இன்று ஆடி பரணி: திருத்தணியில் குவிந்த பக்தர்கள்

கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.அதிகாலை முதலே பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இன்று ஆடி பரணி: திருத்தணியில் குவிந்த பக்தர்கள்
Published on

திருத்தணி:

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. இன்று ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.

வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் மயில்காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடிகள் சுமந்தும். உடலில் வேல், அம்பு அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

குழந்தைகள் முதல் முதியவர் வரை பம்பை உடுக்கை முழங்க கிராமியக் கலையோடு ஆடி பாடி சென்று முருகனை வழிபட்டனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காட்சி அளித்தது.

பக்தர்கள் காவடி செலுத்துவதற்கு தனி மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏற்கனவே காவடி செலுத்த கட்டணம் ரத்து செய்யப் பட்டு இருந்ததை பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.

பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோவிலுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக் கப்படவில்லை. கோவில் வாகனம் மட்டும் இயக்கப்பட்டது. பக்தர்கள் சரவணப் பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டுகளின் வழியாகவும் சென்று சுவாமியை தரிசித்தனர்.

வாகன நெரிசலை தவிர்க்க திருத்தணி நகரத்தின் நான்கு எல்லைகளிலும் அனைத்து பஸ்களும், வாக னங்களும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக அந்தந்த பகுதிகளில் இருந்து கோயில் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தன.

ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு மலைக்கோயில், திருக்குளம், மலைப்பாதை, கோபுரம், உள்ளிட்ட அனைத்து பகுதி களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்வ தற்கு கோவில் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. பிரசாதம். குடிநீர். கழிப்பிட வசதிகள் சுகாதாரம் உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

காவடி கொண்டு வரும் பக்தர்கள் திருக்குளத்தில் வீசி செல்லும் பூமாலைகளை அகற்றுவதற்கும், மலைக் கோயில். மலை பாதை பகுதிகளில் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாமல் அகற்றவும் சுழற்சி முறையில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணயர் அருணாச்சலம் (பொறுப்பு) அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ் பாபு, நாகன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி டி.எஸ்.பி. விக்னேஷ் தமிழ்மாறன் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முக்கிய இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்பு காமிராக்கள் அமைத்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com