search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister RB udayakumar"

    ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற மு.க. ஸ்டாலினின் கனவு பலிக்காது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். #Ministerrbudayakumar

    பேரையூர்:

    அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு விளக்கும் வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சுப்புலாபுரத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் இன்று சைக்கிள் பேரணி நடந்தது.

    இதனை தொடங்கி வைத்த அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பறிபோன நாற்காலிகளை பிடிப்பதற்காகவே நாற்காலி இல்லாத கிராம சபை கூட்டம் நடத்துகிறார் ஸ்டாலின். மாவட்டக் கூட்டம் நடத்தினாலே கூட்டம் கூடாது என்ற காரணத்தினால் கிராமம் கிராமாக மக்களை சந்தித்து வருகிறார்.

    நின்று கொண்டு சொன்னாலும் சரி, உட்கார்ந்து மட்டும் அல்ல தலைகீழாக நின்றாலும் ஸ்டாலின் பேச்சு எடுபடாது.

    தினகரன் தனது பலத்தை இழந்து வருகிறார். எனவே ஆட்கள் சேர்ப்பதற்காக ஏதாவது கூறிக்கொண்டு வருகிறார்.

    கஜா புயலுக்காக 2,300 கோடியில் மத்திய அரசு 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அது தவிர தமிழக அரசு 1000 கோடி ஒதுக்கீடு செய்து 90 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    கஜா புயலில் வழங்கப்பட்ட நிவாரணம் புள்ளி விவரங்களாக கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கான நிவாரண தொகை கணக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என ஸ்டாலின் 1 லட்சத்து 11 ஆயிரம் முறை கூறி விட்டார். அவர் கனவு நிறைவேறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ‘சர்கார்’ படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்கி எங்கள் மனதை குளிரச்செய்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #sarkar #ministerrbudayakumar #vijay

    மதுரை:

    நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.

    இந்த திரைப்படத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குறித்தும், அ.தி.மு.க. அரசின் நலத்திட்ட உதவிகளை விமர்சித்தும் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்றிருந்ததாக கூறி அ.தி.மு.க.வினர் சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

    இதையொட்டி படக்குழுவினர் சர்ச்சை காட்சிகளை நீக்கி இன்று மதியம் திரையிடப்படும். சர்கார் திரைப்படத்தில் அ.தி.மு.க.வினர் தெரிவித்துள்ள சர்ச்சை காட்சிகள் இடம் பெறாது என்று அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் மதுரையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் இதய தெய்வமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் அம்மாவின் அரசு மீது களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் தீபாவளிக்கு திரைக்கு வந்த ‘சர்கார்’ திரைப்படத்தில் காட்சி அமைப்புகள் இடம் பெற்றிருப்பதை அறிந்து மனவேதனை அடைந்தோம். அந்த மன உளைச்சல் இன்றைக்கு தீர்ந்திருக்கிறது.

    ‘சர்கார்’ திரைப்படத்தில் நடித்த நடிகரின் ரசிகர்மன்ற நிர்வாகிகள் அனைவரது வீடுகளிலும் கூட அம்மாவின் விலையில்லா திட்டம் சென்றடைந்து உள்ளது. அவர்களும் பயன் அடைந்திருக்கிறார்கள்.


    ஜாதி, இனம், மொழி, மத வேறுபாடின்றி கட்சி மாறுபாடின்றி அனைவரும் பயன்பெற்ற இந்த திட்டங்களை இனி யாரும் கொச்சைப்படுத்தக் கூடாது. விமர்சிக்கக்கூடாது.

    ‘சர்கார்’ படக்குழுவினர் அந்த சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு இன்று மதியம் முதல் ‘சர்கார்’ திரைப்படத்தை திரையிட இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அந்த அறிவிப்பால் எங்கள் மனம் குளிர்ந்து விட்டது.

