search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul robbery"

    • பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்கள், பெண்களிடம் நகை, செல்போன் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அழகாபுரியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்றிரவு இங்கு புகுந்த மர்மநபர்கள் தரைப்பகுதியை சேதப்படுத்தி எந்திரத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் முடியாததால் எந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் பாதுகாப்பான எந்திரம் என்பதால் அதனை சேதப்படுத்த முடியவில்லை. நீண்டநேரம் போராடிவிட்டு பணம் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இன்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஏ.டி.எம் எந்திரம் சேதப்படுத்தியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் எந்திரத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்த பணம் தப்பியது தெரியவந்தது. எனினும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்கள், பெண்களிடம் நகை, செல்போன் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல் அருகே மளிகை கடையை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.12 லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள அதிகாரிப்பட்டியை சேர்ந்தவர் மனோகர் (வயது50). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடைக்கு பின்புறம் இவரது வீடு உள்ளது. நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டில் மனைவி மணிக்கொடி மற்றும் குழந்தைகளுடன் தூங்க சென்று விட்டார். நள்ளிரவு 2 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது மளிகை கடையின் பூட்டு பூட்டப்பட்டிருந்த நிலையில் மேற்கூரை ஓடுகள் கீழே சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு கல்லாவில் வைத்திருந்த ரூ.12 லட்சம் ரொக்க பணம் மற்றும் 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கடந்த வாரம் தனக்கு சொந்தமான பொன்நகரத்தில் இருந்த இடத்தை விற்று அந்த பணத்தை கடையில் வைத்திருந்தார். இதனை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்ஜெயக்குமார், பரமசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அப்பகுதியில் பொருத்தி இந்த கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கொள்ளையரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. இதே கடையில் கடந்த 4 வருடத்திற்கு முன்பு பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    கொடைரோடு அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பீட்டர் (வயது 54). இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜூலியட் ஜெபமணி. அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    விடுமுறை என்பதால் கணவன்-மனைவி 2 பேரும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டனர். இன்று காலை அவர்கள் ஊருக்கு திரும்பினர்.

    அப்போது தங்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. உள்ளே இருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. நிலக்கோட்டை டி.எஸ்.பி. பாலக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரீட்டா வரவழைக்கப்பட்டு வீட்டில் மோப்பம் பிடிக்க செய்தனர். அது வீட்டை சுற்றி விட்டு வெளியே ஒரு கி.மீ தூரம் வரை ஓடி நின்றது.

    வீடு பூட்டப்பட்டிருந்ததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டிச் சென்றது தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் மகன் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன். இவரது வீடு திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ளது. இவரது மகன் வெங்கடேசன் திருமணமாகி மெங்கில்ஸ் ரோடு மென்டோன்சா காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீஸ் விசாரணையில் வீட்டில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
    திண்டுக்கல் அருகே பைனான்சியர் வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே செம்பட்டி மூவேந்தர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் 3 கடைகள் உள்ளன. இதனை வாடகைக்கு விட்டுள்ளார்.

    ராஜேந்திரனின் குடும்பத்தினர் சாமி கும்பிடுவதற்காக திருச்செந்தூர் சென்று விட்டனர். ராஜேந்திரன் வழக்கம் போல் பைனான்ஸ் வசூல் செய்ய சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    அது வீட்டில் இருந்து செம்பட்டி பஸ் நிலையம் வழியாக பெட்ரோல் பங்க் வரை சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதனால் போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கீழ் தளத்தில் 3 கடைகள் இயங்கிய நிலையில் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடியனூத்து பஞ்சாயத்துக்குட்பட்ட யாகப்பன்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 4 நாட்களாக பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனை களைகட்டியது. நேற்று இரவு வியாபாரம் முடிந்து விற்பனையாளர்கள் கடையை பூட்டிச் சென்றனர்.

    அப்போது விற்பனை தொகை ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை தரை தளத்தில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிச் சென்றனர். டாஸ்மாக் கடை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் மற்றும் 2 மது பாட்டில் பெட்டிகளை தூக்கிச் சென்றனர். இன்று காலை விற்பனை மேற்பார்வையாளர் வெங்கிடு சுப்பிரமணி மற்றும் பணியாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்த போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்துள்ளனர். துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையின் போது டாஸ்மாக் கடை வியாபாரம் அமோகமாக நடக்கும். இது போன்ற நாட்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
    திண்டுக்கல் அருகே டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    எரியோடு:

    திண்டுக்கல் அருகே எரியோடு போலீஸ் சரகம் ஆர்.கோம்பை கரையானூரை சேர்ந்தவர் சின்னச்சாமி. மினிபஸ் டிரைவராக உள்ளார். இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த அவரது மனைவி ஜீவா 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்றுவிட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    மாலை நேரம் வேலை முடிந்து ஜீவா வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு திறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.43 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளைபோனது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து எரியோடு போலீசில் ஜீவா புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    திண்டுக்கல் அருகே நீதிபதி வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள சொசைட்டி காலனியை சேர்ந்தவர் பிரவீன் குமார். ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் சிவில் நீதிபதியாக உள்ளார். அவரது மனைவி நந்தினி. தாராபுரத்தில் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். நந்தினி தற்போது கர்ப்பமாக இருப்பதால் தாராபுரத்திலேயே தங்கி உள்ளார்.

    நேற்று விடுமுறை என்பதால் தனது மனைவியை பார்ப்பதற்காக பிரவின்குமார் தாராபுரம் சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் மாடிக்கு சென்று லேப்டாப் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலையில் நீதிபதி வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து நீதிபதிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதோடு ஒட்டன்சத்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை போன பொருட்களின் விவரம் முழுமையாக தெரிய வில்லை.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல் அருகே வீடு புகுந்து நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சாணார்பட்டி பஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் முத்து கருப்பையா. இவரது மனைவி பாக்கியலெட்சுமி. இருவரும் கூலித் தொழிலாளர்கள். சம்பவத்தன்று 2 பேரும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர்.

    முத்து கருப்பையாவின் சகோதரி வீட்டுக்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து அவருக்கு தகவல் தெரிவித்தார். முத்து கருப்பையா விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

    பீரோவில் இருந்த 9½ பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் டி.எஸ்.பி. சீனியம்மாள் தலைமையில் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்லில் தாசில்தார் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்நகர் பால்சாமி அய்யர் சந்து பகுதியைச் சேர்ந்தவர் தாஜூதீன். இவர் தனி தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு தாஜூதீன் மற்றும் அவரது மனைவி ஷாகிதா பானு ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு தூங்கி விட்டனர்.

    இன்று காலை எழுந்து பார்த்தபோது ஷாகிதா பானுவின் 6½ பவுன் தங்க சங்கிலி மற்றும் தாஜூதீன் பையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    தாசில்தார் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் வீட்டின் கதவு பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை. கொள்ளையர்கள் எவ்வாறு வீட்டுக்குள் புகுந்து திருடிச் சென்றனர் என்பது தெரியாமல் அவர்கள் குழம்பினர். தாசில்தாருக்கு தெரிந்த நபர்கள் யாரும் கைவரிசை காட்டியுள்ளனரா? என தெரியவில்லை.

    இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ×