search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruthani"

    • கோவிலின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர்.
    • மலைப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    மிச்சாங் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. வரலாறு காணாத மழையால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.

    கடந்த 4-ந்தேதி பலத்த மழை கொட்டியபோது திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

    பின்னர் அதனை தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு சரி செய்து போக்குவரத்துக்கு அனுமதித்தனர்.

    இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ள அந்த இடத்தில் மீண்டும் அதிக அளவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பாதை வழியாக போ க்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன. மலைப்பாதையை முற்றிலும் ஆய்வு செய்து மண்சரிவை சரிசெய்த பின்னரே போக்குவரத்துக்கு அனுமதிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மலைக் கோவிலுக்கு செல்லும் பஸ், லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நுழைவுவாயில் பகுதியிலேயே தடுப்புகள் அமைத்து நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்து பஸ், கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் வந்த பக்தர்கள் வாகனத்தில் மலை கோவிலுக்கு செல்ல முடியவில்லை. அவர்கள் கோவிலின் அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடந்து கோவிலுக்கு சென்றனர். இதன்காரணமாக முதியோர் மற்றும் குழந்தைகள் அவதி அடைந்தனர். மலைப் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முருகன் என்றால் 'அழகன்' என்று பொருள்.
    • கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம்.

    முருகன் என்றால் `அழகன்' என்று பொருள். கார்த்திகை மாதம் கந்தனுக்கு உகந்த மாதம். அழகென்ற சொல்லுக்கு முருகா! உந்தன் அருளின்றி உலகத்தில் பொருளேது! முருகா! என்று ஒரு அற்புதமான பாடல் உண்டு. முருகா என்று ஒருமுறை அழைத்தால் உருகாத மனமும் உருகும், பெருகாத செல்வம் பெருகும்.

    இந்த மாதத்தில் ஆறுபடை வீட்டு முருகனை வழிபட்டால் அளவற்ற அருள் கிடைக்கும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டுடிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு பேருடைய பிரச்சினைகளை அழிக்க வல்லவன். பனிரெண்டு கரங்களை பெற்றிருப்பதால் அள்ளிக்கொடுக்ககும் ஆற்றலைப் பெற்ற வள்ளல். அதனால் தான் நாம் கேட்ட வரத்தை கேட்ட நிமிடத்திலேயே பெற முடிகிறது.

    வேலோடும், மயிலோடும் வந்து நம் வேதனைகளை எல்லாம் மாற்றி, சாதனைபுரிய வைப்பவன் முருகப்பெருமான் என்பதை கும்பிட்டவர்கள் அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்த தீப்பொறிகள் கங்கையில் பறந்த போது கங்கையே வற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து விசாகத் திருநாளில் அவதரித்தவன் முருகப்பெருமான்.

    கங்கையில் தோன்றியதால் 'காங்கேயன்' என்ற ஒரு பெயர் வந்தது. சரவண பொய்கையில் தோன்றியதால் தான் 'சரவண பவன்' என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் 'கார்த்திகேயன்' என்றும் திருநாமம் உண்டாயிற்று.

    திருப்பரங்குன்றம்

    இது முதல் படைவீடாகும். தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம் திருப்பரங்குன்றம்.

    திருச்செந்தூர்

    அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடம் திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார் முருகப்பெருமான். சேவலை கொடியாக்கிக்கொண்டான்.

    பழனி

    இது மூன்றாவது படைவீடாக உள்ளது. மாம்பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச்சுற்றினார்கள் பிள்ளையாரும், முருகனும். ஆனால் முன்னதாகவே `அன்னையும் பிதாவும் அகிலம்' என்று சொல்லி சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழத்தை வாங்கிக்கொண்டார் ஆனைமுகப் பெருமான். எனவே கோபத்தோடு முருகன் மலையேறி நின்ற இடம் தான் பழனி.

    சுவாமிமலை

    நான்காம் படை வீடு சுவாமிமலை. தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்த இடமாகும். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள் அதற்கு கீழும் தான் இருக்க வேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் உபதேசிப்பது புதுமை. பிரணவத்தின் பொருளை உபதேசித்ததால் தான் `சுவாமிநாதன்' என்ற பெயர் உண்டாயிற்று.

    திருத்தணி

    ஐந்தாம் படை வீடு திருத்தணி. முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் திருத்தணி. சினம் இருந்தால் பணம் வராது. எனவேதான் மனிதர்கள் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும். என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவரிகள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபடுவது நல்லது.

    பழமுதிர்சோலை

    ஆறாவது படை வீடு பழமுதிர்சோலை. அவ்வை பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம் என்பார்கள். 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்று தமிழ்ப்புலமை பெற்ற அவ்வையிடம் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புபவர்கள் இங்கு சென்று வந்தால் வெற்றியை வேகமாகப் பெற முடியும்.

    "வேலும் மயிலும், வேலும் மயிலும்` என்று சொல்லி அந்த வேலவனின் ஆறுபடை வீட்டிற்கும் சென்று வாருங்கள். முருகப்பெருமானைக் கைகூப்பித்தொழுதால் நலம் யாவும் வந்து சேரும். படைவீடு செல்லுங்கள். பகை வெல்லும்! பணம் சேரும்!

    • ஆறு விதமான ஆதாரங்களை நமக்கு வழங்கும் என்பது நம்பிக்கை.
    • பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆறு விதமான ஆதாரங்கள் தேவை.

    நமக்கு வீடு இருப்பது போல முருகனுக்குப் படை வீடுகள் இருக்கின்றன. அவற்றை ஆறுபடை வீடு என்று வர்ணிப்பது வழக்கம். அந்த ஆறுபடை வீடுகளும் ஆறு விதமான ஆதாரங்களை நமக்கு வழங்கும் என்பது நம்பிக்கை. வாழ்க்கை வளம்பெற பொருளாதாரமும், அருளாதாரமும் நமக்குத் தேவை. அருணகிரிநாத பெருமான் முருகப்பெருமானை நோக்கிப் பாடும்பொழுது, 'அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியால் இடைஞ்சல் களைவானேய' என்று குறிப்பிடுவார்.

    ஒரு மனிதன் பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆறு விதமான ஆதாரங்கள் தேவை. அவை ஆரோக்கியம், நல்ல உறவு, பொருளாதாரம், அபயம் எனப்படும் பாதுகாப்பு ஆற்றல், ஆளுமைத்திறன், நிறைவான ஞானம். இந்த ஆறு ஆதாரங்களையும் முறையாக சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருத்தணி, பழநி ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் ஜென்ம நட்சத்திரமன்று அல்லது செவ்வாய்க்கிழமை அன்று சென்று வழிபட்டு வந்தால் பெறலாம்.

    • முதலில் நம் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.
    • நம் உடல் இயக்கம் முழுவதையும் இந்த சக்கரங்களே கட்டுப்படுத்துகின்றன.

    அறுபடை வீடுகளில் வீற்றிருக்கும் முருகனை வழிபாடு செய்தால் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் நம் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.

    சும்மா... ஏதோ கோவிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற நிலையில் இருக்கக் கூடாது.

    அறுபடை வீடுகளில் உள்ள ஆழமான சூட்சம ரகசியங்களை முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த புரிதலை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பது பலருக்கும் மலைப்பாக இருக்கலாம்.

    கவலையே படாதீர்கள். அது மிக, மிக எளிதானது. கொஞ்சம் நாம் மனதை ஒருமுகப்படுத்தினால் நிச்சயம் அறுபடை வீடுகளில் உள்ள முருகப்பெருமானின் அருளை ஒவ்வொன்றாக பெறமுடியும்.

    அறுபடை வீடுகளையும், நம் உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது, அந்த ரகசியம் நமக்குத் தெரிந்து விடும்.

    நம் உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி ஆக்ஞை என்று 6 சக்கரங்கள் உள்ளன. நம் முதுகுத் தண்டில் அவை அமைந்துள்ளன.

    இந்த சக்கரங்கள் நம் பிட்டத்தில் இருந்து தலை வரை உள்ளது. அவை வேறு, வேறு பகுதிகளில் இருந்தாலும், ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை.

    நம் உடல் இயக்கம் முழுவதையும் இந்த சக்கரங்களே கட்டுப்படுத்துகின்றன. எனவே இந்த சக்கரங்களை நாம் சரியானபடி தட்டி எழுப்பினால் ஞான முதிர்ச்சியைப் பெற முடியும்.

    அது போலத்தான் அறுபடை வீடுகளை ஆறு ஆதாரங்களாகப் பிரித்து வழிபட்டால் இறுதியில் முக்தி கிடைக்கும்.

    முருகப்பெருமானின் முதல் படை வீடு-திருப்பரங்குன்றம். இந்த படை வீட்டின் நமது ஆதாரமாக மூலாதாரம் உள்ளது. இத்தலத்தில் முருகன் வடிவத்தில் நல் துணை வடிவமாகவும், சக்தியில் பராசக்தியாகவும், தன்மையில் உல்லாசமாகவும் உள்ளார்.

    நம் உடம்பில் உள்ள மூலாதாரம், நமது உயிர் இயக்கத்துக்கு எப்படி மூல காரணமாக உள்ளதோ, அது போல திருப்பரங்குன்றமும் நம் ஆன்மிக இயக்கத்துக்கு முதல் படியாக உள்ளது. இங்கு முருகனை வழிபட்டால் உடனே திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    அது மாதிரிதான் நம் உடம்பில் உள்ள மூலாதாரத்தை உசுப்பி விட்டால், அது குண்டலினியின் ஒட்டு மொத்த சக்தியையும் தட்டி உஷார்படுத்தி விடும். முக்கியமாக உயிராற்றல் அதிகரிக்கும்.

    திருப்பரங்குன்றம் தலத்தில்தான் முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்தார். ஆக இத்தலத்தில் நாம் வழிபாடு செய்யும் போது குண்டலினியின் மொத்த சக்தியும் தட்டி எழுப்பப்படுவது போல நம் ஆன்மீக பயணத்தின் மொத்த உணர்வும் இங்கு தட்டி எழுப்பப்பட்டு விழிப்பை பெறும்.

    திருப்பரங்குன்றம் தலத்தில் மூலாதாரத்தை நினைத்து வழிபட்டு பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு அந்த உல்லாசம் கிடைக்கும்.

    அடுத்து இரண்டாவது படை வீடாக திகழும் திருச்செந்தூர் பற்றி பார்க்கலாம். நமது உடல் ஆதாரங்களில் இத்தலத்தை சுவாதிஷ்டான சக்கரத்துடன் ஒப்பிடுகிறார்கள்.

    இந்த சக்கரத்துக்கு பாலியல் உணர்வு, ஈகோ குணம் ஆகியவற்றை தூண்டி விடும் சக்தி உண்டு. அது மட்டுமின்றி மற்றவர்களின் உணர்ச்சி போக்கை அறியும் சக்தி, ஐம்புலன்களை தாண்டி அறியும் சக்தியும் உண்டு.

    இதை அப்படியே திருச்செந்தூர் தலத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள், உண்மை புரியும்.

    சூரனை அழிக்க படையுடன் வந்த முருகப் பெருமான், சூரனின் உணர்ச்சிப் போக்கை அறிந்தான். பிறகு ஐம்புலன்களை தாண்டி அறிந்து சூரனை சம்ஹாரம் செய்து தன்னோடு இணைத்துக் கொண்டார்.

    இத்தலத்தில் முருகப் பெருமான், ஒளிவடிவாக உள்ளார். கடலில் நீராடி முருகனை வழிபட்டால் மனம் தெளிவு பெறும். நோய், பகை நீங்கும்.

    சக்திகளில் ஆதிசக்தியாக இங்கு முருகன் உள்ளார். அவரிடம் நம் மனதை ஒருமைப்படுத்தினால் எல்லா துன்பங்களும் தொலைந்து போகும்.

    சுவாதிஷ்டான சக்கரம் தூண்டப்படும் போது செயல், சிந்தனை, சுயகட்டுப்பாடு மேம்படும் என்பார்கள். இத்தலத்து முருகனும் அப்படித்தானே உள்ளார். எனவே திருச்செந்தூர் முருகனை வழிபடும் போது உங்களது செயல், சிந்தனை எல்லாமே மேம்படுவது உறுதி.

    முருகப்பெருமானின் மூன்றாவது படை வீடான பழனியை நம் உடம்பில் உள்ள மணிபூரகம் சக்கரத்துடன் ஒப்பிடலாம். இந்த சக்கரத்தில் இருந்துதான் உடல் முழுவதும் சக்தி வினியோகிக்கப்படுகிறது. எனவேதான் பழனி தலத்தில் உள்ள முருகன், ஞானசக்தி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

    மணிபூரகம் தூண்டப்படும் போது கட்டுக்கடங்காத உணர்ச்சி ஏற்படும். இது அப்படியே நம் முருகப் பெருமானின் சிறு வயது இயல்புடன் ஒத்துப் போகிறது.

    உலகை சுற்றி வந்த பிறகும் மாம்பழம் தனக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில், கட்டுக் கடங்காத உணர்ச்சிப் பெருக்குடன் முருகன், இந்த பகுதியில் உள்ள மலைக்கு வந்து விட்டான் என்பது வரலாறு. அவனுக்கு காட்சிக் கொடுத்த அம்மையும் அப்பனும் ''பழம் நீ'' என்றதால்தானே பழனி வந்தது.

    பழம் வடிவில் உள்ள முருகப்பெருமானின் கட்டுக் கடங்காத உணர்ச்சியை, மணிபூரகம் சக்கரம் தூண்டப்பட்ட நிலையில் ஏற்படுவது போன்ற நிலை காட்டப்படுகிறது.

    மணிபூரகம் தூண்டப்பட்ட பிறகு உடல் உறுதி மேம்படும். இதனால் ஒருவர் எப்போதும் கடும் உழைப்பாளியாகவும், சுறுசுறுப்பானராகவும் இருப்பார்.

    முருகனும் இத்தலத்தில் அப்படித்தானே உள்ளார். துறவு நிலை பூண்டு ஆண்டி கோலத்தில் இருந்தாலும் அவர் சுறுசுறுப்பாக இருந்ததற்கு இடும்பனிடமும், அவ்வையிடமும் காண்பித்த திருவிளையாடல்களை உதாரணமாக சொல்லாம்.

    இங்கு ஞானப்பழமாக இருக்கும் முருகனை வழிபட்டால், ஞானம், ஆரோக்கியம் மேம்படும். சுவாதிஷ்டான சக்கர பலன்களை இங்கு பெறலாம்.

    அடுத்தது சுவாமி மலை. இது முருகப் பெருமானின் 4-வது படை வீடு. இத்தலத்தை நம் உடம்பு சக்கரங்களில் அனாகதம் என்கிறார்கள்.

    அனாகதம் சக்கரம் நம் இதயத்துக்கு நேர்பின்புறம் உள்ளது. அதனால் தானோ என்னவோ இந்த சக்கரம் அன்பு, பாசம், இரக்கம், விசுவாசம், பக்தி போன்ற நல்ல இயல்புகளை உயர்த்தும் சக்தியாக உள்ளது.

    இத்தகைய இயல்புகள் எல்லாம் சுவாமிமலையில் இருப்பதை காணலாம். இத்தலத்தில் முருகன் கிரியா சக்தியாகவும், சொல் வடிவாகவும் உள்ளார்.

    முருகப்பெருமான் தம் பெற்றோரிடம் அன்பும், பக்தியும் கொண்டிருந்ததால்தான் படைப்பாற்றல் பெற்று இத்தலத்தில் தந்தைக்கு உபதேசம் செய்ய முடிந்தது. அத்தகைய உபதேச சக்தியையும், படைப்பாற்றலையும் நாம் அனாகதம் சக்கரத்தை தூண்டும் போது நிச்சயமாக பெற முடியும்.

    அனாகதம் சக்கரம் விழிப்பு பெற்றால், அருள்நிலை ஆன்மிக வளர்ச்சி உயர் நிலைக்கு உந்தப்படும். இதை ''அக்கினி குண்டலினி'' என்று சொல்வார்கள்.

