search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai"

    • மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
    • அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

    அன்றுமுதல் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. மலையில் காட்சி அளித்த மகா தீபத்தை காண பக்தர்கள் பலர் மலை உச்சிக்கு சென்று தரிசித்து வந்தனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வந்ததையொட்டி வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயச்சித்த பூஜை நடத்தப்படும். அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயச்சித்த பூஜை நேற்று நடந்தது.

    இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயச்சித்த பூஜை நடந்தது.

    பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன.
    • கார்த்திகை மாத சிவராத்திரியன்று குபேரன் அருணாசலேஸ்வரரை கிரிவலம் வருகிறார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்து உள்ளது. 14 கிலோ மீட்டர் தொலைவு உடைய கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன. இந்த பாதையில் பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் என்ற வழக்கம் ஏற்பட்டுள்ளது.

    கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார் என்று கூறப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் கிரிவலப்பாதையில் 7-வது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அதன்படி கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான நாளை (திங்கள்கிழமை) குபேர கிரிவலம் நடைபெற உள்ளது. குபேர கிரிவலம் செல்ல மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உகந்த நேரம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குபேர லிங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க கோவிலில் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் கிரிவலப்பாதையில் வேங்கிக்கால், அந்தியந்தல், அடிஅண்ணாமலை, ஆணாய்பிறந்தான் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

    • தெப்பல் உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர் உள்ளிட்ட சாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 26-ந் தேதி நடந்தது. அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகாதீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    தொடர்ந்து மறுநாள் பவுர்ணமி நீடித்ததாலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்பல் உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது.

    அய்யங்குளத்தில் 27-ந் தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நேற்று முன்தினம் பராசக்திஅம்மன் தெப்பல் உற்சவமும், நேற்று சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் தெப்பல் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைகிறது. கோவில் பின்புறம் உள்ள மலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். இதனை காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்தநிலையில் கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருகை தர உள்ளதால் வருகிற 3-ந்தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பவுர்ணமியையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்
    • தெப்பல் உற்சவத்திலும் திரளானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் நேற்று இரவு அய்யங்குளத்தில் நடைபெற்ற சந்திரசேகரர் தெப்பல் உற்சவத்திலும் திரளானவர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 17-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், பராசக்தி அம்மனும், சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் வலம் வந்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

    மகாதீபத்தை காணவும், கிரிவலம் செல்லவும் கடந்த 25-ந் தேதி இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர தொடங்கினர். நேற்று முன்தினம் அதிகாலை முதல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலையில் கட்டுக்குஅடங்காத அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்.

    நேற்று முன்தினம் மாலையில் கோவிலில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் ரிஷப வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் நந்தி வாகனத்திலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி மாட வீதியில் உலா வந்தனர்.

    மேலும் கார்த்திகை மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 3.58 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 3.08 மணியளவில் நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைய தொடங்கியது. இருப்பினும் இரவு வரை பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். அதுமட்டுமின்றி கிரிவலப்பாதையில் காஞ்சி சாலையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

    மகா தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக திருவண்ணாமலையில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அங்கு பக்தர்களுக்கு தேவையான சிறப்பு பஸ்கள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பெரிய அளவில் சிரமத்திற்கு உள்ளாகாமல் பஸ்களில் வந்து சென்றனர்.

    மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி இடம் பிடித்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு இருந்தது.

    மகா தீபத்தையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வழக்கமாக மகா தீபம் நிறைவடைந்த பின்னர் வெளியூர் போலீசார் கிளம்பி விடுவார்கள். இந்த ஆண்டு மகா தீபத்தின் மறுநாள் பவுர்ணமியும் வந்ததால் 2-வது நாளாக தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலில் பக்தர்கள் ராஜ கோபுரத்தின் வழியாக மட்டுமே சாமி தரிசனம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அம்மணி அம்மன், திருமஞ்சன கோபுரத்தின் வழியாக போலீசார் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். மேலும் கோவிலை சுற்றியும் பேரிகார்டு போட்டு அடைத்து வைத்து கொண்டதால் நேற்று அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை வியாபாரிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடைபெற உள்ளது. முதல் நாள் விழாவான நேற்று இரவு சந்திரசேகரர் தெப்பல் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் 3 முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், நாளை (புதன்கிழமை) சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • அண்ணாமலையார் கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது.
    • அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று முன்தினம் மகாதீபம் ஏற்றப்பட்டது.

    இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சி தரும். 2-வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் சிவாலய தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மலை மீது காட்சியளித்த மகாதீபத்தை பக்தர்கள் தரிசித்தனர்.

    இந்தநிலையில் தீபத்திருவிழா நிறைவ டைந்ததும், உண்ணா முலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது.

    இன்று காலை கோவிலில் நடை திறக்கப்பட்டு மூலவர் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளம் முழங்க கிரிவல புறப்பாடு நடந்தது.

    அண்ணாமலையாருடன், உண்ணாமுலையம்மனும், துர்கையம்மனும் கிரிவலம் சென்றனர். இன்று 3-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் தெப்ப உற்சவம் நேற்று இரவு தொடங்கியது. முதல் நாளான நேற்றிரவு அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று 2-ம் நாள் தெப்ப உற்சவத்தில் பராசக்தி அம்மன் உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

    பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்க வில்லை. குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்க ப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும்.
    • 11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 6-ந்தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணா முலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.

    • அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.
    • ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    இறைவனால் படைக்கப்பட்ட ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை உணர்த்தும் வகையில் பார்வதி தேவிக்கு தனது இடப்பாகத்தை கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய் காட்சியளிக்கும் அண்ணாமலையார் ஆண்டுக்கு ஒருமுறை மகாதீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இங்கு மலையே இறைவனாக காட்சியளிப்பது சிறப்பம்சமா கும்.

    ஒருமுறை விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது, அவர்களின் அகங்காரத்தை அடக்கும் வகையில் தனது அடியையும், முடியையும் யார் முதலில் கண்டறிகிறார்களோ அவர்களே பெரியவர் என்றார். இதனால் விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சிவனின் அடியை காண முயன்று தோற்றுப்போனார்.

    அதன்பிறகு பிரம்மா அன்னப் பறவை வடிவெடுத்து சிவனின் முடியை காண முயன்றார். அப்போது சிவனின் சிரசில் இருந்து உதிர்ந்து வந்த தாழம்பூவை சாட்சியாக கொண்டு சிவன்முடியை கண்டதாக பிரம்மா பொய் கூறுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் அப்போது பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்து அவர்களின் ஆணவத்தை அழித்தார்.

    இதன் காரணமாகவே பொய்யுரைத்த பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனிக்கோவில்கள் இல்லாமல் போனது. பொய் சாட்சி கூறிய தாழம்பூவும் சிவபெருமாள் பூஜையில் வைக்கும் தகுதியை இழந்தது என்பது ஐதீகம்.

    • அரசன் அண்ணாமலையார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்.
    • அண்ணாமலையார் வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி.

    திருவண்ணாமலையை வல்லாள மகாராஜன் என்ற அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவருக்கு குழந்தை இல்லை. அரசன் அண்ணாமலையார் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார். தனக்கு குழந்தை இல்லை என்று வருந்தியபோது இறைவன் அவர் கனவில் தோன்றி நானே உனக்கு மகனாக இருப்பேன் என கூறியுள்ளார். இதனால் அரசன் குழந்தை பாக்கியம் இல்லை என்ற வேதனையில் இருந்து விடுபட்டார். சில காலம் கழித்து வல்லாள மகாராஜன் இறந்து விட்டார்.

    அரசன் இறந்ததை மாசி மாதம் பூச நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி செல்லும் அண்ணாமலையாரிடம் ஓலை மூலமாக தகவலை தெரிவிப்பார்கள். இதனையடுத்து அண்ணாமலையார் தீர்த்தவாரிக்கு செல்லாமல் மேளதாளம் இல்லாமல் கோவிலுக்கு திரும்பி வருவார். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் திருவண்ணாமலை அடுத்த பள்ளிக் கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள நதிக்கரையில் அண்ணாமலையார் வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாய்த் தோன்றினார்.
    • அடியையோ அல்லது முடியையோ காண்கின்றவர் யாரோ அவரே பெரியவர்.

    நான்முகனுக்கும் திருமாலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. நம்மில் யார் பெரியவர்? என்பதுதான் இந்த போட்டி. இந்த போட்டியை எப்படி நடத்துவது? எப்பொருளை வைத்து நடத்துவது? என்பதில் அவர்களுக்கு இடையே குழப்பம். இதை அறிந்த சிவபெருமான் அவர்களிடையே, ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாய்த் தோன்றினார். தமது அடியையோ அல்லது முடியையோ காண்கின்றவர் யாரோ அவரே பெரியவர் எனக்கூறி ஓங்கி உயர்ந்து நின்றார்.

    திருமால், வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் திருவடிகளைக் காண புறப்பட்டார். திருமால் திருவடிகளைக் காண புறப்பட்டதால், நான்முகன், அன்னமாய் வடிவெடுத்து இறைவனின் திருமுடி யைக்காண பறந்து சென்றார். பாதாளம் ஏழினைக் கடந்து சென்றும் இறைவனின் திருவடியை திருமாலால் காண முடியவில்லை. இதுபோல் இறைவனின் திருமுடியைக்காண உயர உயரப்பறந்தும் நான்முகனால் திருமுடியைக் காண முடியவில்லை.

    இதனால் சிவபெருமானின் அடியையும், முடியையும் காண இயலாது போட்டியில் தோல்வி அடைந்தார். தங்களது அகங்காரம் அழியப்பெற்றவர்களாய், `சிவப்பரம் பொருள், உலகில் முழு முதற்பரம் பொருள்' என்பதை உணர்ந்து தங்களது பிழைகளை பொறுத்தருளுமாறு வேண்டிக் கொண்டு சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். அப்போது சிவபெருமான் சிவலிங்கத் திருஉருவத்தோடு ஜோதியில் இருந்து வெளிப்பட்டு அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    திருமால், பிரம்மா இருவரும் சிவபெருமானை வழிபட்டு உண்மை ஞானம் பெற்றனர். ஜோதிப்பிழம்பு அருணாசலமாயிற்று. அதனின்று தோன்றிய சிவலிங்கம் அருணாசலேஸ்வரர் ஆனார். லிங்கமே மலையாகவும். மலையே லிங்கமாகவும் வழிபடலானது. திருவண்ணாமலை கிருதாகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும் கலியுகத்தில் கல்மலையாகவும் மாறின.

    • அண்ணாமலையார் திருத்தேர் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
    • தேரோட்டாத்தை காண ஆயிரம் கணக்கான பக்தர்கள் கோவிலை சூழ்ந்துள்ளனர்.

    திருவண்ணாமலையில் மகா ரதம் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் திருத்தேர் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.

    தேரோட்டாத்தை காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையை சூழ்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.

    இந்நிலையில், தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்து பக்தர்கள் சிலர் காயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறைவான மின்சாரம் பாய்ந்ததால் பக்தர்கள் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 

    கூட்டத்தில் ஒரு பகுதியில் இருந்த பக்தர்கள் மீது மாட வீதியில் இருந்த கடை ஒன்றில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.

    இதை அறிந்த காவல்துறையினர் மின்சாரம் நிறுத்தப்பட்டு பக்தர்களை மீட்டனர்.

    • திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா
    • முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும்.

    பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் திருக்கார்த்திகை திருவிழா பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருகார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது குறித்து பார்ப்போம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணிகளை செய்தவர்களில் வல்லாள மகாராஜனும் ஒருவர். அவருடைய வேண்டுகோளின்படி அவருக்கு மகனாக இருந்து, தந்தைக்கு பிள்ளை செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் அருணாசலேஸ்வரர் செய்ததாக தல வரலாறு சொல்கிறது.

    வல்லாள மகாராஜா மரணம் அடைந்தபோது, இறைவனே அவருக்கு இறுதிச்சடங்கை நடத்தியதாக தல புராணம் கூறுகிறது. இதனால் குழந்தை வரம் அருளும் இறைவனாகவும் அருணாசலேஸ்வரர் பார்க்கப்படுகிறார். அவரிடம் வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள், தங்களது குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி, கோவிலை சுற்றி வலம் வந்து வழிபடுவார்கள்.

    மலையின் மையப்பகுதியில் கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர் ஆலயம், மாமரத்துக்குகை, சடைச்சாமி குகை, அருட்பால் குகை, ஆலமரத்துக் குகை, ரமண மகரிஷி குகை என பல்வேறு குகைகள் இருக்கின்றன.

    அண்ணாமலையார் லிங்க வடிவில் இருப்பதாலும், சித்தர்கள் சூட்சும வடிவில் இங்கே உலா வருவதாலும், மலையை கிரிவலம் வரும் பக்தர்களின் பிரச்சினைகளும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மலையை சுற்றி அமைந்திருக்கும் 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிரிவலப்பாதையை ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்பு வாய்ந்தது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் மலைப்பகுதியில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், பாலிதீர்த்தம், சிம்மத் தீர்த்தம், எம தீர்த்தம், சோண நதி, உண்ணாமுலை தீர்த்தம், வருண தீர்த்தம், கட்க தீர்த்தம், பாத தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அதனால் தீர்த்தங்கள் நிறைந்த ஆலயமாக இது திகழ்கிறது.

    இவற்றுள் சிவகங்கை தீர்த்தமும், பிரம்ம தீர்த்தமுமே பிரதான தீர்த்தங்களாக இருக்கின்றன. துர்க்கையம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கட்க தீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கி வணங்கிய தீர்த்தமாக போற்றப்படுகிறது. அனைத்து தீர்த்தங்களுமே நோய் தீர்க்கும் தீர்த்தங்களாகவே இருப்பது சிறப்பு.

    கிரிவலம் செல்வதற்கு சரியான பொழுது இரவு நேரம்தான். பவுர்ணமி வெளிச்சத்தில் வலம் வருவதே சரியான முறையாகும். இரவு நெருங்கியதும் நிலவொளி பிரகாசிக்க தொடங்கும் வேளையில் கிரிவலத்தை தொடங்கலாம். அந்த நிலவொளியில் சந்திரன் 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசிக்கிறார்.

    அந்த நிலவு ஒளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். நிலவு ஒளியால் மனத்தெளிவு உண்டாகும். கிரிவலம் வருபவர்கள் இறை நாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வலம் வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

    `அருணன்' என்றால் `சூரியன்' என்று பொருள். `அசலம்' என்றால் `கிரி' அல்லது `மலை' என்று பொருள். சூரியனை போன்ற ஒளி வடிவாக இறைவன் மலை உருவில் காட்சி அளிப்பதால் இந்த மலை `அருணா சலம்' என்று அழைக்கப்படுகிறது.

    கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன் மலையாகவும் இருந்த இந்த மலை, கலியுகத்தில் கல் மலையாகவும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என எட்டு சிவலிங்கங்கள் திருவண்ணா மலையை சுற்றி எட்டு திசைகளிலும் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களின் சன்னிதியில் வழிபாடு செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருவண்ணாமலையில் பத்து நாட்கள் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-வது நாள் மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. 2688 அடி மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் இந்த மகாதீபம் ஏற்றப்படும். அதற்கு ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் போன்றவை பயன்படுத்தப்படும்.

    முதலில் அண்ணாமலையாரின் கருவறையில் கற்பூரம் ஏற்றப்படும். அதில் இருந்து நெய் விளக்கு ஒன்றை ஏற்றுவார்கள். அந்த விளக்கை கொண்டு ஐந்து விளக்குகள் ஏற்றப்படும். இவை பஞ்ச மூர்த்திகள் என்றும் கூறப்படும். மாலையில் எல்லா தீபங்களும் கொடிமரம் அருகில் ஒன்று சேர்க்கப்படும். அதன் பிறகு மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ச்சியாக 11 நாட்கள் வரை எரிந்து கொண்டே இருக்கும்.

    ஆலய அம்சங்கள்

    இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. 25 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 தனி சன்னிதி கள், 22 விநாயகர் சிலைகள், 42 செப்பு சிலைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலைக்கு நவ துவார பதி என்ற பெயரும் உண்டு. அதற்கு 9 நுழைவுவாசல்களை கொண்ட நகரம்' என்று பொருள்.

    • இன்றுகாலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலா.
    • தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. 6-ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் வீதிஉலாவும் நடந்தது. இன்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி தேர் மற்றும் வெள்ளி இந்திர விமானங்களில் மாட வீதிகளில் சாமி வீதி உலா நடக்கிறது.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 7-ம் நாள் உற்சவமான தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    பஞ்ச மூர்த்திகள் திருத்தேர்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர். காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தனுசு லக்கினத்தில் முழு முதல் கடவுளான விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்.

    விநாயகர் தேர் மாட வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்த பின் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் தேர் மாட வீதிகளில் வலம் வரும். நண்பகலில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார் தேரோட்டம் நடக்கிறது.

    தேர் மாடவீதிகளில் அசைந்தாடி வருவதைக் காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பெரிய தேர் நிலைக்கு வந்த பின்னர் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் அம்மன் தேர் மாட வீதிகளில் வலம் வரும். அம்மன் தேர் உடன் சண்டிகேஸ்வரர் தேரும் மாட வீதிகளில் வலம் வரும்.

    இன்றும், நாளையும் திருவண்ணாமலையில் தேரோட்டம் நடைபெறுவதால் தேரோட்டத்தை காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை சார்பில் தேர் திருவிழாவிற்காக அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூய்மையாக காட்சி தருகிறது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×