search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sarkar"

    பணக்காரர்களுக்கு எங்களது அரசாங்கம் செயல் படவில்லை. ஏழைகளுக்கு தான் எங்களது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். #ministerrajendrabalaji #admkgovernment

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாளர் சமுதாயம் சார்பாக பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும், அரசு தேர்வுகளில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அம்மா பேரவை வார்டு கழக செயலாளர் பிச்சை ராஜ் தலைமை வகித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா முன்னிலை வகித்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    குலாளர் சமுதாயத்திற்கு அ.தி.மு.க. அரசு என்றும் உறுதுணையாக இருந்து வருகிறது. ஸ்ரீவில்லி புத்தூரில் செயல்படும் குலாளர் சமுதாய பள்ளி தரம் உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏராளமான விலையில்லா திட்டங்களை நிறைவேற்றினார். இலவசம் என்று சொல்லக்கூடாது என்பதற்காக விலையில்லா மிக்சி, விலையில்லா அரிசி, விலையில்லா கிரைண்டர், விலையில்லா மின்விசிறி என்று கூறினார்.

    இலவசம் வேண்டாம் என்று சொன்னால் இன்றைக்கு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாசை நிறுத்தி வைக்க முடியுமா?

    விலையில்லாமல் கொடுக்கும் சைக்கிள், லேப்டாப் திட்டத்தை நிறுத்த முடியுமா. இன்று சைக்கிள் கொடுப்பதால் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் நகரில் வந்து படிக்க முடிகின்றது. வசதி படைத்தவர்கள் மட்டும் தமிழகத்தில் இருக்கின்றனர் என்று சொல்லிவிட முடியாது.

    தமிழகத்தில் இன்றும் 1கோடியே 80 லட்சம் குடும்பம் விலையில்லா அரிசி வாங்கி சாப்பிட்டுதான் வருகின்றனர்.

    ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திருமண உதவித்தொகை கொடுத்து ஒளியேற்றியவர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    தமிழகம் பெரிய பொருளாதார வளர்ச்சியை இன்னும் எட்டவில்லை. ஏழைகளை இழிவு படுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது செயல்படக்கூடாது. இலவச திட்டங்களை விட்டு விடுங்கள் என்று சொல்பவர்களுக்கு எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் இலவச திட்டங்கள் இல்லை என்று சொன்னால் எத்தனை குடும்பங்கள் பசியோடு இருக்கும் என்று அவர்களுக்கு தெரியாது.

    20 கிலோ அரிசியை வாங்கி சாப்பிடும் குடும்பங்கள் இன்றளவும் இருகின்றனர். ஏழை எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு, பாட்டாளி, படைப்பாளிகளுக்காகதான் எங்களது அரசாங்கம் செயல்படுகின்றது. 1 1/2 மணி நேரம் ஓடும் திரைப்படத்தில் இலவச பொருட்களை தூக்கி வீசி எரிந்தால் கை தட்டலாம். பசி பட்டினியோடு வாழும் குடும்பங்களுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது.

    பணக்காரர்களுக்கு எங்களது அரசாங்கம் செயல் படவில்லை. ஏழைகளுக்கு தான் எங்களது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. ஒருநாள் முதல்வர் சினிமாவில் வேண்டுமானால் ரசித்து பார்க்கலாம். நடைமுறைக்கு ஒத்துவராது. சினிமா வேறு நடைமுறை வாழ்க்கை வேறு.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, புதுப்பட்டி கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர் முத்தையா, உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  #ministerrajendrabalaji #admkgovernment 

    சர்கார் படத்தை மிகப்பெரிய வெற்றி பெறவைத்த அதிமுக-வுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ராதாரவி, நடிகர் விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுவதாக கூறினார். #Sarkar #RadhaRavi #Vijay
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடிகர் ராதாரவி நிருபர்களிடம் கூறியதாவது,

    சர்கார் திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த காட்சிகள் உண்மையாகிவிட்டது. எதிர்ப்பு வந்ததால் தான் சர்கார் திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. எனவே சர்காரை வெற்றி பெற செய்த அ.தி.மு.க.வுக்கு நன்றி என்று கூறிக்கொள்கிறேன்.

    அந்த காட்சிகளை தி.மு.க எதிர்க்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி இல்லை. அவரது பெயர் ஜெயலலிதா என்பது தான் எனக்கு தெரியும். திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதை நான் வரவேற்கிறேன். ஏனெனில் எந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்பதை அறிய ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை திரைப்படத்தை பார்ப்பார்கள். இதுவே இப்படத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

    எம்.ஜி.ஆர் என்ற நடிகரால் வந்த கட்சி அ.தி.மு.க. என்பதால், நடிகர் விஜய்யின் வளர்ச்சியை கண்டு அக்கட்சியினர் பயப்படுகின்றனர். ஆனால் தி.மு.க.வுக்கு யாரையும் கண்டு பயமில்லை. ரஜினி, கமல், விஜய், என யாராக இருப்பினும் அரசியலுக்கு வரலாம். யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டும்.