    அனாகதம் சக்கரம் துடிப்புடன் செயல்படும் போது, சாத்வீக குணங்கள் உண்டாகும். மனம் பக்குவநிலைக்கு வந்து விடும். படைப்பாற்றலின் ரகசியம் நமக்கு தெரியத் தொடங்கும்.

    இந்த நிலையை நீங்கள் சுவாமிமலை தலத்தில் பெற முடியும்.

    அறுபடை வீடுகளில் 5-வது படை வீடான திருத்தணியை நம் உடம்பில் 6 ஆதாரங்களாக திகழும் சக்கரங்களில் விசுத்தி சக்கரமாக கருதுகிறார்கள்.

    விசுத்தி சக்கரம் நம் உடம்பில் மைய கழுத்துக்கு பின்னால் இருக்கிறது. குரல் வளை சக்கரமான இதை தூண்டி விட்டால் நம் புலன்களுக்கு அப்பால் உள்ள விஷயங்களையும் அறிந்து, புரிந்து கொள்ளக் கூடிய நிலை ஏற்படும்.

    திருத்தணியில் இச்சா சக்தியாக திகழும் முருகனின் அருளை பெற்றால் நமக்கும் நம் புலன்களை அடக்கி தொலைவில் உள்ள விஷயங்களை அறியும் ஆற்றல் கிடைக்கும். இந்த ஆற்றல் அவ்வளவு எளிதில் எல்லாருக்கும் கிடைத்து விடாது. அதற்கு நாம் விசுத்தி சக்கரத்தை முழுமையாக விழிப்படைய செய்தல் வேண்டும்.

    திருத்தணியில் முருகப்பெருமான் தன் கோபம் முழுவதையும் விட்டொழித்தார். மலைகளில் விளையாடி, வள்ளியை மணந்து சல்லாப தன்மைக்கு வந்தார். எனவே திருத்தணிகை நாதனை வழிபடும் போது நமது மனதில் இருக்கும் கோபம் முழுமையாக நீங்கும்.

    கோபம் நீங்கும் போது மனம் சரணாகதி தத்துவத்துக்கு செல்லும். இதன் மூலம் விசுத்தியான திருத்தணி நம் ஆத்ம சக்தியின் பரிமாணத்தை திறக்க செய்யம்.

    விசுத்தி தட்டி எழுப்பப்பட எழுப்பப்பட, புனிதத்துவம் வளரும். நம் உடலுக்குள் விஷத்தன்மை எந்த வடிவிலும் நுழைய முடியாத தன்மை உண்டாகும்.

    தீய உணர்வு, தீய எண்ணம் வரவே வராது. விசுத்தி மூலம் திருத்தணிநாதன் அதை நமக்குத் தருவார்.

    விசுத்தி சக்கரம் ஒருவரிடம் முழுமையாக மலர்ந்து விட்டால் அவருக்கு எதிலும் விருப்பு வெறுப்பு வராது. பற்றற்ற நிலைக்கு அடித்தளம் போடப்பட்டு விடும்.

    மனதில் அகந்தை என்பதே இருக்காது. திருத்தணி முருகனை வழிபடும் போது இந்த நிலையை பெற முடியும்.

    ஆனால் அதற்கு நாம் நமது விசுத்தி சக்கரத்தை தூண்டி விட்டு, மலரச் செய்யும் சூட்சமத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த ரகசியம் புரிந்து விட்டால் திருத்தணி முருகன் அருளால் நீங்களும் பற்றற்ற நிலைக்கு உயர்ந்து விடலாம்.

    இறுதியாக நம் உடம்பில் ஆதாரமாக இருப்பது ஆக்ஞை. இதை முருகனின் படை வீடுகளில் ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலையுடன் நம் முன்னோர்கள் ஒப்பிட்டு பலன்களை கூறியுள்ளனர்.

    நமது இரு கண் புருவ மத்தியில் இருக்கும் இந்த சக்கரத்துக்கு நெற்றிக் கண் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கரம் தூண்டப்படும் போது அறிவு சங்கல்பம் உண்டாகும்.

    பழமுதிர்ச்சோலையில் மர வடிவிலும், குடிலா சக்தியுடனும் இருக்கும் முருகன் நமக்கு அறிவு சங்கல்பத்தை தருபவராக உள்ளார். இத்தலத்தில் வழிபடும் போது வருமானம் பெருகி, பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். இவை லௌகீக வாழ்க்கைக்கு உதவும்.

    ஆனால் ஆக்ஞை முழுமையாக மலரும் போது, அது ஆன்மீகக் கண்ணை திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். அதோடு சமூக வாழ்க்கையில் இருந்து விலகும் நிலை வரும் என்கிறார்கள்.

    இதைத்தான் நெற்றிக் கண் திறப்பதாக நம்முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். பழமுதிர்ச்சோலை வழிபாடு இந்த ஆன்மீக கண் திறக்கும் நிலையை மேம்படுத்தும்.

    வாழ்வின் ஞானத்தை எல்லாம் தன்னகத்தே ஈர்த்து கொள்ளும் உயரிய நிலை ஆக்ஞையால் வரும். பழமுதிர்ச்சோலை இந்த ஞான முதிர்ச்சியைத் தரும்.

    இப்படி திருப்பரங்குன்றத்தில் தொடங்கி பழமுதிர்ச்சோலை தலம் வரை நாம் படிப்படியாக நம் ஆத்மா நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். அதாவது ஆன்மீக வாழ்வில் நம்நிலை படிப்படியாக உயரும்.

    இறுதியில் பிறவாமை நிலையைப் பெற முடியும். வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று விட்டு, இறுதியில் முருகன் திருவடிகளில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொள்ளும் உயர் மன நிலை பக்குவம் உண்டாகும். அறுபடை வீடுகளின் வழிபாட்டில் உள்ள அரிய ரகசியமே இதுதான்.

    • பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.
    • தனித்து அமர்ந்த தலம் என்பதால் திருத்தணிகை.

    திருப்பரங்குன்றம்: தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

    திருச்செந்தூர்: அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

    பழனி: ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக் கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

    சுவாமிமலை: தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

    திருத்தணி: சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

    பழமுதிர்ச்சோலை: தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும்.

    • தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்பது பொருள்.
    • போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் சூரசம்ஹாரம் நடத்துவதில்லை.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஐந்தாவது படை வீடாக திகழ்வது திருத்தணி என்று அழைக்கப்படும் திருத்தணிகை. இங்கு முருகப்பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமியாக, தனது இச்சா சக்தியான வள்ளியுடன் அருள்பாலிக்கிறார்.

    அமைவிடம்:

    திருவள்ளூர் மாவட்டத்தில், அரக்கோணத்தில் இருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.

    தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சீபுரம் தெற்கிலும், விரிஞ்சிபுரம், வள்ளிமலை, சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும், திருவாலங்காடு கிழக்கிலும், ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதி ஆகியவை வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாக திருத்தணி அமைந்துள்ளது.

    தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய நடந்த பெரும் போரும், வள்ளியை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் இது என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக கூறுகிறார்கள்.

    தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்பதும் ஒரு பொருள் என்பதால், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்று இத்தலத்திற்கு பொருள் கொள்வதும் சரியான ஒன்றாகவே கருதலாம்.

    மலையின் சிறப்புகள்:

    திருத்தணியில் முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி அருள் புரிகிறார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவி படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக காணப்படுவதால் "பிண்ணாக்கு மலை" என்றும் அழைக்கப்படுகின்றன.

    மொத்தத்தில், இந்த திருத்தணி மலை அழகு பொங்கி வழியும் மலையாக காட்சி தருகின்றது. அதனால்தான் என்னவோ, திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் "அழகு திருத்தணிமலை" என்று இந்த மலையை புகழ்கிறார்.

    "குமார தீர்த்தம்" என்று அழைக்கப்படும் பெரிய குளம், மலையடிவாரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதி "மடம் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.

    தலச்சிறப்புகள்:

    இந்த தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றி பாடியுள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த கோவில் சிறப்புபெற்று விளங்கியது தெரிய வருகிறது.

    இதுதவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சீபுரம் போலவும், மலைகளில் எல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று கூறுகிறார்.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

    தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர் கொண்டு பூஜித்தான் என்கிறது இக்கோவில் தலவரலாறு.

