search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode East By Polls"

    • பாதுகாப்புப்பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
    • தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    சென்னை :

    தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இந்திய தேர்தல் கமிஷனின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது. துணைத் தேர்தல் கமிஷனர் அஜய் தலைமையில் காணொலிக்காட்சி மூலம் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணன் உன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இடைத்தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேவையான ஆலோசனைகளை இந்திய தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

    அந்தத்தொகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பறக்கும் படைக்குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுக்களின் எண்ணிக்கை 3-ல் இருந்து 4-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக ஆயிரத்து 430-க்கும் அதிகமான வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 16-ந்தேதி (இன்று) இந்த எந்திரங்களில் 2-ம் கட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன.

    பாதுகாப்புப்பணியில் 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 2 கம்பெனிகளும், ரிசர்வ் பாதுகாப்புப்படையை சேர்ந்த 2 கம்பெனிகளும், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த ஒரு கம்பெனியும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், அந்தத் தொகுதியில் பாதுகாப்புப்பணியை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு ஆயுதப்படையை சேர்ந்த 2 கம்பெனிகளும் அந்தத்தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் சம்பந்தமாக எந்தவித புகார்கள் அளிக்கப்பட்டாலும் அதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷனின் சார்பில் தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தத்தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை தேர்தல் கமிஷனிடம் பார்வையாளர்கள் அனுப்பி வைப்பார்கள்.

    புகார்களை ஆதாரத்துடன் அளித்தால் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பார்வையாளர்கள் மற்றும் அனைத்து தேர்தல் தொடர்பான அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் அறிவுரை வழங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்குசட்டமன்ற தொகுதிக்கு 27-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்குசட்டமன்ற தொகுதிக்கு வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்ததால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

    காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு உள்பட 77 பேர் களத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் காங்கிரசுக்கும், அ.தி.மு.க.வுக்கும்தான் நேரடி போட்டி நடக்கிறது.

    இருதரப்பினரும் தீவிர ஓட்டுவேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 15-ந் தேதி முதல் 5 நாட்கள் ஓட்டுவேட்டை நடத்துகிறார்.

    இதுதவிர கூட்டணி கட்சிகளும் களம் இறங்கி பிரசாரம் நடத்த இருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நடைபெறுவதால், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

    தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டு உள்ளன.

    தேர்தலையொட்டி 4 நிலை கண்காணிப்பு குழுக்களும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

    பல்வேறு இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடிகளை அமைத்து ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்றால் அவைகள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுகின்றன.

    பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே கடந்த 8-ந் தேதி சென்னை ஆவடி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 160 வீரர்கள் ஈரோட்டுக்கு வந்தார்கள்.

    மத்திய துணை ராணுவப்படை வீரர்களும் வரத் தொடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் ரெயில் மூலம் வந்தனர். நேற்று காலை மேலும் 2 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரெயில் மூலம் வந்தனர்.

    இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 4 கம்பெனி வீரர்கள் நேற்று மாலை வந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் ஒரு கம்பெனி வீரர்கள் ஈரோடு வர உள்ளனர்.

    மத்திய துணை ராணுவ வீரர்கள் வருகையை தொடர்ந்து நேற்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்டு உள்ள இடங்களில் 2 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடந்தது. ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தொழிலக பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் ரதோர் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் 128 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்கள் 90 பேர், சட்டம்-ஒழுங்கு போலீசார் 30 பேர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன் கூறும்போது, "வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது. நாளை (அதாவது இன்று) முதல் மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பதற்றமான பகுதிகளில் ரோந்து, வாகன சோதனை மற்றும் பறக்கும் படை குழுவில் பணி செய்வார்கள். நிலையான குழுவிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் தினத்தன்று பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு உள்ள 32 வாக்கு மையங்களிலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்" என்றார்.

    இதற்கிடையே வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் பணி அதிகாரிகள் மற்றும் பெல் நிறுவன என்ஜினீயர்களும் ஈடுபட்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மேலும், ஒரு நோட்டாவுக்கான இடம் சேர்த்து 78 இடங்கள் வேண்டும். எனவே ஒரு கட்டுப்பாட்டு கருவியுடன் தலா 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. இதனால் மொத்தம் 1,430 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும். ஏற்கனவே 286 எந்திரங்கள் தயாராக உள்ளன. எனவே கூடுதலாக 1,144 வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 3 நாட்களில் முடிந்து விடும்.

