search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marina"

    • பொதுமக்கள் வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கம்.
    • சிறப்பு பஸ்கள் ஜூன் முதல் வாரம் வரை இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலாலும், இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் புழுக்கத்தாலும் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    மாலை நேரங்களில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க சென்னை நகர மக்கள் மெரினா, பெசன்ட்நகர், மாமல்லபுரம் கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் கடற்கரை மற்றும் மாமல்லபுரம், வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதையடுத்து இந்த வழித்தடங்களில் மாநகர பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகளின் வசதிக்காக மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், மாமல்லபுரம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா, கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர தினமும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த சிறப்பு பஸ்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் வரை இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, `கோடை விடுமுறையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கோவளம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வது அதிகரித்து உள்ளது.

    எனவே இந்த வழித்தடங்களில் பொதுமக்கள் சென்று வர வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஜூன் மாதம் முதல் வாரம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மாநகர பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மண்பானையில் குடிநீர், மோர் ஆகியவை தடையின்றி வழங்கப்படுகிறது. பிராட்வே, தி.நகர், திருவான்மியூர், அடையாறு, திருவொற்றியூர் உள்ளிட்ட 70 இடங்களில் இவை வழங்கப்படுகிறது' என்றார்.

    • அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை.
    • மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு.

    சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    முன்னதாக, பேரறிஞர் அண்ணாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலும், அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    பின்னர், கருணாநிதி நினைவிடம் முன்பு நிறுவப்பட்டுள்ள சிலையை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர், கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    திறப்பு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, ஏ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கவிஞர் வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    கருணாநிதியின் நினைவிடத்தை சுற்றிலும் அவரது பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கும். அங்கு, கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களை பொன்னாடை போர்த்தி முதல்வர் ஸ்டாலின் சிறப்பித்தார்.

    • இன்று கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
    • குதிரைப்பட போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    சென்னை :

    காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி இன்று கடற்கரை பகுதிகள், சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் குடும்பத்தினருடன் வந்து உற்சாகமாக பொழுதை களிக்க உள்ளனர். எனவே போலீசார் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காணும் பொங்கலை முன்னிட்டு 17-ந் தேதி (இன்று) பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மெரினா கடற்கரை உள்பட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவார்கள்.

    எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் அறிவுரைகள், இணை கமிஷனர்கள் ஆலோசனைகளின் பேரில் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர் என மொத்தம் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    போலீசாருக்கு உதவியாக 1,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலையிலும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை மணற்பரப்பிலும் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை அருகில் தலா ஒரு தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையும், சர்வீஸ் சாலை நுழைவு வாயில்களில் 11 போலீஸ் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    அவசர மருத்துவ உதவிக்காக 7 ஆம்புலன்சுகளில் மருத்துவ குழுவினரும், மீட்பு பணிகளுக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்களும், மோட்டார் படகுகள் மற்றும் 140-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளனர். 12 முக்கியமான இடங்களில் அதிக ஒளித்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் அகன்ற திரைகளில் கண்காணிக்கப்படும்.

    காணும் பொங்கல் அன்று கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் போலீசார் கண்காணிப்பார்கள். மேலும் குதிரைப்பட போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகள், முதியோர்களை பற்றி புகார் தெரிவிப்பதற்கும், அவர்களை கண்டுபிடிப்பதற்கும் இந்த ஆண்டு மெரினா கடற்கரை மணற்பரப்பில் திறக்கப்பட்ட சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்காற்றும்.

