search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deepatri festival"

    • பவுர்ணமியையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்
    • தெப்பல் உற்சவத்திலும் திரளானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் நேற்று இரவு அய்யங்குளத்தில் நடைபெற்ற சந்திரசேகரர் தெப்பல் உற்சவத்திலும் திரளானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 17-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும், சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் வலம் வந்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

    மகாதீபத்தை காணவும், கிரிவலம் செல்லவும் கடந்த 25-ந் தேதி இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர தொடங்கினர். நேற்று முன்தினம் அதிகாலை முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலையில் கட்டுக்குஅடங்காத அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்.

    நேற்று முன்தினம் மாலையில் கோவிலில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் ரிஷப வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் நந்தி வாகனத்திலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி மாட வீதியில் உலா வந்தனர்.

    மேலும் கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 3.58 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 3.08 மணியளவில் நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைய தொடங்கியது. இருப்பினும் இரவு வரை பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். அதுமட்டுமின்றி கிரிவலப்பாதையில் காஞ்சி சாலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

    மகா தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக திருவண்ணாமலையில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அங்கு பக்தர்களுக்கு தேவையான சிறப்பு பஸ்கள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பெரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகாமல் பஸ்களில் வந்து சென்றனர்.

    மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி இடம் பிடித்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருந்தது.

    மகா தீபத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வழக்கமாக மகா தீபம் நிறைவடைந்த பின்னர் வெளியூர் போலீசார் கிளம்பி விடுவார்கள். இந்த ஆண்டு மகா தீபத்தின் மறுநாள் பவுர்ணமியும் வந்ததால் 2-வது நாளாக தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலில் பக்தர்கள் ராஜ கோபுரத்தின் வழியாக மட்டுமே சாமி தரிசனம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அம்மணி அம்மன், திருமஞ்சன கோபுரத்தின் வழியாக போலீசார் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். மேலும் கோவிலை சுற்றியும் பேரிகார்டு போட்டு அடைத்து வைத்து கொண்டதால் நேற்று அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை வியாபாரிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடைபெற உள்ளது. முதல் நாள் விழாவான நேற்று இரவு சந்திரசேகரர் தெப்பல் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் 3 முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நாளை (புதன்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • கோவில் வளாகம் முழுவதும் விளக்கேற்றினார்கள்.
    • 2-வது முறையாக தீபத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

     திருப்பூர்:

    திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் லட்சத்து எட்டு தீபத்திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு 1000 லிட்டர் நல்லெண்ணெய், லட்சத்து எட்டு விளக்கு மற்றும் திரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்ட உடன், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்களும், பக்தர்களும் கோவில் வளாகம் முழுவதும் விளக்கேற்றினார்கள்.

    ஒரே இடத்தில் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு, எங்கும் ஒளிமயமாக காட்சி அளித்தது பக்தர்கள் மனதில் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முன்னதாக திருமுருகநாத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நவபாரதி ராமநாதன், உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சென்னியப்பன், உமா காளீஸ்வரி, பழனிச்சாமி, கோவில் செயல் அலுவலர் விமலா, நகராட்சி தலைவர் குமார் உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.7 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்சத்து எட்டு தீபத்திருவிழா நடைபெறும் நிலையில் திருமுருகநாத சுவாமி கோவிலில் 2-வது முறையாக தீபத்திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • இறைவன் ஜோதி வடிவில் காட்சி தருகிறார்.
    • அளவற்ற புண்ணியமும், பாவ விமோசனமும் கிடைப்பதாக கூறப்படுகிறது.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் 10-ம் நாள் நிகழ்ச்சியாக அன்று மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. (இறைவன் ஜோதி வடிவில் காட்சி தருவதாக புராணங்கள் கூறுகின்றன).

    அந்த தீபத்தை தரிசனம் செய்ய அன்று லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடுகிறார்கள்.

    வழிபாடு முடிந்ததும் அந்த கொப்பரையில் இருக்கும் மையை தேவஸ்தானம் சேகரித்து சிறிய, சிறிய பாலித்தீன் பைகளில் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்படும்.

    அண்ணாமலையார் `மை` என அழைக்கப்படும் அந்த மையைநெற்றியில் இட்டுக்கொண்டால் நம்மை எதிர்நோக்கி இருக்கும் துன்பங்கள் நீங்கி நன்மை கிடைப்பதுடன் நமக்குள்ள எதிரிகளும் காணாமல் போய்விடுவதாகவும், அளவற்ற புண்ணியங்களும், பாவ விமோசனமும் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. கோவிலில் நெய் காணிக்கை செலுத்தியவர்கள் இந்த மையை கோவிலில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    • கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
    • 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் உள்ள தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

    அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி கோவில் மலைமேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் உள்ள தாமிரக் கொப்பரையில் 300 கிலோ நெய், 150 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு திருவண்ணாமலையிலிருந்து வந்த சிறப்பு குழுவினர் மூலம் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதற்காக மாலை 6 மணி அளவில் கோவில் மூலஸ்தானத்தில் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும்.

    தொடர்ந்து இரவு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமை யில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    தேரோட்டம் மற்றும் கார்த்திகை மகாதீபம் ஏற்று வதை தரிசிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்துள்ளனர்.

    • திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா
    • முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும்.

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் திருக்கார்த்திகை திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருகார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது குறித்து பார்ப்போம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகளை செய்தவர்களில் வல்லாள மகாராஜனும் ஒருவர். அவருடைய வேண்டுகோளின்படி அவருக்கு மகனாக இருந்து, தந்தைக்கு பிள்ளை செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் அருணாசலேஸ்வரர் செய்ததாக தல வரலாறு சொல்கிறது.

    வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, இறைவனே அவருக்கு இறுதிச்சடங்கை நடத்தியதாக தல புராணம் கூறுகிறது. இதனால் குழந்தை வரம் அருளும் இறைவனாகவும் அருணாசலேஸ்வரர் பார்க்கப்படுகிறார். அவரிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள், தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி, கோவிலை சுற்றி வலம் வந்து வழிபடுவார்கள்.

    மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன.

    அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மலையை சுற்றி அமைந்திருக்கும் 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிவலப்பாதையை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் மலைப்பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலிதீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.

    இவற்றுள் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

    கிரிவலம் செல்வதற்கு சரியான பொழுது இரவு நேரம்தான். பவுர்ணமி வெளிச்சத்தில் வலம் வருவதே சரியான முறையாகும். இரவு நெருங்கியதும் நிலவொளி பிரகாசிக்க தொடங்கும் வேளையில் கிரிவலத்தை தொடங்கலாம். அந்த நிலவொளியில் சந்திரன் 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசிக்கிறார்.

    அந்த நிலவு ஒளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். நிலவு ஒளியால் மனத்தெளிவு உண்டாகும். கிரிவலம் வருபவர்கள் இறை நாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வலம் வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

    `அருணன்' என்றால் `சூரியன்' என்று பொருள். `அசலம்' என்றால் `கிரி' அல்லது `மலை' என்று பொருள். சூரியனை போன்ற ஒளி வடிவாக இறைவன் மலை உருவில் காட்சி அளிப்பதால் இந்த மலை `அருணா சலம்' என்று அழைக்கப்படுகிறது.

    கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும் இருந்த இந்த மலை, கலியுகத்தில் கல் மலையாகவும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் திருவண்ணா மலையை சுற்றி எட்டு திசைகளிலும் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களின் சன்னிதியில் வழிபாடு செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-வது நாள் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. 2688 அடி மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் இந்த மகாதீபம் ஏற்றப்படும். அதற்கு ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் போன்றவை பயன்படுத்தப்படும்.

    முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும். அதில் இருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கை கொண்டு ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். இவை பஞ்ச மூர்த்திகள் என்றும் கூறப்படும். மாலையில் எல்லா தீபங்களும் கொடிமரம் அருகில் ஒன்று சேர்க்கப்படும். அதன் பிறகு மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ச்சியாக 11 நாட்கள் வரை எரிந்து கொண்டே இருக்கும்.

    ஆலய அம்சங்கள்

    இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. 25 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 தனி சன்னிதி கள், 22 விநாயகர் சிலைகள், 42 செப்பு சிலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலைக்கு நவ துவார பதி என்ற பெயரும் உண்டு. அதற்கு 9 நுழைவுவாசல்களை கொண்ட நகரம்' என்று பொருள்.

    • அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற 7-ந் தேதி மாலை 5 மணிக்கு 1லட்சத்து 8 தீபத்திருவிழா நடைபெறுகிறது.
    • புண்ணியம் வாய்ந்த தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள், நல்லெண்ணெய், திரி ஆகியவற்றை கோவில் அலுவலகத்தில் வழங்கலாம்.

    அவினாசி : 

    அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற 7-ந் தேதி மாலை 5 மணிக்கு 1லட்சத்து 8 தீபத்திருவிழா நடைபெறுகிறது. இதற்காக கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் இன்று துவங்கி நடக்கிறது.

    இது குறித்து அவிநாசி ஆன்மிக நண்பர்கள் குழு மற்றும் சேக்கிழார் புனிதர் பேரவை நிர்வாகிகள் கூறியதாவது:- இந்து அறநிலையத்துறை ஒத்துழைப்புடன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில்1 லட்சத்து 8 தீபத்திருவிழாவை இரண்டாவது முறையாக நடத்துகிறோம். கோவிலிலுள்ள சபா மண்டபம், திருக்கல்யாண உற்சவ மண்டபம், கனகசபை மற்றும் பிரகாரங்கள், கோவில் தீப ஸ்தம்பம் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றப்படும்.

    இதற்காக 1 லட்சத்து8 அகல் விளக்குகள், விருத்தாச்சலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த புண்ணியம் வாய்ந்த தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள், நல்லெண்ணெய், திரி ஆகியவற்றை கோவில் அலுவலகத்தில் வழங்கலாம்.விளக்குகளை வைத்து எண்ணெய் ஊற்றி தீபமேற்ற விருப்பமுள்ள சிவனடியார்கள், பக்தர்கள் வருகிற 7-ந் தேதி காலை, 10 மணிக்கு அவிநாசி கோவிலுக்கு வர வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு தகவல்
    • தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது

    திருவண்ணாமலை:

    3 ஆண்டுகளில் திருவண்ணாமலையை திருமலை போன்று மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தெரிவித்தனர்.

    கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

    கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

    இதில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன் ஜோதி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசியதாவது:-

    தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலை நகர வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவிழா அன்று வியாபாரிகள் தேவையில்லாமல் கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்த வேண்டாம். குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும் இதற்கு வியாபாரிகள் தரப்பிலும் முழு ஒத்துழைப்பு இருக்க வேண்டும். கோவில் உள்ளே வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் எந்தவித இடையூறுகள் இன்றியும் உள்ளே செல்லவும், அமர வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவில் உபயதாரர்கள் உள்ளே வரும்போது நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதை போலீசார் முறைப்படுத்த வேண்டும். திருவண்ணாமலைக்கு சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தர உள்ளதால் மருத்துவக் குழுக்கள் போதுமானதாக இருக்காது. எனவே 100 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

    கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், போலீசார் தங்களுக்கு வேண்டிய நபர்களை கோவிலுக்குள் அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். அனுமதி அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

    தேவை இல்லாமல் கோவிலுக்குள் அதிகப்படியான போலீசார் பணியில் அமர்த்த வேண்டாம். ஒவ்வொரு தேருக்கும் ஒரு சிறப்பு அதிகாரி பணியில் அமர்த்தப்பட வேண்டும். கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

    திருவண்ணாமலையை திருப்பதியை போன்று ஆக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இதன் மூலம் மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

    திருவண்ணாமலையை திருமலை போன்று மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மாட வீதியில் காங்கிரீட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. தீபத்திருவிழா முடிந்ததும் அதற்கான பணிகள் நடைபெறும்.

    திருவண்ணாமலைக்கு பல்வேறு வசதிகள் கொண்டுவர எனது துறை சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். தேர்கள் சரியான முறையில் உள்ளதா என்பதை அதிகாரிகள் முன்கூட்டியே பரிசோதனை செய்திருக்க வேண்டும். பராசக்தி அம்மன் தேர் மேற்பகுதியில் பழுது உள்ளதாக புகார் வந்துள்ளது.

    அதை மீண்டும் சரி செய்ய வேண்டும். தீபத் திருவிழாவின் போது வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், தி.மு.க.நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×