search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "O Panneerselvam"

    • ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • மாவட்ட செயலாளர்கள் சிலர் தங்களுக்கு ‘சீட்’ கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் அவருக்கு ராமநாதபுரம் மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் தொகுதி பங்கீட்டில் முறையாக செயல்பட வில்லை என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை எழும்பூரில் உள்ள மண்டபத்தில் கூட்டினார். அதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஓ.பி.எஸ். முன்னிலையில் மோதிக் கொண்டனர். மாவட்ட செயலாளர்கள் சிலர் தங்களுக்கு 'சீட்' கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

    ஆனால் ஒரு தொகுதி மட்டுமே பா.ஜ.க. தரப்பில் கொடுக்க முன் வந்ததால் மாவட்ட செயலாளர்கள் கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, எம்.எம்.பாபு ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஓ.பி.எஸ்.முன்பாகவே இருவரும் கடுமையான வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஓ.பி.எஸ். மற்றும் மாவட்ட செயலாளர் சதீஷ் ஆகியோர் அவர்களை விலக்கி சமாதானப்படுத்தினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • டி.டி.வி.தினகரனுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க தயாராக உள்ளது.
    • பிற கட்சிகளுக்கும் தாமரை சின்னத்தில் ஒவ்வொரு தொகுதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. நீண்ட நாட்கள் பேச்சுவார்தைக்கு பிறகு பா.ஜ.க.-பா.ம.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு 10 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

    பா.ம.க.விற்கு மட்டுமே தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டவர்களுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.

    பிரதமர் நரேந்திர மோடியுடன் சேலத்தில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கைகோர்க்கின்றனர். பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு, எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது போன்றவை இறுதி செய்யப்படாமல் உள்ளன.

    பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணம் இன்று முடிவடைவதால் நாளை மறுநாள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விடும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தாமரை சின்னத்தில் நிற்க பா.ஜ.க. வலியுறுத்துகிறது. ஆனால் அவர் தனிச்சின்னத்தில் நிற்பதில் உறுதியாக இருக்கிறார். பா.ஜ.க. சின்னத்தில் நின்றால் 4 தொகுதிகள் வரை தர சம்மதிப்பதாகவும், தனி சின்னத்தில் நிற்க முன்வந்தால் 2 தொகுதிகள் கொடுக்க முன்வருவதாகவும் கூறப்படுகிறது.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க தயாராக உள்ளது. பிற கட்சிகளுக்கும் தாமரை சின்னத்தில் ஒவ்வொரு தொகுதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என இறுதி செய்யப்படாமல் இருப்பதால் அதனை பேசி நாளை முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டதால் ஓரிரு நாட்களில் தொகுதிகளை ஒதுக்கி விட்டு களத்தில் இறங்க பா.ஜ.க. தீவிரமாகி விட்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டு மீதமுள்ள தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார்.
    • மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை நந்தனம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்தநிலையில் இன்று மாலை கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ (வாகன பேரணி) செல்கிறார். கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் இந்த வாகன பேரணி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் மாலை கோவை வருகிறார். பின்னர் சாய்பாபா காலனிக்கு சென்று வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி இரவு கோவையில் தங்குகிறார்.

    பின்னர் நாளை (19-ந் தேதி) கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 11.40 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான பிரசாரக்கூட்டம் சேலத்தில் நாளை மதியம் 1.30 மணியளவில் நடக்கிறது. இதற்காக சேலம் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாலக்காட்டில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதியம் 1.30 மணியளவில் மேடை அமைக்கப்பட்டுள்ள சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்திற்கு வருகிறார். இதற்காக அங்கு 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம் வரும் பிரதமர் மோடிக்கு சேலம், நாமக்கல் , கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது மக்களையும் சந்திக்கிறார்.

    இந்த கூட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் முதல் முறையாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், தேவநாதன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    • அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசி உள்ளார்.
    • தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் உடன் ஒருங்கிணைந்து செயல்பட தி.மு.க. முடிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாக களம் இறங்கியுள்ளன.

    இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு இடம் ஒதுக்கப்படாத நிலையில் மேல்-சபை எம்.பி. பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேல்-சபை எம்.பி. பதவி மட்டுமே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வழங்கப்பட்டிருப்பது அந்த கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


    இருப்பினும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடாத நிலையில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியிலும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    கமல்ஹாசனை பொறுத்தவரையில் கட்சி தொடங்கிய நாளில் இருந்தே பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் மோடி எதிர்ப்பை கடுமையாக காட்டி வருகிறார் பாரதிய ஜனதா ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு முன்பு பல்வேறு அறிக்கைகளில் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

    தேர்தல் நேரங்களில் இது தொடர்பாக வீடியோக்களையும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியினரால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிரசாரம் செய்யும் போது மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை அதிக அளவில் விமர்சித்தும் பேச உள்ளார். மோடி எதிர்ப்பை முழுமையாக கையில் எடுக்க அவர் முடிவு செய்து இருக்கிறார். தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் ஆதரித்து அவர் தேர்தல் பிரசார களத்தில் பேச இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.


    இந்திய குடியுரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சமீபத்திய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது கடுமையாக விமர்சிக்க உள்ளார்.

    இது பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும் போது, "எங்கள் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு நிச்சயம் வலு சேர்க்கும் வகையில் அமையும். அதே நேரத்தில் அவரது பிரசாரம் மக்கள் மத்தியில் பேசப்படும் வகையிலும் மாறி இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    இதற்கிடையே அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது தேர்தல் பிரசாரத்தில் மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் பற்றி இருவரும் பேசி இருக்கிறார்கள்.

    இந்த சந்திப்பு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவையும் வெளியிட்டு உள்ளார். அதில் நாடு காக்கும் ஒற்றை நோக்கம். அதற்கான செயல்பாடுகளின் திட்டம் பற்றி ஆலோசிக்க தமிழ்நாடு அமைச்சர் அன்பு இளவல் டி.ஆர்.பி.ராஜாவை சந்திப்பு. நிறைவான உரையாடல் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் கமல்ஹாசன் சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழை நேசித்து அவரிடமே கலைஞானி என்று பட்டம் பெற்றவர், சமத்துவமும் பகுத்தறிவும் அரசியல் பார்வையாகக் கொண்டிருப்பவர், மதவெறி-மக்கள் விரோத பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட இந்தியா கூட்டணியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து களமாடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பாராளுமன்றத் தேர்தல் களத்திலும்-தளத்திலுமான ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து ஆலோசித்தோம்.

    மகத்தான வெற்றிப் பயணத்தின் தொடக்கம் என்று அதில் கூறி இருக்கிறார். இதன் மூலம் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் உடன் ஒருங்கிணைந்து செயல்பட தி.மு.க. முடிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    • இந்து சமுதாயமே அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
    • தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா ஒரு ஜனநாயக நாடு. தலையை எண்ணுவது தான் ஜனநாயகத்தின் வேலை. எண்ணிக்கையை வைத்து தான் தெருவில், ஊரில், அரசியலில், பாராளுமன்றத்தில் மரியாதை. நம்பர் இருந்தால் தான் ஜெயிக்க முடியும். நான் சமூகத்தைச் சார்ந்து சொல்லவில்லை, மதத்தையும் சேர்த்துதான் சொல்கிறேன்.


    இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டேபோகிறது. இந்து சமுதாயமே அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் சமநிலை இருக்காது என்பதால் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என கூறுகிறேன்.

    பாராளுமன்ற தேர்தல் வருகிறது, நல்லவருக்கு வாக்களியுங்கள். தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார்கள் என நம்பி பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள். ஓட்டு போட ரெட்டியார் சமூகம் தயங்க கூடாது. பணம் வாங்காமல் வாக்களியுங்கள். நாங்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என எழுதி கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்களில் உறுதிமொழி பதாகைகள் வைக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்தால் நிச்சயம் பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி இரு தினங்களில் தமிழக பயணத்தை மேற்கொண்டு முடிக்க உள்ளார். அதற்குள் இந்தியாவினுடைய பா.ஜ.க. வேட்பாளர்கள் முழு பட்டியல் வெளியிடப்படும். பா.ஜ.க.வும், கூட்டணி கட்சியும் 39 தொகுதியிலும் பிரதமர் மோடி வேட்பாளராக நிற்கிறார் என எண்ணிதான் நாங்கள் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ளோம். மீண்டும் மூன்றாம் முறையாக மோடி 3.0, அதில் வெற்றி பெறுவோம்.

    தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க.வின் வாக்குகள் பா.ஜ.க.விற்கு நல்ல பலன்களாக வந்தடையும். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' பற்றி அடிப்படை அறிவு இல்லாமல் தி.மு.க. கட்சி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்துவது. இது ஏற்கனவே இருந்த நடைமுறைதான். இடையில் இந்த நடைமுறை மாறி விட்டது.


    கப்பலூர் சுங்கச்சாவடி யாருடைய ஆட்சியில் வந்தது என மத்திய நெடுஞ் சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கேள்வி கேட்டதற்கு, கனிமொழி மற்றும் மாணிக்கம் தாகூர் இருவரும் வாயை பொத்திக் கொண்டனர். சுங்கச்சாவடி நடைமுறையே வரும் காலத்தில் மாற உள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ஆங்காங்கே சென்சார் மூலம் பயணம் முறையில் மாற்றப்பட்டு எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோமோ அதற்கு ஏற்ப வரி வசூல் செய்யப்படும்.

    இதற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் கப்பலூர் சுங்கச்சாவடி இருக்காது. இந்தப் பகுதி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்லும் பொழுது கப்பலூர் சுங்கச்சாவடி இருக்காது. ஜனநாயகத்தை தி.மு.க. கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே நோட்டுக்கு வாக்களிக்க வேண்டாம் என பா.ஜ.க. சார்பில் வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்வதுடன், ஒவ்வொரு கிராமப்புற பகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று பதாகைகளை வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • உலக மக்கள் நலம் பெற சுவாமி தரிசனம் செய்ததாக பதிலளித்தார்.

    திருச்செந்தூர்:

    முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று இரவு வந்தார்.

    திருச்செந்தூரில் தனியார் விடுதியில் தங்கிய அவர் இன்று அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் தீர்த்தம் எடுத்துகொண்டு நேராக கோவிலுக்கு சென்று காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் சத்ரு சம்கார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து காலை 6 மணிக்கு மூலவருக்கு நடத்த அபிஷேகத்தில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

    தீர்ப்பு இன்று வரவுள்ள நிலையில் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுவாமி தரிசனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், உலக மக்கள் நலம் பெற சுவாமி தரிசனம் செய்ததாக பதிலளித்தார். மேலும் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்ய வந்தபோது எடுத்த படம்.

    • பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
    • தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஓ.பி.எஸ். ஆலோசித்து வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளார்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட ஓ.பி.எஸ். விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினரோ தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வருகிறார்கள்.

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓ.பி.எஸ். தவித்து வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருவதாக கூறிவரும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையில் போட்டியிட்டால் நமது தனித்தன்மையை இழந்து விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

    இதனை ஆமோதித்துள்ள ஓ.பி.எஸ். அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்பது பற்றி ஆலோசித்து வருகிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இது ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தல் நேரத்தில் சிக்கலை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. இதனால் தாமரை சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிடுவது பற்றி ஓ.பி.எஸ். ஆலோசித்து வருகிறார்.

    ஆனால் அவரது இந்த முடிவை பாரதிய ஜனதா கட்சியினர் விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், "நீங்கள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால்தான் சரியாக இருக்கும். புதிதாக ஒரு சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் மக்களிடம் அதனை எளிதாக கொண்டு போய் சேர்க்க முடியாது" என்று கூறி வருகிறார்கள்.

    இது ஓ.பி.எஸ்.சுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் சொல்வதை கேட்பதா? ஆதரவாளர்களின் கருத்துபடி செயல்படுவதா? என்று முடிவெடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். திணறி வருகிறார்.

    • பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் களத்தில் இருப்போம்.
    • பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினார்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் டி.டி.வி.தினகரனும் சேர முடிவு செய்துள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கு காய் நகர்த்தி வந்தனர்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருவருக்கும் தலா 4 தொகுதிகள் வரையில் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    கட்சியும், கொடியும் இல்லாமல் தவித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் பெரிய கேள்வியாக மாறி இருந்தது.

