search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister dindigul sreenivasan"

    திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் மகன் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன். இவரது வீடு திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ளது. இவரது மகன் வெங்கடேசன் திருமணமாகி மெங்கில்ஸ் ரோடு மென்டோன்சா காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீஸ் விசாரணையில் வீட்டில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
    இறுதி கட்ட பிரசாரத்திலும் வேட்பாளரின் பெயரை மாற்றி கூறி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையை ஏற்படுத்தினார். #Loksabhaelections2019 #DindigulSreenivasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று மணிக்கூண்டில் இறுதிகட்ட பிரசாரம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், பா.ம.க. வேட்பாளர் ஜோதி முத்துவுக்கு பதிலாக சோலைமுத்து என்றார். இதை கேட்டதும் வேட்பாளர் அதிர்ச்சியடைந்து அமைச்சரை திரும்பி பார்த்தார். உடனே சுதாரித்துக் கொண்டு ஜோதிமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்றார்.

    அதன் பின் இந்தியாவில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் பட்டியலை சொல்லும் போது மம்தா பானர்ஜி, சரத்பவார் என்பதற்கு பதிலாக சரத்குமார் என்றார். இதனால் அருகில் இருந்த தொண்டர்கள் அவரை ஏறிட்டு பார்த்தனர். பின்னர் சரத்பாபு என்றார். இதனால் கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்ற மேடையிலேயே மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என பேசினார். அதன் பிறகு நடந்த பல பிரசார கூட்டங்களிலும் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். இறுதி கட்ட பிரசாரத்திலும் வேட்பாளர் பெயரை மாற்றி கூறியதோடு மட்டுமின்றி நடிகர்கள் பெயரையும் சேர்த்து கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. #Loksabhaelections2019 #DindigulSreenivasan
    கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. #Methane #DindigulSreenivasan #Mekedatu
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    பா.ஜனதா மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்ததால் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக உள்ளார். தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றித் தரும் போது அதனை கூட்டணியில் சேர்த்ததில் என்ன தவறு? ஊழல் செய்ததற்காக ஆட்சியை பறி கொடுத்த ஒரே கட்சி இந்தியாவில் தி.மு.க. மட்டும்தான். தற்போது உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் நடக்காததற்கும் தி.மு.க.தான் காரணம்.

    ஆனால் இதனை மறைத்து ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவல்களை மக்களிடம் கூறி வருகிறார். பொய்களை மட்டுமே சொல்லி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி. அவரது மகன் எப்படி இருப்பார்? மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருப்பதால்தான் தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது.



    ஊழல் இல்லாத பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு? மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கிறது. நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்கிறோம்.

    கர்நாடக அரசு மீத்தேன் என்ற இடத்தின் குறுக்கே அணை கட்டி வருகிறது. அதனை தமிழக அரசு சட்டப்படி தடுத்து நிறுத்தியது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேகதாது என்பதற்கு பதிலாக மீத்தேன் என அமைச்சர் சீனிவாசன் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

    மேலும் அவர் பேசுகையில் மத்திய மந்திரி விஜய் கோயல் எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.வுடன் பேசி வருகிறார் என்றார். பியூஸ் கோயல் என்பதற்கு பதிலாக விஜய் கோயல் என கூறியதால் தொண்டர்களிடம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார். உப்புமா சாப்பிட்டார் என உங்களிடம் பொய்சொல்லிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.

    மற்றொரு கூட்டத்தில் ஜெயலலிதாவிற்கு சசிகலா குடும்பத்தினர் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்று விட்டனர் என்றார்.

    ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன்சிங்கை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றார்.

    வேடசந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை அடிக்கடி பிரதமர் நரசிம்மராவை சந்தித்து வருகிறார் என்றார். அந்த கூட்டத்திலும் பிரதமர் பெயரை மாற்றி கூறினார். இதுபோல பல்வேறு கூட்டங்களில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்திலும் அமைச்சர் பேசிய சர்ச்சை கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. #Methane #DindigulSreenivasan #Mekedatu
    சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செல்போன் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #DindigulSreenivasan #chennaiairport
    ஆலந்தூர்:

    தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

    இவர் கடந்த 17-ந்தேதி காலை 8.10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவருடைய செல்போன் திடீரென மாயமாகி இருந்தது.

    வீட்டிற்கு சென்ற பின்பே செல்போன் திருடு போய் இருப்பது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அமைச்சரின் உதவியாளர் ஏர் இந்தியா அலுவலகம் மற்றும் விமானநிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

    மேலும் சென்னை விமானநிலைய போலீஸ் மற்றும் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் அன்றைய தேதியில் பதிவாகியுள்ள கேமரா காட்சிகள் மற்றும் அந்த விமானத்திற்குள் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    விமான நிலைய தொழிலாளர்களிடமும் விசாரணை நடந்தது. #DindigulSreenivasan #chennaiairport
    சின்னதம்பி யானை தினசரி கதாநாயகன் ஆகி இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அதிக மரங்கள் வளர்ப்பது குறித்தும், மனிதர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வன விலங்குகளை காட்டுக்குள் அனுப்புவது பற்றியும் உறுப்பினர்கள் கார்த்திகேயன், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

    தற்போது சின்னதம்பி யானை தினசரி கதாநாயகன் ஆகி இருக்கிறது. தினமும் தொலைக்காட்சிகளில் அதுபற்றிய செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த யானையை என்ன செய்யப் போகிறீர்கள் என்று உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

    ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு வருகிறது. கோர்ட்டு உத்தரவுப்படி சின்னதம்பி யானை காட்டுக்குள் அனுப்புவதா? அல்லது மக்களுக்கு அது தொந்தரவு செய்யாமல் இருக்க என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    காட்டுப் பன்றிகள் தொந்தரவு பற்றியும் குறிப்பிட்டார்கள் அவற்றை சுட்டு பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    மனிதர்களிடம் இருந்து மிருகங்களை காப்பதும், மிருகங்களிடம் இருந்து மனிதர்களை காப்பதும் அரசின் கடமை. அதை இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது.

    வனப்பகுதியிலும் வாய்ப்பு உள்ள இடங்களிலும் மரங்களை வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தமிழ் நாட்டில் வனங்களின் நிலப்பரப்பு அதிகரித்துள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ.54 கோடி செலவில் புயலால் பாதிக்காத பனை, சவுக்கு, தேக்கு போன்ற மரங்களை நட அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly
    மற்றவர்களை குறை சொல்லியே எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வந்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MGR #Jayalalithaa #DindigulSreenivasan
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    கிராம மக்கள் வாழ்க்கையில் பொருளாதாரம் அடையவேண்டும் என்பதற்காக கறவை பசுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கறவை பசுக்கள் மட்டுமின்றி இலவச ஆடுகளும் வழங்கப்படுகின்றன.

    தமிழக பட்ஜெட்டில் கல்விக்கென ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    செம்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி நாரயாணசாமிக்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கைகள் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 58 வயது வரை அரசு வேலை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.



    மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் ஆட்சி செய்தார்.

    இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    அமைச்சர் சீனிவாசன் பேசும் கூட்டங்களில் எல்லாம் இதுபோன்ற சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்து வரும் நிலையில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த கூட்டத்திலும் சீனிவாசன் பேசிய பேச்சால் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய பட்ஜெட்டை பற்றி விமர்சனம் செய்திருப்பது அவரது சொந்த கருத்து. அதைப்பற்றி அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள். தினகரனுக்கு பட்ஜெட் என்றாலே என்ன என்று தெரியாது. அவர் தமிழக பட்ஜெட்டை குறைசொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பேசி வருகிறார்.

    தமிழகத்தில் உள்ள 80 ஆயிரம் கிராமத்தில் இதுவரை யாரும் பஸ் மறியலில் ஈடுபடவில்லை. தமிழக பட்ஜெட்டை பிரதமர் மோடியே பாராட்டி உள்ளார். தமிழக அரசியல் கட்சியினர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக குறை கூறி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #MGR #Jayalalithaa #DindigulSreenivasan
    பொதுமக்களிடம் கமி‌ஷன் கேட்பதாக பொய் குற்றச்சாட்டை கூறி வரும் பாலபாரதி மீது வழக்கு தொடருவேன் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். #DinidgulSreenivasan #BalaBharathi
    திண்டுக்கல்:

    வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல், பால கிருஷ்ணாபுரம் பகுதியில் தற்பொழுது ரெயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி, இந்த மேம்பாலப் பணிகளுக்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையினை அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு, நான் கமி‌ஷன் கேட்டு தாமதப்படுத்தி வருவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை அரசியல் லாபத்திற்காக கூறி வருகிறார். இது முற்றிலும் வடிகட்டிய பொய். உண்மைக்கு புறம்பானது. கடந்த 2016 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் போது மாவட்ட நிர்வாகம் அப்போதைய சந்தை மதிப்பான, நகர்புறப் பகுதிக்கு 225 சதவீதமும் கிராமப்புறப் பகுதிக்கு 275 சதவீதமும் நில உரிமையாளருக்கு பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் சென்னை நில நிர்வாக ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இது வெளிப்படையான ஒன்று.

