search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliament election"

    • நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்களும் பவன் கல்யாணுக்காக தேர்தல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
    • பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தெலுங்கு தேசம், பா.ஜ.க கூட்டணியில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பவன் கல்யாண் தனது தொகுதியில் 2 கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தை முடித்து மற்ற இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வருகிறார்.

    ஒருங்கிணைந்த ஆந்திராவின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அவரது தம்பி பவன் கல்யாணுக்காக பிதாபுரம் தொகுதியில் வருகிற 5-ந் தேதி முதல் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்களும் பவன் கல்யாணுக்காக தேர்தல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோல பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • தமிழக போலீசில் 35 ஆயிரம் பெண் போலீசார் உள்ளனர்.
    • பாராளுமன்ற தேர்தல் பணிகள் முடிந்தவுடன் பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    'ஸ்காட்லாந்து யார்டு' போலீசுக்கு இணையாக பேசப்படும் தமிழக போலீசுக்கு தலைகுனிவு ஏற்படும் ஒரு சில சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தனக்கு கீழே வேலை பார்த்த பெண் போலீஸ் சூப்பிரண்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போடப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.

    இன்னொரு உயர் அதிகாரி மீது பெண் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இது போல் உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர், தனக்கு கீழே வேலை பார்த்த பெண் போலீசிடம் செல்போனில் ஆபாசமான உரையாடலில் ஈடுபட்ட சம்பவமும் நிகழ்ந்தது.

    இது போன்ற ஒழுக்க சீர்கேடுகள் திறமைவாய்ந்த தமிழக போலீசுக்கு களங்கம் போன்று எழுந்து நிற்கிறது. இதுபோன்ற களங்கத்தை துடைத்து சென்னை போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இறங்கி உள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் தனக்கே உண்டான பாணியில் போலீஸ் கமிஷனர் கடும் நடவடிக்கைகளில் இறங்க போகிறாராம். இதற்காக ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்கவும் கமிஷனர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தமிழக போலீஸ்துறையில் பணியில் இருக்கும்போது போலீசார் என்னனென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

    பணி நேரத்தில் போலீசார் செல்போனில் பேசுவதற்கும், 'வாட்ஸ்-அப்' போன்ற தகவல்களை பார்ப்பதற்கும் தடை உள்ளது. பெண் போலீசார் சீருடை அணிந்து பணியில் இருக்கும் போது தலையில் பூ வைப்பது போன்ற அதிக அலங்காரங்களை செய்து கொள்ளாமல் இருப்பதற்கும் கட்டுப்பாடு உள்ளது. பெண் போலீசார் அதிக 'மேக்கப்' போடாமல் தலை முடியை வலை கொண்டையிட்டு மிடுக்காக வரவேண்டும் என்ற அறிவுரைகள் செயல்பாட்டில் உள்ளன.

    பெரும்பாலான பெண் போலீசார் இந்த கட்டுப்பாடுகளை கடைபிடித்துதான் வருகிறார்கள். அதையும் மீறி ஆண்-பெண் போலீசார் ஒன்றாக பணி செய்யும் போது காதல் தீ பற்றிக்கொண்டு அத்துமீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. பணியில் இருக்கும் போது இது போன்ற செயல்களால் ஆண்-பெண் போலீசாரின் கவனங்கள் சிதறுகின்றன என்ற புகாரும் எழுகிறது.

    தமிழக போலீசில் 35 ஆயிரம் பெண் போலீசார் உள்ளனர். காலப்போக்கில் இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக கூட மாற வாய்ப்புள்ளது. ஆண் போலீசுக்கு இணையாக பெண் போலீசாரும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் மிடுக்காக பணியாற்றுகிறார்கள்.

    கடந்த 19-ந் தேதி அன்று சென்னையில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தபோது ஆண் போலீசாருக்கு இணையாக பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடிகர்-நடிகைகள் ஓட்டுப்போடுவதற்கு வாக்குச்சாவடிகளுக்கு வந்த போது சில போலீசார் தங்களது கடமையை காற்றில் பறக்கவிட்டனர்.

    நடிகர்-நடிகைகளை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டினார்கள். அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு போட்டி போட்டார்கள். குறிப்பாக நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு வந்த போது தனது கடமையை மறந்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அவருடன் 'வீடியோ' படம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டினார்.

