search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "central minister nirmala sitharaman"

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு ரேசன் கார்டு இல்லாமல் 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். #GajaCyclone #NirmalaSitharaman
    பேராவூரணி:

    கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நாகை, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள், வீடுகளை இழந்த பொதுமக்கள், மற்றும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அரசின் சார்பில் புதிய வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிர்மலா சீதாராமன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து அவர் தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு புறப்பட்டு வந்தார். அவருடன் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.

    அங்கு கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை கணக்கெடுத்து நிவாரணம் அளிக்க வேண்டும். மேலும் பாதி முறிந்து நிற்கும் தென்னை மரங்களையும் கணக்கெடுத்து நிவாரணம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    புதிய தென்னை கன்றுகளை வழங்க வேண்டும், விழுந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மந்திரி திட்டத்தில் புதிய வீடுகள் கட்டி தரப்படும். நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு ரேசன் கார்டு இல்லாமல் 5 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படும்.

    மேலும் மேற்கூரை இழந்த வீடுகளுக்கு மத்திய அரசு சார்பில் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து தார் பாய் வழங்கப்படும். தென்னை வாரியம் மூலம் இலவசமாக தென்னை கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    விவசாயிகளின் வங்கி கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிதி மந்திரியிடம் பரிந்துரை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவர் மல்லிப்பட்டினம் பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திக்க புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக பேராவூரணி பயணியர் மாளிகையில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., பேராவூரணி கோவிந்தராசு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கஜா புயல் நிவாரண பணிகள் குறித்து அமைச்சர்களிடம் விவரங்களை அவர் கேட்டறிந்தார். #GajaCyclone #NirmalaSitharaman

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். #NirmalaSitharaman #GajaCyclone
    புதுக்கோட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வேதாரண்யம், நாகை, கோடியக்கரை பகுதிகளை நேற்று பார்வையிட்ட நிர்மலா சீதாராமன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

    இதையடுத்து இன்று இரண்டாவது நாளாக அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சையில் இருந்து காரில் அவர் நேராக நெடுவாசல் கிராமத்திற்கு சென்றார். அங்கு அதிக அளவிலான தென்னை, வாழை, மா, பலா, கொய்யா மரங்கள் சாய்ந்தன.

    அதேபோல் ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்திருந்தன. அவற்றை பார்வையிட்ட நிர்மலா சீதாராமனிடம் அப்பகுதி மக்கள் தங்கள் மறுவாழ்விற்காக உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் டெல்டா மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இரண்டாவது நாளாக ஆய்வு செய்கிறேன். ஏராளமான மரங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும். குறிப்பாக பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் புதிய வீடுகள் கட்டித்தரப்படும், இந்த திட்டத்தின்கீழ் ஏராளமானர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது.

    மத்திய அரசுக்கு அளிக்கப்படும் பெயர் பட்டியல் படி அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் பெயர்களை மாவட்ட கலெக்டரிடம் தாங்களாகவே கொடுக்க வேண்டும். இதுவரை கொடுக்காதவர்கள் உடனே கலெக்டரை சந்தித்து தகவல்களை கொடுங்கள்.

    தென்னை மரங்கள் சாய்ந்துள்ளது மிகவும் விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. தென்னங்கன்று என்ற வார்த்தையை தென்னைக்கு மட்டுமே நாம் குறிப்பிடுகிறோம். வேறு எந்த இடத்திலும் இந்த வார்த்தையை நாம் கூறுவது கிடையாது. முதலில் சாய்ந்து கிடக்கும் தென்னை மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    அதன் பிறகு தென்னங்கன்றுகள் நடப்படுவதற்கான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்யும். ஆந்திரா, ஒடிசா, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்தும் ராணுவ கப்பல்கள் மூலம் தென்னங்கன்றுகளை மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் கொண்டு வர நான் நடவடிக்கை எடுப்பேன்.

    தென்னங்கன்றுகள் வளர்வதற்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் அதன் ஊடுபயிராக கிழங்கு வகைகள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யலாம். அதனை அரசே கொள்முதல் செய்யும்.


    பிரதமர் அறிவிப்பின் படி மத்திய அரசின் நிபுணர் குழு புயல் பாதித்த மாவட்டங்களில் ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளது. அவர்களும் தேவையான உதவிகளை பிரதமரிடம் எடுத்துக்கூறி செய்வார்கள். நானும் பிரதமரிடம் நேரில் தெரிவித்து பல்வேறு உதவிகளை செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

    புயல் பாதித்த மாவட்டங்களில் மண்எண்ணை தட்டுப்பாடின்றி கிடைக்க பெட்ரோலியத்துறை மந்திரியிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள மண்எண்ணையை மாநில அரசு தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மின் கம்பங்கள் முற்றிலும் சாய்ந்துள்ளன. இதனால் நகர் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருவதை நான் கண்கூடாக பார்த்தேன். மின் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மாநில அரசும் தேவையான முயற்சிகளை செய்து வருகிறது. நாகப்பட்டினத்தில் நேற்று மின்சாரத்துறை அமைச்சர் என்னை நேரில் சந்தித்து சீரமைப்பு பணிகள் குறித்து விபரங்களை தெரிவித்தார்.

    அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் மின் சப்ளை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தஞ்சாவூர் தான் நாட்டிற்கே நெற்களஞ்சியம் ஆகும். நாடு பஞ்சமில்லாமல் இருக்க டெல்டா விவசாயிகள் தான் காரணம். எனவே இந்த பாதிப்பை கண்டு மனம் தளர்ந்து விடக்கூடாது. யாரும் நம்பிக்கை இழந்து விடக்கூடாது.

    உங்களுக்கு கேள்வி கேட்க உரிமைகள் உண்டு. ஏன் வரவில்லை என்று நீங்கள் கேட்கலாம். கஷ்டமான இந்த சூழ்நிலையில் உங்களின் கேள்வி நியாயமானதுதான். ஏற்கனவே இங்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்து ஆய்வு செய்திருக்கிறார். அவர் என்னை விட மூத்தவர்.

    தைரியமாக இருங்கள். புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் இன்னும் காப்பீட்டு தொகையை செலுத்தாதவர்களுக்கு மாநில அரசே அந்த தொகையினை செலுத்திவிட்டு, அதன் பின்னர் காப்பீட்டு தொகை வரும்போது பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #BJP #NirmalaSitharaman #GajaCyclone
    மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கிறார். பாரீசில் 12 மற்றும் 13-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #BJP #NirmalaSitharaman #RafaleDeal
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டின் டிசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016-ம் ஆண்டு மோடி அரசு ஒப்பந்தம் செய்தது. அதில் ஊழல் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கு அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்தை இந்திய அரசு தான் சிபாரிசு செய்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே கூறினார். இதனால் இப்பிரச்சனையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

    ஹோலண்டேயின் கருத்தை மத்திய அரசும், பிரான்ஸ் அரசும் மறுத்துள்ளன. இதுகுறித்து டசால்ட் நிறுவனமும், ரிலையன்சும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதில் எங்களது தலையீடு எதுவும் இல்லை என இரு நாடுகளும் மறுத்துள்ளன.

    இந்த நிலையில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் (அக்டோபர்) பிரான்ஸ் செல்கிறார். பாரீசில் 12 மற்றும் 13-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    பிரான்ஸ் நாட்டின் ராணுவ மந்திரி புளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேசுகிறார். அப்போது மேற்கு ஆசியா மற்றும் இந்தோ- பசிபிக் கூட்டு ராணுவ பயிற்சியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.


    பாரீசில் தங்கியிருக்கும் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரனை சந்திக்கிறார். அங்கிருந்து ஆசியான்நாடுகளின் ராணுவ மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் செல்கிறார்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் இந்தியா வந்தார். அவரை தொடர்ந்து அக்டோபரில் ராணுவ மந்திரி பார்லியும் இந்தியா வருகை தந்தார். அப்போது பிரான்சில் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. எனவே தான் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #BJP #NirmalaSitharaman #RafaleDeal
    டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமனை, கே.சி.பழனிசாமி திடீரென சந்தித்து பேசியது ஏன்? என்பது குறித்து அவர் கூறியுள்ளார். #KCPalanisamy #ADMK #BJP
    கோவை:

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கடந்த மார்ச் மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து கே.சி. பழனிசாமி நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

    சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்முதலில் தேர்தல் ஆணையத்தில் மனு செய்தது இவர் தான். இவர் நீக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலரும், கட்சி தலைமையிடம் முறையிட்டதாக கூறப்பட்டது. எனவே கே.சி.பழனிசாமி நீக்கப்பட்ட விவகாரத்தில் கட்சி தலைமை முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் தகவல் வெளியானது.

    இந்தநிலையில், டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமனை, கே.சி.பழனிசாமி திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாரதிய ஜனதாவில் இணைய போவதாக செய்திகள் வெளியானது.

    இதுகுறித்து கே.சி.பழனிசாமி கூறியதாவது:-

    நான் என்றைக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்தவன் தான். என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்காக கடிதம் தரவில்லை. என்னை ஏன் நீக்கினார்கள்? என்ற விளக்கமும் தரவில்லை.


    காவிரி விவகாரத்தில் தேவைப்பட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று தான் கூறி இருந்தேன். தேவை ஏற்படவில்லை என கூறி இருக்கலாம்.

    ஓ.பன்னீர்செல்வம் தான் முயற்சி எடுத்து என்னை நீக்குவதாக அறிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக நான் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்ததற்கு நன்றி விசுவாசமாக இதை செய்துள்ளார். ஆனால் என்னிடம் கட்சியில் மீண்டும் சேர்க்க கடிதம் கேட்டனர். என் மீது எந்த தவறும் கிடையாது என்பதால் நான் கொடுக்கவில்லை. நான் என்றைக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்தவன் தான்.

    நிர்மலா சீதாராமனை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தான். நான் பாரதிய ஜனதாவில் இணைய முயற்சிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது.

    இவ்வாறு அவர் கூறினார். #KCPalanisamy #ADMK #BJP
    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க முடியவில்லை அல்லது சந்திக்க மறுத்தது ஏற்புடையதல்ல என்று கிருஷ்ணசாமி கூறினார். #Krishnasamy #OPS
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட புதிய தமிழகம் இளைஞரணி பொறுப்பாளர் ராஜசேகர் விபத்தில் காயமடைந்து கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் ஏழைகளுக்கு ஒதுக்கிய நிலங்களை முறைகேடாக விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்க முடியவில்லை அல்லது சந்திக்க மறுத்தது வருந்தத்தக்க வி‌ஷயம். அதுவும் அனுமதி அளித்து விட்டு பார்க்க மறுத்திருந்தால் ஏற்கத்தல்ல. தமிழக மக்களின் பிரநிதிகளை மத்திய அரசின் அமைச்சர்கள் அப்படி செய்திருக்கக்கூடாது. செய்திருந்தால் ஏற்புடையதல்ல.


    தமிழகத்தில் கல்வித் தரம் மிகவும் தாழ்ந்து போய்விட்டது. வரக்கூடிய தலைமுறையை உருவாக்கக் கூடிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. எனவே தரம் மட்டுமல்ல. தியாக உணர்வோடு இருக்க கூடியவர்களும், அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களும் தான் ஆசிரியர் பணிக்கு தேவை. தமிழக அரசின் சொத்து வரி உயர்வு தவறு. இது சரியான நடவடிக்கை அல்ல. இதனை திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Krishnasamy #OPS
    ×