search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபத்திருவிழா"

    • பவுர்ணமியையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்
    • தெப்பல் உற்சவத்திலும் திரளானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் நேற்று இரவு அய்யங்குளத்தில் நடைபெற்ற சந்திரசேகரர் தெப்பல் உற்சவத்திலும் திரளானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 17-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும், சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் வலம் வந்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

    மகாதீபத்தை காணவும், கிரிவலம் செல்லவும் கடந்த 25-ந் தேதி இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர தொடங்கினர். நேற்று முன்தினம் அதிகாலை முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலையில் கட்டுக்குஅடங்காத அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்.

    நேற்று முன்தினம் மாலையில் கோவிலில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் ரிஷப வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் நந்தி வாகனத்திலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி மாட வீதியில் உலா வந்தனர்.

    மேலும் கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 3.58 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 3.08 மணியளவில் நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைய தொடங்கியது. இருப்பினும் இரவு வரை பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். அதுமட்டுமின்றி கிரிவலப்பாதையில் காஞ்சி சாலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

    மகா தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக திருவண்ணாமலையில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அங்கு பக்தர்களுக்கு தேவையான சிறப்பு பஸ்கள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பெரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகாமல் பஸ்களில் வந்து சென்றனர்.

    மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி இடம் பிடித்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருந்தது.

    மகா தீபத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வழக்கமாக மகா தீபம் நிறைவடைந்த பின்னர் வெளியூர் போலீசார் கிளம்பி விடுவார்கள். இந்த ஆண்டு மகா தீபத்தின் மறுநாள் பவுர்ணமியும் வந்ததால் 2-வது நாளாக தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலில் பக்தர்கள் ராஜ கோபுரத்தின் வழியாக மட்டுமே சாமி தரிசனம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அம்மணி அம்மன், திருமஞ்சன கோபுரத்தின் வழியாக போலீசார் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். மேலும் கோவிலை சுற்றியும் பேரிகார்டு போட்டு அடைத்து வைத்து கொண்டதால் நேற்று அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை வியாபாரிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடைபெற உள்ளது. முதல் நாள் விழாவான நேற்று இரவு சந்திரசேகரர் தெப்பல் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் 3 முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நாளை (புதன்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • அண்ணாமலையார் கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது.
    • அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று முன்தினம் மகாதீபம் ஏற்றப்பட்டது.

    இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சி தரும். 2-வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் சிவாலய தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மலை மீது காட்சியளித்த மகாதீபத்தை பக்தர்கள் தரிசித்தனர்.

    இந்தநிலையில் தீபத்திருவிழா நிறைவ டைந்ததும், உண்ணா முலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது.

    இன்று காலை கோவிலில் நடை திறக்கப்பட்டு மூலவர் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளம் முழங்க கிரிவல புறப்பாடு நடந்தது.

    அண்ணாமலையாருடன், உண்ணாமுலையம்மனும், துர்கையம்மனும் கிரிவலம் சென்றனர். இன்று 3-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் தெப்ப உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. முதல் நாளான நேற்றிரவு அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று 2-ம் நாள் தெப்ப உற்சவத்தில் பராசக்தி அம்மன் உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

    பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்க வில்லை. குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்க ப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • கோவில் வளாகம் முழுவதும் விளக்கேற்றினார்கள்.
    • 2-வது முறையாக தீபத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

     திருப்பூர்:

    திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் லட்சத்து எட்டு தீபத்திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு 1000 லிட்டர் நல்லெண்ணெய், லட்சத்து எட்டு விளக்கு மற்றும் திரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்ட உடன், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்களும், பக்தர்களும் கோவில் வளாகம் முழுவதும் விளக்கேற்றினார்கள்.

    ஒரே இடத்தில் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு, எங்கும் ஒளிமயமாக காட்சி அளித்தது பக்தர்கள் மனதில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னதாக திருமுருகநாத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நவபாரதி ராமநாதன், உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சென்னியப்பன், உமா காளீஸ்வரி, பழனிச்சாமி, கோவில் செயல் அலுவலர் விமலா, நகராட்சி தலைவர் குமார் உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்சத்து எட்டு தீபத்திருவிழா நடைபெறும் நிலையில் திருமுருகநாத சுவாமி கோவிலில் 2-வது முறையாக தீபத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பங்கேற்பு
    • அம்மனின் கால் பாதத்துக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் கார்த்திகை தீபத்திரு விழாவையொட்டி நேற்று மாலை மகாதீபம் ஏற்றப் பட்டது. இதையொட்டி நேற்று மாலை பகவதி அம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இந்த ஊர்வலம் சன்னதி தெரு வழியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறையை சென்ற டைந்தது. பின்னர் அங்கு இருந்து தனி படகு மூலம் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றனர். அங்குள்ள ஸ்ரீபாதமண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மனின் கால் பாதம் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், மஞ்சள் பொடி, பால், பன்னீர், தயிர், இளநீர், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் அம்மனின் கால் பாதத்துக்கு விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோவில் மேல்சாந்தி சீனிவாசன் போற்றி கார்த்திகை தீபத்தினை ஏற்றி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபாதமண்டபத்தின் மேற்குப்பக்கம் உள்ள வெளிபிரகாரத்தில் வைத்தார். இந்த கார்த்திகை தீபம் கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவில் கிழக்குவாசலை நோக்கி வைக்கப்பட்டது. கன்னியா குமரி கடற்கரையில் நின்ற வாறு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கார்த்திகை தீபத்தை பார்த்து வணங்கி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரு மான தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., குமரி மாவட்ட திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன், விவே கானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி. தாணு, பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி யில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • பல்வேறு பகுதிகளிலும் பனை ஓலை குருத்துகள், திரளி இலைகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடை பெற்றது.

    நாகர்கோவில் :

    கார்த்திகை தீபத் திருவிழா இன்று (26-ந்தேதி) கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடை பெறும்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடி வீஸ்வரம் அழகம்மன் கோ வில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெரு மாள் கோவில், களியல் மகாதேவர் கோவில் ஆகிய 7 கோவில்களில் இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்காக பனந்தோப்பு களில் இருந்து பனைமரம் வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும். அந்த பனை மரத்தை சுற்றி பனை ஓலைகளால் வேயப்படும். இன்று இரவு கோவில் அர்ச்சகர் அந்தப்பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம்ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்து விடுவார். இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி யில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கார்த்திகை தீப திருவிழா வையொட்டி வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்று வார்கள். இதற்காக குமரி மாவட்டத்தில் அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடை பெற்றது. தள்ளு வண்டி களிலும், சாலையோரங்களி லும் ஏராளமான வியாபாரி கள் அகல் விளக்குகளை குவித்து வைத்து விற்பனை செய்தனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் அகல் விளக்கு களை வாங்கிச் சென்றனர்.

    மேலும் சுவாமிக்கு கொழுக்கட்டை அவித்து வழிபடுவார்கள். கொழுக் கட்டை தயாரிப்ப தற்காக கட்டபொம்மன் சந்திப்பு, வடசேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பனை ஓலை குருத்துகள், திரளி இலைகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடை பெற்றது. மேலும் பூக்களின் விற்பனையும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பூக்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

    • இறைவன் ஜோதி வடிவில் காட்சி தருகிறார்.
    • அளவற்ற புண்ணியமும், பாவ விமோசனமும் கிடைப்பதாக கூறப்படுகிறது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் 10-ம் நாள் நிகழ்ச்சியாக அன்று மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. (இறைவன் ஜோதி வடிவில் காட்சி தருவதாக புராணங்கள் கூறுகின்றன).

    அந்த தீபத்தை தரிசனம் செய்ய அன்று லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடுகிறார்கள்.

    வழிபாடு முடிந்ததும் அந்த கொப்பரையில் இருக்கும் மையை தேவஸ்தானம் சேகரித்து சிறிய, சிறிய பாலித்தீன் பைகளில் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்படும்.

    அண்ணாமலையார் `மை` என அழைக்கப்படும் அந்த மையைநெற்றியில் இட்டுக்கொண்டால் நம்மை எதிர்நோக்கி இருக்கும் துன்பங்கள் நீங்கி நன்மை கிடைப்பதுடன் நமக்குள்ள எதிரிகளும் காணாமல் போய்விடுவதாகவும், அளவற்ற புண்ணியங்களும், பாவ விமோசனமும் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. கோவிலில் நெய் காணிக்கை செலுத்தியவர்கள் இந்த மையை கோவிலில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    • அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.
    • ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    இறைவனால் படைக்கப்பட்ட ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை உணர்த்தும் வகையில் பார்வதி தேவிக்கு தனது இடப்பாகத்தை கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார் ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இங்கு மலையே இறைவனாக காட்சியளிப்பது சிறப்பம்சமா கும்.

    ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது, அவர்களின் அகங்காரத்தை அடக்கும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் முதலில் கண்டறிகிறார்களோ அவர்களே பெரியவர் என்றார். இதனால் விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சிவனின் அடியை காண முயன்று தோற்றுப்போனார்.

    அதன்பிறகு பிரம்மா அன்னப் பறவை வடிவெடுத்து சிவனின் முடியை காண முயன்றார். அப்போது சிவனின் சிரசில் இருந்து உதிர்ந்து வந்த தாழம்பூவை சாட்சியாக கொண்டு சிவன்முடியை கண்டதாக பிரம்மா பொய் கூறுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் அப்போது பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்து அவர்களின் ஆணவத்தை அழித்தார்.

    இதன் காரணமாகவே பொய்யுரைத்த பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனிக்கோவில்கள் இல்லாமல் போனது. பொய் சாட்சி கூறிய தாழம்பூவும் சிவபெருமாள் பூஜையில் வைக்கும் தகுதியை இழந்தது என்பது ஐதீகம்.

    • கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
    • 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் உள்ள தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

    அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி கோவில் மலைமேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் உள்ள தாமிரக் கொப்பரையில் 300 கிலோ நெய், 150 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு திருவண்ணாமலையிலிருந்து வந்த சிறப்பு குழுவினர் மூலம் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதற்காக மாலை 6 மணி அளவில் கோவில் மூலஸ்தானத்தில் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும்.

    தொடர்ந்து இரவு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமை யில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    தேரோட்டம் மற்றும் கார்த்திகை மகாதீபம் ஏற்று வதை தரிசிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்துள்ளனர்.

    • நாளை முதல் 27-ந் தேதி வரை கும்பகோணம் கோட்டம் சார்பில் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை அண்ணா மலையார் தகோயில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 26-ந் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

    இதேபோல் 27-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது.

    இந்த விழாக்களை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நாளை முதல் (சனிக்கிழமை) 27-ந் தேதி (திங்கட்கிழமை) வரை கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, கரூர், காரைக்குடி, இராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் மேற்கண்ட நாட்களில் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக மினிபஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே, பயணிகள் மற்றும் பக்தர்கள் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 26-ந்தேதி நடக்கிறது
    • இதில் சுசீந்திரம் தாணு மாலயசாமி கோவிலுக்கு 36 அடி உயரம்

    கன்னியாகுமரி :

    கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந்தேதி (ஞா யிற்றுக்கிழமை) கோலா கலமாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணசுவாமி கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், களியல் மகாதேவர் கோவில் ஆகிய 7 கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி வருகிற 26-ந்தேதி இரவு 9 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் சுசீந்திரம் தாணு மாலயசாமி கோவிலுக்கு 36 அடி உயரத்திலும், பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலுக்கு 30 அடி உயரத்திலும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு 25 அடி உயரத்திலும், களியல் மகாதேவர் கோ வில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் மற்றும் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் ஆகிய 4 கோவில்களுக்கு தலா 23 அடி உயரத்திலும் பனை மரங்கள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பனந்தோப்புகளில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு உள்ள வீதியில் நடப்படும்.

    அந்த பனை மரத்தை சுற்றி பனை ஓலைகளால் வேயப்படும். மறுநாள் 26-ந்தேதி திருக்கார்த்திகை அன்று இரவு கோவில் அர்ச்சகர் அந்தப்பனை மரத்தின் உச்சியில் ஏறி பூஜை செய்து தீபம் ஏற்றி விட்டு கீழே இறங்கி வந்து விடுவார். அதன் பிறகு அந்த பனை மரத்தை சுற்றி வேயப்பட்டிருக்கும் பனை ஓலை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாகி விடும். அந்த சாம்பலை பக்தர்கள் அள்ளி சென்று தங்களது வீடுகளிலோ, தொழில் நிறுவனங்களிலோ அல்லது விளை நிலங்களிலோ போடுவது வழக்கம். இவ்வாறாக இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். சொக்கப் பனை கொளுத்தும் இடங்களில் தீயணைக்கும் படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்ட உள்ளனர். இந்த தகவலை குமரி மாவட்ட திருக்கோவில் களின் அறங்காவலர் குழு தலை வர் பிரபா ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா
    • முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும்.

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் திருக்கார்த்திகை திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருகார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது குறித்து பார்ப்போம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகளை செய்தவர்களில் வல்லாள மகாராஜனும் ஒருவர். அவருடைய வேண்டுகோளின்படி அவருக்கு மகனாக இருந்து, தந்தைக்கு பிள்ளை செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் அருணாசலேஸ்வரர் செய்ததாக தல வரலாறு சொல்கிறது.

    வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, இறைவனே அவருக்கு இறுதிச்சடங்கை நடத்தியதாக தல புராணம் கூறுகிறது. இதனால் குழந்தை வரம் அருளும் இறைவனாகவும் அருணாசலேஸ்வரர் பார்க்கப்படுகிறார். அவரிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள், தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி, கோவிலை சுற்றி வலம் வந்து வழிபடுவார்கள்.

    மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன.

    அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மலையை சுற்றி அமைந்திருக்கும் 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிவலப்பாதையை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் மலைப்பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலிதீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.

    இவற்றுள் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

    கிரிவலம் செல்வதற்கு சரியான பொழுது இரவு நேரம்தான். பவுர்ணமி வெளிச்சத்தில் வலம் வருவதே சரியான முறையாகும். இரவு நெருங்கியதும் நிலவொளி பிரகாசிக்க தொடங்கும் வேளையில் கிரிவலத்தை தொடங்கலாம். அந்த நிலவொளியில் சந்திரன் 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசிக்கிறார்.

    அந்த நிலவு ஒளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். நிலவு ஒளியால் மனத்தெளிவு உண்டாகும். கிரிவலம் வருபவர்கள் இறை நாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வலம் வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

    `அருணன்' என்றால் `சூரியன்' என்று பொருள். `அசலம்' என்றால் `கிரி' அல்லது `மலை' என்று பொருள். சூரியனை போன்ற ஒளி வடிவாக இறைவன் மலை உருவில் காட்சி அளிப்பதால் இந்த மலை `அருணா சலம்' என்று அழைக்கப்படுகிறது.

    கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும் இருந்த இந்த மலை, கலியுகத்தில் கல் மலையாகவும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் திருவண்ணா மலையை சுற்றி எட்டு திசைகளிலும் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களின் சன்னிதியில் வழிபாடு செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-வது நாள் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. 2688 அடி மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் இந்த மகாதீபம் ஏற்றப்படும். அதற்கு ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் போன்றவை பயன்படுத்தப்படும்.

    முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும். அதில் இருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கை கொண்டு ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். இவை பஞ்ச மூர்த்திகள் என்றும் கூறப்படும். மாலையில் எல்லா தீபங்களும் கொடிமரம் அருகில் ஒன்று சேர்க்கப்படும். அதன் பிறகு மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ச்சியாக 11 நாட்கள் வரை எரிந்து கொண்டே இருக்கும்.

    ஆலய அம்சங்கள்

    இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. 25 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 தனி சன்னிதி கள், 22 விநாயகர் சிலைகள், 42 செப்பு சிலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலைக்கு நவ துவார பதி என்ற பெயரும் உண்டு. அதற்கு 9 நுழைவுவாசல்களை கொண்ட நகரம்' என்று பொருள்.

    • இன்றுகாலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலா.
    • தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. 6-ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலாவும் நடந்தது. இன்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி தேர் மற்றும் வெள்ளி இந்திர விமானங்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடக்கிறது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 7-ம் நாள் உற்சவமான தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    பஞ்ச மூர்த்திகள் திருத்தேர்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர். காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தனுசு லக்கினத்தில் முழு முதல் கடவுளான விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.

    விநாயகர் தேர் மாட வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்த பின் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் தேர் மாட வீதிகளில் வலம் வரும். நண்பகலில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடக்கிறது.

    தேர் மாடவீதிகளில் அசைந்தாடி வருவதைக் காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பெரிய தேர் நிலைக்கு வந்த பின்னர் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் அம்மன் தேர் மாட வீதிகளில் வலம் வரும். அம்மன் தேர் உடன் சண்டிகேஸ்வரர் தேரும் மாட வீதிகளில் வலம் வரும்.

    இன்றும், நாளையும் திருவண்ணாமலையில் தேரோட்டம் நடைபெறுவதால் தேரோட்டத்தை காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை சார்பில் தேர் திருவிழாவிற்காக அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூய்மையாக காட்சி தருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×