search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Angala Parameshwari Temple"

    • ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம் மஞ்சள் விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு கணேச ஜனனிஅலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர்.

    இரவு 12 மணியளவில் தாலாட்டுப் பாடல்கள் பாடி அம்மனுக்கு பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பித்தவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவைடைந்தது. இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். ஊஞ்சல் உற்சவத்தில் மாவட்ட கலெக்டர் பழனி மற்றும் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ×