search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk government"

    அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த உடன் அமைச்சர்கள் பாதி பேர் பாஜகவுக்கு ஓடி விடுவார்கள் என்று தினகரன் பேசியுள்ளார்.

    வேலாயுதம்பாளையம்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தளவாபாளையம், வேலாயுதம்பாளையம், புகளூர், நொய்யல் உள்ளிட்ட பகுதிகளில் 2-ம் கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீட்டுக்கு வழி அனுப்பி வைக்க ஓட்டு போட்டீர்கள். அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல்ஹமீதுக்கு பரிசுபெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். 2016-ல் யாரை நீங்கள் வெற்றிபெறச்செய்தீர்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அவர் வெற்றிபெற்ற பின் உங்களுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. மீண்டும் மந்திரி பதவி கிடைக்காததால் சோகமாக திரிந்தார்.

    அவருக்கு தன்னை தவிர யார் மீதும் நம்பிக்கை இல்லை. இங்குள்ள பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரைக்கும், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கும் தாக்குபிடிக்க முடியாமல் தி.மு.க.வில் அடைக்கலம் புகுந்துள்ளார். அவரது சுபாவத்திற்கு ஏற்ற கட்சி தி.மு.க.தான்.

    தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதுபோல தி.மு.க. வில் வேட்பாளர் பஞ்சம் இருக்கிறது. தி.மு.க. இப்போது அகதிகள் முகாம் ஆகி விட்டது. இளைஞர் பட்டாளம் அந்த கட்சியில் இல்லை. வயது முதிர்ந்தவர்களின் இயக்கமாக தி.மு.க. ஆகி விட்டது.

    இப்போது மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனைகளை சொல்லி ஓட்டுகேட்க முடியாமல் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்துவோம் என்கிறார். இது ஆடு நனைகிறது என ஓநாய் அழுத கதையாக இருக்கிறது. ஜெயலலிதாவை கொன்று விட்டார்கள் என எங்கள் மீது தி.மு.க.வினர் பொய்களை பரப்பி விட்டனர்.

    நீதி விசாரணை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் நமது வக்கீலின் வாதத்தால் உண்மையை சொல்ல நேரிடுமே என பயந்து கொண்டு ஆஜராகாமல் இருக்கிறார்.

    ஜெயலலிதாவின் உடல்நிலை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் நிலையில் இல்லை என்பதே உண்மை. உடல் நலம் தேறி வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக டாக்டர்கள் விசாரணை கமி‌ஷனில் கூறியுள்ளனர். நீதிமன்றங்களை விட மக்கள் மன்றங்கள்தான் பெரிது. அ.தி.மு.க. தொண்டனின் உடலில் தி.மு.க. எதிர்ப்பு ரத்தம் ஓடுகிறது.

    எனக்கு பதவி ஆசை இருந்திருந்தால் என் சித்தியிடம்(சசிகலா) சொல்லி நானே முதல்வராக பதவி ஏற்றிருப்பேன். கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினோம். ஆனால் முதல்வராக்கிய சசிகலாவையும், என்னையும் கட்சியை விட்டு நீக்கி விட்டனர். அரசியலில் ராஜதந்திரம் என்ற பெயரில் துரோகம் செய்தவர்களை விடக்கூடாது. மோடியின் ஆட்சியில் தொழில்கள் முடங்கி விட்டன. 6 லட்சம் தொழிலாளர்கள் நடு ரோட்டுக்கு வந்து விட்டனர்.

    அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த உடன் இருக்கும் அமைச்சர்களில், கைகளில் கயிறு கட்டி இருக்கும் பாதிபேர் பா.ஜ.க.வுக்கு சென்று விடுவார்கள். மற்றவர்கள் தங்களின் தொழிலை பார்க்க போய்விடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரசாரத்தின்போது மாவட்ட செயலாளர் பி.எஸ். என். தங்கவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    தமிழகத்தில் மே 23-ந் தேதிக்கு பிறகு அதிமுக அரசு முடிவுக்கு வந்துவிடும் என்று மார்க். கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தி.மு.க . வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நேற்று மாலை புதியம்புத்தூரில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தளமுத்துநகர், ஸ்பிக்நகர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது புதியம்புத்தூரில் பேசியதாவது:-

    பாராளுமன்றம் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 22 தொகுதி காலியாக உள்ளது. தேர்தல் ஆணையம் 18 தொகுதிக்கு மட்டும் தான் தேர்தல் நடத்தியது. மீதி ஓட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதிக்கு தேர்தல் நடத்த மறுத்து விட்டார்கள். எடப்பாடி பழனிசாமி நிர்பந்தத்தின் காரணமாக தான் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலோடு அறிவிப்பு வெளியிடவில்லை. தேர்தலை நடத்தினால் வெற்றி பெற மாட்டோம் என எண்ணி தான் 4 தொகுதிகளிலும் தனியாக நடத்த வேண்டும் என்று சொன்னார்கள்.

    தமிழ்நாட்டின் 2 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் குற்றவாளி போல் கை கட்டிக்கொண்டு உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வையுங்கள், நடத்த முடியாது என அதிகாரிகள் கூறுகிறார்கள். இன்னும் மூன்று மாத கால அவகாசம் கேட்கிறார்கள். எங்கு பார்த்தாலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளாட்சித் தேர்தல் நடத்தி இருந்தால் அந்த குடிநீர் பிரச்சினை மக்கள் பிரதிநிதி மூலம் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்.

    நடந்து முடிந்த 39 பாராளுமன்ற தேர்தலிலும், 18 இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடைய வாக்காளர்கள் எழுதி வைத்து விட்டார்கள். 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கு முடிவு வந்துவிடும். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்க வேண்டுமா? முடிவு கட்டுங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு.

    ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தால் தான் நியாயம் கிடைக்கும். கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதி மக்கள் ஆயத்த ஆடை தொழிலாளர்கள், தையல் தொழில் பயிற்சி, ஆயத்த ஆடை சந்தை கேட்டார்கள். ஆனால் கிடைக்கவில்லை. 30 ஆண்டுகாலம் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக ஓட்டப்பிடாரம் இருந்து வருகிறது. தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றால் புதியம் புத்தூரில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பூர் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. அரசின் 2-ம்ஆண்டு சாதனையை விளக்கும் விதமாகவும், பட்ஜெட் விளக்க தொடர் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 39-வது வார்டுக்குட்பட்ட ராக்கியாபாளையம் பிரிவு, 38-வது வார்டுக்குட்பட்ட நல்லூர், 35-வது வார்டுக்குட்பட்ட விஜயாபுரம் ஆகிய 3 இடங்களில், அ.தி.மு.க. அரசின் 2-ம்ஆண்டு சாதனையை விளக்கும் விதமாகவும், பட்ஜெட் விளக்க தொடர் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது தமிழக அரசின் சாதனைகள், பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், வேங்கை விஜயகுமார் ஆகியோரும் விளக்கவுரை ஆற்றினார்கள். இதில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், தொகுதி பொறுப்பாளர் தம்பி மனோகரன், பகுதி செயலாளர்கள் டெக்ஸ் வெல் முத்துசாமி, கருவம்பாளையம் மணி, கிளை செயலாளர்கள் அரசு ஆறுமுகம், சக்திவேல், பால சுந்தரம், பொன்னுசாமி, வி.ஜி. வி பாலு, கண்ணபிரான் உள்பட பலர் பங்கேற்றனர்.

    பணக்காரர்களுக்கு எங்களது அரசாங்கம் செயல் படவில்லை. ஏழைகளுக்கு தான் எங்களது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். #ministerrajendrabalaji #admkgovernment

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாளர் சமுதாயம் சார்பாக பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும், அரசு தேர்வுகளில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அம்மா பேரவை வார்டு கழக செயலாளர் பிச்சை ராஜ் தலைமை வகித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா முன்னிலை வகித்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    குலாளர் சமுதாயத்திற்கு அ.தி.மு.க. அரசு என்றும் உறுதுணையாக இருந்து வருகிறது. ஸ்ரீவில்லி புத்தூரில் செயல்படும் குலாளர் சமுதாய பள்ளி தரம் உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏராளமான விலையில்லா திட்டங்களை நிறைவேற்றினார். இலவசம் என்று சொல்லக்கூடாது என்பதற்காக விலையில்லா மிக்சி, விலையில்லா அரிசி, விலையில்லா கிரைண்டர், விலையில்லா மின்விசிறி என்று கூறினார்.

    இலவசம் வேண்டாம் என்று சொன்னால் இன்றைக்கு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாசை நிறுத்தி வைக்க முடியுமா?

    விலையில்லாமல் கொடுக்கும் சைக்கிள், லேப்டாப் திட்டத்தை நிறுத்த முடியுமா. இன்று சைக்கிள் கொடுப்பதால் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் நகரில் வந்து படிக்க முடிகின்றது. வசதி படைத்தவர்கள் மட்டும் தமிழகத்தில் இருக்கின்றனர் என்று சொல்லிவிட முடியாது.

    தமிழகத்தில் இன்றும் 1கோடியே 80 லட்சம் குடும்பம் விலையில்லா அரிசி வாங்கி சாப்பிட்டுதான் வருகின்றனர்.

    ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திருமண உதவித்தொகை கொடுத்து ஒளியேற்றியவர் ஜெயலலிதா என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    தமிழகம் பெரிய பொருளாதார வளர்ச்சியை இன்னும் எட்டவில்லை. ஏழைகளை இழிவு படுத்தும் வகையில் யாரும் பேசக்கூடாது செயல்படக்கூடாது. இலவச திட்டங்களை விட்டு விடுங்கள் என்று சொல்பவர்களுக்கு எல்லா வசதிகளும் இருக்கும். ஆனால் இலவச திட்டங்கள் இல்லை என்று சொன்னால் எத்தனை குடும்பங்கள் பசியோடு இருக்கும் என்று அவர்களுக்கு தெரியாது.

    20 கிலோ அரிசியை வாங்கி சாப்பிடும் குடும்பங்கள் இன்றளவும் இருகின்றனர். ஏழை எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு, பாட்டாளி, படைப்பாளிகளுக்காகதான் எங்களது அரசாங்கம் செயல்படுகின்றது. 1 1/2 மணி நேரம் ஓடும் திரைப்படத்தில் இலவச பொருட்களை தூக்கி வீசி எரிந்தால் கை தட்டலாம். பசி பட்டினியோடு வாழும் குடும்பங்களுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியாது.

    பணக்காரர்களுக்கு எங்களது அரசாங்கம் செயல் படவில்லை. ஏழைகளுக்கு தான் எங்களது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. ஒருநாள் முதல்வர் சினிமாவில் வேண்டுமானால் ரசித்து பார்க்கலாம். நடைமுறைக்கு ஒத்துவராது. சினிமா வேறு நடைமுறை வாழ்க்கை வேறு.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, புதுப்பட்டி கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர் முத்தையா, உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  #ministerrajendrabalaji #admkgovernment 

    முதுகுளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடந்தது.

    முதுகுளத்தூர்:

    அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி பார்த்திபனூரில் இருந்து அபிராமம், முதுகுளத்தூர், வெண்ணீர் வாய்க்கால், கீழத்தூவல், பாம்பூர் வழியாக பரமக்குடி வரை நடந்தது.

    வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சதன் பிரபாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், விவசாய அணி மாநில இணை செயலாளர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைசெயலாளர் சங்கர பாண்டியன் வரவேற்றார்.

    இதில் 2,700 பேர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க., அரசின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கினர்.

    பேரணியில் ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து (கமுதி), முனியசாமி பாண்டியன் (கடலாடி), அந்தோணிராஜ் (சாயல்குடி), முதுகுளத்தூர் ஒன்றிய அவைத்தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படாத நிலையில் உள்ளது என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #krishnasamy #tngovt

    மதுரை

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அவர் கூறியதாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர புதிய தமிழகம் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக குரல் கொடுத்தது. இதற்கு மத்திய அரசு செவி சாய்த்து எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க உத்தரவிட்டது. மாநில அரசும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய முயற்சி எடுத்தது. இதற்காக மத்திய, மாநில அரசுகளை பாராட்டுகிறேன்.

