சமைக்கவில்லை. எங்களுக்கு 3 நேரமும் உணவு வழங்கப்படு கிறது. அந்த உணவை சாப்பிட்டு வருகிறோம். தற்போது அகதிகள் முகாமில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நாங்கள் அதிகாரியிடம் கூறியபோது, விரைவில் சரி செய்து தருவதாக தெரிவித்த னர். ஆனால் இதுவரை சரி செய்யவில்லை. எங்களுக்கு பாய், மின்விசிறி, தண்ணீர் குடம், உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் எங்களுக்கு எப்படி போதுமானதாக இருக்கும். எங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும். எனவே எங்களை உடனடியாக அகதிகளாக பதிவு செய்ய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 15 அணைக்கட்டுகள் மற்றும் 1 ஏரி புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
    • 60 ஆழ்துளை கிணறுகளுக்கும் நீரூற்று கிடைக்கப்பெறுகின்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் நீர்வளத்துறையின் மூலம் புலிக்கரை திட்டம், கேசர்குளி ஆற்றின் குறுக்கே புதிய திருமல்வாடி தடுப்பணை கட்டும் பணி, சின்னாறு உப வடிநிலத்தில் ஏரி, அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைத்து நவீனப்படுத்தும் பணி உள்ளிட்ட ரூ.51.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து செய்தியாளர் பயணம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இச்செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் நீர்வளத்துறையின் மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் புலிக்கரை திட்டம். திருமல்வாடி தடுப்பணை அமைக்கும் திட்டம். சின்னாறு உப வடிநிலத்தில் நீர்வள நிலவள திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் 15 அணைக்கட்டுகள் மற்றும் 1 ஏரி புனரமைக்கும் பணிகள் சீரிய முறையில் துவங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இத்திட்டத்தின் மூலம் சுமார் 432.80 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. வருகின்ற வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் மேற்கூறிய பணிகள் யாவும் முன்னேற்றற நிலையில் இருப்பதால் புலிக்கரை திட்டத்தின் மூலம் 14 ஏரிகளும், தடுப்பணைகள், அணைக்கட்டுகள் ஆகியன நீர்தேக்கி வைக்க எளிதாக இயலும்.

    பாலக்கோடு வட்டம், திருமல்வாடியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் கெசர்குளிஅல்லா ஆற்றின் குறுக்கே தடுப்பணை முழுவதுமாக நல்ல முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இத்தடுப்பணையின் மூலம் 40.60 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. மேலும் இத்தடுப்பணையை சுற்றி உள்ள 60 ஆழ்துளை கிணறுகளுக்கும் நீரூற்று கிடைக்கப்பெறுகின்றது.

    மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், கேசர்குளிஅல்லா அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் 80 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. பணிகளை விரைந்து முடித்திட உரிய நடவடிக்கைகள் மே ற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் பாபு உட்பட தொடர்புடைய அலுவலர்கள், செய்தியாளர்கள் உடனிருந்தனர்.

    • தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • வழக்கு விசாரணை முடிந்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், சொந்த நாட்டுக்கு செல்லும் வரை இந்த சிறப்பு முகாமில் தான் தங்கி இருக்க வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி புதுக்கோட்டை சாலையில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் என்ற பெயரில் தனியாக ஒரு வளாகம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்பட்டாலும், சொந்த நாட்டுக்கு செல்லும் வரை இந்த சிறப்பு முகாமில் தான் தங்கி இருக்க வேண்டும்.

    சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை, நைஜீரியா, பல்கேரியா, இந்தோனேசியா, வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 117 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கி உள்ளனர்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ் ஆகியோரும் இந்த சிறப்பு முகாமில் தான் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வழக்குகளில் இருந்து விடுதலையான இலங்கை தமிழர்கள் 7 பேர் தங்களை விடுவிக்க கோரி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அவர்களை விடுவிக்க அனுமதி கிடைத்ததை தொடர்ந்து நேற்று 7 பேரும் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனா். அவர்கள் 7 பேரையும் அவர்களின் உறவினர்களிடம் போலீசார் நேற்று மதியம் ஒப்படைத்தனர்.

    இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த பாண்டியன், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வசித்து வந்த பார்த்திபன், விருதுநகா் மாவட்டத்தில் வசித்து வந்த விஜயகுமார், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கனகசபை, பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வந்த ரவிஹரன், சசிஹரன், ஏசுதாஸ் ஆகிய இலங்கை தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

    • கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
    • விரைந்து கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சி பகுதியில் இலங்கை தமிழர்களுக்காக ஊராட்சி வளர்ச்சி துறையின் சார்பாக ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பில் 76 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த பணிகளை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மின்னூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் சின்ன பள்ளிக்குப்பம் கிராம இலங்கை தமிழர்களுக்காக ரூ.8 கோடியில் மதிப்பில் 160 வீடுகள் கட்டும் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.

