என் மலர்tooltip icon

    இந்தியா

    • டெல்லியிலுள்ள பல பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • பாராளுமன்றவளாகத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், பாராளுமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

    பாராளுமன்றவளாகம் மற்றும் டெல்லியிலுள்ள பல பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பாராளுமன்றவளாகத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தினர் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.

    இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஒரு போலீஸ் பாதுகாப்பு வாகனம் மட்டுமே இருந்தது.
    • விமானி இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்தார்.

    கர்நாடக முன்னாள் அமைச்சர் அமரேகவுடா பாட்டீல் பையாபுராவின் பேரனும், சட்டமன்ற உறுப்பினர் ஷரணகவுடா பாட்டீல் பையாபுராவின் மகனின் திருமணம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுரு என்ற இடத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் சித்தராமையா, துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஜர்கிஹோலி தனிதனி ஹெலிகாப்டர்களில் வர முடிவு செய்தனர். சித்தராமையா, டி.கே. சிவக்குமார் வருகைக்காக ராய்ச்சூர் சாலையில் 2 ஹெலிபேடுகள் தனி தனியாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அமைச்சர் ஜர்கிஹோலிக்கு கலபுரகி சாலையில் உள்ள எம்.எல்.ஏ., மணப்பா வஜ்ஜலின் ஹெலிபேடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை வரவேற்க நெறிமுறைகளின் படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் அமைச்சர் ஜர்கிஹோலிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டும் செய்யப்பட்டு இருந்தன.

    அப்போது முதல்-அமைச்சர் சித்தராமையா வந்த ஹெலிகாப்டரை அமைச்சர் ஜர்கிஹோலிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பைலட் தவறாக தரையிறக்கினார். அப்போது ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய முதல்-அமைச்சர் சித்தராமையாவை வரவேற்க யாரும் இல்லை. ஒரு போலீஸ் பாதுகாப்பு வாகனம் மட்டுமே இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து தவறை உணர்ந்த விமானி இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அவசர அவசரமாக அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் முதல்-அமைச்சர் சித்தராமையா திருமணத்துக்கு சென்று விட்டார். இதையடுத்து சித்தராமையா இறங்க வேண்டிய ஹெலிபேடில் அமைச்சர் ஜர்கிஹோலியின் ஹெலிகாப்டர் தரையிறங்கியது.

    முதல்-அமைச்சர் சித்தராமையாவின் பைலட் குழப்பத்தால் இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய முதல்-அமைச்சர் சித்தராமையாவுக்கு போலீசார் மரியாதை செலுத்தினர்.

    • ஜப்பானில் நடந்த தேர்தலில் சானே தகைச்சி அபார வெற்றி பெற்றார்.
    • அவருக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    ஜப்பான் நாட்டில் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் ஆளும் எல்டிபி கட்சி மெஜாரிட்டியைப் பெற்று சானே தகைச்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.

    இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை சானே தகைச்சி பெற்றுள்ளார். அபார வெற்றி பெற்ற சானே தகைச்சிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜப்பான் தேர்தலில் வெற்றி பெற்ற சானே தகைச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தேர்தலில் நீங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் சானே தகைச்சி. இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பான மற்றும் உலகளாவிய உறவுகள், சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் தலைமை இந்தியா-ஜப்பான் நட்புறவை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என நான் உறுதியாக நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • தந்தையுடன் 15-20 பேரைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கு சென்ற மாணவர், தனியாக வசிக்கும் ஆசிரியரை மிரட்டியுள்ளார்
    • கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் தேர்வுக்கு தாமதமாக வந்த மாணவனை கேள்விகேட்ட ஆசிரியருக்கு அறைவிழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஷெஹ்ரா நகரில் உள்ள எஸ்.ஜே. டேவ் உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜன.24ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 18 வயது மாணவர் முகமது கான் அன்சாரி இரண்டாவது திருப்புதல் தேர்வுக்கு தாமதமாக வந்துள்ளார். அப்போது தேர்வறையில் இருந்த ஆசிரியர் மாணவனிடம் தாமதத்திற்கான காரணத்தைக் கேட்டபோது, "என்னை வீட்டிலேயே யாரும் கேட்பதில்லை, நீ யார் கேட்க?" என திமிராக பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் அப்போதே ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவத்தன்று மாணவனின் தந்தை ஆசிரியரிடமும், பள்ளி முதல்வரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 27 அன்று, தனது தந்தையுடன் 15-20 பேரைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்த அந்த மாணவர், தனியாக வசிக்கும் அந்த ஆசிரியையை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    மிரட்டலை தொடர்ந்து ஆசிரியரின் புகாரின் அடிப்படையில், பிப்ரவரி 3 ஆம் தேதி ஷெஹ்ரா காவல் நிலையத்தில் மாணவர், பள்ளி சிசிடிவி காட்சிகளில் அடையாளம் தெரிந்த நான்கு பேர் மற்றும் 15 முதல் 20 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதுவரை மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் ஆசிரியர்களிடையே பெரும் சீற்றத்தை தூண்ட சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் இதுபோன்ற செயல்களை ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • அந்தப் பெண் தனது திருமணப் பத்திரிகை மற்றும் திருமணப் புடவையை கிரணிடம் காட்டியுள்ளார்.
    • சம்பவத்தன்று மாலை தனது தாயிடம் பேப்பர் மற்றும் பேனா கேட்டு வாங்கி அறைக்குள் சென்றுள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட் பகுதியில் வசித்து வந்தவர் 26 வயது ஜிம் பயிற்சியாளர் கிரண்.

    பாடிபில்டரான இவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    கிரண் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். ஆனால், அந்தப் பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அந்தப் பெண் தனது திருமணப் பத்திரிகை மற்றும் திருமணப் புடவையை கிரணிடம் காட்டியுள்ளார். இதனால் கிரண் கடந்த இரண்டு வாரங்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கிரண் எழுதியுள்ள கடிதத்தில், தனது மரணத்திற்குத் தனது காதலியும் அவரது தாயாருமே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கிரண் தனது காதலியின் கடன்களை அடைக்கத் தனது சம்பாத்தியத்தைச் செலவு செய்துள்ளதாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    சம்பவத்தன்று மாலை தனது தாயிடம் பேப்பர் மற்றும் பேனா கேட்டு வாங்கி அறைக்குள் சென்றுள்ளார்.

    நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால், குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

    கிரண் பல பாடிபில்டிங் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களை வென்றுள்ளார்.

    அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மகாலட்சுமி லேஅவுட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
    • விருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.

    அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசாம் பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இஸ்லாமிய வெறுப்பு வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.

    "Point Blank Shot" என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், முதல்வர் பிஸ்வா கையில் ரைபிள் துப்பாக்கியை எடுத்து குறிபார்க்கிறார், அடுத்த காட்சியில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குல்லாய், தாடி உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

    வீடியோவின் பின்னணியில் "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.

    முதல்வர் பிஸ்வா அசாம் இஸ்லாமிய சமூகம் குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துக்களை கூறியும், நடவடிக்கை எடுத்தும் வரும் சூழலில் இந்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வீடியோ வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அசாம் பாஜக அந்தப் பதிவை நீக்கியது.

    அசாம் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய், ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் குடும்பத்தினர் அசாம் முழுவதும் சுமார் சுமார் 4,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த நில மோசடி புகாரிலிருந்து திசைதிருப்பவே பிஸ்வா இத்தகைய வகுப்புவாதக் கருத்துகளைப் பரப்புவதாகவும் தெரிவித்தார்.

    அண்மையில் பொதுநிகழ்வு ஒன்றில் பேசிய பிஸ்வா, பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களான மியாக்களை தொந்தரவு செய்வதன் மூலமே அசாமிலிருந்து அவர்களை வெளியேற்ற முடியும்.

    ஒரு ரிக்ஷா ஓட்டுநர் 'மியா' முஸ்லிமாக இருந்தால், ரூ.5 கட்டணத்திற்கு ரூ.4 மட்டும் கொடுங்கள். அவர்களுக்குத் தொல்லை கொடுத்தால் மட்டுமே அவர்கள் அசாமிலிருந்து வெளியேறுவார்கள்" என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

    மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார். 

    • ஜம்மு காஷ்மீரின் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதி நீரின் பெரும்பகுதி பாகிஸ்தானுக்குச் சென்றது.
    • இதன் மூலம் 1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானுடனான 1960-ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

    1960 ஒப்பந்தப்படி, ஜம்மு காஷ்மீரின் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதி நீரின் பெரும்பகுதி பாகிஸ்தானுக்குச் சென்றது. ஆனால், தற்போது இந்த நதிகளின் நீரை இந்தியா தனது தேவைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

    ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய கிழக்கு நதிகளின் மீது இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. செனாப் போன்ற மேற்கு நதிகளில் இந்தியாவுக்குக் குறைந்த அளவிலான பயன்பாட்டு உரிமையே இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் இந்தியா அந்த உரிமையை முழுமையாகப் பயன்படுத்தத் தீவிரமாக இறங்கியுள்ளது.