    திருமுருகாற்றுப்படை தந்த நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... என்று சிவபெருமானிடமே வாதிட்ட நக்கீரர், இந்த தலத்தை குன்றுதோறாடல் என்று குறிப்பிடுகிறார். குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்கும் என்றாலும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்பது அறிஞர்களின் கருத்து.

    வள்ளலாரும், முருகப்பெருமானும்:

    வடலூர் ராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அவரையே ஞான குருவாகக் கொண்டவர். தனது இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சியை கண்டு பரவசம் ஆகி இருக்கிறார். அதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.

    சூரசம்ஹாரம் நடக்காத திருத்தணி:

    சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் (வதம்) செய்த இடம் திருச்செந்தூராகும். கந்தசஷ்டி அன்று அந்த நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலுமே நடத்தப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு, போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் சூரசம்ஹாரத்தை நடத்துவதில்லை.

    திருவிழாக்கள் விவரம்:

    ஆடி கிருத்திகை, தை கிருத்திகை, மாசி கிருத்திகை ஆகிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூக்காவடி, பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    வள்ளிமலை சுவாமிகள், இத்தலத்தில் திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டே மலையேறும் திருப்புகழ் திருப்படித் திருவிழாவை தொடங்கி வைத்தார். இப்போதும் ஆண்டுதோறும் அவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    • அடியவர்களின் வினைகளை தீர்க்கின்ற முகம் ஒன்று.
    • பன்னீர் இலையில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது

    நமது உடலில் அமைந்துள்ள ஆதாரங்கள் ஆறு. அவை முறையே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை. இந்த ஆறு ஆதாரங்களிலும் முருகன் வீற்றுள்ளான்.

    மூலாதாரம்-திருப்பரங்குன்றம்

    சுவாதிஷ்டானம்-திருச்செந்தூர்

    மணிபூரகம்-திருவாவினன்குடி

    அநாகதம்-திருவேரகம்

    விசுத்தி-குன்று தோறாடல் (திருத்தணி)

    ஆக்ஞை-பழமுதிர்சோலை

    ஆறுமுகம்

    முருககப் பெருமானை ஆறுமுகம் என்று சொல்லு வோம். அந்த ஆறுமுகம் என்னென்ன?

    1. சிவனுக்கு ஞானமொழியாக, ஓங்காரத்தில் பொருளை விளக்கிய பேசும் முகம் ஒன்று.

    2. வள்ளியைத் திருமணம் செய்ய வந்த முகம் ஒன்று.

    3. அடியவர்களின் வினைகளைத் தீர்க்கின்ற முகம் ஒன்று.

    4. குன்றில் சம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று.

    5. சூரனை வதைத்த முகம் ஒன்று.

    6. வாகனமான மயில் மீது ஏறி விளையாடும் முகம் ஒன்று.

    பன்னீர் இலை பிரசாதம்

    திருச்செந்தூரில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப் பெருமானின் திருக்கோவிலில் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும்.

    இத் தலத்தில் நான்கு வேதங்களும் பன்னீர் மரங்களாக மாறிச் செந்தில் முருகனை வழிபடுவதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. அதற்கேற்றாற் போல பன்னீர் மரங்கள் மிகுந்த அளவில் இங்குண்டு. விஸ்வாமித்திரரைப் பிடித் திருந்த குன்ம நோய் இந்த பன்னீர் இலை விபூதியால் குணமானதாக நம்பப்படுகிறது.

    முருகன் கண்ட பாக்கிய சாலிகள்

    அகத்தியர், நக்கீரர், சிகண்டி முனிவர், நல்லியக்கோடன், ஒளவையார், முருகம்மையார், பொய்யாமொழிப் புலவர், சிதம்பர சுவாமிகள், ஞாவைரோதயர், பகழிக்கூத்தர், கவிராஜ பிள்ளை, குமரகுருபரர், மார்க்க சகாயதேவர், குணசீலர், ராமலிங்க அடிகள், முருகதாச சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்பர், வாரியார் சுவாமிகள்.

    ×