search icon
என் மலர்tooltip icon
    • வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.
    • ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.79,200-க்கு விற்பனையாகிறது.

    சென்னை :

    தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகவே அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.45,840-க்கு விற்கப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.45,920-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 5,730-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,740-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.79-க்கு விற்றது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.79.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.79,200-க்கு விற்பனையாகிறது.

    • பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும்.
    • பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம்.

    பஞ்ச பூதங்களின் இயக்கம் சரியாக இல்லையென்றால் இவ்வுலகம் மட்டுமல்ல நாமும், நம் உடலுமே இயங்குவது கடினம். அதாவது நம் உடலில் ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை உடையவை. ரத்தம், கொழுப்பு, கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு கொண்டவை.

    அதேவேளை பசி, தாகம், தூக்கம் ஆகியவை நெருப்பின் தன்மை உடையவையாகவும்; அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பை கொண்டவையாகவும் அறியப்படுகின்றன. வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மையை கொண்டவையாகும்.

    இதன் அடிப்படையில் நம் உடலின் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்று சிறப்புற வேண்டும் எனில் கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதும் நன்மை பயக்கும்.

    அந்த வகையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில், ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று நாம் வழிபடலாம்.

    இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன.

    பஞ்சபூத ஸ்தலங்களை ஒவ்வொன்றாக வரிசையாக ஒரே நாளில் பார்த்துவிடலாம். அதற்கு திருச்சியில் இருந்து தொடங்கி திருவானைக்காவல், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என்று இறுதியாக ஸ்ரீ காளஹஸ்தியை அடைய வேண்டும்.

    இதற்கு திருச்சியிலிருந்து ஸ்ரீ காளஹஸ்தி வரை மொத்தம் 560 கி.மீ பயணிக்க வேண்டும். எல்லா ஊர்களுக்கும் ரெயில், பேருந்து ஆகிய போக்குவரத்து வசதிகள் சுலபமாக கிடைக்கின்றன.

    • காளத்திநாதரைப் போற்றும் புராணங்கள் இரண்டு உள்ளன.
    • வீரை ஆனந்தக் கூத்தர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் திருக்காளத்திப் புராணம் என்னும் பெயரில் இயற்றியது.

    திருக்காளத்தி என்னும் ஊரில் குடிகொண்டுள்ள காளத்திநாதரைப் போற்றும் புராணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று வீரை ஆனந்தக் கூத்தர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் திருக்காளத்திப் புராணம் என்னும் பெயரில் இயற்றியது. மற்றொன்று சிவப்பிரகாசரும் அவரது தம்பியும் சேர்ந்து 17 ஆம் நூற்றாண்டில் சீகாளத்தி புராணம் என்னும் பெயரில் இயற்றியது

    இது பாயிரமும் 33 அத்தியாயங்களும் கொண்ட பெரிய நூல். இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் சில:

    தேவாரம் பாடிய மூவர், திருவாதவூர் அடிகள், நூலாசிரியரின் குரு சத்திய ஞானி, திருப்பணி செய்த யாதவ வேந்தன், வடநூலைத் தனக்கு மொழிபெயர்த்து உதவிய சங்கரநாராயணன் என்னும் வாரைவாழ் புராணிகர் முதலானோருக்குப் பாயிரப் பகுதியில் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது.

    சித்திரைச் சித்திரை, வைகாசி விசாகம், ஆனி மூலம், ஆடி உத்திரம், ஆவணி ஓணம், புரட்டாசி புரட்டை, ஐப்பசி அச்சுவதி, கார்த்திகைக் கார்த்திகை, மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்கள் காளத்திநாதரை வழிபடுவதற்கு உரிய நன்னாள்கள் எனக் கூறப்பட்டுள்ளன.

    1 போற்றிப் பாடல்

    நீயே வினைமுதல் நீயே கரணமும்

    நீயே கரணம், நீயே காரியம்

    நீயே தருபவன், நீயே சான்று உரு

    நீயே இவையுள் நீங்கினை சயசய

    2 நல்லொழுக்கம் கூறும் பாடல்

    ஓதனத்துக்கு உரியது ஒருபொருள்

    யாது உண்டு என்னதை இத்துணை நாளைக்கும்

    போதும் ஈது என்று உவந்து பொறுத்துத்

    தீது இல் தானியம் ஓம்புக சீர் பெற.

    • தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன.
    • பல்லவர் காலத்தில் இருந்த கோவிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர்.

    திருக்காளத்தி - காளஹஸ்தீஸ்வரர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளஹஸ்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.

    வடமொழிப் புராணங்கள் பலவும் இக்கோவிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக்கோவிலின் தல மரங்கள். இந்த ஊருக்கு அருகில் பொன்முகரி ஆறு ஓடுகிறது.

    வரலாறு

    இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோவிலான காளஹஸ்தி கோவில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான் இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். மிகப்பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோவில்களுள் இதுவும் ஒன்று. சங்கத்தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றிய குறிப்புக்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோவில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோவிலில் உள்ளன. சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோவிலுக்கு அளித்துள்ளனர்.

    பல்லவர் காலத்தில் இருந்த இக்கோவிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோவில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தான். கி.பி. 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவன் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக்கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.

    • ராகு, கேது தோஷ நிவர்த்தண பூஜை மிகவும் பிரபலமாகும். கோ பூஜைகளும் சிறப்பாக நடைபெறும் தலம் இது.
    • மூலவர் வாயு லிங்கத்துக்கு கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் காலி கருணாகர ரெட்டி ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கினார்.

    ஆந்திரா மாநிலம் காளஹஸ்தியில், பஞ்சபூத தலங்களில் ஒன்றான, புகழ்பெற்ற வாயு லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் காளஹஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ராகு, கேது தோஷ நிவர்த்தண பூஜை மிகவும் பிரபலமாகும். கோ பூஜைகளும் சிறப்பாக நடைபெறும் தலம் இது.

    மூலவர் வாயு லிங்கத்துக்கு கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் காலி கருணாகர ரெட்டி ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கினார். இந்த கவசத்தின் தலைப் பகுதியில் சூரியன், சந்திரன், அக்னியும், கீழே 9 படிகளில் நவ கிரகங்களும், 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டு உள்ளன. 9 கிரகங்களுக்கும் முத்து, பவளம், நீலம், வைடூரியம், கோமேதகம், புஷ்பராகம், ரூபி, எமரால்டு மற்றும் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

    2009-ம் ஆண்டு இந்த தங்க கவசம் பூப்பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்து முடிந்த பிறகு இந்த தங்கக் கவசம் சார்த்தப்பட்டது.

    அதற்கு முன்பு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் வழங்கியிருந்த தங்க முலாம் பூசிய 3 வெள்ளிக் கவசங்கள் மட்டுமே இதுவரை சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • தனது தந்தை தாக்கப்படுவதை கண்ட மகன் தடுக்க முயன்றபோது அவரையும் மர்மகும்பல் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இரு கொலைகளுக்கும் பழிக்குப்பழியாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சென்னை:

    ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது41). இவர் தனது வீட்டு அருகில் வசிக்கும் உறவினர் ஒருவரின் 16-ம் நாள் துக்க காரிய நிகழ்ச்சிக்காக 10-ம் வகுப்பு பயிலும் தனது மகனுடன் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆட்டோ மற்றும் 3 இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 8 பேர் கொண்ட மர்மகும்பல் சீனிவாசனை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தனது தந்தை தாக்கப்படுவதை கண்ட மகன் தடுக்க முயன்றபோது அவரையும் மர்மகும்பல் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    கொலையுண்ட சீனிவாசன் மீது 2014-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கும் 2021-ம் ஆண்டு பிரபல ரவுடி நாகூர் மீரான் கொலை வழக்கிலும் சிறைக்கு சென்று வந்தவர் எனவும் மேலும் பல வழக்குகள் அவர் மீது உள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த இரு கொலைகளுக்கும் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கொலை சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவை வைத்தும் விசாரணை செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியான ஆதம்பாக்கத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2007 இல், கிராமத் தலைவர் பாலிவால் என்பவரின் 17 வயது மகள் கிரண் நீரிழப்பு காரணமாக உயிழந்தார்.
    • இதயம் உடைந்த பாலிவால் மகள் நினைவாக கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மரத்தை நட்டார்.

    'இன்னும் ஒரு மகன் பிறந்தால் நன்றாக இருக்குமே..' என்று பேராசைப்படும் ஒரு நாட்டில், ராஜஸ்தானில் உள்ள பிப்லாந்த்ரி என்ற ஒரு சிறு கிராமத்தில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றவும், அதே நேரத்தில் பசுமையைப் பாதுகாக்கவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடுகிறார்கள்.

    2007 இல், கிராமத் தலைவர் பாலிவால் என்பவரின் 17 வயது மகள் கிரண் நீரிழப்பு காரணமாக உயிழந்தார். இதயம் உடைந்த பாலிவால் மகள் நினைவாக கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மரத்தை நட்டார். ஏன் இந்த நிகழ்வை ஒரு பரந்த திட்டமாக மாற்றக்கூடாது என்று அவர் எண்ணினார். விரைவில், மற்ற கிராமவாசிகளும் அவரது வழியைப் பின்பற்றத் தொடங்கினர்.

