search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranjan Gogoi"

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த போவதாக பாடகி சின்மயி கூறியுள்ளார். #Chinmayi #RanjanGogoi
    சென்னை:

    தமிழ் சினிமாவில் பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் விளங்குபவர் சின்மயி.

    பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக தொடங்கப்பட்ட மீடூ இயக்கத்தில் தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

    தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளில் இருந்து மற்றவர்களுக்கு நிகழ்ந்த சம்பவங்களையும் வெளியே கூறினார்.

    சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்சநீதி மன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது.

    இதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

    அந்தவகையில் சின்மயியும் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பெண் ஊழியர் கொடுத்த புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். போராட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    ரஞ்சன் கோகாய்

    இது குறித்து சின்மயி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

    நான் கமி‌ஷனர் அலுவலகத்தில் நுழைந்த உடனே அங்கு இருந்த பெண் காவலர் என்னிடம்,

    ‘சென்னையில் யாரும் இதுகுறித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கவில்லையே?’ என்றுதான் கேட்டார்.

    அவரிடம் நான் முதலில் தொடங்கினால் என்னுடன் போராடுவதற்கு பலர் தயாராக இருக்கிறார்கள் என்று கூறினேன். காவல்துறையினர் என்னிடம் போராட்டம் நடத்துவதற்கு வசதியான 5 தேதிகளையும் இடங்களையும் குறிப்பிட சொன்னார்கள்.

    நான் வள்ளுவர் கோட்டத்தை குறிப்பிட்டுள்ளேன். நான் மீடூ இயக்கத்தில் புகார் கூறியதில் இருந்து இன்று வரை எனக்கு மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் வந்துகொண்டே தான் இருக்கின்றன. டப்பிங் யூனியனில் என்னை நீக்கியதற்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளேன்.

    என்னைப் போல பாதிக்கப்பட்ட பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களும் துணிச்சலாக வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த அநீதிகளை கூறவேண்டும்’.இவ்வாறு அவர் கூறினார்.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிரான சின்மயியின் போராட்டத்துக்கு சில பெண்கள் அமைப்பினரும் பெண் பத்திரிகையாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். #Chinmayi #RanjanGogoi
    தலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய பாலியல் புகாரின் பின்னணியில் உள்ள மூல காரணத்தை கண்டறிய முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறி உள்ளனர். #CJIRanjanGogoi #AllegationsAgainstCJI
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் ஊழியர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கடந்த சனிக்கிழமையன்று தாமாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதில் பெரிய அளவில் சதி இருப்பதாக கருத்து தெரிவித்தது.

    இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை உத்சவ் சிங் பெயின்ஸ் என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் அவர், “தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் அதிர்ச்சியைத் தருகிறது. புகார் கூறியவர் தரப்பில் நான் ஆஜராக விரும்பினேன். ஆனால் வழக்கு தொடர்பாக அஜய் என்பவர் என்னிடம் வந்து தெரிவித்த தகவல்கள் நம்பும்படியாக இல்லை. உடனே புகார் கூறியவரை (பெண்ணை) சந்திக்க வேண்டும் என நான் கூறினேன். ஆனால் அதற்கு அஜய் சம்மதிக்கவில்லை. இதனால் தலைமை நீதிபதி மீது வழக்கு போட ரூ.1½ கோடி அளவுக்கு லஞ்சம் தர முன்வந்தார். உடனே நான் அவரை வெளியே அனுப்பிவிட்டேன். தலைமை நீதிபதிக்கு எதிராக பெரிய சதி நடக்கிறது. இது குறித்து விசாரிக்க வேண்டும்” என அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு இருந்தது.



