search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிமுக"

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகளில் உறுதியாக உள்ளது.
    • மதிமுக ஒரு மக்களவை இடமும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்கிறது.

    திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

    மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    விடுதலை சிறுத்தைகளை கட்சி கடந்த முறை திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் நின்றன. தற்போது மூன்று தொகுதிகள் கேட்கிறது. இரண்டு தனித்தொகுதி மற்றும் ஒரு பொதுத்தொகுதி கேட்கிறது. ஆனால் திமுக சார்பில் இரண்டு தனித்தொகுதியை வழங்க தயாராக இருக்கிறது.

    ஆனால் மூன்று தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது விசிக. இதனால் இன்னும் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. பொதுத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கூட போட்டியிட தயார் என விசிக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மதிமுக ஒரு தொகுதியுடன் ஒரு மாநிலங்களவை இடங்களையும் சேர்த்து கேட்கிறது. மேலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாமல் உள்ளது. பம்பரம் சின்னம் தொடர்பாக மதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    திமுக விருப்ப மனு பெற்று வருகிற 10-ந்தேதியில் இருந்து நேர்காணல் நடத்த இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையாததால் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள திமுக குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே முன்னதாக ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இந்த நிலையில் இன்று மதிமுக மற்றும் விசக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி உடனும் இன்னும் ஒரிரு நாட்களில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • புதிய மனு உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும்.
    • தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வந்தது.

    அப்போது, மதிமுக கடந்த பிப்ரவரி 28ல் அளித்த புதிய மனு உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.

    இந்நிலையில், பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய மதிமுகவின் விண்ணப்பம் மீது இரண்டு வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
    • பா.ஜ.க அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள அணுஉலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் கடந்த 2003-ல் இருந்து 500 மெகாவாட் திறன் கொண்ட ஒரு மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகிறது. இந்த அதிவேக ஈனுலையின் முக்கியத்துவமுறும் நிலைக்கான எரிபொருள் நிரப்பும் பணிகளை நரேந்திர மோடி நாளை (4-ந்தேதி) தொடங்கி வைக்க இருப்பதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகவும், ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இத்தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதால் உலக நாடுகளே இந்த ஈனுலைகளைக் கைவிட்டு விட்டன.

    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து அணு உலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் பா.ஜ.க அரசு, தமிழ்நாட்டில் தொடர்ந்து இத்தகைய நாசகாரத் திட்டங்களைக் கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கும், வட தமிழ்நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே பா.ஜ.க. அரசு உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு முனைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
    • தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், "1996-ம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ம.தி.மு.க. போட்டியிட்டு வருகிறது.

    இந்த தேர்தல்களில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

    கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக கூறி, எங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

    அதன்பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளேன்.

    பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை. வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. எங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வைகோ தரப்பில் மூத்த வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

    தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    இதையடுத்து, ம.தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி அளித்தனர்.

    மேலும், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • திருச்சியில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தோழர்கள் விருப்பம்.
    • தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்படும் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    திருச்சி:

    திருச்சி மத்திய மண்டல ம.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டசபையில், கவர்னர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தது இதுவே முதல் முறை. தமிழ் தாய் வாழ்த்து பாடியதை தொடர்ந்து உரையும், நிறைவாக தேசிய கீதம் பாடுவதை அவர் முரண்பாடு என்கிறார்.

    அவரைப் பொறுத்தமட்டில் தொடக்கத்திலும் நிறைவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என விரும்புகிறார்.

    கடந்த முறை தலைவர்கள் காமராஜர், அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோர் பெயரை தவிர்த்து உரையை வாசித்தார். அதற்காக விளக்கத்தை கவனத்தில் அளிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் செய்து வருகிறார்.

    அவருக்கு கவர்னராக இருப்பதற்கான அடிப்படை தகுதி இல்லை. பா.ஜ.க., அரசின் பிரதிநிதி போல் செயல்படுகிறார்.

    தமிழகம் மட்டுமின்றி பா.ஜ.க. அல்லாத கேரளா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகளிலும் பா.ஜ.க அரசின் தலையீடு உள்ளது. லோக்சபா தேர்தலுக்காக, நெருடல் எதுவும் இல்லாமல் கூட்டணியில் செயல்பட்டு வருகிறோம்.

    நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க. கூறுவதும் தமிழ்நாட்டில் 20 சதவீத வாக்குகளை வாங்குவோம் என்று கூப்பிட்டாங்க சொல்வதும் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஏதேனும் முறைகேடு செய்வார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    18 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, எரி பொருள் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் பாஜக அரசு நிறைவேற்றப்படவில்லை. எரிபொருளுள் விலை உயர்வு தான் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் காரணம்.

    பல விஷயங்களில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருப்பதால், பாஜக மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

    திருச்சியில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தோழர்கள் விருப்பம். கட்சித் தலைமையும் கூட்டணி தலைமையும் ஆணையிட்டால் திருச்சியில் போட்டியிடுவேன்.

    கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதி கேட்டிருக்கிறோம்.

    இன்னும் 10 நாட்களில் திமுக இறுதி முடிவு எடுக்கும். இந்த தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்படும் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    இதில் நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ம.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.
    • தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை ஈரோடு தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ம.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க.வுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ம.தி.மு.க. குழுவில் இடம் பெற்றிருந்த ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ம.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. நாங்கள் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் கேட்டுள்ளோம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று உள்ளதால் அவா் பயணம் முடித்து வந்ததும் அதுபற்றி முடிவெடுத்து அறிவிப்பார்.

    கேள்வி:- எந்தெந்த தொகுதி என்று பட்டியல் கொடுத்து விட்டீர்களா?

    பதில்:- தொகுதிகள் எது எது என்பதை இனிமேல் முடிவு செய்வோம்.

    கேள்வி:- கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதியை கேட்கிறீர்களா? அல்லது வேறு தொகுதியா?

    பதில்:- அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. தலைமைக் கழகம்தான் முடிவு செய்யும். அது எந்தெந்த தொகுதி என்பதை பின்னர் சொல்வோம்.

    கேள்வி:- கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டீர்கள்? இந்த முறை சொந்த சின்னத்தில் போட்டியிட கேட்டிருக்கிறீர்களா?

    பதில்:- இந்த முறை கண்டிப்பாக எங்களது கட்சி சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.

    கேள்வி:- அதற்கான உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்களா? பேச்சுவார்த்தையில் அதுபற்றி பேசப்பட்டதா?

    பதில்:- எங்களுடைய கோரிக்கையை வைத்து உள்ளோம். அது பின்னாடி தெரியும். தனி சின்னத்தில் எங்களது கட்சி சின்னத்தில் தான் நாங்கள் நிற்க வேண்டும் என்பது எங்களது கட்சியின் நிலைப்பாடு.

    கேள்வி:- அடுத்து எப்போது பேச்சுவார்த்தைக்கு வருவீர்கள்?

    பதில்:- முதலமைச்சர் வந்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடை பெறும்.

    கேள்வி:- அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வைகோ வருவாரா?

    பதில்:- அதுபற்றி அப்போது தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த முறை ஈரோடு தொகுதியும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ம.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்டது. இந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட ம.தி.மு.க. விரும்புகிறது. அதுவும் ம.தி.மு.க.வின் சொந்த சின்னத்தில் போட்டியிட நினைக்கிறது.

    இதற்காக விருதுநகர், திருச்சி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகளை விருப்பப் பட்டியலாக தி.மு.க.விடம் வழங்கி உள்ளது.

    • கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    • தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட தி.மு.க. கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    தி.முக. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான்குர்ஷித் ஆகியோர் சென்னை வந்து இருந்தனர். அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் சென்று தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

    தி.மு.க. கூட்டணியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது.

    இந்த முறை அதைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த தேர்தலை விட குறைவான இடங்களே காங்கிரசுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.வுடன் இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெற்றுள்ள டி.ஆர்.பாலு, ராசா, பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோருடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு குழுவில் இடம் பெற்றுள்ள சம்பத், சண்முகம், கனக ராஜ், குணசேகரன் ஆகியோர் இன்று பேச்சு நடத்தினர்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விருப்ப பட்டியலை கொடுத்தனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மதுரை, கோவை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி இந்த முறை கூடுதலாக தொகுதிகளை கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, கோவை, நாகப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகளின் விருப்ப பட்டியலையும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வழங்கியுள்ளது.

