என் மலர்
செய்திகள்

அதிமுக அரசு செயல்படாத நிலையில் உள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
மதுரை
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அவர் கூறியதாவது:-
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர புதிய தமிழகம் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக குரல் கொடுத்தது. இதற்கு மத்திய அரசு செவி சாய்த்து எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க உத்தரவிட்டது. மாநில அரசும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய முயற்சி எடுத்தது. இதற்காக மத்திய, மாநில அரசுகளை பாராட்டுகிறேன்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அனைத்து தலைவர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் வரலாறுகளை இருட்டடிப்பு செய்யக் கூடாது.
இதனை வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது பல கிராமங்களில் சாதி ஏற்றத்தாழ்வு இருப்பதை பார்த்தேன். கவிஞர் பாரதிதாசன் கூறியது போல் சாதி ஒழித்தல், நல்ல தமிழ் வளர்த்தல் ஆகியவை மிகவும் அவசியம். இதில் ஒன்றை தவிர்த்தாலும் மற்றொன்று துலங்காது.
தமிழகத்தில் தமிழ் உணர்வு எவ்வளவு அவசியமோ அதே போல சாதிய ஒழித்தல் அவசியம்.
தமிழகத்தில் எடப்பாடி அரசு செயல்படாத நிலையில் உள்ளது. எனவே ஆளுநர் சுற்றுப்பயணம் மூலம் அரசு எந்திரங்களை செயல்பட வைக்கிறார். இதனால் மாநில சுயாட்சி கேள்விக்குறியாக உள்ளது. இதனை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #krishnasamy #tngovt