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அனைத்து தலைவர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் வரலாறுகளை இருட்டடிப்பு செய்யக் கூடாது.

    இதனை வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது பல கிராமங்களில் சாதி ஏற்றத்தாழ்வு இருப்பதை பார்த்தேன். கவிஞர் பாரதிதாசன் கூறியது போல் சாதி ஒழித்தல், நல்ல தமிழ் வளர்த்தல் ஆகியவை மிகவும் அவசியம். இதில் ஒன்றை தவிர்த்தாலும் மற்றொன்று துலங்காது.

    தமிழகத்தில் தமிழ் உணர்வு எவ்வளவு அவசியமோ அதே போல சாதிய ஒழித்தல் அவசியம்.

    தமிழகத்தில் எடப்பாடி அரசு செயல்படாத நிலையில் உள்ளது. எனவே ஆளுநர் சுற்றுப்பயணம் மூலம் அரசு எந்திரங்களை செயல்பட வைக்கிறார். இதனால் மாநில சுயாட்சி கேள்விக்குறியாக உள்ளது. இதனை ஏற்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #krishnasamy #tngovt

    தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க பகல் கனவு காண்கிறார் அவரது கனவு ஒருபோதும் பலிக்காது என்று கடம்பூர் ராஜூ கூறினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை வாகை மர திடலில் அ.தி.மு.க சார்பாக காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு நகர கழக செயலாளர் கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். தங்கவேலு, ஞானராஜ், ராஜா பி.வி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோககிருஷ்ணன் வரவேற்று பேசினார். அல்லி கண்ணன பேசினார். கூட்டத்தில் தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. மேலும் எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க பகல் கனவு காண்கிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது என்றார். மாதிரி சட்டமன்றம் என்று நடத்திய சட்டமன்றத்தை மக்கள் பார்த்து சிரித்ததனால் கூட்டணி கட்சி தலைவர்களை மீண்டும் தூது அனுப்பி சட்டமன்றத்திற்கு வந்தார்.

    இது தான் அவரின் நிலைமை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆட்சியை நடத்தி வருகின்றார். அம்மாவின் கனவை நிறைவேற்றி வரும் இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நடைபெறும் என்றார்.

    மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை போராடி பெற்றுதறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்மாவின் நீண்டநாள் கனவான எய்ம்ஸ் மருத்துவ மனை மதுரையில் அமைவதற்கு தீவர முயற்சி எடுத்து மக்களின் பயன்பாட்டிற்காக அம்மாவின் ஆட்சி தீவிரமாக பாடுபட்டு வருகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார். 

    முடிவில் கணேசன் நன்றி கூறினார். #tamilnews

    அ.தி.மு.க. அரசு அழிவை நோக்கி செல்கிறது என்று கோபியில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார். #TTVDinakaran
    ஈரோடு:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீதிமன்றத்தின் மீது நம்பகத்தன்மை இல்லாததால் தங்க தமிழ்செல்வன் மட்டும் வழக்கை வாபஸ் பெறுகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி வழக்கை சந்திப்பார்கள். சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல் யார் என்று தெரியவரும்.

    சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எங்கள் கட்சி சந்திக்க தயாராக உள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அரசு அழிவை நோக்கி செல்கிறது. அந்த கட்சியை மீட்கும் பொறுப்பை பொதுமக்கள் எங்களிடம் கொடுத்துள் ளார்கள். இனிவரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்டு எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன்பின்னர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு நேற்று முன்தினம் இரவு கோவைக்கு செல்வதற்காக வேனில் புஞ்சைபுளியம்பட்டி வழியாக டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். அப்போது பஸ் நிலையம் முன்பு அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தார்கள். பின்னர் அங்கு திரண்டிருந்த கூட்டத்துக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    தற்போது வெளியான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சம்பந்தமான தீர்ப்பு மக்களை எவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கும் என்பது தெரியும். விரைவில் அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒரு ஆட்சி தமிழகத்தில் அமையும் என்பதை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். 2 மாதங்களில் வரும் தீர்ப்பில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும். அதன்பின்னர் அம்மாவின் ஆட்சி மலரும் என உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    தமிழக சட்டசபையில் எந்த நேரத்திலும் அ.தி.மு.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். #admkgovernment #mkstalin

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி உரிமையை பெற்றதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெரும் பங்கு உள்ளது. சட்ட வல்லுனர்களை கொண்டு சரியான வாதத்தை முன்வைத்ததன் மூலமாக காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆனால் 80 அடி நீர் இருந்தால் மட்டுமே அணையை திறக்க முடியும் என்பது வழக்கம். இருப்பினும் குருவை சாகுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

    மு.க.ஸ்டாலின் காவிரி பிரச்சினையை உணர்வு பூர்வமாக அணுகவில்லை. அரசியலாகவே பார்க்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி பிரச்சினையை காரணம் காட்டி தான் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால் அ.தி.மு.க. அரசு பெரும்பான் மையை நிரூபிக்க எங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது.


    கடந்த தி.மு.க. ஆட்சி தான் மைனாரிட்டி ஆட்சி. தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி மெஜாரிட்டியுடன் தான் செயல்படுகிறது. எந்த நேரத்திலும் அ.தி.மு.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் காம ராஜ் கூறினார். #admkgovernment #mkstalin

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் தீர்ப்பை பெற்றுத்தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் 24-ந்தேதி முதல் 4 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நடத்திய சட்டப் போராட்டங்களும், தர்மயுத்தங்களும் தமிழக மக்களை அரணாகக் காத்து நிற்கின்றன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பிலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் என்ற பதவியிலும் இருந்து, ஜெயலலிதா நடத்திய சட்டப் போராட்டங்களின் வழியில், அ.தி.மு.க. அரசும் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி, சுப்ரீம் கோர்ட்டு மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக் கும் தீர்ப்பைப் பெற்றுள்ளது, அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    உடனடியாக காவிரி நீர்ப் பங்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி முறையாக பருவந்தோறும் விவசாயப் பெருமக்களுக்குப் பயன்படும் வகையில் பங்கிட்டு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு, அதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

    இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமைக்கு பெருமை சேர்க்கும் சரித்திர நிகழ்வாகும். ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலன்காக்க நடைபெற்று வரும் தமிழ்நாடு அரசு, இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் வெற்றியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் வைத்து போற்றி மகிழ்கிறது.

    காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து, காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் சட்டப் போராட்டம் நடத்தி சுப்ரீம் கோர்ட்டு மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக் கும் தீர்ப்பைப் பெற்றுத்தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 24-5-2018 முதல் 27-5-2018 வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    கூட்டம் நடைபெறும் தேதி, இடம், தலைமை தாங்குவோர் விவரம் வருமாறு:-

    24-5-2018 - கரூர் - அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், டி.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர். 24-5-2018 - அரியலூர் - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர் கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் தாமரை எஸ்.ராஜேந்திரன், ஆர்.டி.ராமச்சந்திரன்.

    25-5-2018 - தஞ்சாவூர் - அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. 25-5-2018 - புதுக்கோட்டை - அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து. 26-5-2018 - நாகப்பட்டினம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஓ.எஸ்.மணியன். 26-5-2018 - திருச்சி - பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, ப.குமார் எம்.பி., டி.ரத்தினவேல் எம்.பி. 27-5-2018 - திருவாரூர் - துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.காமராஜ். 27-5-2018 - கடலூர் - அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், ஆ.அருண்மொழிதேவன் எம்.பி.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், கட்சியின் அனைத்து நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கட்சித் தொண்டர்களும், விவசாயப் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ×