search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திண்டுக்கல் அருகே மளிகை கடையை உடைத்து 30 பவுன், ரூ.12 லட்சம் கொள்ளை

    திண்டுக்கல் அருகே மளிகை கடையை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.12 லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள அதிகாரிப்பட்டியை சேர்ந்தவர் மனோகர் (வயது50). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடைக்கு பின்புறம் இவரது வீடு உள்ளது. நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டில் மனைவி மணிக்கொடி மற்றும் குழந்தைகளுடன் தூங்க சென்று விட்டார். நள்ளிரவு 2 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது மளிகை கடையின் பூட்டு பூட்டப்பட்டிருந்த நிலையில் மேற்கூரை ஓடுகள் கீழே சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு கல்லாவில் வைத்திருந்த ரூ.12 லட்சம் ரொக்க பணம் மற்றும் 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கடந்த வாரம் தனக்கு சொந்தமான பொன்நகரத்தில் இருந்த இடத்தை விற்று அந்த பணத்தை கடையில் வைத்திருந்தார். இதனை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்ஜெயக்குமார், பரமசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அப்பகுதியில் பொருத்தி இந்த கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கொள்ளையரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. இதே கடையில் கடந்த 4 வருடத்திற்கு முன்பு பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×