    இன்று காலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து

    ம.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ம.தி.மு.க. நிர்வாகிகள் அர்ஜுனராஜ், செந்தில் அதிபன், ஆவடி அந்தரிதாஸ், சேஷன் ஆகியோர் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது ம.தி.மு.க. சார்பில் 2 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேல்-சபை எம்.பி. பதவி ஒன்றை தர வேண்டும் எனவும் கேட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    திருச்சி, விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு உள்பட 6 தொகுதிகளை விருப்ப தொகுதிகளாக தேர்வு செய்து அதற்கான பட்டியலை ம.தி.மு.க. நிர்வாகிகள் வழங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    அடுத்த கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி. முஸ்லிம் லீக் கட்சியுடன் 12-ந்தேதி பேச்சு நடத்தப்படுகிறது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இப்படி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைந்து முடிப்பதற்கு தி.மு.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலை வர் மல்லிகாார்ஜூன கார்கே வருகிற 13-ந்தேதி சென்னை வருகிறார். அப்போது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

    சென்னை வரும் கார்கே தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்புக்கு பிறகு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் ஆகியவை பற்றிய விவரங்கள் வெளியாக உள்ளது.

    இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் பற்றிய விவரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்து போட்டியிடும் தொகுதிகளை பிரித்துக்கொள்ள தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் முடிவு செய்து உள்ளன. இதன் பின்னர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட தி.மு.க. கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி இருக்கும் தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிப்பதிலும் முழு கவனம் செலுத்தி வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொது மக்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு தூத்துக்குடியில் இருந்து சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறது. இதன் பின்னர் பல்வேறு ஊர்களுக்கு சென்று இந்த குழு கருத்துக்களை கேட்கிறது.

    இதன் மூலம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணி ஆகியவற்றை இறுதி செய்யும் பணிகளில் தி.மு.க. வேகம் காட்டி உள்ளது. இதனால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

    • மதவெறி சக்திகளால் உத்தமர் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை உலகம் என்றும் மறவாது.
    • மோடி அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திட, காந்தியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    30.1.1948 அன்று மதவெறி சக்திகளால் உத்தமர் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை உலகம் என்றும் மறவாது. அதனை நினைவு கூரும் வகையில் தமிழ்நாடு பொதுமேடை எனும் அமைப்பின் சார்பில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய இடங்களில் "காந்தியைக் கொன்ற மதவெறி தொடரலாமா?" எனும் தலைப்பில் ஒன்று கூடல் - கலை நிகழ்ச்சிகளை நடத்திட உள்ளதை அறிந்து பாராட்டுகிறேன்.

    முன்னாள் நீதியரசர் திரு து.அரிபரந்தாமன், முன்னாள் கலெக்டர் கோ.பாலச்சந்திரன் ஆகியோர் வள்ளுவர் கோட்டத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்த உள்ளதை அறிந்து மனநிறைவு அடைகிறேன்.

    மதவெறிக்கு எதிராக மக்களை அணிதிரட்டி மதச் சிறுபான்மையினரை பாதுகாக்கவும், மோடி அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திடவும், காந்தியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 4-ந்தேதி திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
    • தொகுதி பங்கீடு தொடர்பாக வருகிற 4-ந்தேதி மாலை திமுக - மதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது. வருகிற 3-ந்தேதி தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 4-ந்தேதி திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் திருச்சி தொகுதியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 4-ந்தேதி மாலை திமுக - மதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

    தற்போது மதிமுக திருச்சி தொகுதியை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மதிமுக அலுவலகத்தில் இன்று மாலை கட்சி நிர்வாகிகளோடு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்த உள்ளார்.

    • வரும் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தல், ம.தி.மு.க.வுக்கு மிக முக்கியமான தேர்தலாகும்.
    • பிப்ரவரி 3-வது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    ம.தி.மு.க. தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ம.தி.மு.க. தொலை நோக்கு பார்வையில் எடுத்த முடிவு அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 2021-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல்களை சந்தித்தோம். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக இருந்து களம் காண இருக்கிறோம்.