    கடற்கரையையொட்டிய பகுதிகளில் தமிழ்நாடு போலீஸ்துறை கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து எச்சரிக்கை பதாகைகள் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுப்பதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பெற்றோருடன் கடற்கரைக்கு வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காக போலீசாரால் தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள 11 உதவி மையங்களிலும், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும் வழங்கப்படும். இந்த அடையாள அட்டையில் குழந்தை, பெற்றோர் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை எழுதி குழந்தைகள் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    மெரினா கடற்கரையில் 4 டிரோன் கேமராக்களும், பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 2 டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு சமூக விரோதிகள் நடமாட்டம், குற்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்படும். மேலும் அதிக திறன் கொண்ட 2 பெரிய டிரோன் கேமராக்கள் மூலம் பொதுமக்களுக்கு போலீசாரின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களிலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    போதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும். மோட்டார் சைக்கிள் பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. சாலை போன்ற இடங்களில் 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை போலீசாரின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடற்கரை ராட்டினத்தில் ஏறி சிறுவர்கள் மகிழ உள்ளனர்.
    • காணும் பொங்கல் மீண்டும் களை கட்ட போகிறது.

    தமிழர் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகை, மறுநாள் தைப்பொங்கல், அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், 4-ம் நாள் காணும்பொங்கல் கொண்டாடப்படும்.

    சாதி, சமய வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் முக்கிய பண்டிகை பொங்கல் ஆகும்.அதன் பின்காணும் பொங்கல் தினத்தில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோரின் ஆசி பெறுதலாகும்.வீட்டில் மூத்தவர்களின் ஆசி பெற்று அன்பையும் உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொண்டு விளையாட்டுப் போட்டி, உறிஅடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்ற வீர சாகசபோட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் இளைஞர் கள் பங்கேற்பார்கள்.

    சென்னை மெரினா கடற்கரையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கல் மீண்டும் களை கட்ட போகிறது.பல ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் காண்பதே காணும் பொங்கலின் சிறப்பு ஆகும்.

    காணும் பொங்கலில் உறவுகள், நட்புகள், அறிமுகம் இல்லாத அக்கம் பக்கத்தினர், விரும்பாதவர்களையும் தேடி சென்று சிரித்து,ஆனந்தம் கொள்ள வேண்டும்.

    17-ந்தேதி தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் மெரினா கடற்கரை, பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாட மக்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பல ஆயிரம் மக்கள் ஒரேநேரத்தில் கூட்டமாக கூடுவார்கள். கார், வேன்களில் மெரினா கடற்கரைக்கு படையெடுத்து வர உள்ளனர்.மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பு முழுவதும் மீண்டும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தோட உள்ளது.

    கடற்கரையில் சிறுவர் முதல் பெரியோர் வரை பலரும் தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடி மகிழ்வார்கள். பாரம்பரிய விளையாட்டான கபடி விளையாடுவார்கள். கடற்கரை ராட்டினத்தில் ஏறி சிறுவர்கள் மகிழ உள்ளனர். கண்ணாமூச்சி விளையாட்டும் களைகட்டும். வீடுகளில் இருந்து சமைத்துக் கொண்டு வந்த உணவை கடற்கரையில் அமர்ந்து மக்கள் சாப்பிடுவார்கள்.

    • சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது
    • கூட்ட நெரிசலில் மாயமாகும் குழந்தைகள், முதியோர்கள் பற்றி உடனடியாக புகார்கள் தெரிவித்து, அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு, போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

    சென்னை:

    சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. கடற்கரை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 இடங்களில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் போலீஸ் உதவி மையம் நிறுவப்பட்டது.

    இவற்றின் பயன்பாட்டை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அப்போது அவர், மெரினா கடற்கரையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஜாக்கெட்டுகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர்கள் சிபி சக்ரவர்த்தி, திஷா மிட்டல், துணை கமிஷனர்கள் பி.மகேந்திரன், ரஜத் சதுர்வேதி, ரோகித்நாதன் ராஜகோபால், தேஷ்முக் சேகர் சஞ்சய், உதவி கமிஷனர் பாஸ்கர் உள்பட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பின்னர், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மெரினா கடற்கரை மணற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சோலார் உதவி மையம் பொதுமக்கள் இரவு நேரங்களிலும் எளிதில் அடையாளம் கண்டு அவசர உதவியை பெற முடியும். பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். அவசர தேவைக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.

    கூட்ட நெரிசலில் மாயமாகும் குழந்தைகள், முதியோர்கள் பற்றி உடனடியாக புகார்கள் தெரிவித்து, அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு, இந்த போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.

    காணும் பொங்கலை முன்னிட்டு (17-ந் தேதி) மெரினா கடற்கரையில் மட்டும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 9 நவீன டிரோன்கள் வாயிலாகவும் கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டார். மேலும் அவர், கொச்சின் ஹவுஸ் போலீஸ் குடியிருப்பு, பரங்கிமலை ஆயுதப்படை மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்று சிறப்பித்தார்.

    கிராமிய மனம் கமழும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.

    பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு பேரணியாக சென்றார்.



    அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ஸ்டாலின் வருகையை கேள்விப்பட்டு அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் வெற்றி கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    சென்னையில் நாளை குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரை, காமராஜர் சாலை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். #Marinabeach #RepublicDay
    சென்னை:

    குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கவும் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    சென்னையில் நாளை குடியரசு தின விழா நடைபெறும் மெரினா கடற்கரை, காமராஜர் சாலை முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.



    போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தலைமையில் கூடுதல் கமி‌ஷனர்கள் மகேஷ்குமார், தினகரன் மற்றும் இணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் துணை கமி‌ஷனர்கள், உதவி கமி‌ஷனர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நிகழ்ச்சி நடைபெறும் கடற்கரை முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கோயம்பேடு பஸ் நிலையத்திலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடும் நபர்களை பிடித்து விசாரித்து அதுபற்றிய தகவலை உடனே தலைமையிடத்துக்கு தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வேறு பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி தீவிரவாத செயல்களில் ஈடுபட முயற்சி செய்து வருவதை உளவுப் பிரிவினர் கண்டறிந்து 12 பேரை கைது செய்துள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். #Marinabeach #RepublicDay

    சென்னையில் காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் 5 லட்சம் மக்கள் திரண்டனர். #KaanumPongal
    சென்னை:

    பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. அதற்கு மறுநாள் புதன்கிழமை, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    நேற்று காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலா தலங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி நேற்று கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று மக்கள் காணும் பொங்கலை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினார்கள்.

    சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, பொருட்காட்சி ஆகிய இடங்களுக்கு நேற்று காலை முதலே குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து குவிய தொடங்கினார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கார், வேன், பஸ், மாட்டுவண்டி, மோட்டார் சைக்கிள்களில் படையெடுத்து வந்தனர்.

    இதனால் அந்த இடங்களில் கொண்டாட்டம் களை கட்டியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதை போக்குவரத்து போலீசார் சரிசெய்தனர்.

    சுற்றுலாதலங்களில் 5 லட்சம் பேர் திரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மெரினா கடற்கரைக்கு மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்திருந்ததாக அவர்கள் கூறினார்கள்.

    மெரினா கடற்கரைக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். மெரினா கடற்கரையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    அதுமட்டுமில்லாது 13 உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, பொதுமக்களை கண்காணித்தனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், மெரினா கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை கண்காணிக்கவும் போலீசார் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்கள், தடையை மீறி குளிக்க முயன்றவர்களை கண்டித்தும், எச்சரிக்கை செய்தும் அனுப்பினர்.

    மெரினா கடற்கரையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் பெற்றோருடன் வந்திருந்த சிறுவர்-சிறுமிகளுக்கு போலீசார் கையில் அடையாள ‘பேட்ஜ்’ அணிவித்தனர். அதில் குழந்தை மற்றும் பெற்றோரின் பெயர், செல்போன் எண் எழுதப்பட்டு இருந்தது. கூட்டத்தில் சிறுவர்-சிறுமிகள் காணாமல் போனால் அடையாளம் காண்பதற்கு இது பெரும் உதவியாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    கடற்கரை மணற்பரப்பில் இருந்த ராட்டினங்களில் விளையாடுவது, சிற்றுண்டி கடைகளில் சாப்பிடுவது என மக்கள் பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்தனர். குடும்பமாக வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் சாப்பாடு கொண்டு வந்து வட்டமாக அமர்ந்து உணவு பரிமாறி சாப்பிட்டதையும் பார்க்க முடிந்தது.

    இதேபோல், பெசன்ட்நகர், திருவான்மியூர் கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் கடற்கரை மணற்பரப்பில் கோ-கோ, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.

    கிண்டி சிறுவர் பூங்காவுக்கு காலை 8 மணி முதல் ஏராளமானோர் வேன்கள், மோட்டார் சைக்கிள்களில் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

    பிளாஸ்டிக் தடையை அரசு அமல்படுத்தி இருப்பதால், கிண்டி சிறுவர் பூங்காவுக்குள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு செல்ல தடை விதித்து, அதற்கு மாற்றாக பேப்பர் கவர்களை வழங்கி, அதில் பொருட்களை வைத்து கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    சிறுவர் பூங்காவில் இருந்த ஊஞ்சல், சறுக்கல்கள் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் குழந்தைகள் ஏறி உற்சாகமாக விளையாடினார்கள். பூங்காவில் கூண்டுக்குள் இருந்த வன விலங்குகள், பறவைகளை கண்டு ரசித்தனர். பிற்பகல் நேரத்தில் குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் மரங்களின் நிழலில் இளைப்பாறி, தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுகளை பரிமாறி உண்டு மகிழ்ந்தனர்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் ஏராளமானோர் வந்திருந்தனர். வழக்கத்தைவிட முன்னதாகவே வண்டலூர் உயிரியல் பூங்கா நேற்று திறக்கப்பட்டது. பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    உயிரியல் பூங்காவில் உள்ள குரங்குகள், புலி, சிங்கம், யானை, நீர் யானை, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட வன விலங்குகளை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் வனத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    சென்னை நுங்கம்பாக்கம், கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்கா, கிண்டி காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் மற்றும் மாநகராட்சி பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் திரையரங்குகள், தனியார் பொழுதுபோக்கு பூங்காக்களிலும் பொழுதை கழித்தனர்.

    சென்னை தீவுத்திடலில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியிலும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். குடும்பத்துடனும், உறவினர்களுடனும் பொருட்காட்சியை பார்க்க வந்திருந்தவர்கள், அங்கிருந்த பல்வேறு வகையான ராட்டினங்களில் ஏறி குதூகலம் அடைந்தனர்.

    மாமல்லபுரத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

    கடற்கரை, சுற்றுலா தலங் களை போலவே கோவில்களிலும் நேற்று மக்கள் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    கடற்கரை, சுற்றுலாதலங்கள், பூங்காக்கள் மற்றும் கோவில்களுக்கு எளிதில் சென்று வரும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அதன் மூலம் மக்கள் எவ்வித சிரமும் இல்லாமல் பயணத்தை எளிதாக மேற்கொண்டனர்.

    சென்னையைப் போல் திருச்சி, ஈரோடு, மதுரை, தஞ்சை, கன்னியாகுமரி போன்ற ஊர்களிலும் மக்கள் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். #KaanumPongal
    ஊர்க்காவல் படையினர் இன்று சென்னை கோட்டையை முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியதையடுத்து மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படையினர் ஏராளமானோர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    பாதுகாப்பு பணி இல்லாத நேரங்களில் இவர்கள் சொந்த வேலையை பார்க்க சென்று விடுவார்கள். இவர்கள் போலீசாருக்கு உரிய சீருடையில் பணிபுரிவார்கள். ஆனால் இவர்களுக்கு சம்பளம் போலீசாரை விட குறைவு.

    இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினர் வட மாநில தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். அங்கு போலீசாருக்கு இணையாக ஊர்க்காவல் படையினருக்கும் சம்பளம் வழங்கப்படுவதை அறிந்தனர்.

