search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruparankundram"

    கோவிலுக்கு வந்த பெண்ணிடம் 6 பவுன் தாலிசெயினை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி, தேங்காய் வியாபாரி. இவரது மனைவி ஹேமலதா (வயது 40).

    சம்பவத்தன்று இவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். சாமி கும்பிட்ட பின் ஹேமலதா 16 கால் மண்டபம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் ஹேமலதா கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்த புகாரின் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபர்களை தேடி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் இன்று காலை நடந்த விபத்தில் வேன்-பஸ் மோதியது. இதில் வேனில் வந்த அய்யப்ப பக்தர்கள் காயமடைந்தனர்.

    திருப்பரங்குன்றம்:

    கடலூரில் இருந்து 17 அய்யப்ப பக்தர்கள் வேன் மூலம் சபரிமலை சென்றனர். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு இன்று காலை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்தனர்.

    அதே போன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து பஸ்சில் வந்த பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்றனர்.

    இன்று காலை 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள மூலக்கரை மேம்பாலத்தில் எதிர்பாராத விதமாக பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.

    இடிபாடுகளில் சிக்கிய அய்யப்ப பக்தர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர். வேன் டிரைவர் பால முருகனின் கால் முறிந்தது.

    இதே வேனில் வந்த செல்வம், தங்கதுரை, நடராஜன் ஆகிய 3 அய்யப்ப பக்தர்களும் காயமடைந்தனர். 4 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மேம்பாலத்தில் நடந்த இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மதுரை கரிமேடு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றத்தில் நடந்து வரும் கார்த்திகை தீப திருவிழாவில் வருகிற 23-ந்தேதி மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 15-ந்தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா தொடர்ந்து வருகிற 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை தங்க சப்பர வாகனத்திலும், இரவில் தங்க மயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் 4-ம் நாளான நேற்று தெய்வானையுடன் முருகப்பெருமான் காலை தங்கச் சப்பரத்திலும், இரவில் சேஷ வாகனத்திலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 22-ந்தேதி மாலை 6.45 மணி அளவில் கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. மறுநாள் 23-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. இதில் பதினாறு கால் மண்டபத்தில் இருந்து கீழரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதிகளில் தேர் வலம் வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 23-ந்தேதி மாலை 6 மணிக்கு கோவிலுக்குள் பால தீபம் ஏற்றப்படுகிறது. அதே நேரத்தில் கோவில் மணி ஓசை ஒலித்ததும் மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக வழக்கம் போல் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை மெருகு ஏற்றி தயார் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 350 லிட்டர் நெய், 150 மீட்டர் நீளமுள்ள கடா துணியில் தயாரிக்கப்பட்ட திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 24-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மகா தீபம் 23-ந்தேதி நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 24-ந்தேதி வரை 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் கொடி மரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 22-ந் தேதி பட்டாபிஷேகமும், 23-ந்தேதி காலை தேரோட்டமும், மாலை மகா தீபமும் நடைபெறுகிறது. திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக 24-ந்தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.

    இதேபோல் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் வருகிற 22-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.
    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram
    மதுரை:

    தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது இடைத்தேர்தல் நடத்தாத தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர்.



    மேலும் தேர்தலுக்கான கால அட்டவணை இருக்கிறதா? என்று கேட்ட நீதிபதிகள், தேர்தல் நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர். #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram 
    திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தனது தாயாரிடமிருந்து இன்று சக்திவேலை வாங்குகிறார்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கு தினமும் 2 வேளை தலா 2 மணிநேரம் சண்முகார்ச்சனை நடைபெறுவது தனி சிறப்பு. சண்முகருக்கு (ஆறுமுகத்திற்கும்) 6 வகை சாத படையல் படைத்து சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று மயில் சேவையாக வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) கோவிலில் உள்ள ஆலய பணியாளர்கள் திருக்கண்ணில் இரவு 7 மணிக்கு வேல் வாங்குதல், நடக்கிறது. இதில் சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் தனது தாயாரான கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்திவேல் வாங்கு கிறார்.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு மாலை 6 மணிக்கு சூரசம்ஹார லீலை நடக்கிறது. இதையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள்.