    பளிங்குச் சுரங்கங்களினால் சுரண்டப்பட்ட மலைகளினால் நிலம் வறண்டு, பசுமை சிதைந்திருந்த இப்பகுதியில் இந்த மேன்மையான திட்டத்தால் 3,50,000 க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. மா, நெல்லி முதல் சந்தனம், வேம்பு, மூங்கில் வரை. ஒரு காலத்தில் தரிசாக இருந்த நிலங்களில் மரங்கள் வளர்ந்து 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

    மரம் நடுவதுடன், பெண் குழந்தைகளின் பெற்றோர்களும் 18 வயதுக்கு முன் தங்கள் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்றும், பள்ளிப் படிப்பை முடிக்க அனுமதிப்போம் என்றும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்கள். கிராமவாசிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 31,000 மதிப்பில் ஒரு நிலையான வைப்புக் கணக்கைத் தொடங்கி, அவள் 18 வயதை எட்டியதும், மகளின் கல்விக்காகவோ அல்லது திருமணத்திற்காகவோ அந்தத் தொகையைச் செலவிடுகிறார்கள்.

    பிப்லாந்த்ரியின் வளர்ந்து வரும் காடு, நீர் மேலாண்மையை மேம்படுத்தும்போது இந்திய கிராமங்கள் எப்படி பசுமையாக மாறும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    -சித்ரா ரங்கராஜன்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி.கே. சிவக்குமாரை இறங்கி செல்லும்படி டெல்லி தலைமை அவரை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
    • ராகுல் காந்தி ஆலோசனைகளை மேற்கொண்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.

    கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்ததில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு சித்தராமையாவிற்கும், டி.கே. சிவக்குமாருக்கும் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். இருவருமே முதல்-மந்திரி பதவியை பிடிக்க தீவிரமாக காய் நகர்த்தி வந்தனர். இதனால் டெல்லியால் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் போனது.

    சித்தராமையா, டிகே சிவக்குமார் இருவரும் டெல்லியில் முகாமிட்டு மல்லிகார்ஜூனா கார்கே உடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த 48 மணி நேரமாக மாறி மாறி ஆலோசனைகள் செய்யப்பட்டன. சித்தராமையாவிற்கு முதல்-மந்திரி பதவி கொடுக்கவில்லை என்றால் அவர் கட்சியை உடைத்து விடுவார். தனியாக கூட கட்சி தொடங்கும் நிலைக்கு செல்வார்.

    அதனால் டி.கே. சிவக்குமாரை இறங்கி செல்லும்படி டெல்லி தலைமை அவரை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி இதில் ஆலோசனைகளை மேற்கொண்டும் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் சோனியா காந்தி இந்த விவகாரத்தில் தலையிட்டு இருக்கிறார். அவர் பேசிய பின்பே டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொடுத்த சில வாக்குறுதிகளை டி.கே. சிவக்குமார் ஏற்றுக்கொண்டார். அதோடு டி.கே. சிவக்குமாருக்கு 4 பெரிய துறைகள் மொத்தமாக அமைச்சரவையில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்களுக்கு முக்கிய அமைச்சர்கள் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராகுல், கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகியோர் பேசியும் இறங்கி வராத டி.கே. சிவக்குமார் சோனியா காந்தி பேசிய பின்பே இறங்கி வந்துள்ளார்.

    • விபத்து நடப்பதற்கு முந்தின நாள், பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா மீது லஞ்சம் வாங்கியதாக நகோன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா சென்ற கார் மீது மோதிய கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அசாம் மாநில காவல்துறையில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஜூன்மோனி ரபா.

    பணிபுரிந்த அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் கெட்டிக்காரர். மேலும் எந்த சவாலையும் சமாளித்து, குற்றவாளிகளை துணிச்சலாக பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பார்.

    இதனால் அசாம் காவல்துறையில் இவரை லேடி சிங்கம் என்றும் இந்தி படத்தில் வருவது போல தபாங் காப் என்றும் பொதுமக்களால் அழைக்கப்பட்டார்.

    இதனால் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபாவிற்கு கிடைக்கும் பாராட்டு உயர் அதிகாரிகள் சிலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா நேற்று அதிகாலை ஒரு காரில் அப்பர் அசாம் நோக்கி சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி, கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா, உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா சென்ற கார் மீது மோதிய கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த லாரி உத்தரபிரதேச மாநில பதிவெண் கொண்டது. அதனை ஓட்டி வந்த டிரைவர் விபத்து நடந்ததும், கண்டெய்னரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே விபத்து நடப்பதற்கு முந்தின நாள், பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபா மீது லஞ்சம் வாங்கியதாக நகோன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது வீட்டுக்கு சோதனைக்கு சென்ற போலீசார், வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை கைப்பற்றியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    இதுபற்றி பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஜூன்மோனி ரபாவின் உறவினர்கள் கூறும்போது, ஜூன்மோனி ரபாவின் சாவில் மர்மம் உள்ளது. அவர் கார் மீது கண்டெய்னரை ஏற்றி கொலை செய்துள்ளனர். மேலும் அவர் மீது வேண்டுமென்றே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    வீட்டில் இருந்த பணத்துக்கு உரிய கணக்கு உள்ளது. அதனை போலீசார் ஏற்கவில்லை. மாறாக அவர் மீது வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரியுள்ளனர்.

    இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த் பிஸ்வசுக்கும் உறவினர்கள் மனு அனுப்பி உள்ளனர்.

    • ஆர்சூ என்ற இளம்பெண் பெங்களூருக்கு விமானத்தில் வந்த போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.
    • ஆர்சூ பகிர்ந்த பதிவை அதிகமானோர் பார்வையிட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    அரசியல் தலைவர்கள், பிரபலங்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ள இளைஞர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் குருகிராமை சேர்ந்த ஆர்சூ என்ற இளம்பெண் பெங்களூருக்கு விமானத்தில் வந்த போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.

    ஜோமோடோவில் டெவலப்பராக பணியாற்றி வரும் ஆர்சூ, நிர்மலா சீதாராமனுடன் எடுத்த புகைப்படத்தை 'பீக் பெங்களூரு' என்ற பிரத்யேக இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நிர்மலா மேடம், நிதி மந்திரி இருக்கும் அதே விமானத்தில் ஏறும் வாய்ப்பு கிடைத்தது, இது எனக்கு சந்தோஷமாக உள்ளது என்ற தலைப்புடன் பகிரப்பட்ட அவரது பதிவை அதிகமானோர் பார்வையிட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • தெருவோர வியாபாரி ஒருவர் ஒரு எண்ணெய் சட்டியில் வறுத்த முட்டைகள் எடுக்கிறார்.
    • இரண்டு முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து மிளகாய் மற்றும் வெங்காயத்தை தவாயில் சேர்த்து பிசைய தொடங்குகிறார்.

    உணவு பிரியர்களை மகிழ்விப்பதற்காகவே சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது உணவு வகைகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் சில உணவுகள் அதிக வரவேற்பையும், சில உணவுகள் கடும் விமர்சனங்களையும் சந்திக்கும். அந்த வகையில் மாம்பழ ஆம்லெட் என்ற ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    அதில் தெருவோர வியாபாரி ஒருவர் ஒரு எண்ணெய் சட்டியில் வறுத்த முட்டைகள் எடுக்கிறார். பின்னர் இரண்டு முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து மிளகாய் மற்றும் வெங்காயத்தை தவாயில் சேர்த்து பிசைய தொடங்குகிறார்.

    அதன் பிறகு ஒரு பாட்டில் மாம்பழ ஜூசை சேர்த்து மாம்பழ ஆம்லெட் தயார் செய்கிறார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ ஏராளமானவர்களின் பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஏராளமானோர் இதுபோன்ற உணவு வகைகள் தயாரிக்கும் போது பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை கூறி உள்ளனர்.

    • லேகா தனது பிறந்தநாளில் அவரது காதலனுடன் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் முன்பு நிற்கிறார்.
    • காதலர் ஆகாஷ் லேகாவை சதுக்கம் முன்புள்ள ஒரு பெரிய விளம்பர பலகையின் முன்பு அழைத்து செல்கிறார்.

    காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தும் வாலிபர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிரப்படுவது உண்டு. ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமில் 'டேல்ஸ் பை லேகா' என்பவரது பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

    அதில், லேகா தனது பிறந்தநாளில் அவரது காதலனுடன் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் முன்பு நிற்கிறார். அப்போது அவரது காதலர் ஆகாஷ் லேகாவை சதுக்கம் முன்புள்ள ஒரு பெரிய விளம்பர பலகையின் முன்பு அழைத்து செல்கிறார். அங்கு இருவரும் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர். அப்போது அவர்களின் பின்புறம் உள்ள பெரிய விளம்பர பலகையில் லேகாவின் புகைப்படங்கள் காட்டப்படுகிறது. இதைப்பார்த்து வியப்பில் ஆழ்ந்த லேகா மிகவும் சந்தோசப்படும் காட்சிகள் பார்ப்பவர்களை ரசிக்க செய்கிறது. வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ×