என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய தேர்தல் ஆணையம்"
- விண்ணப்பங்களை BLO-க்களால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்.
- தமிழகத்தில் 70.70% விண்ணப்பங்கள் BLO-க்களால் இணையத்தில் பதிவேற்றம்.
தமிழகத்தில் 6.24 கோடி வாக்காளர்களுக்கு 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களிடம் பெறப்பட்ட 4.53 கோடி (70.70%) விண்ணப்பங்களை BLO-க்களால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 70.70% விண்ணப்பங்கள் BLO-க்களால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- 6.41 கோடி வாக்காளர்களில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு விண்ணப்ப விநியோகம் நடைபெற்றுள்ளது.
- இன்று மதியம் 3 மணிவரை 95.78% விண்ணப்பங்கள் விநியோகம்
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (நவ.22) மதியம் 3 மணிவரை 95.78% SIR விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
லட்சத்தீவு மற்றும் கோவாவில் 100 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், அந்தமான் நிக்கோபர், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99% அதிகமான படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில் கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50.45 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் தேர்தலுக்கான பணிகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- VVPAT-ல் வேட்பாளர்கள் முகம் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை.
- மேற்குவங்கத்தில் தேர்தல் பணிகள் துவக்கம்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மத்தியப் பிரதேசத்தில் SIR பணிகள் நடைபெற்று வரும்நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சரிபார்ப்பு பயிற்சி மற்றும் வாக்களிப்பு ஒத்திகைப் பயிற்சியை இன்று தொடங்கி உள்ளது.
துணைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் பாரதி தலைமையில் கொல்கத்தாவில் முதல் நிலை சோதனை (FLC) குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் SIR, EVM இருப்பு, VVPAT இருப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு மாநில தேர்தல் ஆணையத்திடம் அனைத்து இயந்திரங்களின் இருப்பும் போதுமான அளவு உள்ளதாக தெரிவித்தது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த வகையான படங்கள் இடம்பெற வேண்டும் எனவும் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். இம்முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது. VVPAT-ல் வேட்பாளர்கள் முகம் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை.
நடந்து முடிந்த பீகார் தேர்தலில் இருந்து இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. வாக்களிப்பு ஒத்திகை பயிற்சியின்போது இது அப்படி இருக்கும் என காட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திர சரிபார்ப்பு பயிற்சி அனைத்து பொத்தான்களும் சரியாக வேலை செய்கிறதா; வாக்குச் சீட்டு-கட்டுப்பாட்டு அலகு சரியாக பதிலளிக்கிறதா; VVPAT காகிதமும், படமும் சரியாக வெளிவருகிறதா என்பதை உறுதிசெய்து சரிபார்க்கும் நோக்கம் கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.
- 12 மாநிலங்களுக்கு அறிவிக்கப்படும்போது அசாம் மாநிலத்திற்கு மட்டும் அறிவிக்கப்படவில்லை.
- தற்போது அசாமில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்குள் வாக்காளர்கள் SIR படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதேவேளையில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் அசாம் மாநிலத்தில் ஏன் SIR பணி மேற்கொள்ள உத்தரவிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் சிறப்பு திருத்தம் (Special Revision) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வீடு வீடாக சென்று நவம்பர் 22-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை வாக்காளர்கள் பெயர் சரிபார்க்கப்படும். டிசம்பர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 10-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
- பாட்னாவில் வாக்குச்சாவடி மற்றும் பிற ஏற்பாடுகளை டிஎஸ்பி அனு குமாரி ஆய்வு செய்தார்.
- ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்று நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. காலை 11 மணி நிலவரப்படி 27.7 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மதியம் 1 மணி நிலவரப்படி 42.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கை பதிவு செய்தார். பீகார் சபாநாயகர் நந்த் கிஷோர் யாதவ் பாட்னா சாஹிப் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பாட்னாவில் வாக்குச்சாவடி மற்றும் பிற ஏற்பாடுகளை டிஎஸ்பி அனு குமாரி ஆய்வு செய்தார்.