    பாதுகாப்புக்காக 5 கம்பெனி துணை ராணுவப்படை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே தேர்தல் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 93 வழக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுமா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

    இவ்வாறு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறினார்.

    • திருமங்கலம் பார்முலாவை இந்த இடைத்தேர்தல் மிஞ்சிவிடும்.
    • பண பலம், அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற தி.மு.க. முயல்கிறது.

    சென்னை :

    சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-

    ஈரோட்டில் அ.தி.முக. வேட்பாளர் அறிமுக கூட்டம் 9-ந் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு மக்கள் அதிகமாக சென்றுவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க.வினர் ஆங்காங்கே சட்டவிரோதமாக பந்தல் போட்டு, பிரியாணி மற்றும் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏழை எளிய மக்களை கூட்டத்துக்கு வரவிடாமல் தடுத்துவிட்டனர். திருமங்கலம் பார்முலாவை இந்த இடைத்தேர்தல் மிஞ்சிவிடும்.

    ஆனால் அ.தி.முக. வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு 50 ஆயிரம் பேர் வந்தார்கள். எனவே தி.மு.க. எடுத்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

    பண பலம், அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற தி.மு.க. முயல்கிறது. அ.தி.முக. கூட்டத்துக்கு மக்களை வர விடாமல் பணம், பிரியாணி கொடுத்து தடுக்கிறது.

    கூட்டணிக் கட்சி தர்மத்தின்படி த.மா.கா.விடம் கேட்டு அ.தி.மு.க. போட்டியிடுகிறது. ஆனால் தி.மு.க. அங்கு ஏன் காங்கிரஸ் கட்சியை நிற்க வைத்துள்ளது? தோல்வி பயம்தான் காரணம். தைரியம் இருந்தால் தி.மு.க. அங்கு போட்டியிட்டிருக்க வேண்டும்.

    வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ஜ.க. கட்சித் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்றாலும், அந்த கட்சியின் சார்பில் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி இருந்ததால், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

    இரட்டை இலைக்கான மவுசு போய்விட்டது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருப்பதை, நன்றி கெட்டவர்களின் வாக்குமூலமாகத்தான் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இல்லை என்றாலும்கூட இரட்டை இலை வெற்றி சின்னம்தான். அதன் மவுசு குறைந்துவிட்டது, இனிமேல் வாய்ப்பு இல்லை என்று அவர் கூறுவதை, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கிற நிலையாகத்தான் நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.

    தேர்தல் கமிஷனிடம் அளிக்கும் புகார்களுக்கு ஆதாரமாக அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக அமைப்பில் புகார் அளிப்பது, அடிப்படை உரிமை. அதை நாங்கள் தெளிவாகச் செய்து வருகிறோம். நாங்க சொல்ல வேண்டியதைச் சொல்கிறோம். செய்ய வேண்டியதை அவர்கள் செய்யட்டும். தேர்தல் கமிஷனுக்கு பிறகு கோர்ட்டு உள்ளது. இது மன்னர் ஆட்சி கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி வேட்பாளராக வருவார்.
    • தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தலில் பயம் வந்துவிட்டது

    சென்னை :

    சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாடுபடுவோம். அடுத்து கர்நாடகாவில் தேர்தல் வருகிறது. அங்கு எனக்கு தேர்தல் குழு பணி கட்சி சார்பில் போடப்பட்டுள்ளது.

    இருந்தாலும், ஈரோட்டில் அதிக நேரத்தை செலவிடுவதாக எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனிடம் தெரிவித்திருக்கிறேன். அந்தவகையில் ஈரோடுக்குத்தான் முன்னுரிமை அளிப்பேன். இலங்கை பயணத்தை முடித்த பிறகு களத்தில் இறங்குவேன். நிச்சயமாக பிப்ரவரி 27-ந்தேதி வாக்குப்பதிவின் போது பார்ப்பீர்கள். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி வேட்பாளராக வருவார். அதில் எங்களுக்கு கடுகளவு கூட சந்தேகம் இல்லை. கூட்டணி தர்மத்தின்படி, கட்சி வேட்பாளரை களம் இறக்கியுள்ளோம். அவரை வெற்றி பெறச்செய்ய வைப்பது தார்மீகக்கடமை. அதனை பா.ஜ.க. நிச்சயம் செய்யும்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில்தான் தி.மு.க.வினர் அனைவரும் உட்கார்ந்து இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் 2 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஆளுங்கட்சி பயந்து, ஒரு இடைத்தேர்தலை தமிழக வரலாற்றில் இதுபோல் சந்தித்தது கிடையாது. இதன் மூலம் தி.மு.க.வுக்கு இந்த இடைத்தேர்தலில் பயம் வந்துவிட்டது என்றே தெரிகிறது.

    ஈரோட்டில் தி.மு.க. கூட்டணி சார்பில் நிற்கும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாயைத்திறந்தால் போதும், நமக்கு ஓட்டு அதிகரித்துக்கொண்டே வரும். அந்தவகையில் எங்கள் கூட்டணிக்கு பிரசார பீரங்கியே அவர்தான். இளையராஜாவை திட்டிவிட்டார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை திட்டிவிட்டார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை திட்டிவிட்டார். அவரால் சும்மா இருக்கமுடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந்தேதி நடக்கிறது.
    • மொத்தம் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட ஜனவரி 31-ந் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 7-ந் தேதி வேட்புமனுக்கள் வழங்க இறுதி நாளாகும். அன்றைய தினம் மாலை 7 மணியை கடந்தும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கடைசி நாளில் இறுதி நேரத்தில் (பிற்பகல் 3 மணிக்கு) 26 பேர் வேட்புமனுக்களுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாற்று வேட்பாளர் மனு, கூடுதல் மனு என்று மொத்தம் 121 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

    இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இடைத்தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் முன்னிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துக்கிருஷ்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுக்களை ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்வில் வேட்பாளர்கள் சிலரும், வேட்பாளர்களின் முகவர்கள் சிலரும் கலந்து கொண்டனர். அவர்களின் முன்னிலையில் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதில் படிவம் முறையாக நிரப்பப்படாதவை, உரிய கையொப்பங்கள் இல்லாதவை, முன்மொழிவுகள் இல்லாதவை என்று பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    அரசியல் கட்சியின் அங்கீகார வேட்பாளரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் மாற்று வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி 83 பேர் போட்டியில் உள்ளனர். இதில் அ.ம.மு.க. வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவர் வாபஸ் பெறுவது உறுதியாகி இருக்கிறது.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் கூறியதாவது:-

    இடைத்தேர்தலுக்காக 121 வேட்புமனுக்கள் பெறப்பட்டு இருந்தன. இதில் 80 மனுக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 மனுக்களில் தேர்தல் பதிவு அதிகாரியின் கடிதம் நகல் வைக்கப்பட்டு இருந்தது. எனவே அந்த மனுக்கள் பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. பின்னர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, அந்த மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் 10-ந் தேதி (நாளை) பிற்பகல் 3 மணி வரை தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வேட்புமனு திரும்ப பெறுவதற்காக காலக்கெடு முடிந்ததும், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள வேட்பாளர் மற்றும் சின்னம் வைக்கும் பகுதியில் 16 பெயர்கள் மட்டுமே வைக்க முடியும். ஆனால் இந்த தேர்தலில் 80-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் உள்ளனர். இதில் ஒரு சிலர் வாபஸ் வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே சிலர் தங்கள் மனுவை திரும்ப பெற்றாலும் 3 அல்லது 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது தேர்தல் அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது. 80 பேருக்கு மேல் போட்டியில் இருப்பார்களா?, பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாபஸ் பெறுவார்களா? என்பது நாளை தெரியும்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம் அணி) சார்பில் செந்தில்முருகன் என்பவர் கடந்த 3-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கிடையே அரசியல் களத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாக தங்கள் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி முக்கிய நிர்வாகிகள் அறிவித்தனர். அவர் தனது மனுவை இன்று (வியாழக்கிழமை) வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனையின்போது, வேட்பாளர் செந்தில்முருகனின் படிவம் உரிய முறையில் நிரப்பப்படாததால் நிராகரிக்கப்பட்டது. அவர் 2 மனுக்கள் தாக்கல் செய்து இருந்தார். 2 மனுக்களும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வாபஸ் பெறும் நிலை வரும் என்று எதிர்பார்த்தே, வேட்பாளர் தனது மனுவை தாக்கல் செய்தாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் 27-ந்தேதி நடக்கிறது.
    • அனைத்து பகுதிகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் 27-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அளவில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் 260 பேரை கலெக்டர் நியமித்து உள்ளார்.இந்த பணிக்காக எல்.ஐ.சி., தபால் நிலைய அதிகாரிகள்-ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இவர்களுக்கான பணியிட ஒதுக்கீடு கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று தொடங்கி வைத்தார்.பின்னர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 260 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதுவரை 59 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும்.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. கடந்த 4-ந் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்கள். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனு தாக்கல் கிடையாது.

    இந்தநிலையில் 6-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளராக பவானி அருகே உள்ள ஓடத்துறையை சேர்ந்த சீதாலட்சுமி (47), அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கட்சி சார்பில் ஈரோடு 46 புதூரை சேர்ந்த சுந்தராஜன் (32), கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி சார்பில் கே.பி.எம்.ராஜா (45), அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் ஈரோடு காசிபாளையத்தை சேர்ந்த பிரேம்நாத் (41), இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்) சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்த மணி (65) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.மேலும் அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபுள் (52) ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.இதேபோல் சுயேச்சையாக 7 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள்.

    எனவே நேற்று மட்டும் ஒரே நாளில் 13 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள். இதுவரை மொத்தம் 59 பேர் மனு தாக்கல் செய்து உள்ளார்கள்.

    இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வேட்பு மனுக்கள் நாளை (புதன்கிழமை) பரிசீலனை செய்யப்படுகிறது.

    வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    • வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.
    • இருவரும் இணைந்து தீர்வு காண்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா (வயது 46) திடீர் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    இதனால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சுறுசுறுப்பாகி உள்ளது. இந்தத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கி விட்டது.

    இந்தத் தொகுதி கடந்த முறையைப்போலவே இந்த முறையும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதே நேரத்தில் ஓ. பன்னீர் செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது.

    இதற்கு மத்தியில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ந் தேதி மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். தொடர்ந்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அந்த மனுவில், "நான் கையெழுத்திட்ட வேட்பாளருக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் " என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.

    இதில் தேர்தல் கமிஷனும், ஓ.பன்னீர் செல்வமும் 3 நாளில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கு விசாரணை 3-ந் தேதிக்கு (நேற்று) ஒத்தி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், "இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு முடிவை ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதுபற்றி தற்போது எந்த முடிவும் எடுக்க இயலாது" என கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் வழக்குசுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. கோர்ட்டு தீர்ப்புக்கு காத்திருப்போம். அதை ஏற்று நடப்போம்" என கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், "தேர்தல் கமிஷன் பதில் மனுவை நாங்கள் படித்து பார்த்து விட்டோம். குறிப்பிட்ட அரசியல் கட்சி போட்டியிட அனுமதிப்பதா, இல்லையா என்பதையும், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்திலும் தேர்தல் கமிஷன்தான் முடிவு எடுக்க வேண்டும் " என கூறினர்.

    தொடர்ந்து தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வக்கீல், "வழக்கு கோர்ட்டில் உள்ளதால், ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு தீர்மானத்தை பதிவேற்றம் செய்ய இயலவில்லை" என கூறவே, நீதிபதிகள், "பொதுக்குழு விவகாரத்தில் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறீர்களா? பதிவேற்ற முடியாது என்றால் அதற்கு மாற்று என்ன? " என கேள்வி எழுப்பினர். அத்துடன், " இந்த விவகாரத்தில் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது" எனவும் கூறினர்.

    அதற்கு தேர்தல் கமிஷன் தரப்பில் பதில் அளிக்கையில், "கோர்ட்டை நிர்ப்பந்திக்கவில்லை, இது தொடர்பாக ஆலோசனை நடத்தி, 7-ந் தேதிக்குள் பதில் அளிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் நீதிபதிகள் கூறும்போது, " ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்ய 7-ந் தேதி கடைசி நாள் என்கிறபோது, என்ன முடிவு எடுப்பது? அங்கு அ.தி.மு.க. போட்டியிடாத நிலை வந்து விடக்கூடாது " என கூறினர்.

    "இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதா?" என்ற நீதிபதிகளின் கேள்விக்கு , "முடக்கப்படவில்லை. இந்த சின்னத்தை பயன்படுத்தி வேட்பாளர் போட்டியிடலாம்" என தேர்தல் கமிஷன் தரப்பு பதில் அளித்தது.

    ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்து போட தயார். இதை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். இந்த விவகாரத்தில் ஈகோ இல்லை " என்றார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கருத்தைக் கேட்டு விட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

    இருவரும் இணைந்து தீர்வு காண்பது சாத்தியமற்றதாக இருக்கிறது. இருவரும் இணைந்து தீர்வு காணும்போது என்ன பிரச்சினை? அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். எங்களது பரிந்துரையை ஏற்காவிட்டால், நாங்கள் உத்தரவு போட நேரிடும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும்3 உறுப்பினர்கள் ஓட்டு போட அனுமதி அளிக்கப்படுகிறது.

    பொதுக்குழு முடிவினை தேர்தல் கமிஷனிடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவிக்க வேண்டும். அதை தேர்தல் கமிஷன் ஏற்க வேண்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.

    இந்த இடைக்கால ஏற்பாடு, ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிமை அளிக்கவில்லை என்பதையும், அவர்களின் உரிமை பறிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.

    எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுக்கள் முடித்துவைக்கப்படுகின்றன. பொதுக்குழு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • எங்கள் கட்சி உள் விவகாரங்களில் என்றைக்கும் பா.ஜ.க. தலையிட்டது கிடையாது.
    • நாங்கள் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.

    சென்னை :

    சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 பூத் உள்ளது. இந்த 238 பூத்களிலும் அ.தி.மு.க.வை சேர்ந்த பொறுப்பாளர்கள் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தபோது 30 ஆயிரம் பேரில் இருந்து 40 ஆயிரம் பேர் வரை ஆளே கிடையாது. அங்கு போலி அட்டைகளைத் தயாரித்து அந்த 40 ஆயிரம் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு விடியா தி.மு.க. அரசு இன்றைக்கு அடியாட்களை வைத்துக்கொண்டு வாக்களிக்க உள்ளது. இந்த நிலையை தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

    இது மட்டுமல்லாமல் பணப்பட்டுவாடா நடக்கிறது. விதிகள் அனைத்தும் காலில் போட்டு மிதித்து ஜனநாயகத்தை நசுக்குகின்ற வேலையை தி.மு.க. அரசு செய்துகொண்டிருப்பதைத் தெரிவித்துள்ளோம். இவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்துள்ளார். 'இரட்டை இலை' சின்னம் முடக்கக்கூடிய நிலை உள்ளதாக கூறப்படுகிறதே...

    பதில்:- சொல்பவர்களுக்குத்தான் முடக்குவாதம். நாங்கள்தான் அ.தி.மு.க., சரியான வழிமுறையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் போட்டி என்பது அவரை சார்ந்தவர்களுக்கு அது ஒரு மண் குதிரை என்று தெரியும். இதனை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும். மண் குதிரை கரை சேராது.

    கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி பெயர் வேறாக இருந்து, பின்பு திருத்தப்பட்டுள்ளதே...

    பதில்:- 'டைப்' செய்யும்போது சிறிய பிழை வரும். 'பிரிண்ட்' செய்யும்போது முற்போக்கு என்று வந்துவிட்டது. பின்னர் சரியான பேனர் வைக்கப்பட்டது. இது ஒரு பிரச்சினையே இல்லை.

    கேள்வி:- அண்ணாமலை டெல்லி சென்ற பின்னர்தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறதே?

    பதில்:- இது காரணம் இல்லை. எங்கள் கட்சி உள் விவகாரங்களில் என்றைக்கும் பா.ஜ.க. தலையிட்டது கிடையாது. எங்களைப் பொறுத்தவரையில் பெயரில் சிறிய பிழை இருந்தது. பின்னர் சரி செய்யப்பட்டது.

    கேள்வி:- இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணி கட்சி தலைவர்களுடைய படங்கள் இடம்பெறுவது வழக்கம். தற்போது பா.ஜ.க. தலைவர்கள் படம் இல்லை. அதனால் பா.ஜ.க. உங்கள் கூட்டணியில் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

    பதில்:- தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி. இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி. தற்போது இடைத்தேர்தலில் ஆரம்ப நிலையில் இருக்கிறோம். இறுதி செய்யப்படும்போது கூட்டணியில் இருக்கும் அனைவரின் படமும் இடம்பெறும்.

    கேள்வி:- தேர்தல் நெருங்கிய நிலையிலும் பா.ஜ.க. எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளதே?

    பதில்:- தேசிய ஜனநாயக கூட்டணி தர்மத்தின்படி தான் இன்றைக்கு சென்று கொண்டுள்ளோம் அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் நாங்கள் ஆதரவைக் கேட்டுள்ளோம். அவர்கள் தேசிய கட்சி. உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்கள். உடனே சொல்லுங்கள் என்று வற்புறுத்த முடியுமா...

    கேள்வி:- 'ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க. வேட்பாளரை அறிவித்தால் வாபஸ் வாங்கிவிடுவோம்' என்று சொல்லி இருக்கிறாரே...

    பதில்:- நாங்கள் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.

    கேள்வி:- கருணாநிதிக்கு கடலில் பேனா சின்னம் வைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் சின்னத்தை உடைப்பேன் என்று பேசியுள்ளார். இதில் அ.தி.மு.க.வின் கருத்து என்ன?

    பதில்:- கடலில் பேனா சின்னம் அமைக்கப்படுவதால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவது மீனவர்களுக்குத்தான். எங்களைப் பொறுத்தவரையில் கருணாநிதியின் பேனா சின்னத்தை அறிவாலயத்தில் அமைத்தால் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை சரி.

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலில் ஈடுபடும்போது அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் கடுமையாக எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ந்தேதி நடக்கிறது.
    • அண்ணாமலை ஏப்ரல் தொடங்கி 471 நாட்கள் நடைபயணம் செல்கிறார்.

    சென்னை :

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதியன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணியினர் வேட்பாளரை களம் இறக்குவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர். பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரவு கொடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்தனர்.

    இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் எந்த அணிக்கு பா.ஜ.க. ஆதரவு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அ.தி.மு.க.வில் எந்த அணிக்கு ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு கொடுக்கப்படும் என்பதை அறிவிக்க உள்ளதாக தமிழக பா.ஜ.க. அறிவித்து இருந்தது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவியது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக, அண்ணாமலை உள்பட மூத்த தலைவர்களை உள்ளடக்கிய பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் கமலாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கட்சி நிர்வாகிகளிடம் அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்த அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகி ஒருவர் கூறும்போது, "நம்முடைய (பா.ஜ.க.) இலக்கு 2024 பாராளுமன்ற தேர்தல்தான். அதற்காக கட்சியை நல்ல முறையில் வலுப்படுத்தவேண்டும். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தமட்டிலும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்" என்றார்.

    ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர், பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி 471 நாட்கள் நடைபயணம் செல்கிறார். இதற்கான திட்டமிடல் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து ஓரிரு நாட்களில் பா.ஜ.க. தலைமை தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுத்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்தவேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேற்று மனு கொடுக்கப்பட்டது. இதேபோல, தமிழக பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு குழுவினர் நாளை (வியாழக்கிழமை) டெல்லி செல்ல உள்ளனர். அவர்கள் டெல்லியில் உள்ள பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த வக்கீல்கள் உடன், இந்திய தேர்தல் ஆணையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மனு கொடுக்க உள்ளனர்.

    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
    • பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் பிரசாரத்தை தொடங்க கமல் திட்டமிட்டு உள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து வகையான தேர்தல்களையும் சந்தித்து விட்டார். ஆனால் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

    கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும் வகையில் அக்கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தனித்து போட்டியிட்டு மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும்படி வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கும் கமல்ஹாசனின் கவனம் கூட்டணி அரசியலை நோக்கி நகர்ந்து உள்ளது.

    இதை தொடர்ந்தே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அவர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்ட கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகள் மக்கள் நீதி மய்யம் கட்சி நிச்சயம் செய்யும் என்று தெரிவித்தார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் பொறுப்பாளராக நிர்வாக குழு உறுப்பினரான அருணாசலம் நியமிக்கப்பட்டு உள்ளார். இன்னும் 2 நாட்களில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பொறுப்பாளரான அருணாசலம் தலைமையின் கீழ் இந்த தேர்தல் பணிக்குழு செயல்படும்.

    இதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசார வியூகங்களை பிரம்மாண்டமாக மேற்கொள்ள அருணாசலம் தலைமையிலான குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் பிரசாரத்தை தொடங்க கமல் திட்டமிட்டு உள்ளார்.

    வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ள கமல்ஹாசன் ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது. காங்கிரஸ் வேட்பாளரான திருமகன் ஈ.வே.ரா. சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை கமல் கட்சியின் ஓட்டுகள் ஈ.கே.எஸ். இளங்கோவனுக்கு கிடைக்கும் என்பதால் அவர் கூடுதல் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    • கமல்ஹாசன் தனது கட்சி, ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கை மூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
    • மதவெறித் தீயை அணைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டியது எப்படி முக்கியமோ அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும்.

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கை மூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    மதச்சார்பற்ற ஜனநாயகத்தத்துவங்களில் நம்பிக்கையுள்ள அவரும், அவரது கட்சியும் இன்றுள்ள அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கினை தடுத்து நிறுத்த மதவெறித் தீயை அணைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டியது எப்படி முக்கியமோ அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×