search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஜா புயல் பாதிப்பு"

    தஞ்சையை சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் புயலில் கரும்புகள் சாய்ந்து சேதமானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #FarmerSuicide
    தஞ்சாவூர்:

    கஜா புயலில் டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை பலத்த சேதமானது. புயலில் ஏராளமான மரங்கள், பயிர்கள், மின்கம்பங்கள், குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் அனைத்தும் இடிந்து விழுந்து சேதமானது.

    விவசாயிகளுக்கு இந்த புயல் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசமாகின. மேலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் மரங்கள் அழிவை சந்தித்துள்ளன. இந்த அழிவில் இருந்து மீண்டு வருவதற்கு விவசாயிகளுக்கு இன்னும் பல ஆண்டு காலம் பிடிக்கும்.

    இந்த நிலையில் தஞ்சையை சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் புயலில் கரும்புகள் சாய்ந்து சேதமானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சையை அடுத்த சோழகிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 52). விவசாயியான இவர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் ஊழியராகவும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சாமிக்கண்ணு தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். ஆனால் கஜா புயலில் அவருடைய கரும்பு சாய்ந்து சேதமானது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அவர் தனது குடும்பத்தினரிடம் புலம்பி வந்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற விவசாயி சாமிக்கண்ணு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் அவர் கரும்பு கொல்லையில் மயங்கி கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது சாமிக்கண்ணு வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பது தெரியவந்தது.

    உடனே அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாமிக்கண்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது கரும்பு விவசாயி சாமிக்கண்ணும் தற்கொலை செய்த சம்பவம் டெல்டா விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #FarmerSuicide
    மேட்டுப்பாளையத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிச்சைக்காரர் ஒருவர் நிதி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #GajaCyclone
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரணப்பொருள்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நமது மேட்டுப்பாளையம் அமைப்பு மற்றும் அனைத்து பொதுநல அமைப்பினர் இணைந்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் பந்தல் அமைத்து நிவாரணப் பொருள்களை சேகரித்து வருகின்றனர். அந்த வழியே நடந்து செல்லும் பொதுமக்கள் நிவாரணத் தொகைகளையும் பொருள்களையும் வழங்கி செல்கின்றனர்.

    நேற்று இரவு மாற்றுத்திறனாளி முதியவர் தயங்கியபடி நிவாரணத்தொகை சேகரிக்கும் மையம் முன்பு நின்றார். அங்கிருந்தவர்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டனர்.

    அதற்கு அவர் நான் ஒரு பிச்சைக்காரன். பிச்சையாக கிடைத்த பணத்தில் சாப்பிட்டதுபோக 12 ரூபாய் மீதம் உள்ளது. அதனை புயல் நிவாரணத்திற்கு தர விரும்புகிறேன். அதனை வாங்கிக்கொள்வீர்களா? என்று கேட்டார். நெகிழ்ச்சியடைந்த முகாமில் உள்ளவர்கள் கண்டிப்பாக வாங்கிக்கொள்கிறோம் என்று கூறினர். மகிழ்ச்சியடைந்த பிச்சைக்காரர் பையில் வைத்திருந்த 12 ரூபாயை கொடுத்தார்.

    விசாரித்ததில் அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார் (வயது70) என்பது தெரியவந்தது. #GajaCyclone
    கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை தி.மு.க.வினர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    இயற்கைப் பேரிடராம் கஜா புயல் கோரதாண்டவம் ஆடிமுடித்த பகுதிகளில் இரண்டு வாரம் கழித்தும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கிராமங்கள் பலவற்றுக்கு மின் வசதி கிடைக்காததால் இருளிலேயே மூழ்கியுள்ளன. குடிசைகளை இழந்தவர்கள் பரிதவிக்கிறார்கள். தென்னை, வாழை, நெற்பயிர் எல்லாம் சாய்ந்து விவசாயிகளின் வாழ்வைச் சாய்த்துப் பறித்திருக்கிறது.

    நாட்டுக்கே சோறு போட்ட டெல்டா மாவட்டத்தின் மக்கள் நடுவீதியில் நின்று, தங்கள் உணவுக்காக உதவியை எதிர்பார்த்திருக்கும் அவலத்தைப் பார்க்கும் மனதிடம் இதயமுள்ள எவருக்கும் இல்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகால வாழ்வையும் சேமிப்பையும் சூறையாடி விட்டது கஜா புயல். முழுமையாக மீண்டு வருவதற்கு ஆண்டுக்கணக்கில் ஆகும் என்றாலும், பேரிடரை எதிர் கொள்ளும் அந்த மக்களின் மனவலிமை பிரமிக்க வைக்கிறது.

    தி.மு.க.வின் சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டது. கழக சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் 1 மாத ஊதியமும் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பிற மாவட்டங்களிலிருந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முதற் கட்டமாக சேகரிக்கப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 11 வாகனங்களில் நிவாரணப் பொருட்கள், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனைக் கொடியசைத்து அனுப்பும்போது, அவற்றில் இரண்டு வாகனங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க ஆவண செய்துள்ளேன்.

    இழந்த குடிசைகளுக்கு இழப்பீடு தரப்படுவதுடன், கான்க்ரீட் வீடு திட்டம் வெற்று அறிவிப்பாக முடிந்துவிடக் கூடாது என்ற உறுதிமொழியையும்தான். தென்னை மரத்துக்கு இழப்பீடாக ரூ.1100 என்பது விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்காது.

    ஒரு மரத்துக்கு 50ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் இழப்பீடு வழங்குவதுடன், புதிய தென்னங்கன்றுகளையும் அவற்றைப் பாதுகாத்து வளர்ப்பதற்குத் தேவையான உரம் உள்ளிட்டவற்றையும் வழங்கிட வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். ஆனால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பே சரிவர நிறைவேறாத நிலையில் விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டிருந்தாலும் மற்ற கட்டணங்கள், வரிகள் ஆகியவற்றை செலுத்த காலநீட்டிப்பு வேண்டும், கட்டணக் குறைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் டெல்டா மக்கள். நியாய விலைக் கடைகளில் டிசம்பர் மாதத்திற்கான மண் எண்ணையை நவம்பரிலேயே வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

    ஆனால், இருமாத காலத்திற்கான மண்எண்ணையை விலை கொடுத்து வாங்கும் சக்தி, புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களிடம் இல்லை. நியாய விலைக் கடைகள் மூலமாக அவர்களுக்கு இயன்றவரை இலவசமாகப் பொருட்கள் கிடைக்க வழி கண்டிட வேண்டும்.

    மத்திய அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினர், கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டுத் திரும்பியுள்ளனர். அவர்களின் காலில் விழுந்து பெண்கள் கதறிய காட்சிகளும் செய்திகளும் மனதை உலுக்குகின்றன. எத்தகைய இழப்புகள் ஏற்பட்டிருந்தால், இப்படி உதவி கேட்டு அழுதிருப்பார்கள்!


    இரண்டு வாரங்கள் கடந்தும் இயல்பு நிலை திரும்பாமல் இருட்டிலும் சேற்றிலும் சகதியிலும் வானமே கூரையாக கட்டாந்தரையே பாயாக வாழவேண்டிய அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகம் சுற்றும் பிரதமருக்கு இந்தியாவின் ஒரு பகுதியான தமிழ்நாட்டின் பாதிப்புகளை விமானத்தில் பறந்து பார்க்கக்கூட நேரமில்லை, விருப்பமில்லை. மாநில ஆட்சியாளர்களின் அலட்சியமான செயல்பாடுகள் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவில்லை.

    தஞ்சை-புதுக்கோட்டை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதை எதிர்த்து விவசாயிகளும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து போராடியபோது அவற்றை ஒடுக்க துணை ராணுவத்தை அனுப்பும் அளவுக்கு வேகம் காட்டிய மத்திய அரசும் அதற்குத் துணை நின்ற மாநிலஅரசும், தற்போது இயற்கைப் பேரிடரால் அந்தப் பகுதியே ஒட்டுமொத்தமாகத் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் எந்தவித மீட்புக் குழுவும் வரவில்லையே நாங்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? எங்களை அழித்து ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய மாநில அரசுகளின் மறைமுக செயல்பாட்டுக்கு கஜா பதிப்புகளைப் பயன்படுத்துகின்றனவா என்பது தான் மக்களின் சந்தேகமும் அச்சமாகவும் இருக்கிறது.

    மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறாத காரணத்தாலும், அரசாங்கத்தின் அக்கறையற்ற போக்கினாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    மரணப் படுக்கையில் தவிக்கின்றன புயல் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வு தரும் வகையில் அரசாங்கத்தின் நிவாரண சிகிச்சை அவசியம்.

    சேதங்களை முழுமையாக மதிப்பிடாமல் உரிய ஆலோசனைகள் நடத்தாமல் பிரதமரிடம் முதல்வர் கேட்ட 15ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி என்பது குறைவான தொகைதான். முழுமையான மதிப்பீடு எதுவும் செய்யாமல் அவசரக் கோலத்தில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு தான். ஆனால், அந்தத் தொகையாவது உடனடியாகக் கிடைக்கவும், கஜா புயலின் முழுமையான பாதிப்புகளை மதிப்பிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும் மத்திய ஆய்வுக் குழுவினர் தரும் அறிக்கைதான் கடைசி நம்பிக்கையாக உள்ளது.

    காலில் விழுந்து கதறிய மக்கள் வடித்த கண்ணீரின் வலியையும் வலிமையையும் உணர்ந்து ஆய்வுக் குழுவினர் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்து, விரைவாக நிவாரணம் கிடைத்திட உதவிட வேண்டும். மத்திய-மாநில அரசுகளிடமிருந்து நியாயமான நிவாரணம் கிடைத்திடவும் வாழ்வுரிமையை மீட்டிடவும் கழகத்தின் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். கழக உடன்பிறப்புகளின் கரங்கள், துன்பத்தில் உழல்வோர்க்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்யும்!.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GajaCyclone #DMK #MKStalin
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் மின் ஊழியர்களை கருணாஸ் சந்தித்து பேசினார். #GajaCyclone #Karunas
    பேராவூரணி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வருகிறது.

    புயலில் சேதமான மரங்கள், மின்கம்பங்கள், உள்ளிட்டவை சரி செய்வதற்காக மின் ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். இருந்த போதிலும் கிராமங்களில் முழுமையாக மின்விநியோம் சென்றடையவில்லை.

    மின்கம்பங்களை சரிசெய்வதற்காக மாவட்டங்களில் உள்ள மின் ஊழியர்கள் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டங்களில் உள்ள ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி பகுதியை பார்வையிட இன்று நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் வந்திருந்தார். அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்தார். பின்னர் மின் கம்பங்களை சரிசெய்வதற்காக திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, பேராவூரணியில் தங்கியிருந்து மீட்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களை கருணாஸ் சந்தித்தார்.

    இதைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வந்து மீட்பு பணியில் ஈடுபடும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இன்று குருவிக்கரம்பை முனுமாக்காடு அரசு பள்ளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் தங்கி இருக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #TNMinisters #EdappadiPalaniswami
    சென்னை:

    வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 16-ந்தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் வழியாக கரையை கடந்தது.

    மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயங்கர சூறைக்காற்று வீசியதால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் கடுமையான பேரழிவு ஏற்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கான தென்னை மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. ஏராளமான வீடுகள் இடிந்தும் சேதம் அடைந்தும் மக்களை கடுமையாக பாதிப்பு அடையச் செய்துள்ளது. இதனால் நிவாரண முகாம்களிலேயே மக்கள் தங்கி உள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது.

    போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக சாய்ந்து விழுந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்களை நட்டும், நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்தில் சேதம் அடைந்த மின்சார வயர்களுக்கு பதில் புதிய வயர்களை மாற்றியும் மின் இணைப்பு வழங்கினார்கள். இதனால் குடிநீர் பிரச்சனையை ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது.

    நிவாரணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது மீண்டும் பலத்த மழை பெய்ததால் பணிகள் பாதிக்கப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது.

    டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் மழையால் சேரும் சக்தியுமாக மாறியதால் தொற்று நோய் பரவாமல் இருக்க தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்காங்கே மருத்துவ முகாம்களும் நடைபெற்று வருகிறது.

    தமிழக அரசின் அனைத்து துறை அதிகாரிகளும், அலுவலர்களும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக அமைச்சர்கள் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு துரிதமாக பணிகள் நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

    மத்தியக் குழுவும் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு சென்றுள்ளதால் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் மத்திய அரசிடம் இருந்து உதவிகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


    பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    புயலால் பாதிக்கப்பட்ட 2.15 லட்சம் குடும்பங்கள் 415 முகாம்களில் தொடர்ந்து தங்கிஉள்ளனர். இவர்கள் சொந்த இடங்களுக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படுகிறது.

    மேலும் 6 லட்சம் குடும்பங்களுக்கு உடனடியாக மண்எண்ணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்எண்ணை விநியோகம் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக குடும்பம் ஒன்றுக்கு 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படுகிறது.

    இதற்காக தற்போதைக்கு 1,075 கி.லிட்டர் மண்எண்ணை தேவைப்படுகிறது. தொடர்ந்து மண்எண்ணை விநியோகம் செய்து கூடுதலாக 1,675 கி.லிட்டர் தேவைப்படுவதால் உடனடியாக ஒதுக்கீடு செய்ய உதவுமாறு சேத பகுதிகளை பார்வையிட்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தமிழக உணவு அமைச்சர் காமராஜ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    புயலால் சேதம் அடைந்த தென்னை மற்றும் பயிர்கள் பற்றி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. சாய்ந்து விழுந்த தென்னைகளை அகற்றியதும் அந்த இடத்தில் புதிய கன்றுகளை நட தமிழக வேளாண்மைத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் போதுமான தென்னங்கன்றுகள் இல்லை என்றால் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தற்போது புயல் பாதித்த மாவட்டங்களில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் அனைத்துத் துறையைச் சேர்ந்த அலுவலர்களும், ஊழியர்களும் 8,000 பேர் முகாமிட்டு நிவாரண பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

    சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்து இங்குள்ள அலுவலக பணிகளை முடித்து விட்டு மீண்டும் நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.

    இந்த வாரத்துக்குள் நிவாரணப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பெய்யும் மழையால் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அமைச்சர்களை தொடர்ந்து அங்கேயே பணி முடியும் வரை தங்கியிருந்து கவனிக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் அமைச்சர்கள், அவர்களது உதவியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் டெல்டா மாவட்டங்களிலேயே தங்கி உள்ளனர்.

    நிவாரணப் பணிகள் பற்றி மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவர் கூறும்போது, பணிகள் முழு வீச்சில் நடை பெறுகிறது. மக்களின் அன்றாட இயல்புநிலை திரும்பி வருகிறது. தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. என்றாலும் முழுவதுமாக இயல்பு நிலை திரும்ப இன்னும் 10 நாட்கள் ஆகும் என்று தெரிவித்தார்.

    அடுத்த வாரம் புயல் நிவாரணப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்தில் நிவாரண பணிகளின் முன்னேற்றம், இன்னும் மேற்கொள்ள வேண்டும். தேவையான நடவடிக்கைகள், உதவிகள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. அதன் பிறகே அமைச்சர்களும், அதிகாரிகளும் சென்னை திரும்புவார்கள். அதுவரை டெல்டா மாவட்டங்களில் தங்கி இருப்பார்கள் என்று தெரிய வருகிறது. #GajaCyclone #TNMinisters #EdappadiPalaniswami
    கஜா புயல் நிவாரண உதவியில் மத்திய அரசு எப்போதும் மக்களுடன்தான் உள்ளது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #GajaCyclone #TamilisaiSoundararajan #BJP
    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது :-

    கஜா புயல் நிவாரண உதவியில் மத்திய அரசு எப்போதுமே உங்களுக்கு உதவ உங்களுடனேயே உள்ளது. அதற்காகத்தான் முதன் முதலில் மத்திய அரசு புயல் பாதிப்பிற்கு முன்பே மத்திய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள கடற்படையை அனுப்பி உதவியது.

    தொடர்ந்து மின்சாரத்திற்காக மத்திய அரசு ரூ.200 கோடியை ஒதுக்கியது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு எந்தெந்த வகையில் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டுமோ அத்தனை உதவிகளையும் செய்து வருகிறது.

    நான் தஞ்சையில் உள்ள பள்ளிக் கூடத்தில் தான் படித்தேன். எனவே இங்குள்ள பகுதிகளை எனக்கு நன்கு தெரியும். எதிர்க்கட்சிகள், மத்திய அரசு உதவி செய்யவில்லை என்று பொய் பிரசாரம் செய்கின்றன.

    மக்களிடம் அவர்கள் அவ நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடாது. மத்திய அரசு மக்களுடன் தான் உள்ளது. அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #GajaCyclone #TamilisaiSoundararajan #BJP
    கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு ரேசன் கார்டு இல்லாமல் 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். #GajaCyclone #NirmalaSitharaman
    பேராவூரணி:

    கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நாகை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள், வீடுகளை இழந்த பொதுமக்கள், மற்றும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அரசின் சார்பில் புதிய வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிர்மலா சீதாராமன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து அவர் தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு புறப்பட்டு வந்தார். அவருடன் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.

    அங்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை கணக்கெடுத்து நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும் பாதி முறிந்து நிற்கும் தென்னை மரங்களையும் கணக்கெடுத்து நிவாரணம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    புதிய தென்னை கன்றுகளை வழங்க வேண்டும், விழுந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மந்திரி திட்டத்தில் புதிய வீடுகள் கட்டி தரப்படும். நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு ரேசன் கார்டு இல்லாமல் 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படும்.

    மேலும் மேற்கூரை இழந்த வீடுகளுக்கு மத்திய அரசு சார்பில் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து தார் பாய் வழங்கப்படும். தென்னை வாரியம் மூலம் இலவசமாக தென்னை கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிதி மந்திரியிடம் பரிந்துரை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவர் மல்லிப்பட்டினம் பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திக்க புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக பேராவூரணி பயணியர் மாளிகையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., பேராவூரணி கோவிந்தராசு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து அமைச்சர்களிடம் விவரங்களை அவர் கேட்டறிந்தார். #GajaCyclone #NirmalaSitharaman

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். #NirmalaSitharaman #GajaCyclone
    புதுக்கோட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வேதாரண்யம், நாகை, கோடியக்கரை பகுதிகளை நேற்று பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

    இதையடுத்து இன்று இரண்டாவது நாளாக அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சையில் இருந்து காரில் அவர் நேராக நெடுவாசல் கிராமத்திற்கு சென்றார். அங்கு அதிக அளவிலான தென்னை, வாழை, மா, பலா, கொய்யா மரங்கள் சாய்ந்தன.

    அதேபோல் ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்திருந்தன. அவற்றை பார்வையிட்ட நிர்மலா சீதாராமனிடம் அப்பகுதி மக்கள் தங்கள் மறுவாழ்விற்காக உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் டெல்டா மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு செய்கிறேன். ஏராளமான மரங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும். குறிப்பாக பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் புதிய வீடுகள் கட்டித்தரப்படும், இந்த திட்டத்தின்கீழ் ஏராளமானர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது.

    மத்திய அரசுக்கு அளிக்கப்படும் பெயர் பட்டியல் படி அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் பெயர்களை மாவட்ட கலெக்டரிடம் தாங்களாகவே கொடுக்க வேண்டும். இதுவரை கொடுக்காதவர்கள் உடனே கலெக்டரை சந்தித்து தகவல்களை கொடுங்கள்.

    தென்னை மரங்கள் சாய்ந்துள்ளது மிகவும் விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. தென்னங்கன்று என்ற வார்த்தையை தென்னைக்கு மட்டுமே நாம் குறிப்பிடுகிறோம். வேறு எந்த இடத்திலும் இந்த வார்த்தையை நாம் கூறுவது கிடையாது. முதலில் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதன் பிறகு தென்னங்கன்றுகள் நடப்படுவதற்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்யும். ஆந்திரா, ஒடிசா, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்தும் ராணுவ கப்பல்கள் மூலம் தென்னங்கன்றுகளை மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் கொண்டு வர நான் நடவடிக்கை எடுப்பேன்.

    தென்னங்கன்றுகள் வளர்வதற்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் அதன் ஊடுபயிராக கிழங்கு வகைகள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யலாம். அதனை அரசே கொள்முதல் செய்யும்.


    பிரதமர் அறிவிப்பின் படி மத்திய அரசின் நிபுணர் குழு புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளது. அவர்களும் தேவையான உதவிகளை பிரதமரிடம் எடுத்துக்கூறி செய்வார்கள். நானும் பிரதமரிடம் நேரில் தெரிவித்து பல்வேறு உதவிகளை செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

    புயல் பாதித்த மாவட்டங்களில் மண்எண்ணை தட்டுப்பாடின்றி கிடைக்க பெட்ரோலியத்துறை மந்திரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள மண்எண்ணையை மாநில அரசு தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மின் கம்பங்கள் முற்றிலும் சாய்ந்துள்ளன. இதனால் நகர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருவதை நான் கண்கூடாக பார்த்தேன். மின் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மாநில அரசும் தேவையான முயற்சிகளை செய்து வருகிறது. நாகப்பட்டினத்தில் நேற்று மின்சாரத்துறை அமைச்சர் என்னை நேரில் சந்தித்து சீரமைப்பு பணிகள் குறித்து விபரங்களை தெரிவித்தார்.

    அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் மின் சப்ளை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தஞ்சாவூர் தான் நாட்டிற்கே நெற்களஞ்சியம் ஆகும். நாடு பஞ்சமில்லாமல் இருக்க டெல்டா விவசாயிகள் தான் காரணம். எனவே இந்த பாதிப்பை கண்டு மனம் தளர்ந்து விடக்கூடாது. யாரும் நம்பிக்கை இழந்து விடக்கூடாது.

    உங்களுக்கு கேள்வி கேட்க உரிமைகள் உண்டு. ஏன் வரவில்லை என்று நீங்கள் கேட்கலாம். கஷ்டமான இந்த சூழ்நிலையில் உங்களின் கேள்வி நியாயமானதுதான். ஏற்கனவே இங்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்து ஆய்வு செய்திருக்கிறார். அவர் என்னை விட மூத்தவர்.

    தைரியமாக இருங்கள். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் இன்னும் காப்பீட்டு தொகையை செலுத்தாதவர்களுக்கு மாநில அரசே அந்த தொகையினை செலுத்திவிட்டு, அதன் பின்னர் காப்பீட்டு தொகை வரும்போது பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #BJP #NirmalaSitharaman #GajaCyclone
    கொடைக்கானலில் கஜா புயலால் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்ததால்தான் இங்கு வரவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். #GajaCyclone #DindigulSreenivasan
    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை கிராமமான காமனூர் ஊராட்சி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தை கஜா புயல் தாக்கியபோது கொடைக்கானல் மலைச் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து நானும், துணை முதல்-அமைச்சரும், அதிகாரிகளும் மறுநாளே பார்வையிட வந்தோம்.