    இந்நிலையில் ராம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே பிரம்மாண்ட நீர்மின் நிலையம் கட்டும் திட்ட பணிகளை இந்தியா துரிதப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 1,856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NHPC, இந்தத் திட்டத்திற்காக ₹5,129 கோடி மதிப்பிலான டெண்டரை வெளியிட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின் பணிகளை முடிக்க சுமார் 9 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏல விண்ணப்பங்கள் மார்ச் 12 முதல் மார்ச் 20 வரை பெறப்படும். 

    • பன்னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக அடகு வைக்கும் செயல்
    • இந்திய ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் மீது அமெரிக்கா 18% வரி விதிப்பது நியாயமற்றது

    அமெரிக்கா - இந்தியா இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

    இது இந்திய விவசயிகளை பாதிக்கும் என்ற விமர்சனம் எழுந்தது. பருத்தி, பாதாம், வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும் என்றும் இதனால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.

    ஆனால் இந்த ஒப்பந்தம் இந்திய விவசயிகளை நிச்சயம் பாதிக்கும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சம்யுக்த கிசான் மோர்ச்சா, அகில இந்திய கிசான் சபா, பாரதிய கிசான் யூனியன்

    உள்ளிட்ட முக்கிய விவசாய அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் முழுமையாக அடகு வைக்கும் செயல் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா சாடியுள்ளது.

    அமெரிக்காவிலிருந்து மலிவான சோயாபீன் எண்ணெய், உலர்ந்த தானியங்கள் (DDGS) மற்றும் கால்நடை தீவனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், இந்திய விவசாயிகளின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

    அமெரிக்காவின் அனைத்துத் தொழில் துறை மற்றும் விவசாயப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைக்கும் அதே வேளையில், இந்திய ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் மீது அமெரிக்கா 18% வரி விதிப்பது நியாயமற்றது

    விவசாயிகளின் நலன்களைக் காப்போம் என்று கூறிவிட்டு, அதற்கு மாறாகச் செயல்படுவதாகக் கூறி, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று விவாய அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.

    பஞ்சாபை சேர்ந்த மூத்த விவசாய அமைப்பு தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால், பால் வளம் மற்றும் விவசாயத் துறைகளில் எந்த சமரசமும் செய்யப்படாது என்று அமைச்சர் கூறினாலும், அமெரிக்க உணவுப் பொருட்களின் தடைகளை நீக்க ஒப்புக்கொண்டது பின்வாசல் வழியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    எனவே அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக வரும் பிப்ரவரி 12-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். அன்று கிராமங்கள் தோறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியின் உருவ பொம்மைகள் எரிக்கப்படும் என்று விவசாயத் அமைப்புகள் அறிவித்துள்ளன.  

    • 'ரெட் பேர்டு ஏவியேஷன்' நிறுவனத்திற்குச் சொந்தமான Cessna 172 ரக சிறிய பயிற்சி விமானம்
    • எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து எனத் தகவல்

    கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் தனியார் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பபலேஷ்வர் தாலுகாவிற்குட்பட்ட மங்களூரு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது. இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் பயிற்சியாளர் மற்றும் ஒரு பயிற்சி விமானி மட்டும் இருந்துள்ளனர். விமானம் விழுவதற்கு முன்பாகவே இருவரும் அதிலிருந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இருப்பினும், இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது 'ரெட் பேர்டு ஏவியேஷன்' நிறுவனத்திற்குச் சொந்தமான Cessna 172 ரக சிறிய பயிற்சி விமானம் என கூறப்படுகிறது. கல்புர்கியில் இருந்து பெலகாவி நோக்கிச் சென்றபோது, எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    • அசாம் பா.ஜ.க முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
    • மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது வருகை நடைபெற்றது.

    அசாமை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.கருண் கோகாய் இவரது மனைவி எலிசபெத். இவருக்கும் பாகிஸ்தான் ஏஜெண்டு அலிதவுகீர் ஷேக்குக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க ஏற்கனவே குற்றம்சாட்டியது.

    இந்தநிலையில் தருண் கோகாய் மனைவியுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் ஏஜெண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 13 முறை இந்தியா வந்ததாக அசாம் பா.ஜ.க முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தானை சேர்ந்த அலிதவுகீர் ஷேக் சுற்றுச் சூழல் ஆர்வலர் அல்ல. அவர் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

    2010 முதல் 2013 வரை காங்கிரஸ் ஆட்சியின்போது அலிதவுகீர் 13 முறை இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்பட்டார். அவர் அனைத்து கூட்டங்களிலும் இந்தியாவை விமர்சித்தார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது வருகை நடைபெற்றது.