    இதையடுத்து தமிழகம் திரும்பிய அவர்கள் தங்களுக்கும், போலீசாருக்கு இணையான சம்பளம் வழங்க கோரி கடந்த வாரம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்தினார்கள். அன்று மாலை தொடங்கிய போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்க்காவல் படையினர் இன்று சென்னை கோட்டையை முற்றுகையிடப் போவதாக தகவல் பரவியது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கிளம்பி வருவதாக கூறப்பட்டது.

    இதையடுத்து மெரினா கடற்கரையிலும் எழிலகம் எதிரிலும், நேப்பியர் பாலம் அருகிலும், தலைமை செயலகம் முன்பும் இன்று ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மேலும் எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    காமராஜர் நினைவிடத்துக்காக மெரினாவில் இடம் கேட்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். #Kamarajmemorial
    சென்னை:

    மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தி.மு.க. தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால், அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், மெரினாவில் அடக்கம் செய்ய கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் சில வாதங்களை முன்வைத்தனர்.

    கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் முன்னாள் முதலமைச்சர்களான ராஜாஜி, காமராஜர் ஆகியோர் மரணம் அடைந்தார்கள்.

    அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி கேட்ட போது, கருணாநிதி மறுத்து விட்டார். எனவே, முன்னாள் முதலமைச்சர்களுக்கு மெரினாவிடம் இடம் ஒதுக்க முடியாது என்று அரசு சார்பில் வாதாடப்பட்டது.

    தி.மு.க. தரப்பில் வாதாடும் போது, காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை என்று கூறினார்கள்.

    சமூக வலை தளங்களிலும் இது சம்பந்தமாக செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. காமராஜர் முன்னாள் முதலமைச்சர் என்பதால் அவருக்கு மெரினாவில் இடம் அளிக்க கருணாநிதி மறுத்து விட்டார் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

    காமராஜர் இறந்த போது, அப்போது காங்கிரசில் முன்னணி தலைவர்களாக இருந்தவர்களிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி கூறியதாவது:-

    காமராஜர் இறந்த போது மெரினாவில் நினைவிடம் அமைக்க வேண்டும் என பழ.நெடுமாறன், கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றவர்கள் வற்புறுத்தினார்கள்.

    இது சம்பந்தமாக கருணாநிதியிடம் கேட்ட போது, அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அங்கு அமைக்கப்பட்டுள்ள அண்ணா சமாதி, கடற்கரை அருகே இருப்பதால் பராமரிப்பதில் பெரும் கஷ்டம் இருக்கிறது.

    எனவே, இங்கு காமராஜருக்கு நினைவிடம் வேண்டாம் என்று கருணாநிதி கூறினார். ஆனால், முன்னாள் முதலமைச்சர்களுக்கு மெரினாவில் இடம் இல்லை என விதிகள் இருப்பதாக அப்படி எதுவும் கருணாநிதி சொல்லவில்லை.



    காந்தி மண்டபம் அருகே நினைவிடம் அமைக்கலாம் என்று கருணாநிதி கூறினார். அதை அப்போதைய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவரான ராஜாராம் நாயுடு உடனடியாக ஏற்றுக் கொண்டார். மற்ற காங்கிரஸ் தலைவர்களிடமும் இதுபற்றி கூறியபோது, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    அப்போது காமராஜருக்கு மெரினாதான் வேண்டும் என்று எங்களுக்கு உணர்ச்சிப் பூர்வமான எந்த எண்ணமும் இல்லை.

    இவ்வாறு திண்டிவனம் ராமமூர்த்தி கூறினார்.

    காமராஜர் இறந்த போது காங்கிரசின் செயலாளராக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இருந்து வந்தார். அவரிடம் இதுபற்றி கேட்ட போது, கூறியதாவது:-

    சமூக வலைதளங்களில் உண்மையான விவரம் தெரியாமல் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

    மெரினாவில்தான் காமராஜருக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என்று காங்கிரசார் அப்போது வற்புறுத்தவில்லை. சத்தியமூர்த்தி பவனில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

    அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி காந்தி மண்டபம் அருகே நிலம் ஒதுக்கீடு செய்து தருகிறேன். காமராஜர் தியாகி என்பதால் அந்த இடம்தான் பொருத்தமாக இருக்கும். அங்கு இறுதிச்சடங்குகள் செய்து நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.

    அதன்படி அங்கு இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. காமராஜரின் தங்கையின் பேரன் முறைப்படி இறுதிச்சடங்குகளை செய்து சிதைக்கு தீ மூட்டினார். அந்த இடத்தில் பின்னர் நினைவிடம் அமைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், காமராஜர் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளவருமான கோபண்ணா கூறும் போது, காந்தி மண்டபத்துக்கு மேற்காக காமராஜருக்கு நினைவிடம் அமைக்கலாம் என்று முடிவு செய்து அப்போதைய பழைய காங்கிரஸ் தலைவர்களை கருணாநிதி ஏற்றுக்கொள்ள செய்தார் என்று கூறினார்.

    ராஜாஜி நினைவிடம் தொடர்பாக அப்போதைய சுதந்திரா கட்சியின் சட்டமன்ற தலைவராக இருந்த எச்.வி. ஹண்டே கூறும்போது, ராஜாஜிக்கு நாங்கள் மெரினாவில் இடம் கேட்கவில்லை.

    அதே நேரத்தில் ராஜாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதை உடனே கருணாநிதி ஏற்றுக்கொண்டார் என்று கூறினார். #Kamarajmemorial
    மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #Jayalalithaamemorial
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெரினா கடற்கரை, உலகிலேயே 2-வது நீளமான கடற்கரை ஆகும்.

    வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மெரினா கடற்கரையை, தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சுடுகாடாக மாற்றி வருகிறது. அதாவது, ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுகிறது.

    இந்த நினைவிடம் கட்டுவதற்கு, தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை நிர்வாக ஆணையம் மற்றும் சுற்றுச் சூழல் இயக்ககத்தின் உறுப்பினர் செயலாளர் அனுமதி வழங்கி கடந்த மார்ச் 16-ந் தேதி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நினைவிடம் 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர், அதாவது 9.09 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை கேட்டு மார்ச் 14-ந் தேதி தான் தமிழ் வளர்ச்சித்துறை மனு கொடுத்துள்ளது. அந்த மனுவை சட்டப்படி பரிசீலிக்காமல், இரண்டே நாளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த அனுமதியை வழங்குவதற்கு முன்பு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திடமும், மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திடமும் ஒப்புதல் பெறவில்லை. அனைத்து விதிகளையும் மீறி வழங்கப்பட்ட இந்த அனுமதியை ரத்து செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.



    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு அதிகமான பகுதியில் கட்டுமானம் (நினைவிடம்) கட்டினால் மட்டுமே மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் நினைவிடம் 5,571 சதுர மீட்டர் பரப்பளவில் தான் கட்டப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதியை பெறத்தேவையில்லை’ என்று வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் வக்கீல் வி.இளங்கோ வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனுவுக்கு வருகிற 29-ந் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 13-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #Jayalalithaamemorial
    சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற நினைவேந்தல் பேரணியில் பங்கேற்க வந்தவர்களை போலீசார் கைது செய்தனர். #Marina #Police #Arrest
    சென்னை:

    இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 13 இயக்கங்கள் இன்று பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன.

    ஆனால், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் அனுமதி கொடுப்பது கிடையாது. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நினைவேந்தல் நிகழ்ச்சி எனும் பெயரில் தடையை மீறி ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. 

    இதற்கிடையே, மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மெரினாவில் பல்வேறு அமைப்பினர் நுழையாமல் இருக்க போலீசார் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் பாரதி சாலை முதல் கண்ணகி சாலை வரை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் பேரணியாக செல்ல வந்தனர். இந்த பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி மற்றும் தெலகான் பாகவி ஆகியோரும் பங்கேற்றனர்.

    நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை கைதாகுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, தடையை மீறி மெரினா செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். #Marina #Police #Arrest
    ×