    நிலச்சரிவை சீரமைத்து போக்குவரத்தை விரைவில் சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம். மலை கிராமங்களில் புயலால் பாதிப்பு உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டோம். அப்போது எங்களுடன் வந்திருந்த போலீஸ் ஐ.ஜி.சண்முகராஜேஷ்வரன் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

    அதன் காரணமாகவே நாங்கள் புயல் பாதித்த மாவட்டங்களான நாகை, திருவாரூர் பகுதிக்கு சென்று விட்டோம். அதன்பிறகு கொடைக்கானலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காமனூர் ஊராட்சி பகுதியில் 43 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மதியம் 12.30 மணிக்கு பயனாளிகள் வரவழைக்கப்பட்டனர். அமைச்சர் வருகை ரத்து என தகவல் வந்ததால் அதிகாரிகளே அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். அதன்பிறகு அமைச்சர் சீனிவாசன் வருகை உறுதி செய்யப்பட்டதால் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் வந்தவுடன் நிவாரண பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் வினய், உதயகுமார் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் சீனிவாசன் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சையான பேச்சுகளை கூறி வருவது கட்சியினர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தற்போது கஜா புயல் பாதிப்பு குறித்தும் அமைச்சர் தெரிவித்த கருத்தால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. #GajaCyclone #DindigulSreenivasan
    கஜா புயலால் பாதித்த தென்னை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். #Gajacyclone #GRamakrishnan
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இயற்கை சீற்றத்தை தடுக்க இயலாது. ஆனால் அதனால் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பினை சரி செய்யும் வகையில் மாநில அரசு இதுவரை சரியான நடவடிக்கையோ, நிவாரண உதவியோ வழங்கவில்லை. இன்னும் பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.

    தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,100 நிவாரணம் என்பது வருந்தத்தக்கது. எனவே நிவாரணத் தொகையை கூடுதலாக அறிவிக்க வேண்டும். மேலும் விவசாய மற்றும் கல்வி, சுயஉதவிக்குழு கடன்கனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மறுபடியும் தென்னை விவசாயிகள் மரம் வைத்து காய்ப்புக்கு வருவதற்கு 5 ஆண்டு ஆகும். எனவே அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

    மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையில் எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை. உடனடியாக வீடு இழந்தவர்கள் மற்றும் தென்னை, பயிர்களை இழந்தவர்கள் குறித்து முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணங்களை வழங்க மத்திய-மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajacyclone #GRamakrishnan
    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கஜா புயல் நிவாரணத்திற்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். #CycloneGaja #CycloneGajaRelief #TNGovernor #BanwarilalPurohit
    சென்னை:

    கஜா புயல் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப்போட்டது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது. குறிப்பாக மின்சார கம்பங்கள், துணைமின் நிலையங்கள், மின்மாற்றிகள் அதிக அளவில் சேதமடைந்தது.

    போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் என தமிழக அரசு கணக்கிட்டுள்ளது.


    அத்துடன் கஜா புயல் பாதிப்பிற்கு தாராளமாக நிவாரணம் வழங்கலாம் என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார். அதிமுக மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்தனர்.

    தனியார் நிறுவனங்களும், பிரமுகர்களும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். #CycloneGaja #CycloneGajaRelief #TNGovernor #BanwarilalPurohit
    புயல் பாதித்த பகுதிகளை சேர்ந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கட்டணங்களை குறைப்பது குறித்து தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். #GajaCyclone
    ஓமலூர்:

    சேலம் விமான நிலையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அங்கே பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்துள்ள பகுதிகளை சேர்ந்த அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே கட்டணம் செலுத்திவிட்டனர். தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கட்டணங்களை குறைப்பது குறித்து தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    துணை வேந்தர் பதவி காலியாகும் பல்கலைக்கழகங்களில் உடனடியாக துணை வேந்தர் நியமிக்க முன்கூட்டியே ஆய்வு கமிட்டி அமைக்கப்படும். அதன் மூலம் உடனடியாக துணை வேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளர் மற்றும் தேர்வாணையர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.


    இதேபோன்று காலியாக உள்ள பதிவாளர், தேர்வாணையர் மற்றும் இதர பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி சான்றுகள் கொடுத்து பேராசிரியர் பணியிடங்களில் உள்ளோர் மற்றும் இதர பலகலைக்கழகங்களில் போலி சான்றுகள் மூலம் பணியாற்றுவோர் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. போலி சான்றுகள் கொடுத்து ஆசிரியர் பணியில் உள்ளவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #KPAnbazhagan

    ×