    அதன்படி திண்டுக்கல் கோட்டாட்சியர் வங்கிக் கணக்கில் ரூ. 31 கோடியே 99 லட்சம் ஒதுக்கீடு செய்து வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 2017 ல் தமிழக அரசு தனது சந்தை வழிகாட்டி மதிப்பினை 33 சதவீதம் குறைத்து அறிவித்தது. அதன் காரணமாக சென்னை நில நிர்வாக ஆணையர் பாலப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளருக்கு கூடுதல் தொகையினை மாநில மேல் கூர்நோக்கு கமிட்டி முடிவு எடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்திடம் மேல் அறிக்கை கோரப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி நானும் மாவட்ட நிர்வாகமும் ஏற்கனவே நிர்ணயித்த தொகையினை நில உரிமையாளர்களுக்கு பெற்றுத் தர முயற்சித்து வருகிறோம்.


    மாவட்ட அமைச்சர் என்கிற முறையில் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறேன். இந்நிலையில் நான் கமி‌ஷன் கேட்டு பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகையினை தாமதப்படுத்தி வருவதாக முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி கூறுவது அரசியல் லாபத்திற்காக கூறும் அபாண்டமான பொய். பொதுமக்களை திசைதிருப்புவதற்காக கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை தனிப்பட்ட முறையில் என் மீது கூறி வருகிறார். இதற்கு பாலபாரதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.

    இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். #DinidgulSreenivasan #BalaBharathi
    கொடைக்கானலில் கஜா புயலால் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்ததால்தான் இங்கு வரவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். #GajaCyclone #DindigulSreenivasan
    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை கிராமமான காமனூர் ஊராட்சி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தை கஜா புயல் தாக்கியபோது கொடைக்கானல் மலைச் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து நானும், துணை முதல்-அமைச்சரும், அதிகாரிகளும் மறுநாளே பார்வையிட வந்தோம்.

    நிலச்சரிவை சீரமைத்து போக்குவரத்தை விரைவில் சரிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம். மலை கிராமங்களில் புயலால் பாதிப்பு உள்ளதா? என அதிகாரிகளிடம் கேட்டோம். அப்போது எங்களுடன் வந்திருந்த போலீஸ் ஐ.ஜி.சண்முகராஜேஷ்வரன் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

    அதன் காரணமாகவே நாங்கள் புயல் பாதித்த மாவட்டங்களான நாகை, திருவாரூர் பகுதிக்கு சென்று விட்டோம். அதன்பிறகு கொடைக்கானலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காமனூர் ஊராட்சி பகுதியில் 43 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மதியம் 12.30 மணிக்கு பயனாளிகள் வரவழைக்கப்பட்டனர். அமைச்சர் வருகை ரத்து என தகவல் வந்ததால் அதிகாரிகளே அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். அதன்பிறகு அமைச்சர் சீனிவாசன் வருகை உறுதி செய்யப்பட்டதால் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் வந்தவுடன் நிவாரண பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் வினய், உதயகுமார் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் சீனிவாசன் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சையான பேச்சுகளை கூறி வருவது கட்சியினர் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தற்போது கஜா புயல் பாதிப்பு குறித்தும் அமைச்சர் தெரிவித்த கருத்தால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. #GajaCyclone #DindigulSreenivasan
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone #DindigulSreenivasan
    வேதாரண்யம்:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மின்கம்பங்கள் நடும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

    புயலால் முற்றிலும் உருக்குலைந்து போன நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வினியோகிப்பதற்காக மின் கம்பங்கள் நடும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதன்பின்னர் வேதாரண்யத்தில் மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டத்தில் பேசும் போது, ‘‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவீன தொழிற்நுட்பம் மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.


    அமைச்சரின் இந்த பேச்சை கேட்டு ஒருகணம் மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

    இதை புரிந்து கொண்ட கூட்டத்தில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அது சாத்தியமில்லை. இப்படி செய்தால் விவசாயம் அழிந்து விடும் என்று கூறினார்.

    அப்போது மீண்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, ‘வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான். கடலுக்கு அடியில் நகரத்தையே நிர்மாணிக்கிறான். நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா? என்ன.. என்று கேட்டார். இப்படி செய்தால் விவசாயம் அழிந்து விடும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவிக்கிறார். விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை. மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான கண்டுபிடிப்புகளை மின்வாரிய அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீண்டும் இதேபோல் பேசியதால் மின்வாரிய அதிகாரிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போயினர்.

    பிறகு ஒருவழியாக கூட்டம் முடியும் தருவாயில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்க உடனடியாக வேலையை ஆரம்பியுங்கள் என்று கூறி விட்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புறப்பட்டு சென்றார்.

