search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafale deal"

    உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    விமானப் படைக்கு, ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில், எந்த முறைகேடும் நடக்கவில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சீராய்வு மனுக்களுடன், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பத்திரிகைகளில் வந்த சில செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள், ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த கூடுதல் ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதேபோல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என, மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.



    இந்நிலையில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன், ரபேல் சீராய்வு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்வதற்கு 4 வாரம் அவகாசம் வழங்கும்படி மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதிகள், மே 6-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையையும் மே 6-ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    ரபேல் விசாரணை நடைபெற இருக்கும் மே 6-ம் தேதி ஐந்தாம் கட்ட பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019
    ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #PMModi #RahulGandhi #SupremeCourt #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 22-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கூறியுள்ளது.

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் இந்திய பங்குதார நிறுவனமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

    இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. விமானத்துக்கு கூடுதல் விலை தரப்பட்டுள்ளதாகவும், அனில் அம்பானி நிறுவனத்தை தேர்வு செய்ததில் பிரதமர் மோடியின் தலையீடு இருந்ததாகவும் அக்கட்சி கூறி வருகிறது. “பிரதமர் மோடி ஒரு திருடன்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.



    ரபேல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி, பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    ஆனால், ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

    இதற்கிடையே, ரபேல் விவகாரம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளியாகின. அந்த ஆவணங்கள் அடிப்படையில், ரபேல் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

    அந்த ரகசிய ஆவணங்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலின் ஆட்சேபனையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. அந்த ஆவணங்களை ஏற்றுக்கொண்டு, மனுவை விசாரிப்பதாக கடந்த வாரம் கூறியது.

    மத்திய அரசுக்கு இது பின்னடைவாக கருதப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமர் மோடி திருட்டில் ஈடுபட்டதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டதாகவும், விமானப்படை பணத்தை அம்பானியிடம் கொடுத்துவிட்டதாக, தான் கூறியதை கோர்ட்டு ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

    ஆனால், பிரதமருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு எதுவும் கூறவில்லை என்று பா.ஜனதா தரப்பில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

    அதில், ராகுல் காந்தி தனது தனிப்பட்ட கருத்துகளை கோர்ட்டு கூறியதாக திரித்து கூறுவதாகவும், இதன்மூலம் கோர்ட்டு அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் மீனாட்சி லேகி கூறியிருந்தார்.

    இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மீனாட்சி லேகி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜரானார்.

    அவர் வாதிடுகையில், “காவலாளி நரேந்திர மோடி ஒரு திருடன் என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் கூறிவிட்டதாக ராகுல் காந்தி பகிரங்கமாக கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு சொல்லாததை எல்லாம் சொன்னதாக கூறுகிறார். இது, முற்றிலும் கோர்ட்டு அவமதிப்பு ஆகும்” என்று கூறினார்.

    அதைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:-

    நீங்கள் சொல்வது சரிதான். இந்த மனுவில் கூறியுள்ள படி நாங்கள் எதுவும் கூறவில்லை. ராகுல் காந்தி தனது பேட்டியில் கூறிய கருத்துகள், இந்த கோர்ட்டு சொல்லாதவை. அவற்றை நாங்கள் கூறியதாக அவர் தவறாக தெரிவித்துள்ளார்.

    சில ஆவணங்கள் சட்டரீதியாக ஏற்புடையவை தானா என்று விசாரணை நடத்தியபோது, எந்த சந்தர்ப்பத்திலும் அத்தகைய கருத்துகளை நாங்கள் கூறவில்லை.

    ஆகவே, இதுதொடர்பாக ராகுல் காந்தியிடம் நாங்கள் விளக்கம் கேட்போம். அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். அவர் 22-ந் தேதிக்குள் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும். 23-ந் தேதி, இந்த விவகாரத்தை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    இதற்கிடையே, ராகுல் காந்தியின் பொய் அம்பலமாகி விட்டதாக பா.ஜனதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

    ராகுல் காந்தி நாள்தோறும் பொய்களை சொல்லி வருகிறார். அவற்றில் ஒரு பொய்யை சுப்ரீம் கோர்ட்டு அம்பலப்படுத்தி இருக்கிறது. பிரதமரை இழிவுபடுத்தியதற்காக, அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழலில் சிக்கி தவித்தநிலையில், மோடி நேர்மையான அரசை அளித்ததை ராகுல் காந்தியாலும், அவருடைய குடும்பத்தாலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்திய அரசியல் தரம் தாழ்ந்ததற்கு அவரே காரணம். சரியான புரிதல் இல்லாமல்தான், அவர் பொய் குற்றச்சாட்டு கூறுவதாக, முன்பு மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், அவர் வேண்டுமென்றே தான் அப்படி பேசி வருவது, இப்போது தெளிவாகி விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது:-

    கோர்ட்டு கேட்டபடி, ராகுல் காந்தி விளக்கம் அளிப்பார். பிரதமர் மோடி கூடத்தான், சுப்ரீம் கோர்ட்டு தனக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PMModi #RahulGandhi #SupremeCourt #RafaleDeal

    ரபேல் பேரத்தில் அனில் அம்பானிக்கு இடைத்தரகராக பிரதமர் மோடி செயல்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகி விட்டது என காங். தலைமைச்செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். #RafaleDeal #Reliance #Modi #Congress
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அனில் அம்பானி நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு வரி தள்ளுபடி வழங்கியதாக பத்திரிகை தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையொட்டி காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

    அந்தக் கட்சியின் தலைமைச்செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, “இந்த பேரத்தில் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு இடைத்தரகராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டிருக்கிறார் என்பது இப்போது தெளிவாகி விட்டது” என கூறினார்.

    மேலும் அவர், “இதே போன்று எத்தனை பிற நிறுவனங்கள் வரி தள்ளுபடி பெற்றன?” என கேள்வி எழுப்பியதுடன், “ காவலாளி திருடனாகி விட்டார் என்பது இதன்மூலம் தெளிவாகி இருக்கிறது. மோடியின் ஆசி உள்ளவர்கள் எதையும் அடைய முடியும்” என்றும் குறிப்பிட்டார்.  #RafaleDeal #Reliance #Modi #Congress
    சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தம் குறித்து பொறுமையுடன் பேசுங்கள் என பா.ஜனதாவுக்கு, சிவசேனா அறிவுரை கூறியுள்ளது. #RafaleDeal #BJP #ShivSena
    மும்பை :

    சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜல்காவ் பகுதியில் மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் மோதிக்கொண்ட அதிர்ச்சிகரமான வீடியோவை மக்கள் நாடு முழுவதும் கண்டுள்ளனர். தங்கள் கட்சியில் இணைந்தால் குண்டர்கள் கூட வால்மீகியாக மாறிவிடுவார்கள் என பா.ஜனதா கூறியது. ஆனால் இந்த வன்முறை சம்பவம் மூலம் வால்மீகிகள் குண்டர்களாக மாறிய தருணத்தை அனைவரும் உணர்ந்தனர்.

    இது பா.ஜனதா- சிவசேனா கூட்டணிக்கு ஏற்பட்ட கறை மட்டும் அல்ல. பா.ஜனதா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தருணம் ஆகும். பா.ஜனதா தன்னைத்தானே மாறுப்பட்ட கருத்துடைய கட்சியாக கூறிக்கொள்கிறது. இந்த வன்முறையையும் வேறுபட்ட கருத்துகளை பிரதிபலிக்கும் நிகழ்வு என கூறி நியாயப்படுத்த முடியாது.



    ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பதிலளிக்கும்போது குறைந்தபட்சம் பொறுமையுடன் பதில் அளியுங்கள். பா.ஜனதாவில் ராணுவ மந்திரியில் இருந்து அனைத்து தலைவர்களும் வாய்க்கு வந்தபடி இந்த பிரச்சினை குறித்து பேசுகிறார்கள்.

    இது கட்சியில் பிரச்சினையை அதிகரிக்க செய்யும். எனவே முடிந்தவரை இதுகுறித்து பேசுவதை குறைத்துகொள்வது நல்லது என்பது எங்களுடைய அறிவுரையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    நமோ டி.வி.க்கும் தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்காதது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், “ஒன்று அல்லது இரண்டு சேனல்களை தவிர மற்ற அனைத்து சேனல்களும் “நமோ டி.வி.”யாக தான் உள்ளது. அவற்றில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே “நமோ டி.வி.”க்கு தடை விதிப்பதை தவிர்க்க முடியாது” என்று கூறப்பட்டு உள்ளது. #RafaleDeal #BJP #ShivSena
    ரபேல் குறித்த சுப்ரீம் கோர்ட் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்; ராகுல்காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #RafaleDeal #SC #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரம் தொடர்பான வழக்கில், சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யக்கூடாது என மத்திய அரசு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 

    இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து கூறுகையில், ரபேல் ஒப்பந்தத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஊழல் நடந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. காவலாளியே திருடனாகி உள்ளார் என தெரிவித்தார். 