    மேலும், தருண் கோகாய் மனைவி எலிசபெத்தும் இந்தியாவின் அதிகார மையத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அனைத்து விசாக்களும் காங்கிரஸ் ஆட்சியின்போது வழங்கப்பட்டன.

    பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவர் இந்தியாவுக்கு வருவதை நிறுத்திவிட்டார். அவர் இந்தியா வந்தபோது பாகிஸ்தான் அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தார்.

    காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், எம்.பி.யும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கும்போது இந்தக் குற்றச்சாட்டு மேலும் தீவிரமாகிறது. அசாம் புலனாய்வு குழு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த விவகாரத்தை மத்திய அரசு நிறுவனம் விசாரிக்க வேண்டும் என்று மாநில அரசு கருதுகிறது. இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

    மத்திய அரசிடம் சாதகமான பதில் வந்தவுடன் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் மோகன் தனது உடைகளை மாற்றிக்கொள்வார்.
    • ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் வாகனத்தை தானேயில் உள்ள ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் சியோன் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயது மோகன் கோகடே.

    மோகனின் குடும்பம் நன்கு படித்த மற்றும் வசதியான குடும்பம். இவரது சகோதரி துபாயிலும், சகோதரர் அமெரிக்காவிலும் வசிக்கின்றனர்.

    இவரது ஒரு மகன் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட், மற்றொரு மகன் இன்ஜினியர் ஆவார். மோகன் முன்பு தனது தந்தையுடன் சேர்ந்து தோட்ட தொழில் செய்து வந்தார்.

    வசதியான பின்னணி இருந்தும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் அவர் பெரும் கடன் சுமைக்கு ஆளானார். இந்தக் கடனை அடைப்பதற்காக திருட்டுத் தொழிலை தொடங்கியுள்ளார்.

    சியோன் மற்றும் பிற இடங்களில் நகை பறிப்புகளில் மோகன் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஜனவரி 25 அன்று சியோனில் ஒரு பெண்ணிடம் பைக்கில் சென்று சங்கிலியை பறித்துச் சென்றார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் மோகன் தனது உடைகளை மாற்றிக்கொள்வார். மேலும் எப்போதும் ஹெல்மெட் அணிந்திருப்பார்.

    அவர் உடைகளை மாற்றினாலும், ஒவ்வொரு முறையும் அதே ஜோடி ஷூக்களை அணிந்திருந்தார். போலீசார் சுமார் 80 சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்தபோது, முகம் தெரியாவிட்டாலும் அவர் அணிந்திருந்த ஷூக்கள் மட்டும் மாறாமல் இருந்ததைக் கவனித்தனர். இதுவே அவர் பிடிபட முக்கியத் துப்பாக அமைந்தது.

    மோகன் நெரூலில் ஒரு இருசக்கர வாகனத்தைத் திருடி, அதைப் பயன்படுத்தி சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் வாகனத்தை தானேயில் உள்ள ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அவர் மீண்டும் அடுத்த திருதிற்காக வாகனத்தை எடுக்க வந்தபோது, ஷு அடையாளத்தை வைத்து போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

    சுமார் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.   

    • 30 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.
    • தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு பாபுபாய் பிரஜாபதி உதாரணமாகியுள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த முன்னாள் போலீஸ் கான்ஸ்டபிள் அதிகாரி பாபுபாய் பிரஜாபதி (64).

    1996-ஆம் ஆண்டு, லாரி ஓட்டுநர் ஒருவரிடம் 20 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் பாபுபாய் பிரஜாபதி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு பின் 2004 ஆம் ஆண்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    4 ஆண்டுகள் கடந்து விடுதலை ஆன போதும் தன் மீதான களங்கத்தை துடைக்க அவர் செய்த மேல்முறையீடு மேல்முறையீடு குஜராத் உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

    கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தில் அவர் தனது வாழ்நாளைக் கழித்தார்.

    கடந்த புதன்கிழமை, குஜராத் உயர் நீதிமன்றம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை நிரபராதி என அறிவித்து வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால் தீர்ப்பு வந்த மறுநாளே (வியாழக்கிழமை) அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

    தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு பாபுபாய் பிரஜாபதியின் நிலை மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது. 

    ×