search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer holidays"

    • ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.
    • வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழல் ஏற்படும்.

    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தொடங்கி நடந்தது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி விரைந்து ஆண்டு இறுதித் தேர்வை முடிக்க கல்வித் துறை திட்டமிட்டு அதற்கேற்றாற் போல் அட்டவணையை வெளியிட்டு தேர்வை நடத்தியது. அந்த அட்டவணைப்படி, கடந்த 12-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெறுவதாக இருந்தது.

    ஆனால் ரம்ஜான் பண்டிகையையொட்டி, கடந்த 10 மற்றும் 12-ந்தேதிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் 22 மற்றும் 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டது. இவர்களைத் தவிர 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுவிட்டது.

    கல்வித் துறை மாற்றி அறிவித்த அட்டவணையின்படி, தேர்தல் முடிந்ததும், நேற்று முன்தினமும் (22-ந்தேதி), நேற்றும் (23-ந்தேதி) 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முறையே அறிவியல், சமூக அறிவியல் தேர்வு நடந்து முடிந்தது.

    தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.

    ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. அதற்கு பிறகே பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் கோடை காலமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம் ஆவதற்கான சூழலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    • அனைத்து பள்ளிகளும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும்.
    • மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது.

    சென்னை:

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆண்டு இறுதித் தேர்வும் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மற்ற மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுவிட்டது.

    இந்த நிலையில் கோடைகால விடுமுறை நாட்களில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கல்வித் துறைக்கு புகார்கள் வந்திருக்கின்றன.

    இந்த புகாரைத் தொடர்ந்து கல்வித்துறை, அனைத்து பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று சுற்றறிக்கையை அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும், அது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் பெறப்பட்டு இருக்கிறது.

    இந்த புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை கால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். அந்த நாட்களில் மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அழுத்தம் தரக்கூடாது.

    இந்த உத்தரவை கண்டிப்பாக பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் புறப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30-ந்தேதிகளில் (வியாழக்கிழமை மட்டும்) புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06070) அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ஏப்ரல் 12,19,26, மே 3, 10, 17, 24, 31 (வெள்ளிக்கிழமை மட்டும்) ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06069) அடுத்தநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
    • கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை எழில்கள் நிறைந்தும், சுற்றுலா தலங்கள் நிறைந்தும் காணப்படும் பகுதியாகும்.

    இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.

    குறிப்பாக ஏப்ரல், மே உள்ளிட்ட கோடை மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனையொட்டி ஆண்டுதோறும் கோடை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோடைவிழா கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி பழ கண்காட்சியுடன் முடிவடைந்து விட்டது.

    கோடைவிடுமுறை முடிந்த பின்னரும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று கூட விடுமுறையை கழிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்திருந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அங்கு மலர் மாடத்தில் காட்சி வைக்கப்பட்டு இருந்த பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டனர். அதன் பின்னணியில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுதவிர சுற்றுலா பயணிகள் பெரணி இல்லம் கண்ணாடி மாளிகைக்குள் சென்று பல்வேறு வகையான பெரணி செடிகளை அருகில் சென்று பார்த்து கண்டு ரசித்து செல்கின்றனர். இதே போன்று ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் தலையாகவே காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நேற்று ஊட்டி சாலை, குன்னூர் சாலை, கோத்தகிரி சாலை, தொட்டபெட்டா மலைசிகரம் செல்லும் சாலை, தாவரவியல் பூங்கா சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் மெல்ல மெல்லவே அடியெடுத்து வாகனத்தை ஓட்ட முடிந்தது.

    கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    • தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 சிறப்பு பஸ்கள் இயக்கம்.
    • மதுரை, திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை 12-ந் தேதியும் (நாளை மறுநாள்), 1 முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதியும் தொடங்க உள்ளன.

    கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு திரும்பி வருவதற்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி 10-ந் தேதி (இன்று), 11-ந் தேதி (நாளை) ஆகிய இரு தினங்களும் கூடுதல் பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தினசரி இயக்கப்படும்பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 சிறப்பு பஸ்களும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு 850 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 1,500 சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த சிறப்பு பஸ்கள் இயக்கத்தினை அனைத்து பஸ் நிலையங்களிலும், போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மதுரை மற்றும் திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    எனவே, பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பஸ் சேவையினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
    • கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க ஏராளமானோர் திரண்டனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டி பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    மேலும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை சீசனின்போது அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இங்கு புனிதநீராடி செல்கின்றனர். கடந்த மாதம் சுற்றுலா வந்த சென்னை மாணவி மரக்கிளை முறிந்து விழுந்ததில் பலியானார். இதனை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 27ம் தேதி கேரள வனப்பகுதியில் இருந்து தமிழகத்திற்குள் அரிசிகொம்பன் யானை புகுந்தது. கம்பம் நகரில் அட்டகாசம் செய்து பின்னர் சுருளிபட்டி பகுதியில் முகாமிட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் அங்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது யானை அச்சம் முழுவதும் விலகியுள்ளதால் சுருளி அருவி மற்றும் மேகமலைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சுருளி அருவியில் குளிக்க ஏராளமானோர் திரண்டனர்.