    திருவிழாவின் முத்தாய்ப்பாக நாளை மறுநாள் காலை 8 மணிக்கு சட்டத் தேர் பவனி நடக்கிறது. இதில் தெய்வானையுடன் முருகப் பெருமான் சட்டத் தேரில் எழுந்தருளுகிறார். காப்பு கட்டி விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சட்டத் தேரை வடம் பிடித்து இழுத்து கிரிவலம் வந்து சாமிதரிசனம் செய்கிறார்கள்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். இதே போல கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 4 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை முருகப் பெருமானுக்கு தங்க கவசம் சாற்றப்படும். ஆகவே ஆண்டிற்கு 2 முறை கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு வருகிறது. இதேபோல இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான வருகிற 14-ந் தேதி மாலை 4 மணிக்கு முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. மேலும் கோவிலின் கருவறையில் கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்படுகிறது.

    முருகப் பெருமான் சூரனை வதம் செய்த உக்ரத்தில் (கோபம்) இருந்து தணிவதற்காக 100 படி அரிசியில் சாதம் படைத்து அதில் சுமார் 15 லிட்டர் தயிர் கலந்து படைக்கப்படுகிறது. இதை பாவாடை தரிசனம் என்று அழைக்கிறார்கள். இத்தகைய நிகழ்ச்சி ஆண்டிற்கு ஒரு முறை கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 4 மணிக்கு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருப்பரங்குன்றம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Denguefever

    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 11). அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சில நாட்களாக ஐஸ்வர்யா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். எனவே அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் காய்ச்சல் குணமாகவில்லை.

    ஐஸ்வர்யாவின் ரத்த மாதிரியை பரிசோதித்ததில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே பன்றி காய்ச்சலுக்கு 4 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் இறந்துள்ளனர்.

    தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும், நிமோனியா மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 161 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தனி வார்டுகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Denguefever

    டிசம்பர் மாதம் நடைபெறும் 4 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது. #Thiruparankundramconstituency #Tiruvarurconstituency
    சென்னை:

    திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2-ந்தேதி மதுரையில் இறந்தார். அவரைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி இறந்தார்.

    இவர்களின் மறைவு காரணமாக திருவாரூர் தொகுதியும், திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

    எம்.எல்.ஏ. மறைந்தால் அந்த தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தேர்தல் கமி‌ஷன் விதி. அதன்படி இந்த இரு தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளது.



    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கிடையே டிசம்பர் மாதத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் மாதம் நடத்த தேர்தல் கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகிறது.

    வழக்கமாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் போது நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டசபை மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்துவது வழக்கம்.

    அந்த வகையில் டிசம்பர் மாதம் 4 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

    மேலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதிகளும் காலியாக உள்ளது. ஆனால் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால் 18 தொகுதிகளையும் காலியிடம் என அறிவிக்கக்கூடாது என்று கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

    எனவே இந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்தால் 18 பேரும் எம்.எல்.ஏ.வாக தொடர வாய்ப்பு கிடைக்கும். எதிராக தீர்ப்பு வந்தால் எம்.எல்.ஏ.வாக நீடிக்க முடியாமல் காலியிடமாக அறிவிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். இதனால் அந்த தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    தகுதி நீக்க வழக்கில் விசாரணை நீடித்தால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவது உறுதி என்பதால் அரசியல் கட்சியினர் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். #Thiruparankundramconstituency #Tiruvarurconstituency

    திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். #ADMK #MLABose #AKBOSE #RIP #Thiruparankundram
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ். இவருக்கு வயது 69, இவர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகரில் வசித்து வந்தார்.