    சர்ச்சை பேச்சால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பலமுறை விமர்சனத்துக்குள்ளானவர். தற்போது விமானம் மூலம் மின்கம்பங்கள் நடுங்கள் என்று கூறிய சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone #DindigulSreenivasan
    திண்டுக்கல் நகருக்கு இன்னும் 4 புயல் வந்தால் குடிநீர் பிரச்சனை தீரும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். #GajaCyclone #MinisterDindigulSreenivasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார். திண்டுக்கல்லில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் பாதிப்புகள் ஒரு வாரத்தில் சரி செய்யப்படும். பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலேயே கொடைக்கானல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் மின் வினியோகம் தடைப்பட்ட பகுதிகளில் படிப்படியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் மின் வினியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


    வத்தலக்குண்டு மற்றும் பழனி வழியாக கொடைக்கானல் செல்லும் பாதைகள் சீரமைக்கப்பட்டு போக்கு வரத்து விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். தற்போது ஏற்பட்ட புயல் மழையால் பெரும்பாலான அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    எனவே இது போல் மேலும் 4 புயல் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஏற்பட்டால் திண்டுக்கல் நகரின் குடிநீர் பிரச்சனை தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterDindigulSreenivasan
    தமிழகத்தில் புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். #GajaCyclone #CentralGovt #MinisterDindigulSreenivasan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் சுருட்டி வீசிய கஜா புயலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் 81 குழுக்கள் கொண்ட அனைத்து துறையை சேர்ந்த 1110 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கஜா புயல் காரணமாக திண்டுக்கல் நகரின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜ் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து தற்போது 13 அடி தண்ணீர் உள்ளது.


    புயல் பாதிக்கப்பட்ட பகுதியை நான் பார்வையிட உள்ளேன். ‘கஜா’ புயலை முன்னிட்டு கடலோர மாவட்டங்களில் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    புயல் நிவாரண பணிகளை எதிர்கட்சிகள் பாராட்டியுள்ளது. பயிர்சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும்.

    தமிழகத்தில் அடுத்தடுத்து புயல் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்குவதில்லை. மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோதும் தற்போது உள்ள பா.ஜனதா அரசும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு ரூ.5000 கோடி கேட்டால் ரூ.500 கோடியை தருகின்றனர்.

    மத்திய அரசு முழு நிதியை கொடுப்பதில்லை. தமிழக அரசு நிதியில் இருந்துதான் அனைத்து நிவாரண பணிகளும் நடக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #CentralGovt #MinisterDindigulSreenivasan
    ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசினார். #Thangatamilselvan #DindigulSreenivasan
    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ஜெயலலிதா ‘ஸ்லோ பாய்சன்’ (மெதுவாக கொல்லக்கூடிய விஷம்) கொடுத்து கொல்லப்பட்டதாக கூறினார். இந்த நிலையில் நேற்று அ.ம.மு.க. சார்பில் நிலக்கோட்டையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

    இதில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசுகையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கவர்னரிடம் மனு கொடுத்த 18 பேரை, சபாநாயகர் தகுதிநீக்கம் செய்துள்ளார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள், சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நான் அறிந்த வரை, ஜனவரிக்குள் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர வாய்ப்பு இல்லை.

    உள்ளாட்சி தேர்தலையே நடத்த துணிவு இல்லாதவர்கள், இடைத்தேர்தலை எப்படி நடத்துவார்கள். ஒருவேளை துணிச்சல் வந்து இடைத்தேர்தலை நடத்தினால், 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். அ.தி.மு.க.வுடன் யாரும் கூட்டணி வைக்கமாட்டார்கள் என்பதால், நாடாளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம்.


    தமிழகத்தில் இதுவரை எந்த முதல்-அமைச்சர் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணை வந்துள்ளது. அந்த அளவுக்கு தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது.

    ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, இட்லி, இடியாப்பம் சாப்பிட்டார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்பு கூறினார். ஒரு மாதம் கழித்து ஜெயலலிதா இட்லி, இடியாப்பம் சாப்பிடவில்லை என்றும், தான் பொய் சொன்னதாகவும் கூறினார். தற்போது ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்து ஜெயலலிதா கொல்லப்பட்டதாக, திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

    ‘ஸ்லோ பாய்சன்’ கொடுப்பதை கூட அறியாமல் சாப்பிடும் அளவுக்கு எப்போதும் ஜெயலலிதா இருந்தது இல்லை. என்ன மருந்து சாப்பிடுகிறோம் என்பதை ஜெயலலிதா அறிந்து வைத்திருப்பார். அந்த அளவுக்கு ஜெயலலிதா புத்திக்கூர்மையுடன் செயல்படுவார்.

    எனவே, விசாரணை ஆணையம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் திண்டுக்கல் சீனிவாசன் தவறாக பேசி இருந்தால் அவருடைய அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Thangatamilselvan #DindigulSreenivasan
    ×