    எனவே படக்குழுவினருக்கு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    1 1/2 கோடி தொண்டர்களின் தெய்வமாக போற்றப் படுகின்ற அம்மாவின் தியாகத்தை, உழைப்பை கொச்சைப்படுத்துகின்ற நோக்கில் இது போன்ற காட்சிகளை இனி எந்த திரைப்படத்திலும் எடுக்க வேண்டாம்.

    இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் சினிமா துறையினர் கவனமாக செயல்பட வேண்டும்.

    ஏழை எளிய மக்கள் வாழ்க்கைத்தரத்தை மேம் படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 1 கோடியே 80 லட்சம் குடும்பதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை வழங்கியவர் அம்மா. விலையில்லா திட்டங்கள் சமூக பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டதாகும்.

    இந்த திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஏராளம். இந்த திட்டம் வரலாற்று சிறப்பு மிக்க திட்டமாகும். இதனை இலவசம் என்ற பெயரில் சினிமாவில் கொச்சைப்படுத்தி அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    அந்த வகையில் தான் ‘சர்கார்’ படக்குழுவுக்கு எங்கள் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்தோம். இப்போது படக்குழுவினரின் அறிவிப்பு, அவர்கள் வழங்கியுள்ள உத்தரவாதம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எங்கள் உள்ளத்தை குளிரச் செய்து அறிவிப்பை தந்த படக்குழுவுக்கு மீண்டும் ஜெயலலிதா பேரவை சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #sarkar #ministerrbudayakumar #vijay

    தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை பலிகடா ஆக்கிவிட்டு இரட்டை குதிரையில் தினகரன் சவாரி செய்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார். #RBUdayakumar #TTVDhinakaran
    மதுரை:

    மதுரையில் இன்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத சம்பவமாக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் டி.டி.வி. தினகரன் என்ற தனி மனிதனின் பதவி ஆசையும், சுயநலமும் தான்.

    ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று விட்டோம் என்ற ஆணவத்தில் தினகரன் செயல்பட்டு வருகிறார்.

    அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசரும், சேலத்தில் செம்மலையும் சுயேட்சையாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படி சுயேட்சையாக வெற்றி பெற்று விட்டால் யாரும் தலைவராக வந்து விட முடியாது.

    ஏதோ ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக தினகரன் நினைத்துக் கொண்டு தலைக்கனம் பிடித்து அலைகிறார்.

    அவருக்கு கட்சி இல்லை. கொள்கை இல்லை, லட்சியம் இல்லை, நிரந்தர சின்னம் இல்லை. அவரது இயக்கம் தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யப்படக்கூடவில்லை. மக்கள் செல்வாக்கும், தொண்டர்கள் செல்வாக்கும் அவருக்கு கிடையாது.

    டி.டி.வி.தினகரன் போன்ற தனி நபரை முன்னிலைப்படுத்தி அரசியல் களேபரம் நடந்து கொண்டிருக்கிறது. தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு இறைவன் வழங்கிய வரலாற்று தீர்ப்பு.

    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதை போல் தன்னை சுற்றியுள்ளவர்களை திருப்திபடுத்துவதற்காக மேல்முறையீடு என்கிறார். தேர்தலை சந்திப்போம் என்கிறார்.



    இப்படி இரட்டை குதிரையில் சவாரி செய்வதற்கு தினகரன் நினைப்பது இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடந்தது இல்லை.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிர் தியாகத்தால் வந்த பதவிகளை இழந்துவிட்டு இன்றைக்கு சுயநலத்தின் பிடியில் எனது சகோதரர்கள் மனம் விம்மிக் கொண்டிருக்கிறார்கள். சேராத இடத்தில் சேர்ந்து இழக்கக்கூடாததை இழந்து நிற்கிறார்கள்.

    தினகரனின் முகம் களையிழந்து விட்டது. தடுமாறி நிற்கிறது. ஜெயலலிதாவுக்கு ராஜ துரோகம் செய்தவர் தினகரன்.

    கடைசி வரை ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர். எனவே அவரை நம்பி செல்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #RBUdayakumar #TTVDhinakaran

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டதும் மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #chennaisalemexpressway

    மதுரை:

    மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க சைக்கிள் பேரணி மதுரையில் நடைபெற்றுள்ளது.

    சுமார் 600 கி.மீட்டர் தூரம் 1000 இளைஞர்கள் சைக்கிளில் சென்று அரசின் சாதனைகளை 666 வருவாய் கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து விளக்கி உள்ளனர்.

    ஜெயலலிதா பேரவை சார்பில் நடந்த இந்த சைக்கிள் பேரணி மதுரையை அடுத்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்க உள்ளது. வருகிற 27-ந் தேதி சிவகங்கையில் 1000 இளைஞர்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி நடக்கிறது. இதற்காக பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

    மதுரையில் எய்ம்ஸ் அமைந்தது போல தமிழகத்தில் நீண்ட நாட்கள் கோரிக்கை வைக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடினர். மக்கள் எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பளித்து அ.தி.மு.க. அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு விட்டது.

    எந்த திட்டத்துக்கும் அந்த திட்டம் வருவதற்கு முன்பே எதிர்க்கும் சிந்தனை இருக்க கூடாது. ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதன் சாதக, பாதகங்களை அறிந்து மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கும் தற்போது எழுந்துள்ள எதிர்ப்பு என்பது தேவையற்றது.

    அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அந்த சாலையை மக்கள் பயன் படுத்தி பார்க்கட்டும். அந்த சாலை தேவையில்லாதது என்று மக்கள் அப்போது உணர்ந்தால் இந்த அரசு மக்கள் உணர்வுக்கு நிச்சயம் மதிப்பளிக்கும். எனவே அரசின் திட்டங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #chennaisalemexpressway

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 262 ஏக்கர் நிலம் தர தயார் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
    மதுரை:

    எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேற்று பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையான முயற்சி மேற்கொண்டார். அவர் சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அது தவிர திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் எய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைக்கப்படும் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

    எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தென்மாவட்ட மக்களின் இதயக்கனியாக மதுரையில் அமைய உத்தரவு பெற்றுத் தந்துள்ள தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் என்றென்றும் தமிழக மக்கள் கடமைப்பட்டு உள்ளனர்.

    திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 200 ஏக்கர் நிலம் மட்டுமின்றி, கூடுதலாக விரிவாக்கம் செய்ய வசதியாக 62 ஏக்கர் நிலம் என மொத்தம் 262 ஏக்கர் நிலம் தர அரசு தயார் நிலையில் உள்ளது.

    அதனை அளந்து செம்மைப்படுத்தி வருவாய்த்துறையினர் சார்பில் ஒப்படைக்கும் பணிகளின் தொடக்கமாக இன்றே பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அது தவிர நான்கு வழிச்சாலையை ஒட்டி புதிய இணைப்புச்சாலை, குடிநீர் வசதி, மின்சாரம் என மத்திய அரசு தெரிவித்துள்ள அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. எனவே மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலைக்கு மிக அருகே, மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு 15 கி.மீ. தொலைவில், மதுரை ரெயில் நிலையத்திற்கு 14 கி.மீ தொலைவில் என அனைத்து வசதிகளும் உள்ள இந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் 19 மாவட்ட மக்கள் பயனடைவார்கள்.

    ஏற்கனவே மருத்துவ நகரமாக விளங்கும் மதுரையில் அமைந்துள்ள ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் ஆண்டிற்கு 29 லட்சம் வெளிநோயாளிகளும், 19 லட்சம் உள்நோயாளிகளும் பயன் பெற்று வருகிறார்கள். இதற்கெல்லாம் மணி மகுடமாக இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் உயர்தர சிகிச்சை 19 மாவட்டங்களை சேர்ந்த ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் கிடைக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×