    திடீரென்று நள்ளிரவு இரவு உறங்கி கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏ.கே.போஸ் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர். கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எஸ்.எம்.சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால் அவர் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே உடல் நிலை பாதிப்பால் மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  #Thiruparankundram #ADMK #MLA #AKBose #Death
    ரெயில் தண்டவாளத்தில் தலை நசுங்கி உடல் துண்டான நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் எதிரே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் அருகில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி தலை நசுங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜா போலீசில் புகார் செய்தார். ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கறுப்பு-சிவப்பு கட்டம் போட்ட ரெடிமேட் சட்டையும், நீலநிற பேண்ட்டும் அணிந்திருந்தார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் ரெயிலில் அடிபட்டு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்பது தெரியவில்லை.

    வாலிபர் இறந்து கிடந்த இடம் அருகே பச்சை நிற சீட் கவர் பொருத்தப்பட்ட சைக்கிள் நீண்ட நேரமாக கேட்பாரற்று இருந்தது. இதில் வாலிபர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது குறித்து மதுரை ரெயில்வே போலீஸ் ஏட்டுகள் வேல்முருகன், சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 19-ந்தேதி வைகாசி விசாக திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக மொட்டையரசு உற்சவம் நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 19-ந்தேதி வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடைபெற்றது.

    விழாவையொட்டி காலை 9 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சாமி பல்லக்கில் புறப்பட்டு சன்னதி தெரு வழியாக சென்று கல்யாண விநாயகர் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் அமர்ந்து மொட்டையரசு திடலுக்கு சென்றார்.

    இதையொட்டி வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் மண்டபம் அமைத்திருந்தனர். அவற்றில் எழுந்தருளி சாமி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். தொடர்ந்து மொட்டையரசு திடலுக்கு சென்று அங்கு இரவு 10 மணி வரை தங்கியிருந்தார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து சாமி பூப்பல்லக்கில் புறப்பட்டு இருப்பிடம் சேர்ந்தார்.
    திருப்பரங்குன்றம், சோலைமலையில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முருகப்பெருமான் திருவீதி உலா வந்தார்.
    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதற்படை வீடு என்ற பெருமை கொண்ட திருத்தலமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் அமைந்து உள்ளது. அறுபடைவீடுகளிலேயே திருமண திருத்தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. கோவிலின் கருவறை மலையை குடைந்து அமைந்துள்ளதால், குடவரை கோவிலாக சிறப்பு கொண்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.

    அதே போல இந்த ஆண்டிற்கான விசாக திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு சாமி எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று முருகப்பெருமான் திருவீதி உலா நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 28-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் இருந்து வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமான், தனது சன்னதியை விட்டு இடம் பெயர்ந்து கொறடு மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சாமிக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது.

    முன்னதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திகடனாக பால்குடம் சுமந்தும், பல்வேறு வகையான காவடிகளை எடுத்தும் கோவிலுக்கு வருகிறார்கள். திருவிழா காலங்களில் உற்சவர் சன்னதியில் இருந்து சாமி தெய்வானையுடன் (உற்சவர்) எழுந்தருளி நகர் வலம் வருவது வழக்கம். ஆனால் விசாக திருவிழாவில் மட்டும் ஆண்டிற்கு ஒரு முறை சண்முகர் தனது சன்னதியை விட்டு இடம்பெயருவது தனி சிறப்பாகும்.

    இதேபோல அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலைமுருகன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது வைகாசி மாத வசந்த உற்சவ திருவிழாவாகும். இந்த விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதில் காப்புகட்டுதல், சண்முகார்ச்சனை, மகாபிஷேகம், சாமி புறப்பாடு நடந்தது.

    நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்று, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பிரகாரங்கள் வழியாக முருகப்பெருமான் புறப்பாடு நடந்தது. விழாவை தொடர்ந்து தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வருகிற 28-ந்தேதி 10-ம் நாள் திருவிழாவுடன் வசந்த உற்சவ திருவிழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ×