search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு"

    • தெப்பல் உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர் உள்ளிட்ட சாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 26-ந் தேதி நடந்தது. அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகாதீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    தொடர்ந்து மறுநாள் பவுர்ணமி நீடித்ததாலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்பல் உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது.

    அய்யங்குளத்தில் 27-ந் தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நேற்று முன்தினம் பராசக்திஅம்மன் தெப்பல் உற்சவமும், நேற்று சுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) சண்டிகேஸ்வரர் தெப்பல் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைகிறது. கோவில் பின்புறம் உள்ள மலையில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். இதனை காண ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்தநிலையில் கோவிலுக்கு அதிக பக்தர்கள் வருகை தர உள்ளதால் வருகிற 3-ந்தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×