    • தெலுங்கானாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 28 முதல் 30 லட்சம் பெட்டி பீர் விற்பனை செய்யப்படுகிறது.
    • கோடை விடுமுறை மற்றும் திருமண சீசன் காரணமாக பீர் விற்பனை அதிகமாக இருந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்தது. இதிலிருந்து தப்பிக்க மது பிரியர்கள் ஹாட் வகைகளிலிருந்து பீருக்கு மாறினர்.

    குடிமகன்களை கவருவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் 300 வகையான பீர் விற்பனைக்கு வந்தன. 650 மில்லி மற்றும் 350 மில்லி என 2 அளவுகளில் பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் கடந்த மாதம் ஒரு பாட்டில் பீர் ரூ.10 விலையும் குறைக்கப்பட்டது.

    இதனால் அனைத்து மது கடைகளிலும் பீர் விற்பனை அதிகரித்தது. குறிப்பாக பிரசித்தி பெற்ற 12 வகையான பீர்கள் அதிக அளவில் வாங்கி குடித்தனர்.

    நாளுக்கு நாள் அதிகரித்த வெயில் காரணமாக குடிமகன்கள் பீர் வாங்கி குடித்து பொழுதை கழித்தனர்.

    இதனால் இந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் வரலாற்று சாதனையாக 7.4 கோடி பீர் பாட்டில்கள் விற்பனையாகி உள்ளன. மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் 4 கோடி லிட்டர் பீர் மது பிரியர்கள் குடித்துள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் அதிகபட்சமாக 7.2 கோடி பாட்டில்கள் விற்பனையாகி இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 28 முதல் 30 லட்சம் பெட்டி பீர் விற்பனை செய்யப்படுகிறது.

    கோடை விடுமுறை மற்றும் திருமண சீசன் காரணமாக பீர் விற்பனை அதிகமாக இருந்தது. மேலும் விலை குறைப்பும் விற்பனை அதிகரிப்பு காரணமாக இருந்துள்ளது.

    வருங்காலங்களில் மேலும் பீர் விற்பனை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

    • ரெயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள்.
    • ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் இருந்து பெரும்பாலான நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது.

    ஆலந்தூர்:

    கோடை விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

    ஏற்கனவே வரும் நாட்களுக்கான ரெயில் மற்றும் ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்து விட்டன. ரெயில்களில் காத்திருப்போர் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

    இதைத்தொடர்ந்து இப்போது பெரும்பாலானோர் தற்போது அரசு விரைவு பஸ்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அதிலும் தற்போது பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இருக்கையை முன்பதிவு செய்யாமல் அவசரமாக கடைசி நேரத்தில் செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இதேபோல் ரெயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே உள்நாட்டு பயணத்துக்கு விமான பயணத்தை தேர்வு செய்வது அதிகரித்து உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, மும்பை, திருவனந்தபுரம், டெல்லி, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

    இதன் காரணமாக விமான டிக்கெட்டுகளின் கட்டணமும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் இருந்து பெரும்பாலான நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது.

    சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.6500 முதல் ரூ.10 ஆயிரம், திருச்சி-ரூ.4400 முதல் ரூ.8 ஆயிரம், கோவை-ரூ.3400 முதல் ரூ.5 ஆயிரம், கொச்சி-ரூ.5600 முதல் ரூ.8500, மும்பை-ரூ.4300 முதல் ரூ.7 ஆயிரம், டெல்லி-ரூ.6400 முதல் ரூ.13 ஆயிரம், திருவனந்தபுரம்-ரூ.3700 முதல் ரூ.6 ஆயிரம், தூத்துக்குடி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9500 வரை உள்ளது.

    இதேபோல் ஆம்னி பஸ்களில் கட்டணமும் அதிகரித்து உள்ளது. மதுரைக்கு ரூ.1090 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், திருச்சிக்கு ரூ.1600 முதல் ரூ.2700 வரையும், கோவை-ரூ.1400 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், தூத்துக்குடி-ரூ.950 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், கொச்சி-ரூ.1300 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், திருவனந்தபுரம்-ரூ.2500 முதல் ரூ.2700 வரையும் அதிகமாக உள்ளது.

