search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவில் சேர திட்டமா?- முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி பேட்டி
    X

    பா.ஜனதாவில் சேர திட்டமா?- முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி பேட்டி

    டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமனை, கே.சி.பழனிசாமி திடீரென சந்தித்து பேசியது ஏன்? என்பது குறித்து அவர் கூறியுள்ளார். #KCPalanisamy #ADMK #BJP
    கோவை:

    அ.தி.மு.க. செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கடந்த மார்ச் மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து கே.சி. பழனிசாமி நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

    சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்முதலில் தேர்தல் ஆணையத்தில் மனு செய்தது இவர் தான். இவர் நீக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலரும், கட்சி தலைமையிடம் முறையிட்டதாக கூறப்பட்டது. எனவே கே.சி.பழனிசாமி நீக்கப்பட்ட விவகாரத்தில் கட்சி தலைமை முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் தகவல் வெளியானது.

    இந்தநிலையில், டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமனை, கே.சி.பழனிசாமி திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாரதிய ஜனதாவில் இணைய போவதாக செய்திகள் வெளியானது.

    இதுகுறித்து கே.சி.பழனிசாமி கூறியதாவது:-

    நான் என்றைக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்தவன் தான். என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்காக கடிதம் தரவில்லை. என்னை ஏன் நீக்கினார்கள்? என்ற விளக்கமும் தரவில்லை.


    காவிரி விவகாரத்தில் தேவைப்பட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று தான் கூறி இருந்தேன். தேவை ஏற்படவில்லை என கூறி இருக்கலாம்.

    ஓ.பன்னீர்செல்வம் தான் முயற்சி எடுத்து என்னை நீக்குவதாக அறிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக நான் தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்ததற்கு நன்றி விசுவாசமாக இதை செய்துள்ளார். ஆனால் என்னிடம் கட்சியில் மீண்டும் சேர்க்க கடிதம் கேட்டனர். என் மீது எந்த தவறும் கிடையாது என்பதால் நான் கொடுக்கவில்லை. நான் என்றைக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்தவன் தான்.

    நிர்மலா சீதாராமனை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தான். நான் பாரதிய ஜனதாவில் இணைய முயற்சிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது.

    இவ்வாறு அவர் கூறினார். #KCPalanisamy #ADMK #BJP
    Next Story
    ×