    பாரதிய ஜனதா கட்சி சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட்டால்தான் 4 தொகுதிகளை ஒதுக்க முடியும் என்றும் வேறு சின்னத்தை நீங்கள் விரும்பினால் 2 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்றும் பாரதிய ஜனதா சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் ஓ.பி.எஸ். இதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டார். அ.தி.மு.க.வை மீட்க இப்போதும் போராடி வருகிறோம். இந்த சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எதிர்கால அரசியலை பாதிக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறியிருப்பதால் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு மட்டும் தெரிவிக்க ஓ.பி.எஸ். அணி அதிரடியாக முடிவெடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி விரைவில் அது தொடர்பான முடிவை அறிவிக்க உள்ளார். இரட்டை இலை சின்னம் கேட்டு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் அதில் தெளிவான முடிவு ஏற்பட்ட பிறகு அரசியல் களத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்த முடிவெடுத்துள்ளார்.

    இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ள இந்த தேர்தல் புறக்கணிப்பு முடிவு அவரது ஆதரவாளர்களை சோர்வடைய செய்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறும் போது, தற்போது எங்களிடம் கட்சி, சின்னம் என எதுவும் இல்லை. இந்த சூழலில் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எங்களது எதிர்கால நலனை பாதிக்கும் என்பதால் இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது என முடிவெடுத்து இருக்கிறோம்.

    விரைவில் அது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிடுவார். இருப்பினும் பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் களத்தில் இருப்போம். பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார் என்றார்.

    • சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.
    • பா.ஜனதா கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என்பது பற்றி விரைவில் தெரிவிப்போம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட ஓ.பி.எஸ். முடிவு செய்துள்ளார்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 2 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பேசினர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது ஓ.பன்னீர்செல்வத்திடம் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் அவரோ, நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி வருகிறோம். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இது போன்ற சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் தங்களது தனித்தன்மை போய் விடும் என்று தெரிவித்துள்ளார்.

    இரட்டை இலை சின்னம் தற்போது எடப்பாடி பழனிசாமியிடமே உள்ளது. எனவே பொதுவான சின்னத்தில் போட்டியிடுவதைவிட தாமரை சின்னத்திலேயே களம் இறங்குவது நல்லது என்றும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சந்தித்து பேசினார்கள். இரண்டாம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது போட்டியிடும் தொகுதிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.


    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை எடுத்துக் கூறி அந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம். பா.ஜனதா கூட்டணி மெகா கூட்டணியாக மாறி இருக்கிறது. பாரதிய ஜனதா நிர்வாகிகளுடன் நாங்கள் நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக வெளியாகி இருக்கும் தீர்ப்பு தற்காலிகமானதுதான். சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

    வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதே என்று கேட்கிறீர்கள்.

    என்னையும்தான் ஒருங்கி ணைப்பாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. எனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பான சாதகம், பாதகங்களை தேர்தல் ஆணையம் விசா ரித்து முடிவை அறிவிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    கூட்டணி என்று வந்து விட்டால் ஒரே தொகுதிகளை இரண்டு, மூன்று கட்சிகள் கேட்பது இயல்பானதுதான். அவற்றையெல்லாம் பேசி சரி செய்து போட்டியிடு வோம். பா.ஜனதா கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என்பது பற்றி விரைவில் தெரிவிப்போம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    • சசிகலாவை நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் பேச வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.
    • பொது சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி புதிய கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்ப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, தங்கள் அணிக்கு 15 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டு பாரதிய ஜனதா கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். இருப்பினும் அதனை வெளிக்காட்டாமல் எத்தனை தொகுதிகளை உங்களுக்கு ஒதுக்குவது என்பது பற்றி பேசி முடி வெடுத்துக் கொள்ளலாம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்து இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தில் இருந்தவர். அ.தி.மு.க.வை மீட்பதற்காக சட்ட நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற் கொண்டு வருகிறார்.

    அதனால் அவர் 15 தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்று எண்ணியிருக்கலாம் என்றார். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தற்போது கட்சியும் இல்லை. கொடியும் இல்லை. எனவே அவருக்கு 15 தொகுதிகளை கொடுப்பது என்பது மிகப் பெரிய எண்ணிக்கையாகும்.

    4 அல்லது 5 இடங்களை ஓ.பி.எஸ்.சுக்கு ஒதுக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தை தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி காய் நகர்த்தி வருகிறது.

    இதுதொடர்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது பா.ஜனதா நிர்வாகிகள் அவரிடம் நேரடியாகவே வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வமோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.


    அ.தி.மு.க. விவகாரம் இன்னும் முடிவுக்கு வராமலேயே உள்ளது. நாங்கள் தான் உண்மையான அ.தி. மு.க. என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இது போன்ற சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் தங்களது தனித்தன்மை பாதித்துவிடும் என்றும் எனவே பொது சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியினர் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்கள். இதை தொடர்ந்து அதுபற்றி ஆலோசித்து கூறுகிறேன் என்று ஓ.பி.எஸ். தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனால் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி முடிவெடுக்க முடியாமல் ஓ.பி.எஸ். குழப்பத்தில் உள்ளார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணிக்கு சசிகலாவின் ஆதரவை கேட்டுப் பெற வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

    சசிகலாவை நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சியினர் பேச வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். கூறியுள்ளார். ஆனால் இதனை பாரதிய ஜனதா கட்சியினர் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தென் மாவட்டங்களில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றால் டி.டி.வி. தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர் கேட்கும் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கட்சியினரிடம் வலியுறுத்தி உள்ளார்.

    இதனை ஏற்றுக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியினர் டி.டி.வி. தினகரனுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி பேச்சுவார்த்தைகளை விரைவாக முடித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

    • முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது.
    • மற்ற கட்சிகளுடன் கேட்டு அனைவரும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, வி.கே.சிங் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடரும்.

    * பாஜக பொறுப்பாளர்கள் எங்களுடைய கோரிக்கைகளை தெளிவாகக் கேட்டுள்ளனர்.

    * தொகுதிகள் குறித்து மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.

    * மற்ற கட்சிகளுடன் கேட்டு அனைவரும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படும்.

    * டிடிவி தினகரன் தனியாக அரசியல் கட்சியை நடத்துகிறார். அவரையும் அழைத்துப் பேச இருக்கிறார்கள் என்று கூறினார்.

    • கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர்.
    • எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர்.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதாக முன்னாள் முதலமைச் சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் அறிவித்தனர்.

    தொகுதி பங்கீடு குறித்து இதுவரையில் வெளிப்படையான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வினர் பேசி வருகின்றனர்.

    தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஒரு வாரத்தில் 2 முறை சுற்றுப் பயணம் செய்தார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜனதாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை.

    இந்நிலையில் பா.ஜனதா தொகுதி பங்கீடு குழுவினர் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரனை விரைவில் சந்திக்க முடிவு செய்து உள்ளனர். பா.ஜ.க. விடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 10 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளனர். அதே போல் டி.டி.வி. தினகரன் தரப்பிலும் 10 தொகுதிகள் கேட்கின்றனர்.

    கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர்.

    ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகிய இருவருக்கும் சேர்ந்து பா.ஜ.க. 10 தொகுதிகளை ஒதுக்க முன் வருவதாக தெரிகிறது. அதை இருவரும் சமமாக தலா 5 தொகுதிகள் வீதம் பிரித்து கொள்ளும்படி கூறி உள்ளனர்.

    இது குறித்த பேச்சு வார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகள் கேட்கப்படுகிறது என்ற விவரம் வருமாறு:-

    1.தேனி-ப.ரவீந்திர நாத்குமார், 2. ஸ்ரீபெரும்புதூர், 3.திருச்சி, 4.மதுரை, 5.சிவகங்கை, 6.தஞ்சை, 7.வட சென்னை, 8.காஞ்சிபுரம், 9.கிருஷ்ணகிரி, 10.கோவை

    அ.ம.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள்: 1.ராமநாதபுரம், 2.திருநெல்வேலி, 3.திருச்சி, 4.தென்சென்னை, 5.வேலூர், 6.நீலகிரி, 7.நாகப்பட்டிணம், 8.விழுப்புரம், 9.திண்டுக்கல், 10.திருவள்ளூர்

    தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனும் தனி சின்னத்தில் நிற்க விரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.

    ×