search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட் போராட்டம்"

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பொதுமக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் கவர்னர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். #SterliteProtest #Kamalhaasan
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிடப்பட்டுள்ளதாவது, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மையம் விசில் செயலியில் குடிமக்களால் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் இன்று புகார்க்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு குறித்து உரிய விசாரணை நடத்தவும் அதில் கோரப்பட்டுள்ளது. 
    13 பேர் பலியான தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது கடந்த 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் தெரிவிக்கப்படாமலேயே இருந்தது.

    முதல்வர் மற்றும் துணை முதல்வர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், 2 துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துணை வட்டாட்சியர்கள் கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இருவரின் பெயர்கள் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளன. வன்முறை ஏற்பட்ட நிலையில், பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த தொகையை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஐகோர்ட் மதுரை கிளை அரசுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், இழப்பீடு தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

    படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
    ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்துள்ளவர்கள் தூத்துக்குடி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை போலீஸ் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் பார்வையிட்டார். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

    இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.  பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) டி.கே ராஜேந்திரன் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.

    காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்த அவர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்க கூடியது. அமைதியை நிலைநாட்ட மக்கள், வணிகர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

    மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். நிலைமை சீராக சீராக போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

    இதனை அடுத்து, நான்கு மண்டல டிஐஜி, மாவட்ட எஸ்.பி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். போலீசாரை படிப்படியாக குறைப்பது, நள்ளிரவு முதல் இணையசேவையை மீண்டும் வழங்குவது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடற்கூறு அறிக்கையை வரும் 30-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SterliteProtest #Thoothukudi
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு பிற்பகலில் அவசரமாக விசாரிக்கப்பட்டது.

    ‘மிருகங்களை வேட்டையாடுவதுபோல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். முழங்காலுக்கு கீழே சுட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை’ என மனுதாரர் வாதிட்டார்.

    அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மக்களுடனே அரசு உள்ளது. மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடாத கோரிக்கைகளை வைக்கிறார்’ என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் பலியானவர்களின் உடல்களை பதப்படுத்த உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், பலியனாவர்களின் உறவினர்கள் உடலை கேட்பதால் சடலத்தை பதப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பபெற வேண்டும் என தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்தது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மே.30-ம் தேதி பலியானவர்களில் உடற்கூறு அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், உடலை உறவினர்கள் கேட்காத நிலையில் தமிழக அரசுக்கு என்ன அக்கறை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். எனினும், அரசு கோரிக்கை தொடர்பாக மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்தனர்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதல்வரை சந்திக்க முடியவில்லை என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், பரபரப்புக்காக ஸ்டாலின் அப்படி கூறுகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    11 மணிக்கு அலுவல் ஆய்வு கூட்டம் நடப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அதன் பெயரில் நான் கலந்து கொண்டேன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உறுப்பினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திடீரென எழுந்து சென்றுவிட்டார். 

    சிறிது நேரத்திற்கு, பின்னர் முதல்வரை சந்திக்க முடியவில்லை என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், கூட்டத்தில் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் பேசியுள்ளார். 2013-ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலை மீது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால், அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்து. சில நிபந்தனைகளுடன் அந்நிறுவனத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஆலையின் பணியை நிறுத்த தமிழக அரசு தொடர்ந்து முயற்சி நடந்து வருகிறது.

    ஆனால், எதிர்க்கட்சிகள் அப்பாவி மக்களை தூண்டி விட்டு இத்தகைய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடந்தது விரும்பத்தகாத சம்பவம்.

    அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சில பேர் செயல்பட்டு கலவரத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை பலியாக்கிவிட்டனர்.
    வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

    இவ்வாறு முதல்வர் கூறினார்.
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட ஸ்டாலின், கமல், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், பாலகிருஷ்னன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13-பேர் கொல்லப்பட்ட நிலையில், பலர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கமல்ஹாசன், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், பாலகிருஷ்னன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.



    இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் போது அங்கு சென்றதால் அவர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நேற்று முன் தினம் 100-வது நாளை எட்டியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அங்குள்ள வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    மோதல் கலவரமாக மாறிய சூழலில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 10 பேர் பலியாகினர். நேற்று, அண்ணாநகர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு இளைஞர் பலியாகினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பை மின்சார வாரியம் துண்டித்துள்ளது. இன்று காலை 5.30 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வசேகர் என்பவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். 

    இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர். 

    தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் நேற்று பிற்பகலில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர். 

    ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

    நேற்று துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். இன்று செல்வசேகர் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கவர்னர் உடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் போலீசார் நேற்று மற்றும் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், மாவட்ட கலெக்டர், எஸ்.பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், சென்னை ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

    வன்முறை மேலும் பரவாமல் இருக்க மூன்று மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மொபைல் இண்டெர்நெட் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றனர். 

    தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்கள் கற்களை வீசி தாக்கினர். போலீசாரும் தடியடி நடத்தினர். 

    ஒரு கட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர். இதில் காளியப்பன் (வயது 22) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

    இந்நிலையில், நேற்று துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் தற்போது உயிரிழந்துள்ளர்.
    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு சந்தீப் நந்தூரி மற்றும் முரளி ராம்பா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் அங்கு பதற்றமான சூழல் இருக்கும் நிலையில் அம்மாவட்ட கலெக்டர் வெங்கடேசன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெங்கடேசன் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை கலெக்டராக ஷில்பா பிரபாகர் சதீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாவட்ட எஸ்.பி.யாக இருக்கும் மகேந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட எஸ்.பி முரளி ராம்பா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இருந்த சன்முகப்பிரியா, நீலகிரி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து இன்றிரவு 9 மணியளவில் முதல்வர் பழனிசாமி, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இந்த பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ஸ்டெர்லைட் போராட்டத்தை சரியாக கையாளததால் தூத்துக்குடி கலெக்டர், எஸ்.பி ஆகியோருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
    ×