என் மலர்
நீங்கள் தேடியது "Child Blessing"
- குழந்தை வரம் கொடுப்பதில் பேச்சியம்மன் முதன்மையான தெய்வம்.
- 21 பந்தி தெய்வங்களில் சுடலைமாடன் இடம் பெறுவதில்லை.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காயாமொழி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற சுடலை மாடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பேச்சியம்மன், குளிக்கரை பேச்சியம்மன், பிரம்ம சக்தி, இசக்கியம்மன், முண்டன்சாமி. செங்கடசாமி, கட்டேரி பெருமாள், வைணப்பெருமாள், ஐயம்பந்தி, சிவனந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலின் தலவிருட்சம் காரை மரமாகும்.
தல வரலாறு
ஒரு காலத்தில் பாண்டிய நாட்டை சேர்ந்த வல்லராஜா என்ற மன்னன். தன்னுடைய ஆட்சியில் பலரையும் கொடுமைப்படுத்தி வந்தான். மக்கள் மட்டுமின்றி, ரிஷிகளும், முனிவர்களும் கூட அவனால் துன்பப்பட்டனர். இந்த நிலையில், ஒரு முனிவர் மூலம் வல்ல ராஜா சாபத்தைப் பெற்றான்.
இவனுக்கு பிறக்கும் குழந்தை பிரசவம் ஆனதும். அந்த குழந்தையின் உடல் உடனே பூமியைத் தொட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். அவனது நாடும் அழிந்துவிடும். மாறாக அந்த குழந்தை பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால், அதற்கு பிறகு ஒன்றும் ஆகாது என்பது மன்னனுக்கு ஏற்பட்ட சாபம்.
இதற்கிடையே கர்ப்பவதியான வல்லராஜாவின் மனைவிக்கு பிரசவ வலி உண்டானது. மன்னனுக்கு இருந்த சாபத்தால், அவன் மனைவிக்கு பிரசவம் பார்க்க எவரும் முன்வரவில்லை. பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் என கவலை அடைந்த மன்னன், தானே ஊருக்குள் சென்று பிரசவம் பார்க்கும் பெண்ணைத் தேடினான்.
அப்போது அவன் முன்பாக வயதான பெண் வடிவத்தில் பேச்சியம்மன் தென்பட்டாள். அவள் தெய்வப் பிறவி என்பதை அறியாத மன்னன். அவளது உதவியை நாடினான். அதற்கு அந்த அன்னை, நான் உன் மனைவிக்கு பிரசவம் பார்த்து அந்த குழந்தை பூமியை தொடாதபடி பார்த்துக் கொள்கிறேன். அதற்கு எனக்கு தேவையானதை தர வேண்டும்` என்றாள். மன்னனும் கேட்டதைத் தருவ தாக வாக்களித்தான்.
அதன்படி மன்னனின் மனைவிக்கு பிரசவம் பார்த்த பேச்சியம்மன். அந்த குழந்தை பூமியை தொடாதபடி பார்த்துக் கொண்டார். ஒரு நாள் முடிந்ததும், மன்னன் தன் வேலையை காட்டினான். பேச்சியம்மன் கேட்ட எதையும் கொடுக்காமல், அவரை கொல்ல முயன்றான்.
ஆனால் தன் சுய உருவத்தை காட்டிய பேச்சியம்மன், மன்னனையும் அவன் மனைவியையும், வம்சாவளியையும் அழித்து அங்குள்ள மக்களை காப்பாற்றினாள். இதனால் மக்கள் அனைவரும் அந்த அன்னையை கைகூப்பித் தொழுதனர்.
இதையடுத்து பேச்சியம்மன் தன்னுடைய கோபம் தணிந்து சாந்தமானாள். பின்னர், 'நான் காளியின் அவதாரம். என்னை வணங்கி வந்தால், நான் குடிகொள்ளும் ஊரை காப்பேன், அவரவர் வீடுகளில் உள்ள கர்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் உதவுவேன், அனைவருக்கும் பாதுகாவலாக இருப்பேன்' என்று உறுதியளித்தாள் என்கிறது தல வரலாறு.
21 பந்தி தெய்வங்கள்
21 பந்தி தெய்வங்களில் பேச்சியம்மன் மிக முக்கியமான வன தேவதையாக விளங்குகிறார். சில கோவில்களில் 21 பந்தி தெய்வங்களில் சுடலைமாடன் இடம் பெறுவதில்லை. ஆனால் கண்டிப்பாக பேச்சியம்மன் இடம் பெறுகிறார். ஏனெனில் சக்தி அம்சத்தில் சிவன் அடக்கம் என்பதால். பேச்சியம்மன் எல்லா 21 பந்தி தெய்வங்களில் முதன்மையான காவல்காரியாக மக்களுக்கு அருள்புரிகிறார்.
உருண்ட கண்களும், நீண்ட நாக்கும். விரித்த சடையும். தலையில் அக்னி கிரீடமும் கொண்டு பேச்சியம்மன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மேலும், இவரது கையில் திரிசூலம், பிரம்பு, கபால பாத்திரம், கத்தி, வாள், சீலைப்பிள்ளை, கிலுக்கு, உடுக்கை, மண்டை ஓடு, சாட்டை இருக்கும்.