    இந்நிலையில், ரபேல் குறித்த சுப்ரீம் கோர்ட் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்; ராகுல்காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரபேல் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை ராகுல் காந்தி திரித்துக் கூறுகிறார். ராகுல் காந்தியின் கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ரபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டிருக்கின்றன

    ரபேல் குறித்து வெளியான ஒரு சில ஆவணங்களும் சட்டவிரோதமான முறையில் வெளியாகின. ரபேல் வழக்கில் ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்பதுதான் கேள்வி. ராகுல் காந்தி ஆதாரமின்றி குற்றம் சாட்டி வருகிறார், ராகுல் கூறியது நீதிமன்ற அவமதிப்புக்கு உரியது என தெரிவித்துள்ளார்.
    #NirmalaSitharaman #RafaleDeal #SC #RahulGandhi
    கர்நாடக மாநிலம், கலபருகியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரபேல் பேரத்தில் சிக்கி கொண்ட பிரதமர் மோடி தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் காவலாளி ஆக்கிவிட்டதாக தெரிவித்தார். #Rafaledeal #chowkidarModi #Rahul
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், கலபருகியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

    முன்னதாக, மறைந்த கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் மேடையில் இருந்த பிரமுகர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் அமைதியாக நின்றனர்.

    பின்னர், பேசிய ராகுல் காந்தி ரபேல் பேரத்தில் சிக்கி கொண்ட பிரதமர் மோடி தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் காவலாளி ஆக்கிவிட்டதாக தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்த நரேந்திர மோடி, என்னை இந்த நாட்டின் பிரதமராக்கினால் உங்களது காவலாளியாக இருந்து உழைப்பேன் என்றார். பிரதமரான பிறகு யாருக்கு அவர் காவலாளியாக இருந்திருக்கிறார்? அனில் அம்பானிக்கா, மெகுல் சோக்சிக்கா, நிரவ் மோடிக்கா, லலித் மோடிக்கா? விஜய் மல்லையாவுக்கா? யாருக்காக அவர் காவல் காத்தார்?

    உலகிலேயே மிகப்பெரிய தொகைக்கான ரபேல் போர் விமான பேரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை தாரைவார்த்து தந்தார். நாட்டின் காவலாளி நான் மட்டுமே என்று முன்னர் மார்தட்டி வந்த பிரதமர் மோடி, ரபேல் விவகாரத்தில் திருடனாக மாட்டிக் கொண்டார். 

    இதில் சிக்கி கொண்ட பின்னர் தன்னை மட்டும் நாட்டின் காவலாளி என்று பேசிவந்த அவர் தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் காவலாளி ஆக்கிவிட்டார். அவர் காவலாளி அல்ல ஒரு திருடன் என்பது இந்த நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #Rafaledeal #chowkidarModi #Rahul
    ரபேல் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டதால், தேச பாதுகாப்புக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. #RafaleDeal #SupremeCourt
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட் கடந்த டிசம்பர் 14-ந் தேதி தள்ளுபடி செய்தது.

    அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். சமீபத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த நாளில், ஒரு ஆங்கில பத்திரிகையில் ரபேல் பேரம் குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகின. அதே ஆவணங்கள், சீராய்வு மனுக்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன.இந்த ஆவணங்கள், ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். பின்னர், “ஆவணங்கள் திருடப்படவில்லை, நகல் எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

    இந்நிலையில், சீராய்வு மனுவுக்கு மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசு கூறி இருப்பதாவது:-



    மனுதாரர்களின் சீராய்வு மனு பரவலாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. நாட்டின் எதிரிகள் கையிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தேசத்தின் பாதுகாப்பே அபாயத்தில் உள்ளது.

    மனுதாரர்கள் இணைத்துள்ள ஆவணங்கள், தேச பாதுகாப்புக்கு முக்கியமானவை. ரபேல் விமானங்களின் போர்த்திறன் சம்பந்தப்பட்டவை. அவற்றை மத்திய அரசின் அனுமதியோ, ஒப்புதலோ இல்லாமல் நகல் எடுத்து, சீராய்வு மனுவுடன் இணைத்த சதிகாரர்கள், திருட்டு குற்றம் இழைத்துள்ளனர்.

    இச்செயல், நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், வெளிநாடுகளுடனான நட்புறவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த ஆவணங்களை மத்திய அரசு ரகசியமாக வைத்திருந்தது. ஆனால், மனுதாரர்கள் இவற்றை ரகசியமாக வெளியிட்டதன் மூலம், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விதிமுறைகளுக்கு குந்தகம் விளைவித்து இருக்கிறார்கள்.

    தேச பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான இந்த விஷயம் குறித்து மத்திய அரசு நடத்திய உள்மட்ட ரகசிய ஆலோசனை பூர்த்தி அடையாமல் இருந்தது. அதை மட்டும் தேர்வு செய்து வெளிப்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த ஆவணங்களை பயன்படுத்தி உள்ளனர்.

    இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.

    இந்த மனு, இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
    ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #SC #RafaleDeal
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் ரக 36 விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

    இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    ரபேல் விமானங்களை வாங்க அதிக விலை கொடுக்கப்பட்டதாகவும், அனில் அம்பானிக்கு சாதகமாக பிரதமர் நடந்து கொண்டதாகவும் காங்கிரஸ் புகார் கூறியது.

    ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த்சின்கா, அருண்ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.



    இந்த மனுவை கடந்த டிசம்பர் 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ரபேல் ஒப்பந்தத்தில் எந்த சந்தேகமும் இல்லை. மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. இதனால் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது.

    இந்த நிலையில் ரபேல் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்ததால் இது குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த சீராய்வு மனுக்களை பிரசாந்த் பூசன் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்தனர்.

    இந்த சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #SC #RafaleDeal
    முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது போடப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தை விட, பாஜக ஆட்சியில் குறைந்த விலைக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RafaleIssue #LokSabha #CAGonRafale
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

    மக்களவையில் நேற்று ரபேல் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்பிக்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சிஏஜி அறிக்கை தாக்கல் செய்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், மாநிலங்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம்  உள்ளிட்ட விமானப்படையின் பிற கொள்முதல் குறித்த தகவல்கள் அடங்கிய சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட, பாதுகாப்புத்துறை தொடர்புடைய 11 ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    அதில், ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தை விட 2.86 சதவீதம் குறைவான விலைக்கே பாஜக ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மோடியின் படத்துடன் கூடிய காகித விமானங்களை கையில் வைத்துக்கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், சமாஜ்வாடி உறுப்பினர்கள், உ.பி. பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleIssue #LokSabha #CAGonRafale
    ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்தார். #RafaleIssue #LokSabha #CAGonRafale
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாராளுமன்றத்திலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

    மக்களவையில் நேற்று ரபேல் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்பிக்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்களை கண்டித்து பாஜக எம்பிக்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. அதன்பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.



    இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, மாநிலங்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் அறிக்கையை தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. விமானப்படையின் மற்ற கொள்முதல் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. #RafaleIssue #LokSabha #CAGonRafale
    ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில், அதை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது. #RafaleDeal #Reliance #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே அனில் அம்பானி தெரிந்து வைத்திருந்தார் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு கூறி உள்ள நிலையில், அதை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து உள்ளது.

    இதுபற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியால் குறிப்பிடப்பட்டுள்ள மின் அஞ்சல், ஏர்பஸ் மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனங்கள் இடையேயானது. இது மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தின் கீழான சிவில் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் திட்டங்கள் தொடர்பானது.

    உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய விவாதம், ஏர்பஸ் ஹெலிகாப்டர், ரிலையன்ஸ் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பானது ஆகும். பிரான்ஸ் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயான 36 ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும், இதற்கும் தொடர்பு இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #RafaleDeal #Reliance #RahulGandhi

    இந்திய விமானப்படைக்கு சொந்தமான ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் அனில் அம்பானி எடுத்து செல்ல பிரதமர் மோடி வழி வகுத்துள்ளார் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விமானங்களின் விலை விவரம் குறித்து பிரதமர் அலுவலகம் தனியாக பேரம் பேசியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

    ரபேல் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக பாதுகாப்பு துறைக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்யும் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசு சார்பில் சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், ஊழல் தடுப்பு குறித்த விதி, எஸ்க்ரோ சிறப்பு வங்கிகணக்கு மூலம் பணத்தை செலுத்துவது உள்ளிட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா-பிரான்ஸ் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ரபேல் ஒப்பந்தத்தில் ஊழலுக்கு எதிரான விதிகள் குறித்து எதுவும் இல்லை. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் அனில் அம்பானி எடுத்து செல்ல பிரதமர் மோடி வழி வகுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை பல உண்மைகள் வெளியாகின. முதலில் 126 போர் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்கள் வாங்குவதற்கு அரசு முடிவெடுத்தது என்று கூறப்பட்டது. அதையடுத்து, விமானங்களின் விலை விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பேரம் பேசியது என்று செய்தி வெளியானது.

    இந்தநிலையில் பாதுகாப்பு கொள்முதல் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தில் வங்கிக்கான உத்தரவாதம், எஸ்க்ரோ சிறப்பு வங்கிக்கணக்கு என எதுவும் இல்லை. எனினும் பெரிய அளவிலான தொகை முன்பணமாக அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #RafaleDeal #RahulGandhi #PMModi #AnilAmbani #PChidambaram
    ×