    வீடுகளின் கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை இயக்குனர் செல்வராஜ் உதவி பொறியாளர் முகேஷ் குமார், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கரீம் ஆம்பூர் மகாலட்சுமி உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • டிசம்பர் 11 ஆம் தேதிக்கு பின்னர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
    • பெரும்பான்மையான சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது முக்கியம்.

    கொழும்பு:

    இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

    பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பணிகளை பாராளுமன்றம் நிறைவுசெய்த பின்னர், டிசம்பர் 11 ஆம் தேதிக்கு பின்னர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

    "1984 ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் சுமந்திரன் (தமிழ் எம்.பி.) குறிப்பிட்டார். நாம் ஒரு தீர்வைக் காண வேண்டும், இல்லாவிட்டால் 2048-ல் கூட இலங்கை அப்படியே இருக்கும். நீண்டகாலமாக நிலவி வரும் சிக்கலை தீர்ப்பதற்கு பெரும்பான்மையான சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது முக்கியம். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும்" என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

    • கலெக்டர் பாய்ச்சல்
    • தரமாக கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள மேல் மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இந்த பணிகள் தற்போது நடந்து வருகிறது. இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கட்டுமான பணிகளில் எந்த காரணம் கொண்டும் தரம் குறைவாக இருக்கக்கூடாது. தரமாக கட்டி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இது குறித்து கலெக்டர் கூறுகையில்:-

    மேல் மொணவூரில் இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டும் பணிகளை கடந்த ஜூலை மாதம் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    தற்போது 5 தொகுப்புகளாக 220 வீடுகள் கட்டப்படுகிறது. இதில் 144 வீடுகள் ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவடைந்து விட்டன. மேலும் சில வீடுகள் அதனையும் தாண்டி பணிகள் நடந்து வருகிறது.

    தீபாவளி பண்டிகையால் கடந்த 5 நாட்களாக கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இன்று முதல் மீண்டும் பணிகள் நடக்கிறது.

    இதில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். வெளியூர் சென்ற அவர்கள் விரைவில் திரும்புவார்கள். அதன் பிறகு முழுமையாக பணிகள் நடைபெறும். இங்கே சாலை மற்றும் கால்வாய் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி கால்வாய் மற்றும் சாலை வசதிகள் அமைத்து தரப்படும்.

    மேலும் ஏற்கனவே உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதிகளிலும் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    உள் நோக்கத்துடன் வதந்தி

    வாரம் ஒரு முறை கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்படும். சமூக வலைதளங்களில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் தரம் இல்லாமல் கட்டப்படுவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். இதில் உள்நோக்கம் உள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்என்றார்.

    • தமிழகத்தில் ஈழச் சொந்தங்களை, ‘சிறப்பு முகாம்’ எனும் வதை கூடங்களில் இருந்து உடனே விடுதலை செய்ய வேண்டும்.
    • ஈழ உறவுகளைக் கண்காணிப்பதாகக் கூறி, நாளும் வதைத்து வரும் காவல்துறையின் ‘கியூ’ பிரிவினைக் கலைக்க வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈழ நிலத்தில் நடந்தேறிய இனப்படுகொலையால் தாய் மண்ணைவிட்டுப் பிரிந்து, உலகம் முழுமைக்கும் அகதிகளாக இடம்பெயர்ந்து, இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனஅழிவுக்கு ஆளான தமிழர்களைப் போல அதன் வலியை உணர்ந்த ஒரு இனக்கூட்டமில்லை.

    தமிழகத்தில் ஈழச் சொந்தங்களை, 'சிறப்பு முகாம்' எனும் வதை கூடங்களில் இருந்து உடனே விடுதலை செய்து திபெத்தியர்களுக்கு இந்நாட்டில் செய்து தரப்படுவது போலவே, அடிப்படையான வசதிகளையும், வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கித்தந்து, அவர்களுக்கான உண்மையான மறுவாழ்வை ஏற்படுத்தித் தர வேண்டும், ஈழ உறவுகளைக் கண்காணிப்பதாகக் கூறி, நாளும் வதைத்து வரும் காவல்துறையின் 'கியூ' பிரிவினைக் கலைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×