21 பந்தியில் உள்ள மற்ற தெய்வங்கள் இந்த பேச்சி அம்மனின் உத்தரவை ஏற்று நடப்பார்கள். சுடலைமாடன் தனது தாயான பேச்சியம்மனிடம் உத்தரவு பெற்று தான் வேட்டைக்குச் செல்வார். பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றை கருவறுக்க உருவானவள் தான் வனப்பேச்சியம்மன். பல கோவில்களில் வனப்பேச்சி அம்மனுக்கு காவலாக சுடலைமாடனும், கருப்பனும் தான் இருக்கிறார்கள்.
குழந்தை வரம் கொடுப்பதில் பேச்சியம்மன் முதன்மையான தெய்வமாக விளங்குகிறார். எனவே தான் குழந்தை இல்லாத தம்பதியினர் பேச்சியம்மனை மனமுருகி வணங்கி குழந்தை பிறந்தவுடன் நேர்த்திக்கடனாக மரத்தொட்டில் கட்டி சீலைப்பிள்ளை மற்றும் குழந்தை பொம்மை வாங்கி வைக்கின்றனர். குழந்தைகள் பேச்சாற்றல் மிகுந்து விளங்க நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும் பேச்சியம்மனை வழிபடுகின்றனர்.
- முத்தாரம்மன் கோவில் பின்புறம் ஒரு அரசமரம் உள்ளது.
- குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாரிசுக்காக தொட்டில் கட்டுகின்றனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பின்புறம் ஒரு அரசமரம் உள்ளது. இதன் அடிப்பாகத்தை கூர்ந்து கவனித்தால் யானையின் பாதம் போல் இருக்கும். இருமனம் இணைந்து திருமணம் நடக்கும்போது உடனே வாரிசு வர வேண்டும் என்று வேண்டுதல் செய்து இந்த மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர்.
திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாரிசுக்காக தொட்டில் கட்டுகின்றனர். பக்தர்களின் வேண்டுதல்களை வேண்டியபடி நிறைவேற்றி அருள்புரியும் அன்னையின் அருள் காட்டாற்று வெள்ளம்போல் பாய்வதால்தான் ஆண்டுக்கு ஆண்டு பக்தர்களின் கூட்டமும் அலைமோதுகிறது.
- பூங்காவனமாக இருந்ததால், இந்த அம்மனை பூங்காவனத்தம்மன் என்றும் பெயர் உண்டு.
- கர்ப்பிணி போல் அருள்பாலிக்கும் பூங்காவனத்தம்மனை தரிசித்தாலே குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை இருக்கிறது.
குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில். இந்த ஆலயத்தில் அம்மன் கர்ப்பிணிகள் பிரசவ காலத்தைப் போல கால் நீட்டி மல்லாந்து படுத்து துடிப்பது போல காட்சியளிக்கிறார். கோயிலில் நுழைந்தாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது. அதோடு கோயில் முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமத்தின் வாசம் இருக்கிறது.
குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கும், சுபப் பிரசவம் வரம் வேண்டி கர்ப்பிணிகள், குடும்ப பிரச்னைகள் தீர வேண்டும் என பெண்கள் பலர் குவியக்கூடிய ஆலயமாக புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் விளங்குகிறது.
பெரும்பாலான கோயிலில் அம்மன் நின்ற நிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ பக்தர்களுக்கு காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் அம்மன் கர்ப்பிணிகள் பிரசவ காலத்தைப் போல கால் நீட்டி மல்லாந்து படுத்து துடிப்பது போல காட்சியளிக்கிறார்.

அம்மனுக்கு பின்புறம் தாண்டவராயன் என்ற பெயரில் நடராஜர், அங்காள பரமேஸ்வரி, விநாயகர் ஆகியோர் உள்ளனர். சன்னதிக்கு எதிரில் நந்தி வாகனம் அமைந்துள்ளது.
குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்களும், குடும்ப பிரச்னை தீர வேண்டும் என வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அளிக்கக்கூடிய அம்மனாக திகழ்கிறாள்.
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டி அவர்களது பெற்றோரோ, கணவரோ, உறவினர் என இங்கு வந்து வேண்டி செல்கின்றனர்.

இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.
அதே சமயம் ஆடி மாதம் தொடங்கிவிட்டால் எல்லா நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் புட்லூர் அம்மனை தரிசிக்கக் குவிகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக வருகின்றனர்.
இந்த இடம் முன்னர் பூங்காவனமாக இருந்ததால், இந்த அம்மனை பூங்காவனத்தம்மன் என்றும் பெயர் உண்டு.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயிலில் சென்றால், புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புட்லூர் அங்காளம்மன் திருக்கோயில்.
இந்த கோயிலில் கர்ப்பிணி போல் அருள்பாலிக்கும் பூங்காவனத்தம்மனை தரிசித்தாலே குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை இருக்கிறது.
- இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
- ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.
ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்கின்றன புராணங்கள். ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம்தான். இந்த ஆண்டு ஆடிப்பூரம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொதுவாக ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள். ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.
இது அம்பாளுக்குரிய திருநாளாகும். இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். ஆனால் இதில் வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரமாகும். அன்னை உளம் மகிழ்ந்து அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம் ஆகும்.
இந்த ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும் என்பது நம்பிக்கை.