    கடந்த 50 ஆண்டு கால பாரம்பரியமும், உண்மையான தொண்டர்களை கொண்ட கட்சியாகவும் தி.மு.க திகழ்கிறது. நாங்கள் நடிகர் சங்கத்தில் இருந்தபோது, 6 நடிகைகள் மீது விபசார வழக்கு போடப்பட்டது. அந்த நடிகைகளுக்கு நடிகர் சங்கம் முழு ஒத்துழைப்பு அளித்து அந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது.



    ஆனால் தற்போது மீ டூ விவகாரத்தில் நடிகர் சங்கம் ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு என யாராவது ஒரு தரப்பினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அல்லது அவர்களை சமரசம் செய்து வைக்க முன்வர வேண்டும். அவ்வாறு செய்ய முடியாத நடிகர் சங்க தலைவர் நாசர் போன்றவர்கள் சங்க நிர்வாகியாக இல்லாமல் வெறும் நடிகராகவே இருந்து விட்டு செல்லலாம்.

    ஆளுங்கட்சியின் ஆட்சி காலம் இன்னும் 2½ ஆண்டு காலம் மீதமுள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு உள்ளது. தற்போது நாடகங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது நான் ஒரு நாடகத்தில் இ.பி.கோ. கேசவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்.

    டிராபிக் ராமசாமி போன்ற பொதுநல தொண்டன் கதாபாத்திரத்தினை கொண்ட நகைச்சுவை மற்றும் கருத்து நிறைந்த நாடகத்தை காண அதிக ரசிகர்கள் வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி காரணமாக நாடகக்கலை நலிவுறவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sarkar #RadhaRavi #Vijay

    ‘சர்கார்’ சினிமாவில் சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்யப்படுவதை வரவேற்கிறோம் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார். #Sarkar #ADMK #RajanChellappa
    மதுரை:

    மதுரையில் ‘சர்கார்’ சினிமா திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க. வினர் நேற்று மதியம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மீதான ‘சர்கார்’ காட்சிகள் அனைத்தையும் நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அந்தக்காட்சிகள் நீக்கம் செய்த பின்னர் சினிமாவில் திரையிட வேண்டும் என்றும் தியேட்டர் மானேஜரை சந்தித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வற்புறுத்தினார். இதையடுத்து நேற்று மதிய காட்சியும் ரத்து செய்யப்பட்டது.

    ‘சர்கார்’ படத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

    இன்று மதியம் முதல் திரையிடப்படும் ‘சர்கார்’ படத்தில் சர்ச்சை காட்சிகள் இருக்காது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

    இது குறித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    மறைந்த தலைவர் குறித்தும், அரசின் நலத் திட்டங்கள் குறித்தும் சினிமாவில் விமர்சனங்கள் செய்வது கண்டனத்துக்குரியது.

    தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அ.தி.மு.க. அரசு செய்துள்ள சாதனை திட்டங்களை வேண்டுமென்றே உள் நோக்கத்தில் கொச்சைப்படுத்த சர்கார் திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை தான் அ.தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம். இப்போது சர்கார் படக்குழு சர்ச்சை காட்சிகளை நீக்க முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

    இது போன்று இனி மேலும் நடக்காதவாறு திரையுலகினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மதுரை அண்ணாநகர் பகுதியில் ரூ.22 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அண்ணாநகர் முருகன், ஜெயவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Sarkar #ADMK #RajanChellappa
    ‘சர்கார்’ படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்கி எங்கள் மனதை குளிரச்செய்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #sarkar #ministerrbudayakumar #vijay

    மதுரை:

    நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.

    இந்த திரைப்படத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குறித்தும், அ.தி.மு.க. அரசின் நலத்திட்ட உதவிகளை விமர்சித்தும் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறி அ.தி.மு.க.வினர் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

    இதையொட்டி படக்குழுவினர் சர்ச்சை காட்சிகளை நீக்கி இன்று மதியம் திரையிடப்படும். சர்கார் திரைப்படத்தில் அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ள சர்ச்சை காட்சிகள் இடம் பெறாது என்று அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் மதுரையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் இதய தெய்வமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் அம்மாவின் அரசு மீது களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் தீபாவளிக்கு திரைக்கு வந்த ‘சர்கார்’ திரைப்படத்தில் காட்சி அமைப்புகள் இடம் பெற்றிருப்பதை அறிந்து மனவேதனை அடைந்தோம். அந்த மன உளைச்சல் இன்றைக்கு தீர்ந்திருக்கிறது.

    ‘சர்கார்’ திரைப்படத்தில் நடித்த நடிகரின் ரசிகர்மன்ற நிர்வாகிகள் அனைவரது வீடுகளிலும் கூட அம்மாவின் விலையில்லா திட்டம் சென்றடைந்து உள்ளது. அவர்களும் பயன் அடைந்திருக்கிறார்கள்.


    ஜாதி, இனம், மொழி, மத வேறுபாடின்றி கட்சி மாறுபாடின்றி அனைவரும் பயன்பெற்ற இந்த திட்டங்களை இனி யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது. விமர்சிக்கக்கூடாது.

    ‘சர்கார்’ படக்குழுவினர் அந்த சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு இன்று மதியம் முதல் ‘சர்கார்’ திரைப்படத்தை திரையிட இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அந்த அறிவிப்பால் எங்கள் மனம் குளிர்ந்து விட்டது.

    எனவே படக்குழுவினருக்கு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    1 1/2 கோடி தொண்டர்களின் தெய்வமாக போற்றப் படுகின்ற அம்மாவின் தியாகத்தை, உழைப்பை கொச்சைப்படுத்துகின்ற நோக்கில் இது போன்ற காட்சிகளை இனி எந்த திரைப்படத்திலும் எடுக்க வேண்டாம்.

    இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் சினிமா துறையினர் கவனமாக செயல்பட வேண்டும்.

    ஏழை எளிய மக்கள் வாழ்க்கைத்தரத்தை மேம் படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 1 கோடியே 80 லட்சம் குடும்பதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை வழங்கியவர் அம்மா. விலையில்லா திட்டங்கள் சமூக பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டதாகும்.

    இந்த திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஏராளம். இந்த திட்டம் வரலாற்று சிறப்பு மிக்க திட்டமாகும். இதனை இலவசம் என்ற பெயரில் சினிமாவில் கொச்சைப்படுத்தி அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    அந்த வகையில் தான் ‘சர்கார்’ படக்குழுவுக்கு எங்கள் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்தோம். இப்போது படக்குழுவினரின் அறிவிப்பு, அவர்கள் வழங்கியுள்ள உத்தரவாதம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எங்கள் உள்ளத்தை குளிரச் செய்து அறிவிப்பை தந்த படக்குழுவுக்கு மீண்டும் ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #sarkar #ministerrbudayakumar #vijay

    சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தொடுத்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்துள்ளனர். #ARMurugadoss #Sarkar
    விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுக-வை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

    மேலும் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. 

    அரசை தாக்குவதுபோல் இருக்கும் காட்சிகள் மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்ததுடன், சர்கார் பட பேனர்களும் கிழிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 

    இந்த நிலையில், படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படக்குழு அறிவித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது. 



    இதற்கிடையே படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய நேற்று இரவு போலீஸார் அவரது வீட்டின் கதவை தட்டியதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

    இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸை நவம்பர் 27-ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் கிடைத்தபிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். #ARMurugadoss #Sarkar #Vijay

    போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்ற போது ஏன் போராடவில்லை? என்று அ.தி.மு.க.வினருக்கு டி.டி.வி. தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார். #TTVDhinakaran #Sarkar #ADMK
    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இன்று சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துப் பேசினார்கள்.

    சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவு சரியானது என்றும் இடைத்தேர்தலை சந்திப்பது சரி தான் என சசிகலா கூறினார்.


    சர்கார் விவகாரத்தில் ஆளும் கட்சியினரின் அணுகுமுறை தவறானது. நடுநிலையுடன் சர்கார் படத்தை எடுக்கவில்லை.  இலவச தொலைக்காட்சியை எரித்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    மக்களை திசை திருப்பும் நோக்கில் ஆளும் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆளுங்கட்சியினர் ஏன் போராடவில்லை?

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Sarkar #ADMK
    விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதால் பிரச்சனை முடிந்தது என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். #Sarkar #Vijay
    நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படம் முதல் நாளே வசூலில் சாதனை படைத்தது.

    இப்படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வசனங்களும், காட்சிகளும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகளை நீக்க வலியுறுத்தி, நேற்று மாலை தமிழகம் முழுவதும் சர்கார் படத்தை எதிர்த்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திரை அரங்குகளின் வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. 

    இதையடுத்து சர்கார் படம் திரையிடப்பட்டிருந்த திரை அரங்குகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள கோமளவல்லி என்று அழைக்கப்படும் காட்சியையும், தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறி மிக்சி, கிரைண்டர் தீ வைக்கப்படும் காட்சியையும் மறு தணிக்கையில் தணிக்கை குழுவினர் நீக்கியுள்ளனர்.



    காட்சிகள் நீக்கியதால் சர்கார் பிரச்சனை முடிந்தது என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமியுடன் நடந்த ஆலோசனைக்குப் பின் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 
    சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குவதால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். #Sarkar #Kushboo #Congress
    சென்னை:

    நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்குமாறும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



    இந்நிலையில் சர்காரில் சர்ச்சை காட்சிகளை நீக்குவதால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

    சர்காருக்கு எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை கலாச்சாரம் கட்டவிழ்ந்து விடப்பட்டுள்ளதாகவும் குஷ்பு குற்றம்சாட்டி உள்ளார். #Sarkar #Kushboo #Congress
    விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் மறுதணிக்கையில் நீக்கப்பட்டுள்ளது. #Sarkar #Vijay
    நடிகர் விஜய் நடித்த “சர்கார்” திரைப்படம் தீபாவளி தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படம் முதல் நாளே வசூலில் சாதனை படைத்தது.

    “சர்கார்” திரைப்படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வசனங்களும், காட்சிகளும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஜெயலலிதாவின் இயற்பெயரான “கோமளவல்லி” எனும் பெயர் வரலட்சுமி நடித்துள்ள வில்லி வேடத்துக்கு வைக்கப்பட்டிருப்பதால் அ.தி.மு.க.வினர் கோபம் அடைந்துள்ளனர்.

    மேலும் தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறுவது போன்றும், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட இலவச பொருட்களை அள்ளிப் போட்டு தீ வைப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றதால் அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகளை நீக்க வலியுறுத்தி, நேற்று மாலை தமிழகம் முழுவதும் சர்கார் படத்தை எதிர்த்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



    திரை அரங்குகளின் வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. நடிகர் விஜய்யின் கட்-அவுட்கள் உடைக்கப்பட்டன. இதையடுத்து சர்கார் படம் திரையிடப்பட்டிருந்த திரை அரங்குகளில் பாது காப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். 
    இதைத் தொடர்ந்து சர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள கோமளவல்லி என்று அழைக்கப்படும் காட்சியையும், தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறி மிக்சி, கிரைண்டர் தீ வைக்கப்படும் காட்சியையும் மறு தணிக்கையில் தணிக்கை குழுவினர் நீக்கியுள்ளனர். #Sarkar #Vijay
    மக்கள் நல திட்டங்களை எரிக்கும் காட்சியில் நடிகர் விஜய், முருகதாஸ் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ADMK #SellurRaju #sarkar
    மதுரை:

    சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் காட்சிகள் கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ள நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-


    அருமை தம்பி விஜய் நல்ல நடிகர், எதிலும் முத்திரை பதிக்க வேண்டும் என நினைப்பவர்.  ஆனால் சர்கார் படத்தில் மக்கள் நல திட்டங்களை எரிக்கும் காட்சியில் நடிகர் விஜய், முருகதாஸ் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம். ஜெயலலிதா இருக்கும்போது மக்கள் நல திட்டங்களை வாழ்த்தி பேசிய விஜய், இப்போது படத்தில் எதிர்க்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #SellurRaju #sarkar
    சர்கார் படத்தின் பிரச்சனை தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். #Sarkar #ARMurugaDoss
    நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஆளும் அதிமுக அரசை தாக்குவதுபோல் அமைந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்குமாறும், இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், சர்கார் படத்துக்கு என வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் சர்கார் படம் ஓடும் திரையரங்குகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று நள்ளிரவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் வந்ததால், முன் ஜாமீன் கோரியுள்ளார். இந்த மனு பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. #ARMurugadoss #Sarkar #Vijay
    சர்ச்சை காட்சிகளுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Sarkar
    விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சியில் படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசே நடித்துள்ளார்.

    தமிழக அரசின் பொதுப்பணித்துறை, போக்குவரத்துறை, மின்சார துறை ஆகிய துறைகள் சரியாக செயல்படவில்லை என்றும் படத்தில் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமிக்கு கோமளவல்லி என்று பெயர் சூட்டியுள்ளதும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இது ஜெயலலிதாவின் பெயர் என்று கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதுபோன்ற காட்சிகளை சர்கார் படக்குழுவினரே நீக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலையில் சர்கார் படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் குதித்தனர்.

    அப்படத்துக்காக விஜய் படத்துடன் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். சில இடங்களில் பேனர்கள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த சர்கார் பட பேனர்கள் அகற்றப்பட்டன.

    அ.தி.மு.க.வினர் நடத்திய இந்த போராட்டத்துக்கு எதிராக சில இடங்களில் விஜய் ரசிகர்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

    போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். இதுபோன்ற மோதல் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

    சென்னையில் மட்டும் சர்கார் படம் 68 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி தியேட்டரில் நேற்று மாலையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பேனர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவி தியேட்டரிலும் பேனர்கள் கிழிக்கப்பட்டன.

    இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 68 தியேட்டர்கள் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதி உதவி கமி‌ஷனர்கள் தலைமையில் தியேட்டர்கள் முன்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்று தெரிவித்தார்.
    ×