search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருக்காளத்தி காளத்தியப்பர் கோவில்
    X

    திருக்காளத்தி காளத்தியப்பர் கோவில்

    • தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன.
    • பல்லவர் காலத்தில் இருந்த கோவிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர்.

    திருக்காளத்தி - காளஹஸ்தீஸ்வரர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளஹஸ்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.

    வடமொழிப் புராணங்கள் பலவும் இக்கோவிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக்கோவிலின் தல மரங்கள். இந்த ஊருக்கு அருகில் பொன்முகரி ஆறு ஓடுகிறது.

    வரலாறு

    இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோவிலான காளஹஸ்தி கோவில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான் இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். மிகப்பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோவில்களுள் இதுவும் ஒன்று. சங்கத்தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றிய குறிப்புக்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோவில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோவிலில் உள்ளன. சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோவிலுக்கு அளித்துள்ளனர்.

    பல்லவர் காலத்தில் இருந்த இக்கோவிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோவில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தான். கி.பி. 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவன் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக்கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.

    Next Story
    ×