search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செந்தூர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூரனை வென்று ஆட்கொண்டதால் ஜெயந்திநாதர் என்று அழைக்கப்பட்டார்.
    • முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

    சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் திருச்செந்தூர் தலத்துக்கு புறப்பட்டு வந்ததை நேற்று பார்த்தோம். முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்தார்.

    வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார்.

    பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "ஜெயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே `செந்தில்நாதர்' என மருவியது. தலமும் `திரு ஜெயந்திபுரம் என அழைக்கப்பெற்று, திருச்செந்தூர்' என மருவியது.

    கோவில் அமைப்பு

    முருகனுக்குரிய ஆறு படை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாகவும் அமைந்துள்ளன.

    முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

    தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

    இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் `பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. 130 அடி உயரம் கொண்ட இக் கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

    முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். எனவே பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும்.

    ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.

    கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக் கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளை யில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    சூரனை வதம் செய்த பிறகு படையினர் தாகம் தீர்க்க கடலோரத்தில் முருகன் வேலால் குத்தி தண்ணீர் வரவழைத்தார். இன்றும் தண் ணர் வரும் அது, நாழிக்கிணறு எனப்படுகிறது.

    கடலோரத்தில் உள்ள அந்த நாழிக்கிணறு கொஞ்சமும் உப்பாக இல்லாமல் நல்ல தண்ணீ ராக இருப்பது குறிப்படத்தக்கது. இத்தலத்தில் மொத்தம் 24 தீர்த்தங்கள் உள்ளன.

    திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    திருச்செந்தூரில் சண்முகருக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.

    தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, `கங்கை பூஜை' என்கின்றனர்.

    மும்மூர்த்தி முருகன்

    திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7-ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8-ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிப்பார்.

    நான்கு உற்சவர்கள்

    பொதுவாக கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி' என்றழைக்கின்றனர்.

    சந்தனமலை

    முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக் கோவி லாக அமைந்தது போல வும் தோற்றம் தெரியும். உண்மையில், திருச்செந்தூரும் மலைக்கோவிலே ஆகும். இக்கோவில் கடற்கரை யில் இருக்கும் "சந்தன மலை'யில் இருக்கிறது.

    எனவே இத்தலத்தை, "கந்தமாதன பர்வதம்' என்று சொல்வர். காலப்போக்கில் இக்குன்று மறைந்து விட்டது. தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருப்பதைக் காணலாம்.

    குரு பெயர்ச்சி

    திருச்செந்தூரில் முருகன் "ஞான குரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர் களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது.

    இரண்டு முருகன்

    சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன், இத்தலத்தில் சுப்பிரமணியராக நான்கு கரங்களுடன் காட்சி தருகி றார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருப்பது சிறப்பான அமைப்பு. இவரது தவம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக, இவருக்கு பிரகாரம் கிடையாது.

    இவருக்கான பிரதான உற்சவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரை சுற்றி வழிபட பிரகாரம் இருக்கிறது. மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் இவருக்குச் செய்யப்படுகிறது. எனவே திருச்செந்தூர் தலத்தில் 2 மூலவர்கள் உள்ளனர்.

    தீபாவளிக்கு புத்தாடை ஊர்வலம்

    மகாவிஷ்ணு, நரகாசுரனை அழித்து மக்கள் இன்புற்ற தீபாவளி நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி மகிழ்கிறோம். திருச்செந்தூர் கோவிலிலும் அனைத்து சுவாமிகளுக்கும் தீபாவளியன்று புத்தாடை அணிவிக்கப்படுகிறது.

    அன்று அதிகாலையில் இக்கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சந்தன காப்பு செய்யப்படுகிறது. பின் புத்தாடை களை வெள்ளி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று, அணிவிக்கின்றனர்.

    இது தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

    சக்கரம் கொடுத்த பெருமாள்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள் பிரகாரத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாள் கையில் சக்கராயுதம் இல்லை. அதனை முருகனுக்கு சூரசம்காரம் செய்ய வழங்கி விட்டதாக கூறுகிறார்கள்.

    நோய் தீர்க்கும் இலை விபூதி

    திருச்செந்தூர் கோவிலில் இலை விபூதி பிரசாதம் மிக விசேஷமானது. பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்பில் பூசிக் கொள்ளச் சந்தனத்துடன் பிரசாதமாக விபூதியை தருவார்கள். பன்னீர் இலையில் வைத்துத் தொடாமல் போடுவார்கள். விசுவாமித்திர மகரிஷி இங்கு வந்து தரிசித்தார். இலை விபூதி பிரசாதம் பெற்றார். அதைத் தரித்துக் கொண்டார். அவருடைய குன்ம நோய் நீங்கிற்று என்பது புராணம்.

    சஷ்டி யாகம்

    திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும். இதையடுத்து முருகன் அருள் வேண்டி பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி விரதத்தின் சிறப்புகளை நாளை காணலாம்.

    • எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான்.
    • கந்தன் வரும் அழகே அழகு.

    கந்த சஷ்டி கவசத்தில் ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக்காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான்.

    அவருக்கு உகந்த நாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.

    கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரனை மற்ற எட்டு திசைகளில் இருந்தும் பலர் போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னிெரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

    அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

    அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைக்கிறார். வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல், நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல், மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல், சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

    அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டு ள்ளது. பில்லி, சூனியம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார். அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.

    பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும், செய்யான், பூரான் இவைகளால் ஏற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார். நோய்களை எடுத்துக்கொ ண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒற்றை தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.

    இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும். நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்தசஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

    • சூரசம்ஹார விழாவினைக் காண கண்கோடி வேண்டும்.
    • ஆறுபடை வீடுகளுள் 2-வது படைவீடாகும், 2-வது படைவீடு

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புனிதபூமி திருச்செந்தூர். இது நெல்லையில் இருந்து சுமார் 54 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நக்கீரர் வாக்குப்படி இது முருகனின் ஆறுபடை வீடுகளுள் 2-வது படைவீடாகும். இத்தலத்தில் ஓயாமல் கடல் அலைகள் சுழன்று அடிப்பதால் அலைவாய், திருச்சீரலைவாய் என்று பெயர் பெற்றுள்ளது. மேலும் முருகன் சூரனை அழித்து வெற்றி பெற்ற காரணத்தால் ஜெயந்திபுரம் என்றும், செந்திலாண்டவன் கொலுவிருந்து ஆட்சி செய்வதால் செந்திலம்பதி என்றும் இத்தலம் பல்வேறு பெயர்களைப் பெற்றுள்ளது.

    இத்தலத்தில் சூரசம்ஹார விழாவினைக் காண கண்கோடி வேண்டும். மேலும் முருகன் அவதரித்த வைகாசி விசாக நாளும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படும் பெருவிழாவாகும்.

    முருகப் பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்து வரும் போது தமது படைகளுடன் இந்த திருச்செந்தூர் தலத்தில் வந்து தங்கினார். இங்கு தேவ சிற்பி விஸ்வகர்மாவினால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கிய செந்திலாண்டவனை தேவகுருவாகிய வியாழபகவான் வந்து பூஜித்தார்.

    அந்த குருபகவானிடமே அசுரர்களின் வரலாறுகளை முருகன் விரிவாகக் கேட்டறிந்தான். அதனால்தான் திருச்செந்தூர் புகழ்பெற்ற குரு தலமாக விளங்குகிறது. முருகன் வீரபாகுவைத் தூதனுப்பி சூரபத்மனுக்குப் பல அறிவுரைகள் கூறினார். அவன் அவற்றைக் கேட்கவில்லை.

    இதனால் சூரபத்மன் மீது முருகன் போர் தொடுத்தார். கடைசியில் பல மாயங்கள் புரிந்து கடலில் பெரிய மாமரமாய் நின்ற சூரனை தம் வேலால் பிளந்து, ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொரு பகுதியை சேவல் கொடியாகவும் கொண்டு பகைவனுக்கும் அருள் புரிந்தான் செந்தில் வேலவன்.

    • சூரபத்மன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான்.
    • `ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்’ எனப்படுகின்றது.

    முருகன் சிவந்த மேனியும், அரியவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.

    முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது. தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும், அகர முதல எழுத்துகள் பன்னிரண்டும் தோள்களாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

    முருகப்பெருமானை உள்ளன்புடன் வழிபாடு செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும். முருகன் நமக்கு வீடு அளிக்க வல்லவன். ஆனால் இந்த வீடுபேறை நாம் பெறுவதை தடுக்கும் வகையில் நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.

    இந்த ஆறு பகைவர்களின் உருவகமாகத்தான் சூரபத்மன் கருதப்படுகிறான். அவனை சம்காரம் செய்ததன் மூலம் முருகப்பெருமான் மனிதர்களிடம் உள்ள ஆணவத்தை ஒழித்ததாக சொல்வார்கள். இதற்காகத்தான் முருகன் அவதாரம் எடுத்தார். அதற்கான புராண கதை வருமாறு:-

    காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுர குலப்பெண்ணிற்கும் பிறந்தவன் சூரபத்மன். தன் தாயின் உபதேசப்படி சூரபத்மன் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். சூரபத்மனின் தவ வலிமையை மெச்சிய சிவபெருமான் சூரபத்மன் வேண்டியபடி அவனுக்கு தேவர்கள் அனைவரையும் வெல்லும் படையாற்றலும், படைக்கலங்களும், நினைத்த உடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் வல்லமையையும் அளித்தார்.

    இதில் உச்சக்கட்டமாக சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தையும் பெற்றான். சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டான். இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான். அசுரர்களின் இக்கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர்.

    இறைவன் அவர்களைக் காப்பாற்ற முடிவு செய்தார். அதன்படி அவர் தனது நெற்றிக் கண்ணைத் திறந்தார். அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீன் இனம் துள்ளி விளையாடும் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

    அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்தது போன்ற ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள் பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்தாள். அவையாவும் ஒரு திருமேனியாக வடிவம் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினான். இப்படித்தான் முருகனின் அவதாரம் நிகழ்ந்தது.

    ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் `ஆறுமுகசுவாமி' எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும். பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் "ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்" எனப்படுகின்றது.

    சூரபத்மனை அழித்து வரும்படி முருகனுக்கு உத்தரவிட்டார். முருகனுக்கு துணையாக செல்ல பெரும் படையையும் ஈசன் உருவாக்கி கொடுத்தார். மனிதர்களின் ஆணவத்தை ஒழித்த முருகப்பெருமான் இதற்காக ஈசன் திருவிளையாடல் ஒன்றை அரங்கேற்றினார்....

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனின் அருகில் இருந்த பார்வதிதேவி பயந்து ஓடினார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.

    அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் (வீரவாகுவை மாணிக்கவல்லியும், வீரகேசரியை மவுத்திகவல்லியும், வீர மகேந்திரனை புஷ்பராகவல்லியும், வீர மகேசுவரரை கோமேதகவல்லியும், வீர புரந்தரை வைடூரியவல்லியும், வீர ராக்கதரை வைரவல்லியும், வீர மார்த்தாண்டரை மரகதவல்லியும், வீராந்தகரை பவளவல்லியும், வீரதீரரை இந்திரநீலவல்லியும் பெற்றெடுத்தனர்) வீரவாகுதேவர் முதலான ஒரு லட்சத்து ஒன்பது பேர் தோன்றினர். இவர்கள் அனைவரும் முருகனின் படைவீரர்கள் ஆனார்கள்.

    இதையடுத்து பார்வதி தேவியும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். வெற்றிதரும் அந்த வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு ருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.

    அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி சென்றான். விந்தியமலை அடிவாரத்து மாயா புரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம் கொண்டவன்) கிரவுஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிந்தார். ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்தினான். அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிந்தான்.

    சூரபத்மன் இச் செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான். பின்னர் திருச்செந்தூர் நோக்கி முருகனின் மொத்தப் படையும் கிளம்பியது. முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் சென்று தங்கினார். அங்கு பராசர முனிவரின் மகன்கள் (சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்ற னர். திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப் பெருமான் முற்றுப் பெறச் செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    • கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
    • வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், யாக பூஜையை முன்னிட்டு அதிகாலை 5.40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலையில் எழுந்தருளினார்.

    அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது. 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்தது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேள வாத்தியங்கள் முழங்க சண்முக விலாசம் மண்டபம் சேர்தல் அங்கு தீபாராதனை நடைபெற்றது.

    திருவிழா தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.

    இதைத்தொடர்ந்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்கள் விரதத்தை தொடங்கினர். பக்தர்கள் தங்கி விரதம் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் 26 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 35 ஆயிரம் பக்தர்கள் தங்கலாம்.

    தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் ஆகி, அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவில் 2-ம் நாளில் இருந்து 5-ம் நாள் வரை (14 முதல் 17-ந்தேதிவரை) காலை 7 மணிக்கு யாகசாலையில் பூஜை ஆரம்பமாகும். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 12.45 மணிக்கு சண்முக விலாசம் வருதல், அங்கு தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி அங்கி ருந்து மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபம் வருகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனைக்கு பிறகு கிரிவீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூபம் தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் வருதல், அங்கு தீபாராதனை நடைபெற்று பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

    சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவின் 7-ம்நாளான 19-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    8-ம்நாளான 20-ந்தேதி (திங்கட்க்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம் பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

    திருவிழா 9, 10, 11 ஆகிய 3 நாட்களும் (21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை) தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.

    12-ம் திருவிழா வெள்ளிக்கிழமை 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று, சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது. கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முரு கன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முருகன் என்றால் 'அழகன்' என்று பொருள்.
    • கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம்.

    முருகன் என்றால் `அழகன்' என்று பொருள். கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம். அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளின்றி உலகத்தில் பொருளேது! முருகா! என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும், பெருகாத செல்வம் பெருகும்.

    இந்த மாதத்தில் ஆறுபடை வீட்டு முருகனை வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டுடிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு பேருடைய பிரச்சினைகளை அழிக்க வல்லவன். பனிரெண்டு கரங்களை பெற்றிருப்பதால் அள்ளிக்கொடுக்ககும் ஆற்றலைப் பெற்ற வள்ளல். அதனால் தான் நாம் கேட்ட வரத்தை கேட்ட நிமிடத்திலேயே பெற முடிகிறது.

    வேலோடும், மயிலோடும் வந்து நம் வேதனைகளை எல்லாம் மாற்றி, சாதனைபுரிய வைப்பவன் முருகப்பெருமான் என்பதை கும்பிட்டவர்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்த தீப்பொறிகள் கங்கையில் பறந்த போது கங்கையே வற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து விசாகத் திருநாளில் அவதரித்தவன் முருகப்பெருமான்.

    கங்கையில் தோன்றியதால் 'காங்கேயன்' என்ற ஒரு பெயர் வந்தது. சரவண பொய்கையில் தோன்றியதால் தான் 'சரவண பவன்' என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் 'கார்த்திகேயன்' என்றும் திருநாமம் உண்டாயிற்று.

    திருப்பரங்குன்றம்

    இது முதல் படைவீடாகும். தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம் திருப்பரங்குன்றம்.

    திருச்செந்தூர்

    அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடம் திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார் முருகப்பெருமான். சேவலை கொடியாக்கிக்கொண்டான்.

    பழனி

    இது மூன்றாவது படைவீடாக உள்ளது. மாம்பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச்சுற்றினார்கள் பிள்ளையாரும், முருகனும். ஆனால் முன்னதாகவே `அன்னையும் பிதாவும் அகிலம்' என்று சொல்லி சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழத்தை வாங்கிக்கொண்டார் ஆனைமுகப் பெருமான். எனவே கோபத்தோடு முருகன் மலையேறி நின்ற இடம் தான் பழனி.

    சுவாமிமலை

    நான்காம் படை வீடு சுவாமிமலை. தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்த இடமாகும். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள் அதற்கு கீழும் தான் இருக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் உபதேசிப்பது புதுமை. பிரணவத்தின் பொருளை உபதேசித்ததால் தான் `சுவாமிநாதன்' என்ற பெயர் உண்டாயிற்று.

    திருத்தணி

    ஐந்தாம் படை வீடு திருத்தணி. முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் திருத்தணி. சினம் இருந்தால் பணம் வராது. எனவேதான் மனிதர்கள் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும். என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவரிகள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபடுவது நல்லது.

    பழமுதிர்சோலை

    ஆறாவது படை வீடு பழமுதிர்சோலை. அவ்வை பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம் என்பார்கள். 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று தமிழ்ப்புலமை பெற்ற அவ்வையிடம் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புபவர்கள் இங்கு சென்று வந்தால் வெற்றியை வேகமாகப் பெற முடியும்.

    "வேலும் மயிலும், வேலும் மயிலும்` என்று சொல்லி அந்த வேலவனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று வாருங்கள். முருகப்பெருமானைக் கைகூப்பித்தொழுதால் நலம் யாவும் வந்து சேரும். படைவீடு செல்லுங்கள். பகை வெல்லும்! பணம் சேரும்!

    • குழந்தை வரம் கொடுப்பதில் பேச்சியம்மன் முதன்மையான தெய்வம்.
    • 21 பந்தி தெய்வங்களில் சுடலைமாடன் இடம் பெறுவதில்லை.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காயாமொழி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற சுடலை மாடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பேச்சியம்மன், குளிக்கரை பேச்சியம்மன், பிரம்ம சக்தி, இசக்கியம்மன், முண்டன்சாமி. செங்கடசாமி, கட்டேரி பெருமாள், வைணப்பெருமாள், ஐயம்பந்தி, சிவனந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலின் தலவிருட்சம் காரை மரமாகும்.

    தல வரலாறு

    ஒரு காலத்தில் பாண்டிய நாட்டை சேர்ந்த வல்லராஜா என்ற மன்னன். தன்னுடைய ஆட்சியில் பலரையும் கொடுமைப்படுத்தி வந்தான். மக்கள் மட்டுமின்றி, ரிஷிகளும், முனிவர்களும் கூட அவனால் துன்பப்பட்டனர். இந்த நிலையில், ஒரு முனிவர் மூலம் வல்ல ராஜா சாபத்தைப் பெற்றான்.

    இவனுக்கு பிறக்கும் குழந்தை பிரசவம் ஆனதும். அந்த குழந்தையின் உடல் உடனே பூமியைத் தொட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். அவனது நாடும் அழிந்துவிடும். மாறாக அந்த குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால், அதற்கு பிறகு ஒன்றும் ஆகாது என்பது மன்னனுக்கு ஏற்பட்ட சாபம்.

    இதற்கிடையே கர்ப்பவதியான வல்லராஜாவின் மனைவிக்கு பிரசவ வலி உண்டானது. மன்னனுக்கு இருந்த சாபத்தால், அவன் மனைவிக்கு பிரசவம் பார்க்க எவரும் முன்வரவில்லை. பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் என கவலை அடைந்த மன்னன், தானே ஊருக்குள் சென்று பிரசவம் பார்க்கும் பெண்ணைத் தேடினான்.

    அப்போது அவன் முன்பாக வயதான பெண் வடிவத்தில் பேச்சியம்மன் தென்பட்டாள். அவள் தெய்வப் பிறவி என்பதை அறியாத மன்னன். அவளது உதவியை நாடினான். அதற்கு அந்த அன்னை, நான் உன் மனைவிக்கு பிரசவம் பார்த்து அந்த குழந்தை பூமியை தொடாதபடி பார்த்துக் கொள்கிறேன். அதற்கு எனக்கு தேவையானதை தர வேண்டும்` என்றாள். மன்னனும் கேட்டதைத் தருவ தாக வாக்களித்தான்.

    அதன்படி மன்னனின் மனைவிக்கு பிரசவம் பார்த்த பேச்சியம்மன். அந்த குழந்தை பூமியை தொடாதபடி பார்த்துக் கொண்டார். ஒரு நாள் முடிந்ததும், மன்னன் தன் வேலையை காட்டினான். பேச்சியம்மன் கேட்ட எதையும் கொடுக்காமல், அவரை கொல்ல முயன்றான்.

    ஆனால் தன் சுய உருவத்தை காட்டிய பேச்சியம்மன், மன்னனையும் அவன் மனைவியையும், வம்சாவளியையும் அழித்து அங்குள்ள மக்களை காப்பாற்றினாள். இதனால் மக்கள் அனைவரும் அந்த அன்னையை கைகூப்பித் தொழுதனர்.

    இதையடுத்து பேச்சியம்மன் தன்னுடைய கோபம் தணிந்து சாந்தமானாள். பின்னர், 'நான் காளியின் அவதாரம். என்னை வணங்கி வந்தால், நான் குடிகொள்ளும் ஊரை காப்பேன், அவரவர் வீடுகளில் உள்ள கர்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் உதவுவேன், அனைவருக்கும் பாதுகாவலாக இருப்பேன்' என்று உறுதியளித்தாள் என்கிறது தல வரலாறு.

    21 பந்தி தெய்வங்கள்

    21 பந்தி தெய்வங்களில் பேச்சியம்மன் மிக முக்கியமான வன தேவதையாக விளங்குகிறார். சில கோவில்களில் 21 பந்தி தெய்வங்களில் சுடலைமாடன் இடம் பெறுவதில்லை. ஆனால் கண்டிப்பாக பேச்சியம்மன் இடம் பெறுகிறார். ஏனெனில் சக்தி அம்சத்தில் சிவன் அடக்கம் என்பதால். பேச்சியம்மன் எல்லா 21 பந்தி தெய்வங்களில் முதன்மையான காவல்காரியாக மக்களுக்கு அருள்புரிகிறார்.

    உருண்ட கண்களும், நீண்ட நாக்கும். விரித்த சடையும். தலையில் அக்னி கிரீடமும் கொண்டு பேச்சியம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும், இவரது கையில் திரிசூலம், பிரம்பு, கபால பாத்திரம், கத்தி, வாள், சீலைப்பிள்ளை, கிலுக்கு, உடுக்கை, மண்டை ஓடு, சாட்டை இருக்கும்.

    21 பந்தியில் உள்ள மற்ற தெய்வங்கள் இந்த பேச்சி அம்மனின் உத்தரவை ஏற்று நடப்பார்கள். சுடலைமாடன் தனது தாயான பேச்சியம்மனிடம் உத்தரவு பெற்று தான் வேட்டைக்குச் செல்வார். பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றை கருவறுக்க உருவானவள் தான் வனப்பேச்சியம்மன். பல கோவில்களில் வனப்பேச்சி அம்மனுக்கு காவலாக சுடலைமாடனும், கருப்பனும் தான் இருக்கிறார்கள்.

    குழந்தை வரம் கொடுப்பதில் பேச்சியம்மன் முதன்மையான தெய்வமாக விளங்குகிறார். எனவே தான் குழந்தை இல்லாத தம்பதியினர் பேச்சியம்மனை மனமுருகி வணங்கி குழந்தை பிறந்தவுடன் நேர்த்திக்கடனாக மரத்தொட்டில் கட்டி சீலைப்பிள்ளை மற்றும் குழந்தை பொம்மை வாங்கி வைக்கின்றனர். குழந்தைகள் பேச்சாற்றல் மிகுந்து விளங்க நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும் பேச்சியம்மனை வழிபடுகின்றனர்.

    • நட்சத்திர விரதம் இருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும்.
    • திதி விரதமிருந்தால் விதி மாறும்.

    பொதுவாகவே விரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம். மூன்றாவது நட்சத்திர விரதமாகும். 'வார விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதம் இருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட "விதி" மாற வேண்டுமானால் திதி பார்த்து விரதம் இருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

    மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று, விதியை இறைவன் மாற்றியமைத்த கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைப்போல நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும் அதை மாற்றக்கூடிய ஆற்றல் விரதங்களுக்கு உண்டு. உண்ணா விரதம் இருந்து இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் மகாத்மா காந்தி, உண்மையாக நாம் விரதம் இருந்து உள்ளன்போடு வழிபட்டால் சுகங்களை வழங்குவார் முருகப்பெருமான்.

    "சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" என்பது நம் முன்னோர் வாக்கு. உடல் ஆரோக்கியத்திற்கு சுக்கு மருந்தாக இருப்பது போல உள்ளம் சீராக இருக்க வள்ளல் முருகனின் வழிபாடு நமக்கு கைகொடுக்கின்றது. அந்த முருகப்பெருமானை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். இருந்தாலும் அவருக்கு உகந்த நாளில் வழிபடுகின்ற பொழுது எண்ணற்ற நற்பலன்கள் இதயம் மகிழும் விதம் நமக்கு வந்து சேருகின்றது.

    மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுவது இரண்டு விழாக்கள். ஒன்று திருமண விழா, மற்றொன்று வாரிசு பிறக்கும் திருநாள். அங்ஙனம் வாரிசு உண்டாக வள்ளல் முருகனை விரதம் இருந்து வழிபட வேண்டிய திருநாள் கந்தசஷ்டி விழாவாகும். முருகனுக்கு உகந்த விரதங்களில் ஒன்று சஷ்டி விரதமாகும். அந்த சஷ்டியை கந்த சஷ்டி என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது கந்தனுக்குரிய சஷ்டி, கந்தசஷ்டி ஆகும்.

    முருகனுக்குரிய திதி விரதங்களில் முக்கியமானது சஷ்டி திதி. "சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது பழமொழி. இந்த பழமொழிதான் நாளடைவில் மருவி "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்று மாற்றம் பெற்றுவிட்டது.

    திருமண வீடுகளில் உணவு பரிமாறும் பொழுது சாம்பார், கூட்டு, போன்றவைகள் குறைவாக இருந்தால் கரண்டியில் எடுக்கும் போது குறைவாகவே வரும். அப்பொழுது சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்று சொல்வதை நாம் கேட்கலாம். ஆனால் அதன் உண்மையான விளக்கம். `சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால் 'அகப்பை எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும்.

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர். கந்த சஷ்டி விழாக்காலத்தில் ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள் சஷ்டியன்று முழுமையாக விரதம் இருப்பது நல்லது.

    இந்த ஆண்டு தீபாவளிக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி ஆரம்பமாகின்றது. பிறகு ஆறாவது நாள் கார்த்திகை 2-ந்தேதி (18.11.2023) சூரசம்ஹார நிகழ்வு அதாவது கந்த சஷ்டி விழா வருகின்றது. அன்றைய தினம் சூரசம்ஹாரம் முடித்து வெற்றிக் களிப்போடு இருக்கும் முருகப்பெருமானை வழிபட்டு இனிப்பு பொருள் உண்டு விரதத்தை நிவர்த்தி செய்வது நல்லது.

    முருகப்பெருமான் செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக புராண வரலாறு சொல்வதால், அன்றையதினம் திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட செல்கின்றனர். திருச்செந்தூரின் கடல் ஓரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம். தேடித் தேடி வருவோர்க் கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் என்று கவியரசு கண்ணதாசன் வர்ணித்திருப்பார்.

    எனவே அப்படிப்பட்ட தெய்வாம்சம் நமக்கு கிடைக்க திருவருள் கைகூட, குருபீடமாக வீற்றிருக்கும் திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டு வரலாம். அங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களுக்குச் சென்று ஆறுமுகப்பெருமானை வழிபட்டு வரலாம்.

    வீட்டிலுள்ள பூஜை அறையிலும் ஆறுமுகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கூடிய தெய்வ படத்தை வைத்தும் வழிபட்டு வரலாம். புத்திரப்பேறு மட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, செல்வாக்கு, போன்ற பதினாறு பேறுகளும் பெற்று செல்வ வளத்தோடு வாழ இந்த வழிபாடு கைகொடுக்கின்றது.

    கந்தன்பெயரை எந்தநாளும் சொல்லிப் பாருங்கள்

    கவலையெல்லாம் தீரும் இது உண்மைதானுங்க!

    செந்தில்வேலன் புகழ்படித்தால் செல்வம் சேருங்க!

    தேசமெல்லாம் கொடிபறக்கும் வாழ்வைப் பாருங்க!

    என்று கவிஞர் பெருமக்கள் வள்ளி மணாளனை வர்ணித்து கவசம் பாடியிருக்கின்றார்கள்.

    • சாஸ்தாவை வெறும் வயிற்றுடன் வணங்கக்கூடாது என்பது மரபு.
    • மதிய வேளைக்குள் சாஸ்தாவுக்கு பாயாசம் படைக்க வேண்டும்.

    உத்திர நட்சத்திரத்தில் பிறந்த திருமணம் ஆகாத பெண்களும், திருமணத்துக்குப் பிறகு பொருளாதார அல்லது மனரீதியாகத் துயரப்படும் பெண்களும்

    பங்குனி உத்திரம் தினத்தன்று திருச்செந்தூர் சென்று நாழிக்கிணற்றில் நீராடி அதன் பிறகு கடலில் குளிக்க வேண்டும்.

    பிறகு முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் தீராத இன்னல்களும் தீரும்.

    வெறும் வயிற்றுடன் வணங்காதீர்

    பங்குனி உத்திரம் நாளன்று காலையில் வழக்கமான உணவை சாப்பிட வேண்டும்.

    ஏனெனில் சாஸ்தாவை வெறும் வயிற்றுடன் வணங்கக்கூடாது என்பது மரபு.

    அரை வயிறுக்கு சாப்பிட்டுவிட்டு, காடுகளில் இருக்கும் சாஸ்தாவை வணங்க செல்ல வேண்டும்.

    மதிய வேளைக்குள் சாஸ்தாவுக்கு பாயாசம் படைக்க வேண்டும்.

    அதை மதிய உணவாகக் கொள்ளலாம். இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது.

    • கொடிமரத்திற்கு பின்னாலேயே சொரிமுத்து அய்யனார் வந்துகொண்டே இருந்தார்.
    • கற்குவா மரத்தின் மீது அமர்ந்த அய்யன் என்று பாசத்துடன் அழைத்து வந்தனர்.

    திருச்செந்தூரில் இருந்து 16 கி.மீ தொலைவில் இருக்கும் ஊர் தான் தேரிக்குடியிருப்பு. அந்த தேரி குடியிருப்புக்கு பக்கத்தில் குதிரைமொழி தேரி என்ற ஊரில் எழுந்தருளி இருக்கிறார் கற்குவேல் அய்யனார்.

    ஒரு சமயம் பொதிகைமலைக்கு அடியில் இருக்கக்கூடிய காக்காய்ச்சி மலையில் இருந்து திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலுக்கு கொடிமரம் வெட்ட வரும்போது, பேச்சியம்மன், சுடலைமாடசாமி, பிரம்மசக்தி அம்மன் முதலான 21 தேவாதி தேவதைகள் எல்லோரும் இடையூறு செய்தார்கள்.

    உடனே கொடிமரம் வெட்ட சென்றவர்கள் எல்லோரும் சொரிமுத்து அய்யானாரிடம் சென்று முறையிட்டனர். சொரிமுத்து அய்யனாரில் கட்டளைப்படி அந்த 21 தேவாதி தேவதைகளும் அந்த கொடிமரத்தை திருச்செந்தூரில் இருக்கக்கூடிய முருகன் கோவிலில் கொண்டுவந்து சேர்த்தனர்.

    அந்த கொடிமரத்திற்கு பின்னாலேயே சொரிமுத்து அய்யனார் வந்துகொண்டே இருந்தார். வந்துகொண்டு இருக்கும்போது செம்மண் காட்டு பகுதியில் தேரிக்குடியிருப்பு என்ற இடம் உள்ளது. அந்த செம்மண் தேரி சொரிமுத்து அய்யனாருக்கு மிகவும் பிடித்துபோகவே, இதனால் சொரிமுத்து அய்யனார் என்ன பண்ணினார் என்றால் அந்த செம்மண் தேரியில் உள்ள கறுவா மரத்தின் மீது அமர்ந்துகொண்டார்.

    அதன்பிறகு தான் இங்கு இருப்பதை அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த நிலக்கிலாரின் கனவில் தோன்றி நான் அய்யனார் நீ வசிக்கும் பகுதியில் உள்ள கற்குவா மரத்தில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு இவ்விடம் பிடித்துவிட்டது. எனவே இந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டி பூஜை செய்துவா, நான் உன்னை மேம்படுத்துவேன். என்னை நம்பி வணங்கும் பக்தர்களுக்கு எல்லா வளமும், நலமும் அளித்து காத்தருள்வேன் என்று கூறினார் சொரிமுத்து அய்யனார்.

    உடனே நிலக்கிலார் என்ன செய்தார் என்றால் அந்த பகுதியை ஆட்சி செய்து வந்த சிற்றரசன் உதவியுடன் கோவிலை கட்டினார். மக்கள் எல்லோரும் கற்குவா மரத்தின் மீது அமர்ந்த அய்யன் என்று பாசத்துடன் அழைத்து வந்தனர். அதுவே காலப்போக்கில் மருவி கற்குவேல் அய்யன் என்று ஆகி இன்று கற்குவேல் அய்யனார் என்று அழைக்கப்படுகிறது.

    கற்குவேல் அய்யனார் சொன்னதுபடியே 21 தேவாதி தேவதைகளுக்கும் இந்த இடத்தில் கோவில் கட்டி கொடுக்கப்பட்டது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு இந்த கோவிலை கட்டி தந்த நிலக்கிலாருக்கு ஒரு மகன் பிறந்தார். அந்த மகனுக்கு கற்குவா அய்யனார் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

    கற்குவா அய்யனாரும் அந்த பெயரை சுருக்கி கற்கய்யனார் என்று அழைத்தனர். இந்த நிலக்கிலாரின் வம்சாவளியில் வந்த கய்யனார், இதேபகுதியை ஆட்சி செய்து வந்த அதிவீர ரணசூர பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தார்.

    இந்த மன்னனின் கோட்டைக்கு அருகில் ஒரு அழகான சுனை ஒன்று உள்ளது. அந்த சுனையின் மேற்பரப்பில் ஒரு மா மரம் ஒன்று இருந்தது. அந்த மா மரத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. என்னவென்றால் தினமும் ஒரு காய் அதுவும் கனிந்த நிலையில் தானே விழும். அப்படிப்பட்ட மா மரம் தான் அந்த சுனை அருகில் இருந்தது. ஒரு நாள் அந்த சுனையில் தண்ணீர் குடிப்பதற்காக முனிவர் ஒருவர் வந்தார்.

    அங்கு தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று அந்த மா மரத்தில் இருந்து ஒரு கனி ஒன்று விழுந்தது. உடனே அந்த முனிவர் அந்த மாம்பழத்தை கையில் எடுத்துக்கொண்டு உடனே முனிவர் மன்னரை பார்க்க சென்றார். அங்கு மன்னரை பார்த்து முனிவர் இந்த மாம்பழம் கிடைப்பதற்கரிய மாம்பழம். இந்த மாம்பழத்தை நீங்கள் அன்றாடம் வழிபடக்கூடிய இறைவனுக்கு தினமும் ஒரு கனியை பின்னர் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் பிணியும், மூப்பும் அண்டாது என்று கூறினார்.

    ரொம்ப சந்தோசமாக மன்னர் அந்த முனிவரிடம் இருந்து பழத்தை வாங்கிக்கொண்டார். அன்றில் இருந்து அந்த மரத்தில் இருந்து தானே பழுத்து கீழே விழும் மாம்பழத்தை யாரும் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக 4 வீரர்களை மன்னர் காவலுக்கு வைத்தார்.

    அந்த பகுதியில் கணவனை இழந்த ஒரு விதவையான பேச்சித்தாய் வாழ்ந்து வந்தாள். இந்த பேச்சித்தாய் சிறுவயதில் இருந்தே கறுகுவேல் அய்யனார் மீதும், அந்த ஆலயத்தில் அருள்புரியும் பேச்சியம்மன் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தாள். இவர் தினமும் பகல் பொழுதில் ஊருக்குள் நடமாடுவதே கிடையாது. அதிகாலையில் அந்த சுனையில் இருந்து நீர் எடுத்து வந்து வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தாள்.

    அதிகாலை நேரம் என்பதால் மரத்தை காக்கக்கூடிய வீரர்களும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். ஒருநாள் அதிகாலைப்பொழுது சுனையில் இருந்து தண்ணீர் எடுத்துவர சென்றாள். அப்போது ஒரு குடத்தை அந்த சுனையின் மேற்பரப்பில் வைத்துவிட்டு மற்றொரு குடத்தில் நீரை எடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது அந்த மாமரத்தில் இருந்து மாம்பழம் பழுத்து நீர் நிரம்பிய குடத்திற்குள் விழுந்தது.

    இதை பேச்சித்தாய் கவனிக்கவே இல்லை. அதன்பிறகு தலையில் ஒரு குடமும், இடுப்பில் ஒரு குடமும் வைத்துக்கொண்டு வீட்டுக்கு கொண்டுவந்தாள். அரண்மனையில் பூஜைக்கு தயாரான அரசன் இன்னும் மாம்பழம் வராததைக் கண்டு காவலர்களை அழைத்து காரணம் கேட்டார்.

    காவலர்கள் அதற்கு இன்னும் மாம்பழம் விழவே இல்லை என்று கூறினர். அது எப்படி விழாமல் இருக்கும். யாராவது எடுத்து சென்றிருப்பார்களோ என்று கேட்டார் மன்னன். உடனே காவலர்கள் நாங்கள் காலையில் சிறிதுநேரம் கண்ணயந்துவிட்டோம் மன்னா என்று கூறினர். அதற்கு மன்னன் பொறுப்பில்லாமல் இருந்த காவலர்களுக்கு சிறைதண்டனை கொடுத்தார்.

    அதன்பிறகு தன்னுடைய படை வீரர்களை அழைத்து அனைத்துவீடுகளிலும் அடுப்பாங்கரை முதல் அனைத்து இடத்திலும் விடாமல் தேடுங்கள் அந்த மாம்பழம் கிடைக்கும் என்று சொல்லி உத்தரவிட்டார். அரசனின் உத்தரவிற்கிணங்க அந்த வீரர்கள் எல்லோரும் அந்த தேரிக்குடியிருப்பு ஊரில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் சென்று தேடினார்கள்.

    இறுதியாக பேச்சித்தாய் வீட்டில் தேடியபோது, பேச்சித்தாய் ஒரு இளம் விதவை அதனால் அவள் கதவிற்கு பின்னால் சென்று ஆடவரின் முகம் பார்த்திராத வண்ணம் ஒதுங்கி நின்றாள். நிறைகுடத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் கொட்டி காட்டினாள். அப்போது குடத்தில் இருந்து மாம்பழம் கீழே விழுந்தது.

    உடனே அந்த மாம்பழத்தை எடுத்துக்கொண்டு அரசனிடம் சென்றார்கள். அந்த அரசன் தெய்வத்திற்கும், அரசனுக்கும் உரித்தான இந்த மாம்பழத்தை களவாடி சென்ற அந்த பேச்சித்தாய். எனவே அவளை நீங்கள் இழுத்துவரும்படி உத்தரவிட்டார். உடனே படைவீரர்கள் அனைவரும் பேச்சித்தாயிடம் மன்னன் ஆணை குறித்து சொன்னார்கள். அதைகேட்டதும் பேச்சித்தாயும் அவர்கள் பின்னாலேயே வந்து கோட்டை நோக்கி நடந்து வந்தாள்.

    இந்த பேச்சித்தாய்க்கு மொட்டை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊரை வலம் வரச்செய்து சுண்ணாம்பு கால்வாயில் தள்ளுங்கள் என்று ஆணையிட்டார் அரசன்.

    அப்போது அமைச்சர் கய்யனார் சென்று அரசனிடம், இவள் ஒரு அபலை பெண். இருட்டுக்குள் வாழ்ந்து பகலில் தூங்குபவள். இந்த இளம் வயது பெண்ணிடம் சொல்லும் பழிகள் நாளை நம் பரம்பரையையே பாழ்படுத்திவிடும் என்று கூறினார்.

    இதைக்கேட்டதும் அரசன், நிறுத்து உன் உபதேசத்தை என்று கய்யனாரை பார்த்து கோபத்துடன் சொன்னார்.

    அதன்பிறகு மன்னரின் ஆணைப்படி பேச்சித்தாய்க்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதைமேல் ஏற்றி வலம் வந்தனர். சுண்ணாம்பு கால்வாயில் தள்ளிவிடும் நிலையில் இருந்தால் பேச்சித்தாய். அப்போது பேச்சித்தாய் தன்னுடைய உயிர்போகுல் நிலையில் சுற்றி நிக்கக்கூடிய மக்களுக்கு மத்தியில் இருந்து அரசனுக்கு சாபம் கொடுத்தாள்.

    நன்றிநெடுகேளாதவன் சீமையில் தீக்காற்றும் தீமழையும் பெய்யக்கடவது, கண்டு நீதிநெறி சொல்லும் கற்குவேல் அய்யனாரே நீரே சாட்சி. மன்னவன் பூமியெங்கும் மண்மாரி பொழியட்டும். நீதிநெறி சொல்லுக்கும் கற்குவேல் அய்யனாருக்கும் பூங்காவாகட்டும் என்று சொல்லி சாபம் கொடுத்தாள்.

    உடனே நெருப்பு பேச்சித்தாயை நெருங்குவதற்கு முன்பே பேச்சியம்மன் அங்கே வந்து பேச்சித்தாயை ஆட்கொண்டுவிட்டார். அங்கு சுற்றி நிற்கும் மக்கள் அனைவரும் கற்குவேல் அய்யன் கோவில் பேச்சியம்மனாக இருப்பது இந்த பேச்சித்தாய் என்று சொல்லிக்கொண்டே இருந்தனர்.

    இந்த பேச்சித்தாயின் சாபத்தால் அந்த பகுதி முழுவதும் அழிந்து அதன்பிறகு ஊரானது என்று அங்கு இருக்கும் முன்னோர்கள் சொல்கிறார்கள். இந்த பேச்சித்தாயின் சாபத்தின்படி கோவிலின் பின்புறம் விரிந்தும், முன்பக்கம் சுளவுபோல் இருக்கிறது.

    கற்குவேல் அய்யனார் கோவிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமான விழா என்னவென்றால் கள்ளர்வெட்டு திருவிழா தான்.

    இந்த திருவிழா எதற்காக கொண்டாடுகிறார்கள் என்றால் கற்குவேல் அய்யனாரை வேண்டி பலன் பெற்ற சிற்றரசர்கள், நிலச்சுவந்தார்களும் கோவிலுக்கு தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் முதலானவற்றை தானமாக கொடுத்தார்கள். இதனால் கோவில் கருவறையில் உள்ள பெட்டகத்தில் ஆபரணங்கள் அதிகமாக இருந்தது.

