search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai"

    • அரசன் அண்ணாமலையார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.
    • அண்ணாமலையார் வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி.

    திருவண்ணாமலையை வல்லாள மகாராஜன் என்ற அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவருக்கு குழந்தை இல்லை. அரசன் அண்ணாமலையார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். தனக்கு குழந்தை இல்லை என்று வருந்தியபோது இறைவன் அவர் கனவில் தோன்றி நானே உனக்கு மகனாக இருப்பேன் என கூறியுள்ளார். இதனால் அரசன் குழந்தை பாக்கியம் இல்லை என்ற வேதனையில் இருந்து விடுபட்டார். சில காலம் கழித்து வல்லாள மகாராஜன் இறந்து விட்டார்.

    அரசன் இறந்ததை மாசி மாதம் பூச நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி செல்லும் அண்ணாமலையாரிடம் ஓலை மூலமாக தகவலை தெரிவிப்பார்கள். இதனையடுத்து அண்ணாமலையார் தீர்த்தவாரிக்கு செல்லாமல் மேளதாளம் இல்லாமல் கோவிலுக்கு திரும்பி வருவார். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் திருவண்ணாமலை அடுத்த பள்ளிக் கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள நதிக்கரையில் அண்ணாமலையார் வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாய்த் தோன்றினார்.
    • அடியையோ அல்லது முடியையோ காண்கின்றவர் யாரோ அவரே பெரியவர்.

    நான்முகனுக்கும் திருமாலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. நம்மில் யார் பெரியவர்? என்பதுதான் இந்த போட்டி. இந்த போட்டியை எப்படி நடத்துவது? எப்பொருளை வைத்து நடத்துவது? என்பதில் அவர்களுக்கு இடையே குழப்பம். இதை அறிந்த சிவபெருமான் அவர்களிடையே, ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாய்த் தோன்றினார். தமது அடியையோ அல்லது முடியையோ காண்கின்றவர் யாரோ அவரே பெரியவர் எனக்கூறி ஓங்கி உயர்ந்து நின்றார்.

    திருமால், வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் திருவடிகளைக் காண புறப்பட்டார். திருமால் திருவடிகளைக் காண புறப்பட்டதால், நான்முகன், அன்னமாய் வடிவெடுத்து இறைவனின் திருமுடி யைக்காண பறந்து சென்றார். பாதாளம் ஏழினைக் கடந்து சென்றும் இறைவனின் திருவடியை திருமாலால் காண முடியவில்லை. இதுபோல் இறைவனின் திருமுடியைக்காண உயர உயரப்பறந்தும் நான்முகனால் திருமுடியைக் காண முடியவில்லை.

    இதனால் சிவபெருமானின் அடியையும், முடியையும் காண இயலாது போட்டியில் தோல்வி அடைந்தார். தங்களது அகங்காரம் அழியப்பெற்றவர்களாய், `சிவப்பரம் பொருள், உலகில் முழு முதற்பரம் பொருள்' என்பதை உணர்ந்து தங்களது பிழைகளை பொறுத்தருளுமாறு வேண்டிக் கொண்டு சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். அப்போது சிவபெருமான் சிவலிங்கத் திருஉருவத்தோடு ஜோதியில் இருந்து வெளிப்பட்டு அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    திருமால், பிரம்மா இருவரும் சிவபெருமானை வழிபட்டு உண்மை ஞானம் பெற்றனர். ஜோதிப்பிழம்பு அருணாசலமாயிற்று. அதனின்று தோன்றிய சிவலிங்கம் அருணாசலேஸ்வரர் ஆனார். லிங்கமே மலையாகவும். மலையே லிங்கமாகவும் வழிபடலானது. திருவண்ணாமலை கிருதாகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும் கலியுகத்தில் கல்மலையாகவும் மாறின.

    • அண்ணாமலையார் திருத்தேர் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
    • தேரோட்டாத்தை காண ஆயிரம் கணக்கான பக்தர்கள் கோவிலை சூழ்ந்துள்ளனர்.

    திருவண்ணாமலையில் மகா ரதம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் திருத்தேர் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.

    தேரோட்டாத்தை காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையை சூழ்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.

    இந்நிலையில், தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் சிலர் காயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறைவான மின்சாரம் பாய்ந்ததால் பக்தர்கள் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 

    கூட்டத்தில் ஒரு பகுதியில் இருந்த பக்தர்கள் மீது மாட வீதியில் இருந்த கடை ஒன்றில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.

    இதை அறிந்த காவல்துறையினர் மின்சாரம் நிறுத்தப்பட்டு பக்தர்களை மீட்டனர்.

    • திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா
    • முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும்.

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் திருக்கார்த்திகை திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருகார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது குறித்து பார்ப்போம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகளை செய்தவர்களில் வல்லாள மகாராஜனும் ஒருவர். அவருடைய வேண்டுகோளின்படி அவருக்கு மகனாக இருந்து, தந்தைக்கு பிள்ளை செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் அருணாசலேஸ்வரர் செய்ததாக தல வரலாறு சொல்கிறது.

    வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, இறைவனே அவருக்கு இறுதிச்சடங்கை நடத்தியதாக தல புராணம் கூறுகிறது. இதனால் குழந்தை வரம் அருளும் இறைவனாகவும் அருணாசலேஸ்வரர் பார்க்கப்படுகிறார். அவரிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள், தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி, கோவிலை சுற்றி வலம் வந்து வழிபடுவார்கள்.

    மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன.

    அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மலையை சுற்றி அமைந்திருக்கும் 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிவலப்பாதையை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் மலைப்பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலிதீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.

    இவற்றுள் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

    கிரிவலம் செல்வதற்கு சரியான பொழுது இரவு நேரம்தான். பவுர்ணமி வெளிச்சத்தில் வலம் வருவதே சரியான முறையாகும். இரவு நெருங்கியதும் நிலவொளி பிரகாசிக்க தொடங்கும் வேளையில் கிரிவலத்தை தொடங்கலாம். அந்த நிலவொளியில் சந்திரன் 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசிக்கிறார்.

    அந்த நிலவு ஒளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். நிலவு ஒளியால் மனத்தெளிவு உண்டாகும். கிரிவலம் வருபவர்கள் இறை நாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வலம் வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

    `அருணன்' என்றால் `சூரியன்' என்று பொருள். `அசலம்' என்றால் `கிரி' அல்லது `மலை' என்று பொருள். சூரியனை போன்ற ஒளி வடிவாக இறைவன் மலை உருவில் காட்சி அளிப்பதால் இந்த மலை `அருணா சலம்' என்று அழைக்கப்படுகிறது.

    கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும் இருந்த இந்த மலை, கலியுகத்தில் கல் மலையாகவும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் திருவண்ணா மலையை சுற்றி எட்டு திசைகளிலும் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களின் சன்னிதியில் வழிபாடு செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-வது நாள் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. 2688 அடி மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் இந்த மகாதீபம் ஏற்றப்படும். அதற்கு ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் போன்றவை பயன்படுத்தப்படும்.

    முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும். அதில் இருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கை கொண்டு ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். இவை பஞ்ச மூர்த்திகள் என்றும் கூறப்படும். மாலையில் எல்லா தீபங்களும் கொடிமரம் அருகில் ஒன்று சேர்க்கப்படும். அதன் பிறகு மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ச்சியாக 11 நாட்கள் வரை எரிந்து கொண்டே இருக்கும்.

    ஆலய அம்சங்கள்

    இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. 25 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 தனி சன்னிதி கள், 22 விநாயகர் சிலைகள், 42 செப்பு சிலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலைக்கு நவ துவார பதி என்ற பெயரும் உண்டு. அதற்கு 9 நுழைவுவாசல்களை கொண்ட நகரம்' என்று பொருள்.

    • இன்றுகாலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலா.
    • தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. 6-ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலாவும் நடந்தது. இன்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி தேர் மற்றும் வெள்ளி இந்திர விமானங்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடக்கிறது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 7-ம் நாள் உற்சவமான தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    பஞ்ச மூர்த்திகள் திருத்தேர்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர். காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தனுசு லக்கினத்தில் முழு முதல் கடவுளான விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.

    விநாயகர் தேர் மாட வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்த பின் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் தேர் மாட வீதிகளில் வலம் வரும். நண்பகலில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடக்கிறது.

    தேர் மாடவீதிகளில் அசைந்தாடி வருவதைக் காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பெரிய தேர் நிலைக்கு வந்த பின்னர் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் அம்மன் தேர் மாட வீதிகளில் வலம் வரும். அம்மன் தேர் உடன் சண்டிகேஸ்வரர் தேரும் மாட வீதிகளில் வலம் வரும்.

    இன்றும், நாளையும் திருவண்ணாமலையில் தேரோட்டம் நடைபெறுவதால் தேரோட்டத்தை காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை சார்பில் தேர் திருவிழாவிற்காக அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூய்மையாக காட்சி தருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று பிடாரி அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காமதேனு வாகனத்தில் மாட வீதியில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்மன் மாட வீதி உலா நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    இன்று (வியாழக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.

    தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலையில் மற்றும் இரவில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது.

    இதற்கிடையில் 23-ந் தேதி (7-ம் நாள் விழா) பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது. கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அன்று இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • துர்க்கை அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்.
    • இன்று இரவு பிடாரி அம்மன் உற்சவம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நேற்று துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.

    துர்க்கை அம்மன் உற்சவத்தை முன்னிட்டு சின்ன கடைத்தெருவில் உள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

    பின்னர் அலங்கார ரூபத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய துர்க்கை அம்மன் கோவில் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாளித்தார்.

    இன்று இரவு பிடாரி அம்மன் உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    மாடவீதிகளில் பிடாரி அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

    • கட்டுமான பணிகளால் தரிசனம் பாதிக்கப்படாது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
    • அறநிலையத் துறைக்காக பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் எதிரே அடுக்குமாடி வணிக வளாகம் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அறநிலையத் துறைக்காக பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    உத்தரவு பிறப்பித்த நிமிடத்திலிருந்து தடை உத்தரவு அமலுக்கு வருவதாகவும், எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ராஜ கோபுரத்திற்கு எதிரில், அறநிலையத் துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்படுவது தொடர்பாக சிறப்பு அமர்வில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

    ராஜகோபுரம் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், கோபுர தரிசனம் தடுக்கப்படும் எனவும் நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகளால் தரிசனம் பாதிக்கப்படாது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.

    • அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
    • முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

    திருவண்ணாமலை:

    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி, சாமி வீதி உலா செல்லும் வாகனங்கள் சீரமைக்கும் பணி, வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணி, பஞ்சமூர்த்தி தேர்கள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. திருப்பூரை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இந்த உழவார பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோவிலில் உள்ள கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கழுவி சுத்தம் செய்வது, விளக்குகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

    • தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    10-ம் நாள் விழாவான நவம்பர் மாதம் 26-ந் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் மகா தீபத்தன்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இவ்விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நடைபெற்றது.

    முன்னதாக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சம்பந்த விநாயகர் சன்னதில் இருந்து பந்தக்கால் கோவிலின் ராஜகோபுரம் முன்பு கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தேரடி வீதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் மற்றும் பஞ்ச மூர்த்திகள் தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சொல்ல மங்கள வாத்தியம் முழங்க ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ், கோவில் இணை ஆணையர் ஜோதி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், ராஜாராம், கோமதி குணசேகரன், பெருமாள், சைபர் கிரைம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
    • அண்ணாமலை மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் திருச்சியில் நடந்த தெற்கு ரெயில்வே ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து சி.என்.அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தி பேசினார்.

    அதனைத்தொடர்ந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பவுர்ணமி நாட்களில் சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டு தெற்கு ரெயில் நிர்வாகம் கால அட்டவணை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை வரும் ரெயில் பவுர்ணமி நாளன்று திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து விழுப்புரம் வரும் ரெயில் அங்கிருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    பவுர்ணமி நாட்களில் சென்னையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும்.

    தொடர்ந்து அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடையும். பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.

    அதேபோல் விழுப்புரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும். தொடர்ந்து அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

    மேலும் விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் பவுர்ணமி நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பவுர்ணமி நாட்களில் விழுப்புரத்தில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடையும்.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்திற்கு சென்றடையும். தொடர்ந்து அங்கிருந்து வழக்கம் போல் மயிலாடுதுறை செல்லும்.

    இந்த சிறப்பு ரெயில்கள் ஜூலை மாதத்தில் 2 மற்றும் 3-ந் தேதிகள், 30 மற்றும் 31-ந் தேதிகள், ஆகஸ்டு மாதத்தில் 30 மற்றும் 31-ந் தேதிகள், செப்டம்பர் மாதத்தில் 28 மற்றும் 29-ந் தேதிகள், அக்டோபர் மாதத்தில் 27 மற்றும் 28-ந் தேதிகள், நவம்பர் மாதத்தில் 26 மற்றும் 27-ந் தேதிகள், டிசம்பர் மாதத்தில் 25 மற்றும் 26-ந் தேதிகள் ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
    • மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை மீது காட்சி அளிக்கும். இந்த நிலையில் 5-வது நாளான இன்று அதிகாலையில் மிதமான சாரல் மழை பெய்தது. அந்த சமயத்தில் பலத்த சூறைக்காற்றும் வீசியது. இந்த காற்றிலும் 2,668 அடி உயரம் கொண்ட மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுடர் விட்டு எரிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. இதனை பக்தர்கள் பக்தி பரவத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

    ×