பீகாரில் நடைபெற்று வரும் முதல்கட்ட வாக்குப்பதிவை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கண்காணித்து வருகிறார். ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு மந்தமாக நடப்பது போல தேர்தல் ஆணையம் வேண்டும் என்று வாக்குப்பதிவு எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதாக ராஷ்டிரிய ஜனதா தளம் குற்றம்சாட்டி உள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணிகள் வலுவுடன் இருக்கும் பகுதிகளில் எல்லாம் வேண்டுமென்றே மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மின்வெட்டு குறித்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. அது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது என்று கூறி உள்ளது.
- வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செல்லும் போது முன்கூட்டியே அந்த தெரு மக்களுக்கு இன்று முன்அறிவிப்பும் செய்யப்பட்டது.
- 2002 அல்லது 2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. இந்த தேர்தலுக்காக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று முதல் வீடு வீடாக தொடங்கி உள்ளது.
பீகாரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்று முதல் தொடங்கி உள்ளது.
இதற்கான பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதால் அதன் அடிப்படையில் இன்று வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.
இவர்களிடம் கடந்த 2002-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கி இருப்பதால் அதன் அடிப்படையில் விண்ணப்ப படிவங்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஏதாவது ஒன்றை இணைத்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
புதிய வாக்காளராக பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-யை நிரப்பி தர வேண்டும் என்றும் அதற்கான விண்ணப்பத்தை வழங்கினார்கள். அப்போது தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து இடம் பெயர்ந்து வந்த வாக்காளர்கள் உறுதிமொழி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மக்களிடம் எடுத்துக் கூறினார்கள்.
பகுதி அளவு நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தின் 2 பிரதிகளை அவர்கள் வழங்கி வருகின்றனர். அதில் தொடர்புடைய வாக்காளர்களின் பெயர், முகவரி விபரம் இடம் பெற்று உள்ளது. இந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் 2002-ம் ஆண்டு அதே இடத்தில் வசித்திருந்தால் மற்ற விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
முகவரி மாறியவர்கள், இதற்கு முன்பு வேறு ஒரு தொகுதியில் அவர்கள் இருந்த பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தால் தேர்தல் ஆணையம் கூறி உள்ள ஆதார் உள்பட 12 ஆவணங்களில் விண்ணப்ப படிவத்தில் வாக்காளர்களின் புதிய புகைப்படத்தை ஒட்டுவதற்கு இடம் விடப்பட்டு உள்ளது. அதில் வாக்காளர்கள் தங்களது சமீபத்திய கலர் போட்டோ ஒட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இணையதளம் மூலமும் கணக்கெடுப்பு படிவத்தை நிரப்பி அனுப்பலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளதால் இதற்காக பகுதியளவு முன் நிரப்பப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவத்தை இ.சி.ஐ.என்.டி. செயலி மூலம் நிரப்பி பதிவேற்றலாம். அல்லது voters.eci.gov.in இணையதளத்திற்கு சென்று கணக்கெடுப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி பின்னர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம்.
வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செல்லும் போது முன்கூட் டியே அந்த தெரு மக்களுக்கு இன்று முன்அறிவிப்பும் செய்யப்பட்டது.
ஊழியர்கள் விண்ணப்பத்துடன் வீடு வீடாக வரும்போது அவர்களுடன் கட்சி நிர்வாகிகளும் உதவுவதற்காக உடன் வந்தனர்.
இன்று விண்ணப்பம் வழங்கிய வீடுகளில் மெதுவாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வைத்திருங்கள். இன்னொரு நாளில் வந்து விண்ணப்பத்தை வாங்கிக் கொள்கிறோம் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
2002 அல்லது 2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்கலாம் என்றும் உரிய ஆவணங்களை காட்டி விண்ணப்பிக்கலாம் என்றும் எடுத்துக் கூறினார்கள்.
அதுமட்டுமின்றி டிசம்பர் 9-ந்தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறுவதை அப்போது உறுதி செய்ய முடியும் என்று எடுத்துரைத்தனர்.
வாக்காளர் விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கொண்டு பூர்த்தி செய்யவும், தகுந்த ஆலோசனை வழங்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெறுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தற்போதைய SIR பணி சுதந்திரத்திற்குப் பிறகு 9ஆவது நடவடிக்கையாகும்.
- 21 ஆண்டுகளுக்கு முன்னதாக இதுபோன்ற பணி நடந்துள்ளது.
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்பின் இந்தியா முழுவதும் SIR பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
அடுத்த வரும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இதற்கிடையே, SIR குறித்து இந்திய தேர்தல் தலைமை ஆணையர் நாளை (இன்று) செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 12 மாநிலங்களில் 2ஆம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
பீகாரில் முறையீடு ஏதுமின்றி முதற்கட்ட சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்றது. அரசியல் கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் வாக்காளர் பட்டியலின் தரம் குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளன. தற்போதைய SIR சுதந்திரம் அடைந்த பிறகு 9ஆவது மாற்றமாகும். கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னதாக 2002-2004-ல் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது.
- வாக்குச்சாவடி-நிலை அதிகாரிகளுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
- பயிற்சிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசு ஊழியர்களிடமிருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
புதுடெல்லி:
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்கள் உட்பட 10 முதல் 15 மாநிலங்களில் பீகாரைப் போல முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த பணியின்போது வாக்குச்சாவடி-நிலை அதிகாரிகளுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இந்தப் பயிற்சிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசு ஊழியர்களிடமிருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் வாக்குச்சாவடி -நிலை அதிகாரிகளுக்கு கணக்கெடுப்பு படிவங்களை நிரப்ப உதவுவார்கள், தேவைப்பட்டால் மாற்றாகவும் பணியமர்த்தப்படவும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பீகாரில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு, தேர்தல் நடைபெற இருக்கிறது.
- அடுத்த வருடம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாக்கு உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
என்றாலும், நடைமுறைப்படுத்தி அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நாடு தழுவிய SIR குறித்து அறிவிக்க, நாளை மாலை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது விரிவான விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களுடன் 10 முதல் 15 மாநிலங்களில் முதற்கட்டமாக SIR பணியை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
- அவரது கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கரூரில் கடந்த மாதம் இறுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரசார கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததுதான் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளையில் போதுமான பாதுகாப்பு வழங்கப்படாதது, த.வெ.க. கேட்ட இடம் கொடுக்காததுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என த.வெ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் விமர்சனம் வைக்கப்படுகிறது.
கூட்ட நெரிசல் சம்பவம் இந்தியாவைவே உலுக்கியுள்ளது. இதனால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இதற்கிடையே, இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின்போது, தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- முசாபர்பூர் மாவட்டத்தில் 88,108 வாக்காளர் அதிகரித்துள்ளனர்.
- பாட்னா மாவட்டத்தில் 1,63,600 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது. அப்போது அங்கு வசிப்பதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனால் தேர்தல் ஆணையம் NRC-யை மறைமுகமாக அமல்படுத்த பாஜக, தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் பலரது வாக்குகள் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கடுமையாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஆதார்டு கார்டை ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முசாபர்பூர் மாவட்டத்தில் 88,108 வாக்காளர் அதிகரித்துள்ளனர். முன்னதாக 32,03,370 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 32,91,478 அதரித்துள்ளனர்.
பாட்னா மாவட்டத்தில் 1,63,600 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். நவடா மாவட்டத்தில் 30,491 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். முழு விவரத்தை https://voters.eci.gov.in/ என்ற இணைய தளத்தில் காணலாம்.
தேர்தல் ஆணையம் அக்டோபர் 4 மற்றும் அக்டோபர் 5ஆம் தேதி பீகார் சென்று தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆராய உள்ளது. அதன்பின் பீகார் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்.
- இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
நம் நாட்டில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன.
இவை தவிர சுமார் 3 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதேநேரம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக அவை இயங்கி வருகின்றன.
இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்து உள்ளன. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 9-ந்தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் 2-வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து உள்ளது.
இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஆகமொத்தம் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் 3-வது கட்டமாக கடந்த 2021-ம் நிதியாண்டு முதல் கணக்குகளை தாக்கல் செய்யாத 359 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கட்சிகளும் விரைவில் நீக்கப்பட உள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தில் 39 கட்சிகள் இருக்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
இந்நிலையில் ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.ம.க. தனி சின்னத்தில் போட்டியிடாததால் பதிவை இழந்துள்ளது.
இதேபோல் ஜான் பாண்டியன் தலைவராக உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பதிவு, தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பதிவு, எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகத்தின் பதிவு, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பதிவு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.