    இதை அறிந்த நெல்லை சீமையை சேர்ந்த வாலிபர் ஒருவர் கோவிலில் திருடுவதற்காக வந்து கோவிலில் திருடிவிட்டு கோவிலின் பின்புறம் சிறிதுதூரம் வந்தபோது அந்த வாலிபரின் கண்பார்வை பறிபோனது. உடனே கற்குவேல் அய்யனார் கோபம் கொண்டு உத்தரவிட வன்னியராஜன் வீச்சரிவாளுடன் சென்று அந்த வாலிபரை சிறைச்சேதம் செய்தார்.

    தன்னுடைய மகனை காணாத திருடனின் தாய் கண்ணீர்விட்டு அழுது தேடிக்கொண்டே இருந்தாள். தெரியாமல் செய்த தவறை மன்னித்து என்னுடைய மகனுக்கு உயிர்பிச்சை தாரும் சுவாமி, கட்டிய மனைவியும், பெற்ற பிள்ளைகளும் கஞ்சிக்கு வழியின்றி கதறுகிறார்கள். கஞ்சிக்கும் வழியில்லை. பேரரசரும் உதவவில்லை. கருணைக்காட்ட யாருமே இல்லை. களவாட உன் இருப்பிடம் வந்தான்.

    பிச்சாண்டார் மைந்தனே பிச்சை தாரும் என்று சொல்லி அந்த கற்குவேல் அய்யனாரிடம் புலம்பி நின்றாள் அந்த திருடனின் தாய். உடனே கற்குவேல் அய்யனார் மனம் இறங்கி அசரிரீயாக பூசாரி வந்து புனிதநீரை தெளித்து பிரம்பால் அடிக்க உன் மகன் உயிர்பெற்றெழுவான் என்று சொன்னார்.

    உடனே தேரிக்குடியிருப்பில் தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரியின் கனவில் காட்சி கொடுத்தார். பூசாரியிடம் நடந்ததை கூறிநீபோய் நீரை தெளித்து பிரம்பால் அடிக்க சிறைச்சேதம் செய்யப்பட்டவன் உயிர்பிழைப்பான் என்று கூறினார் கற்குவேல் அய்யனார்.

    இதைக்கேட்டு பூசாரி தான் கண்ட கனவுபற்றி மற்றவர்களுக்கு கூற ஊர் முழுவதும் தகவல் பரவு அனைவரும் கோவிலுக்கு சென்றார்கள். அய்யனார் கனவில் சொன்னதுபடியே பூசாரி அருள்வந்து ஆடினார். அவர் துண்டாக கிடந்த திருடனின் உடல் மீது கற்குவேல் அய்யனாரின் அபிஷேக தீர்த்தத்தை தெளித்து பிரம்பால் 3 முறை அடிக்க உடனே உடலும், தலையும் சேர்ந்தது. உடனே அந்த திருடன் உயிர்த்தெழுந்தான். அந்த தாயின் வேண்டுகோளும் தீர்ந்தது.

    உடனே ஆனந்த கண்ணீர் வடித்துக்கொண்டு அந்த தாய், கற்குவேல் அய்யனாரின் இந்த அற்புதத்தை அனைவருக்கும் உணர்த்தும் வண்ணம் ஆண்டுதோறும் எனது சந்ததியினர் கள்ளன் சாமி ஆடி நன்றிக்கடன் செலுத்துவோம் என்று சொல்லி உறுதிகொண்டாள் அந்த திருடனின் தாய்.

    கள்ளராக வந்தவர் அவர் காலம் முடிந்த பிறகு அவருக்கும் ஒரு பீடம் கொடுத்து அய்யனார் சன்னதியில் அவருக்கு எதிர்புறம் ஒரு சிறிய கோவில் வைத்துள்ளனர். இப்போது அந்த கோவில் கள்ளர்சாமி கோவில் என்று அழைக்கப்படுகிறது.

    கார்த்திகை முதல்நாள் கொடியேற்றம் நடக்கும். அன்றில் இருந்து 30-வது நாள் கள்ளர்வெட்டு திருவிழா நடக்கும். இந்த ௩௦ நாட்களும் அய்யனாரின் கதை வில்லுப்பாட்டாக தினமும் 2 வேளை பாடப்படும். விழாவின் போது காலையில் காவல்தெய்வமான அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடக்கும். அதன்பிறகு அலங்கார தீபாராதனை நடைபெறும்.

    இந்த கள்ளர்வெட்டு திருவிழாவின்போது இளநீரை வெட்ட உதயத்தூர் கிராமத்தில் இருந்து ஒருகுலத்தவர்கள் அரிவாள் கொண்டு வருவார்கள். ஆண்டுதோறும் புதிய கயிறு, புதிய அரிவாள் பயன்படுத்தப்படுகிறது. கள்ளர்வெட்டு நடக்கும் இடத்தில் உள்ள புனித மண்ணை எடுத்து விவசாயம் செய்யும் நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும். சிறிய துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பது இங்கு வரக்கூடிய பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ கற்குவேல் அய்யனார் பூரணம், பொற்கலை ஆகிய இரு தேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றனர்.

    • சுப்பிரமணிய சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா.
    • தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 7-ம் திருநாளன்று சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். மாலையில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    8-ம் நாள் திருவிழாவில் காலையில் சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாகவும், பிற்கபலில் பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாகவும் எழுந்தருளினார். 9-ம் திருநாளான நேற்று மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரதவீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.

    பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் புறப்பட்டு வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை வந்து சேர்ந்தது. அதைத்தொடர்ந்து வள்ளியம்மாள் எழுந்தருளிய தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்ந்தது.

    இதில் திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி வஷித்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், செந்தில் முருகன், கோவில் கண்காணிப்பாளர்கள் ஆனந்தராஜ், செந்தில் வேல்முருகன், டாக்டர் பாலசுப்ரமணிய ஆதித்தன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலை அடைகிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறும்.
    • பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    கோலாகலமாக நடந்து வரும் இந்த விழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணியளவில் சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெண்ணிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, பிரம்மா அம்சமாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் மேலக்கோவில் சென்ற சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பந்தல் மண்டபத்தில் பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12.05 மணியளவில் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளினார்.

    பின்னர் ௮ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாளான நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரும் 4 ரத வீதிகளில் பவனி வருகிறது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரானது ரத வீதிகளில் பவனி வந்து நிலையை சேர்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    ×