    இதை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை (நேற்று) கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வக்கீல் உத்சவ் சிங் பெயின்சுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    அதன்படி நேற்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது வக்கீல் உத்சவ் பெயின்ஸ் நேரில் ஆஜரானார். அப்போது அவர், ‘சீல்‘ வைத்த உறை ஒன்றில் சில ஆவணங்கள் மற்றும் ஒரு கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் (சி.சி.டி.வி. பதிவு) தான் தாக்கல் செய்வதாகவும் அவை பல விஷயங்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்த தடயங்களாகும் என்றும் கூறினார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் சதியில் தொடர்புடைய ஒரு கார்ப்பரேட் நிறுவனம் குறித்த தடயம் ஆகும் என்றும் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள் சி.பி.ஐ. இயக்குனர், தேசிய உளவு முகமை இயக்குனர் மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் தங்கள் (நீதிபதிகள்) அறையில் (நேற்று) 12.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி அவர்கள் ஆஜரானார்கள்.

    பின்னர் பிற்பகல் 3 மணிக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், தலைமை நீதிபதி மீது கூறப்பட்ட புகார் அவருக்கு எதிரான சதியின் பின்னணியா? என்பதை கண்டறியவேண்டும் என்றும், அந்த சதியின் மூல காரணத்தை கண்டுபிடிக்க முழுஅளவில் விசாரணை நடத்தப்படும் என்றும், இப்படிப்பட்ட புகார்கள் தொடர்ந்தால் அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறினார்கள்.

    விசாரணையில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பங்கேற்றார். அவர் வாதாடுகையில், “வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் தன்னுடைய முகநூலில் அதிருப்தியுற்ற சில நீதிபதிகளும் இந்த சதியில் பங்கேற்று உள்ளனர் என்று எழுதி இருக்கிறார். ஆனால் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அது குறித்து ஏதும் இல்லை. இது முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது” என்று கூறினார்.

    அதற்கு வக்கீல் உத்சவ் பெயின்ஸ், தன் மீது மிகவும் மோசமான குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக வருத்தம் தெரிவித்ததோடு, அட்டார்னி ஜெனரல் தனது நோக்கத்தை சந்தேகப்படுவதாகவும் கூறினார்.

    உடனே நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன், அட்டார்னி ஜெனரல் மிகவும் மரியாதைக்கு உரியவர் என்றும் அவர் மீது சந்தேகப்படுவதற்கு உங்களுக்கு ஏதும் உரிமையில்லை என்றும் அப்படி சந்தேகப்படுவதாக நீங்கள் கூறினால் உங்களை வெளியேற்ற வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

    அதற்கு உத்சவ் சிங் பெயின்ஸ், “என்னை வெளியேற்ற தேவையில்லை. நானே நடந்து வெளியில் செல்வேன்” என்று கூறினார்,.

    அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா குறுக்கிட்டு, நீங்கள் இளைஞராக இருக்கிறீர்கள். “இதுபோன்று நேரடியாக அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம். நீதிபதி தன்னுடைய வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்” என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:-

    தற்போது உத்சவ் சிங் பெயின்ஸ் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், அதிருப்தியுற்ற சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்கள் சிலர் தலைமை நீதிபதிக்கு எதிராக சதி திட்டம் தீட்டி இருப்பதாக கூறி இருக்கிறார். தலைமை நீதிபதி, ஏற்கனவே ஒரு வழக்கில் உத்தரவை தவறாக பதிவு செய்த சில ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார். அவர்களை பதவி நீக்கம் செய்து இருக்கிறார்.

    எனவே, உத்சவ் சிங் பெயின்ஸ் தன்னுடைய பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பதவி நீக்கம் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட் ஊழியர்கள் பற்றி மற்றொரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் உத்சவ் சிங் பெயின்ஸ் மற்றும் அந்த ஊழியர்களுக்கு இடையே நடைபெற்ற தகவல் தொடர்பில் ஏதேனும் உரிமை மீறல் உள்ளதா என்பதையும் கோர்ட்டு தீர்மானிக்கும்.

    ஒரு பொய்யான பிரமாண பத்திரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்வதன் விளைவுகள் பற்றி உத்சவ் சிங் பெயின்ஸ் கண்டிப்பாக அறிந்து இருப்பார். அவர் இந்த சதி பற்றி கூடுதல் பிரமாண பத்திரம் ஒன்றை நாளை (இன்று) காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவருக்கு டெல்லி போலீசார் கோர்ட் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    வழக்கு நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து உள் அமர்வு விசாரணை நடத்த நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்து உள்ளது.

    இந்த குழுவை நியமனம் செய்ததற்கு எதிராக 259 பெண் வக்கீல்கள், அறிஞர்கள், மகளிர் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில், நேர்மையான தனி நபர்களை கொண்டு ஒரு சிறப்பு குழு அமைத்து அந்த குழு 90 நாட்களுக்குள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதுவரை தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட்டில் எந்த அலுவலக பணியும் மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளனர்.   #CJIRanjanGogoi #AllegationsAgainstCJI 
    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது செக்ஸ் வழக்கு தொடர ரூ.1½ கோடி பேரம் பேசியது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ChiefJusticeRanjanGogoi
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் செக்ஸ் புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை கடந்த சனிக்கிழமையன்று தாமாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதில் பெரிய அளவில் சதி இருப்பதாக கருத்து தெரிவித்தது.



    இந்த நிலையில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) உத்சவ் சிங் பெயின்ஸ் என்ற வக்கீல் ஒரு பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் அவர், “தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் அதிர்ச்சியைத் தருகிறது. புகார் கூறியவர் தரப்பில் நான் ஆஜராக விரும்பினேன். ஆனால் வழக்கு தொடர்பாக அஜய் என்பவர் என்னிடம் வந்து தெரிவித்த தகவல்கள் நம்பும்படியாக இல்லை. உடனே புகார் கூறியவரை (பெண்ணை) சந்திக்க வேண்டும் என நான் கூறினேன். ஆனால் அதற்கு அஜய் சம்மதிக்கவில்லை. நான் திட்டவட்டமாக மறுத்தேன். உடனே தலைமை நீதிபதி மீது வழக்கு போட ரூ.50 லட்சம் லஞ்சம் தர முன்வந்தார். பின்னர் அந்த தொகையை ரூ.1½ கோடி அளவுக்கு உயர்த்தினார். உடனே நான் அவரை வெளியே போகுமாறு கூறி விட்டேன்.

    தலைமை நீதிபதிக்கு எதிராக பெரிய சதி நடக்கிறது. இது குறித்து விசாரிக்க வேண்டும்” என கூறி உள்ளார்.இதை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக நாளை (இன்று) வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் நேரில் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.  #SupremeCourt #ChiefJusticeRanjanGogoi
    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்சுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #CJIRanjanGogoi #AllegationsAgainstCJI
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியிருப்பது நீதித்துறையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோகிண்டன் நரிமன், தீப்க் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் நேரில் ஆஜராகும்படி நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

    பாலியல் வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சிக்கவைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் கூறியிருந்தார். தலைமை நீதிபதி மீது ஒரு பெண் மூலம் பாலியல் புகார் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்காக 1.5 கோடி ரூபாய் தருவதாகவும் தன்னிடம் ஒருவர் கூறியதாக கூறியிருந்தார். ஆனால், அவர்கள் சொன்னதில்  உண்மை இருப்பது போல் தெரியாததால், அவர்களை உடனே வெளியே போகச்சொன்னதாகவும் கூறினார். மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார்.



    எனவே, வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ் நாளை நேரில் ஆஜராகி, இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். #CJIRanjanGogoi #AllegationsAgainstCJI
    ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #SC #RafaleDeal
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் ரக 36 விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

    இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    ரபேல் விமானங்களை வாங்க அதிக விலை கொடுக்கப்பட்டதாகவும், அனில் அம்பானிக்கு சாதகமாக பிரதமர் நடந்து கொண்டதாகவும் காங்கிரஸ் புகார் கூறியது.

    ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த்சின்கா, அருண்ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.



    இந்த மனுவை கடந்த டிசம்பர் 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ரபேல் ஒப்பந்தத்தில் எந்த சந்தேகமும் இல்லை. மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. இதனால் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது.

    இந்த நிலையில் ரபேல் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்ததால் இது குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த சீராய்வு மனுக்களை பிரசாந்த் பூசன் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்தனர்.

    இந்த சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #SC #RafaleDeal
    சிபிஐ இடைக்கால இயக்குனர் நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியதை அடுத்து இந்த வழக்கை வேறு அமர்வு விசாரிக்க உள்ளது. #CBI #RanjanGogoi #SC
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

    இதையடுத்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வராவை மத்திய அரசு நியமித்தது.

    இதை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக்வர்மா மீண்டும் இயக்குனர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது. எனினும் அலோக்வர்மா குறித்து இறுதி முடிவை பிரதமர் தலைமையிலான உயர் நிலை குழு முடிவு செய்யும் என்று தெரிவித்து இருந்தது.

    இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்ற 2 நாட்களில் அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலை குழு அறிவித்தது.

    அதனை தொடர்ந்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் கடந்த 11-ந்தேதி மீண்டும் பொறுப்பு ஏற்றார்.

    அலோக் வர்மா தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த புதிய பதவியை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்தார்.


    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிராக காமன்காஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி நிரந்தர சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ்கண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திடீரென விலகினார்.

    புதிய சி.பி.ஐ. இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இடம் பெற்று இருப்பதால் இந்த வழக்கை தன்னால் விசாரிக்க முடியாது என்று கூறி அதில் இருந்து விலகுவதாக ரஞ்சன் கோகாய் விளக்கம் அளித்தார்.

    நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கை வருகிற 24-ந்தேதி வேறு அமர்வு விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். #CBI #RanjanGogoi #SC
    சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ரஞ்சன் கோகாய், அவசர வழக்குகள் விசாரிக்கும் முன் வழிமுறைகள், தகுதிகள் ஆகியவற்றை வகுக்க வேண்டும் என கூறியுள்ளார். #CJIRanjanGogoi
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோட்டின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    நீதிபதி ரஞ்சன் கோகாயிடம், வழக்கறிஞர்கள் அவசர வழக்காகச் சிலவற்றை விசாரிக்கக் கோரி முறையிட்டனர். அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், இப்போது ஏதும் முறையிடாதீர்கள். நாம் குறிப்பிட்ட வழிமுறைகளையும், தகுதிகளையும் வகுத்துவிட்டு, எவ்வாறு, எந்த வகையில் முறையிடலாம் என்பதை முடிவு செய்யலாம்.

    யாராவது ஒருவர் நாளைத் தூக்கிலிடப்போகிறார்கள் என்றால் அதை அவசர வழக்காக விசாரிக்கலாம் அல்லது நாளை யாரையாவது வெளியேற்ற வேண்டும் என்றால் விசாரிக்கலாம். ஆதலால், அவசர வழக்கு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவகையில் அவசர வழக்காக எதையும் முறையிட வேண்டாம் என்று தெரிவித்தார்.

    மேலும், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திலும் ரஞ்சன் கோகாய் மரியாதை செலுத்தினார். தலைமை நீதிபதியாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
    சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். #RanjanGogoi #CJI
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது. 

    அதன்படி தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்திருந்தார்.

    இந்நிலையில், ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்டோபர் 3- தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொள்ள உள்ளார்.

    வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படும் முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.
    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்கக் கோரி சட்ட மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார். #SC #CJI #DipakMisra
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவருக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக நியமிக்க உள்ளவரை பரிந்துரைக்க வேண்டும் என தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.

    தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த நிலையில் நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி ஊடகங்களை சந்தித்த நீதிபதிகளில் கோகோயும் ஒருவர். இதனால், அவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதில் எதேனும் சர்ச்சை நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனினும், மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி கலந்து ஆலோசித்த பின்னரே அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    ×