    ஆம்னி பஸ்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் கட்டணம் உயர்வு காரணமாக சொந்த கார்கள் வைத்திருப்பவர் அதிலேயே தொலைதூர பயணம் மேற்கொள்வதும் அதிகரித்து உள்ளது. மேலும் வாடகை கார் டிரைவர்களை அமர்த்தியும் பயணம் செய்து வருகின்றனர்.

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் 15-ந்தேதி வரை 50 முதல் 70 வரை உள்ளது. மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயிலில் ஜூன் 5-ந்தேதிக்கு பிறகே இருக்கைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
    • கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக கடலில் நீராடுகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்து பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், யாத்திரிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது முழு ஆண்டு தேர்வு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்க ண்ணியில் குவிந்துள்ளனர்.

    பின்னர் நடுத்திட்டு, கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். மேலும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்தும், மெழுகுவத்தி ஏற்றியும், மாதாவிற்கு மாலை அணிவித்தும், தென்னங்கன்றுகளை காணிக்கையாக செலுத்தியும் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

    கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து உற்சாகமாக கடலில் நீராடுகின்றனர். மேலும் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதலில் ஈடுபடும் சுற்றுலா பயணிகள் ராட்டினத்தில் தங்களது குழந்தைகளை அமர வைத்து கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு வேளாங்கண்ணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    • குன்னூர், கோத்தகிரி, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.
    • நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து செயற்கை நீரூற்றை கண்டு ரசித்தனர்.

    ஊட்டி:

    கோடை விடுமுறையையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. அவர்கள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்தனர். இதேபோல் தாவரவியல் பூங்கா பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் மற்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். நேற்று பூங்காவுக்கு 17 ஆயிரத்து 171 பேர் வந்தனர்.

    இதனால் ஊட்டி படகு இல்லத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர். அப்போது படகு இல்லத்தில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குதூகளித்தனர்.

    ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்வதற்காக சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்தனர். ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரெயிலுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்பட்ட சுற்று ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர். மேலும் தொட்டபெட்டா மற்றும் பைக்காரா, சூட்டிங் மட்டம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

    இதேபோல் குன்னூர், கோத்தகிரி, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது.

    சீசன் களை கட்டி இருப்பதால், ஊட்டி குன்னூர் உள்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் நீண்ட நேரம் வாகனங்கள் சாலையில் காத்திருந்து மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இதேபோல் குளுகுளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கும் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை அவர்கள் பார்த்து ரசித்தனர்.

    நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து செயற்கை நீரூற்றை கண்டு ரசித்தனர்.

    பழனி முருகன் கோவிலிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 1½ மணி நேரம் காத்திருந்து அவர்கள் தரிசனம் செய்தனர்.

    • பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர்.

    புதுச்சேரி:

    கோடை விடுமுறையை யொட்டி, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கி ழமை தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற டிசம்பர் 20-ந்தேதி மாலை 5.20-க்கு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற வுள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இந்நிலையில் பள்ளி களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள தாலும் சனிக்கிழமை என்பதாலும், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர்.  நேற்று அதிகாலை 4.30 மணி முதல் புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும் திரளான பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். கோடை வெயில் அதிக மாக உள்ளதால் பக்தர்கள் வெயிலை சமாளிக்க, நளன் குளத்தில் நீண்ட நேரம் புனித நீராடினர். பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • அரசு பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையோடு வகுப்புகள் முடிந்த நிலையில் பல்வேறு மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.
    • கேரள மாநிலம் மூணாறு, தேக்கடியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது தமிழகத்தில் கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் விடப்பட்டது.

    அரசு பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையோடு வகுப்புகள் முடிந்த நிலையில் பல்வேறு மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அதன்படி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதியது.

    இதே போல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் விடுமுறையை கொண்டாடினர். தற்போது காலை முதலே கொடைக்கானலில் இதமான சீதோஷ்ணமும், மதிய நேரத்தில் சாரல் மழையும் பெய்து வருகிறது. மலை முகடுகளை தழுவிச் செல்லும் மேகக்கூட்டம் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    இதே போல் கேரள மாநிலம் மூணாறு, தேக்கடியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இங்கும் சாரல் மழை பெய்து வருகிறது. ஒரே நேரத்தில் அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் வந்ததால் மலை ஸ்தலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரம் அணி வகுத்து நின்ற வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் போராடினர்.

    எனவே மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×