    கடந்த 30 ஆண்டுகாலமாக நாம் சந்திக்காத சோதனைகள், ஏளனங்கள் இல்லை. அவற்றையெல்லாம் உரமாக்கி, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா கற்றுத் தந்த அரசியலின்படி உறுதியுடன் பயணித்து வருகிறோம். கொள்கை கொடியை உயர்த்திப் பிடிக்கும் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாக ம.தி.மு.க. தமிழக அரசியல் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.


    வரும் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தல், ம.தி.மு.க.வுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். இத்தேர்தலில் தனித்தன்மையுடன் களம் காண இருக்கிறோம். கட்சியின் கட்டமைப்பு வலுப்பெற்று திருத்தணி முதல் குமரி வரை எழுச்சி பெற்றிருக்கிறது. தேர்தலுக்காக வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கும் பணியை மாவட்டச் செயலாளர்கள் பெருமளவில் முடித்து விட்டனர்.

    பிப்ரவரி 3-வது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் நிதி திரட்டும் பணிகளை முடிக்கும் வகையில் பிப்ரவரி 11 முதல் நிதி அளிப்புக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    எனவே, குறிப்பிட்ட தேதிக்குள் நிதி திரட்டும் பணியை முடித்து தேர்தலில் மதிமுகவை வெற்றிகரமாக களம் காணச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தாம் உருவாக்கிய படைப்பிரிவுகளுக்கு காந்தி ரெஜிமெண்ட், நேரு ரெஜிமெண்ட், ஆசாத் ரெஜிமெண்ட் என்று பெயர்களை சூட்டினார்.
    • தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127-வது பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, நேதாஜிக்கு பெருமை சேர்க்கிறோம் என்ற பெயரில், மாவீரர் நேதாஜியின் வரலாற்றையே சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். 2-ம் உலகப் போருக்குப் பின்பு 1942-ல் மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை.

    நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட்டதால் தான் ஆங்கிலேயர்கள் நாட்டுக்கு விடுதலை அளிக்கின்ற நெருக்கடிக்கு உள்ளானார்கள் என்று கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

    பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை கட்டி எழுப்பிப் போர் பிரகடனம் செய்த மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தாம் உருவாக்கிய படைப்பிரிவுகளுக்கு காந்தி ரெஜிமெண்ட், நேரு ரெஜிமெண்ட், ஆசாத் ரெஜிமெண்ட் என்று பெயர்களை சூட்டினார்.

    இந்திய தேசிய ராணுவம், ஐ.என்.ஏ. போர்முனையில் நின்ற போது, 1944 செப்டம்பர் 22-ம் நாள் மாவீரர் நேதாஜி வீரமுழக்கமிட்ட உரையில் "தேசப்பிதாவே! மகாத்மாவே! இந்தியாவின் விடுதலைக்கான இந்த புனிதப் போரில் எங்களுக்கு உங்களின் மேலான ஆசியை தாருங்கள்; வாழ்த்துக்களை வழங்குங்கள்" என்று மானசீகமாக மகாத்மா காந்திக்கு வேண்டுகோள் வைத்து ஆற்றிய உரை நெஞ்சத்தை நெக்குருக செய்யும் உணர்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.

    தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவுபடுத்திய கவர்னர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ம.தி.மு.க. அவைத்தலைவர்-ஆடிட்டர் அர்ஜூனராஜ்.
    • ம.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ம.தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-

    1. ம.தி.மு.க. அவைத்தலைவர்-ஆடிட்டர் அர்ஜூனராஜ்.

    2. பொருளாளர்-மு.செந்திலதிபன்.

    3. அரசியல் ஆய்வு மைய செயலாளர்-ஆவடி இரா.அந்திரிதாஸ்.

    4. தேர்தல் பணிச் செயலாளர்-வி.சேஷன்.

    இதே போல ம.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கைத் தயாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-

    1. ம.தி.முக. துணைப் பொதுச்செயலாளர்-தி.மு.இராசேந்திரன்.

    2. கொள்கை விளக்க அணி செயலாளர்-ஆ.வந்தியத்தேவன்.

    3. தணிக்கைக் குழு உறுப்பினர்-வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன்.

    4. இளைஞரணி செயலாளர்-ப.த.ஆசைத்தம்பி.

    இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.

    ×