    இந்த காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. இது போல நடிகர்-நடிகைகளுடன் புகைப்படம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டிய போலீசார் யார்-யார்? என்று விசாரணை நடக்கிறது.

    பணியில் இருக்கும்போது ஒழுக்கத்தை காப்பதில் பெண் போலீசார் மட்டும் அல்லாமல், ஆண் போலீசாரும் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என்று சென்னை போலீசில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் விரும்புகிறார்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை காப்பதில் சென்னை போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    இது போன்ற முயற்சியில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரும் ஈடுபட தொடங்கி உள்ளார். இதற்காக அவர் சாட்டையை சுழற்றி கடும் நவடிக்கையில் ஈடுபட உள்ளதாக சென்னை போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    பணியில் இருக்கும்போது ஆண்-பெண் போலீசார் ஒழுக்கத்தை காப்பதில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்து அறிவுரைகள் வழங்கும் பயிற்சி முகாம் ஒன்றும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் பணிகள் முடிந்தவுடன் இந்த பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே தமிழக போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும், அவர் காட்டிய வழியில் சென்னை போலீசை முதன்மை போலீசாக மாற்றுவதற்கு எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும், அதில் வெற்றியும் பெற்றுள்ளோம் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள்-குழந்தைகளுக்கு பாதுகாப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்றும், அதோடு போலீசில் ஒழுக்க சீர்கேடுகள் எதுவும் நடக்காமல் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
    • கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியானது. அதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. எனவே பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழுவின் சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழுவின் சோதனை திரும்பப் பெறப்பட்டது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த 28-ந்தேதி வரை சோதனைகளில் பிடிக்கப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். அதன்படி, ரூ.179.91 கோடி ரொக்கப் பணம், ரூ.8.65 கோடி மதிப்புள்ள மது வகைகள், ரூ.1.36 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.1,083.78 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகள், ரூ.35.80 கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள் என ரூ.1,309.52 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    • ஆளும்கட்சியினர் ஏனாம் போன்ற தொகுதிகளை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த வாக்கும் பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது என கூறுகின்றனர்.
    • சில இடங்களில் பா.ஜனதாவினர் காங்கிரசாரை பணி செய்யாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி முடிவடைந்தது. புதுவை பாராளுமன்ற தொகுதியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்துக்கும், இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். அதோடு நேரடியாக பா.ஜனதா இந்த முறை களத்தில் இறங்கியதால் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோரின் சுமார் 2 லட்சம் வாக்குகள் பா.ஜனதாவுக்கு கிடைக்காது என காங்கிரசார் கருதினர்.

    இதனால் தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே பா.ஜனதாவின் வாக்கு ஒன்று என ஆரம்பிப்பதை, காங்கிரசார் 2 லட்சத்து ஒன்று என ஆரம்பிப்போம் என தெரிவித்தனர். தற்போது தேர்தல் முடிவு வெளியாக 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு ஒரு தகவல்கள் உலா வருகிறது. சில தொகுதிகளில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீதான எதிர்ப்பால் வாக்குகள் காங்கிரசுக்கு விழுந்துள்ளதாக கூறுகின்றனர்.

    அதேநேரத்தில் ஆளும்கட்சியினர் ஏனாம் போன்ற தொகுதிகளை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த வாக்கும் பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது என கூறுகின்றனர். சில இடங்களில் பா.ஜனதாவினர் காங்கிரசாரை பணி செய்யாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இதனால் மாறி, மாறி நாள்தோறும் உலா வரும் தகவல்கள் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள வயிற்றில் நெருப்போடு இருதரப்பினரும் காத்திருக்கின்றனர்.

    • வேறு யாரை அங்கு வேட்பாளராக களம் இறக்குவது என்று ஆலோசனை நடந்து வருகிறது.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன. ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகி விட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது. இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி. யாக முடிந்தது. இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது.

    இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். ராகுல் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவது தொடர்பாக அறிவிப்பை காங்கிரஸ் வெளியிடவில்லை.

    இந்த நிலையில் அமேதி தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. வருகிற 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த நிலையில் இன்று பா.ஜ.க. வேட்பாளர் ஸ்ருமிதி இரானி மனுதாக்கல் செய்து உள்ளார். அவரை எதிர்த்து ராகுல் களத்தில் இறங்குவாரா? என்பதில் தற்போது கேள்விக்குறி எழுந்துள்ளது. ஸ்ருமிதிஇரானியை எதிர்த்து போட்டியிட ராகுல் மிகவும் தயங்குவதாக தெரிய வந்துள்ளது. கடந்த முறை ராகுலை சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி வீழ்த்தி இருந்தார். அதன் பிறகு அவர் அமேதி தொகுதியில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு அந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இதனால் அமேதியில் போட்டியிட்டால் மீண்டும் தோல்வியை தழுவ நேரிடுமோ? என்று ராகுல்காந்தி தயங்குவதாக தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து வேறு யாரை அங்கு வேட்பாளராக களம் இறக்குவது என்று ஆலோசனை நடந்து வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவரை அமேதியில் காங்கிரஸ் களம் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வரும் ராபர்ட் வதேரா மீது ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எந்த தொகுதியில் ஓட்டு குறைந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ளது.
    • தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே 4 முனை போட்டி ஏற்பட்டது.

    இப்போது ஒவ்வொரு கட்சியிலும் எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்று சர்வே எடுத்து வைத்துள்ளனர். தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் உளவுத்துறை ரிப்போர்ட் அவரிடம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அதே போல் தி.மு.க.வுக்கு சொந்தமான தேர்தல் வியூக நிறுவனமும் ஒரு சர்வே எடுத்து வழங்கி உள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாகவே தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சென்று பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி வேட்பாளர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ஆனாலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் இன்னும் முழு திருப்தி அடையாமல் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. காரணம் கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்களோ அதைவிட இந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறார்.

    இதற்கு காரணம் தி.மு.க.வில் நிறுத்தப்பட்ட வசதியான சீனியர் வேட்பாளர்கள் பலர் முழுமையாக பணம் செலவழிக்காமல் கட்சிக்காரர்களை செலவழிக்க வைத்துவிட்டனர். இதில் பல கட்சிக்காரர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டுவிட்டது. இதனால் தி.மு.க. நிர்வாகிகளே சில வேட்பாளர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். தேர்தலுக்கே இவர் பணம் செலவழிக்கவில்லை. ஜெயித்த பிறகு நமக்கு என்ன செய்துவிட போகிறார் என்ற விரக்தியில் பேச ஆரம்பித்துள்ளனர். இதுபற்றிய புகார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை சென்றுள்ளது. அவரும் தேர்தல் முடிவு வரட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பொறுமையாக உள்ளார். ஏற்கனவே தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு வழங்கி இருக்கிறார்கள். அதில் யார்-யார் சரிவர பணியாற்றவில்லை. முழுமையான அர்ப்பணிப்புடன் யார்-யார் பணியாற்றினார்கள் என்ற விவரங்களையும் அதில் குறிப்பிட்டு உள்ளனர்.

    கடந்த தேர்தலை போல் லீடிங் அதிகமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே எந்த தொகுதியில் ஓட்டு குறைந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ளது. எனவே ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. வில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றி பிரசாரம் செய்திருந்தாலும் சில மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் வேட்பாளர்களுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவரது கவனத்துக்கு வந்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர்களை அழைத்துச் சென்று ஓட்டுக் கேட்க வேண்டியது அந்தந்த மாவட்டச் செயலாளரின் கடமையாகும். இதற்காக எந்தெந்த பகுதிக்கு எப்போது செல்ல வேண்டும் என்று அட்டவணை தயாரித்து அதன்படி கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த பணியை கூட சில மாவட்டச் செயலாளர்கள் சரிவர செய்யவில்லை என்று ஒன்றிய செயலாளர்கள் தலைமைக் கழகத்துக்கு புகாராக அனுப்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியில் உள்ள பிரச்சினைகளையும் புகார்களையும் பட்டியலிட்டு அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாக தெரிகிறது.

    அ.தி.மு.க.வில் காஞ்சிபுரம், வடசென்னை, தென் சென்னை, கள்ளக்குறிச்சி உள்பட 15 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் மீதமுள்ள 25 தொகுதிகளில் உள்ள கள நிலவரம் பற்றி கலக்கத்துடனே உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 2-வது இடம் கிடைக்குமா? அல்லது 3-வது இடத்துக்கு தள்ளப்படுமா? என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வந்த பிறகு அ.தி.மு.க.விலும் அதிரடி மாற்றங்கள் நிகழக் கூடும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • நாட்டு மக்களின் மனநிலையைதான் பாரதிய ஜனதா பிரதிபலிக்கிறது.
    • இந்த தடவை எங்களுக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு கிடைத்து இருக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மாநிலம் வாரியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தனது கருத்துக்களை பிரதமர் மோடி வெளிப்படுத்தி உள்ளார்.

    அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இதுவரை நான் நாடு முழுவதும் 70 நகரங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்தி பிரசாரம் செய்து உள்ளேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் என் மீது அளவு கடந்த அன்பையும் ஆதரவையும், பாசத்தையும் காட்டியதை காண முடிந்தது. மக்களின் இந்த அபரிமிதமான அன்பை பார்க்கும் போது 400 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்ற எங்களது இலக்கு நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

    பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தால் அது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அளிக்கும் வாக்கு என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து புரிந்து இருக்கிறார்கள். தற்போது 2 கட்ட தேர்தல் முடிந்து இருக்கிறது. இந்த 2 கட்டங்களிலும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான தோல்வியை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாரதிய ஜனதா 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்று நாங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதற்கு முக்கிய காரணம் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் இன மக்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டங்களை திருத்தி விடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்.

    அப்படிப்பட்டவர்கள் நான் முதல்-மந்திரி ஆனதில் இருந்து தற்போது வரை என்னென்ன செய்து வருகிறேன் என்று சற்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும். எந்த ஆதாரமும் இல்லாமல் என் மீது குற்றச்சாட்டு சொல்லக்கூடாது. நாட்டு மக்களின் மனநிலையைதான் பாரதிய ஜனதா பிரதிபலிக்கிறது. மக்கள் இன்னமும் மாற்றங்கள் வேண்டும் என்கிறார்கள். அதை நிச்சயம் செய்வோம். பாரதிய ஜனதா தோற்கும் என்று காங்கிரசின் இளவரசர் சொல்கிறார். உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால்தான் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் நழுவி சென்று விட்டனர். அப்போதே அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டனர். இந்த தடவை எங்களுக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு கிடைத்து இருக்கிறது. நிச்சயம் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.


    தென் இந்தியாவில் இந்த தடவை பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. தென் இந்தியாவில் நான் எங்கு சென்றாலும் மக்கள் அபரிமிதமான ஆதரவை கொடுத்தனர். அன்பு மழையை பொழிந்தனர். தென் இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் ஆட்சியைதான் மக்கள் பார்த்து வருகிறார்கள். அந்த கட்சிகளின் ஆட்சிகள் அரசை தவறாக வழிநடத்துவதையும், பிரிவினைவாத செயல்களை செய்வதையும் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதையும் தான் பார்த்து வருகிறார்கள். மொத்தத்தில் தென் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மாநில கட்சிகள் ஊழல் செய்வதையே முதன்மையாக கொண்டு இருப்பதையும் மக்கள் பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி கலாச்சாரம், பண்பாடு மீது நடத்தப்படும் வெறுப்பு தாக்குதலையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் காரணமாக காங்கிரஸ் மீதும், மாநில கட்சிகள் மீதும் மக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் தென் மாநில மக்கள் மத்தியில் பா.ஜ.க. தலைமையில் நடைபெறும் சிறப்பான ஆட்சியையும் பார்க்கிறார்கள்.

    மக்கள் நல திட்டங்களில் பாரதிய ஜனதா அரசு செய்துள்ள முக்கிய திருத்தங்களையும் தென் மாநில மக்கள் பார்க்கிறார்கள். நாங்கள் கொண்டு வந்துள்ள முக்கிய நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. பாரதிய ஜனதாவிடம் அவர்கள் நம்பிக்கை ஒளியை பார்க்கிறார்கள். எனவே தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவை மக்கள் நம்ப தகுந்த மாற்று சக்தியாக ஏற்க தொடங்கி இருக்கிறார்கள். தென் இந்தியாவில் பாரதிய ஜனதாதான் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக கடந்த தேர்தலில் திகழ்ந்தது. இந்த தடவை தென் இந்தியாவில் அதிக வெற்றி பெறும் கட்சியாக பாரதிய ஜனதா திகழும். தமிழகம் உள்பட தென் இந்தியாவில் பாரதிய ஜனதா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறும். இந்த தடவை தென் இந்திய தேர்தல் முடிவுகள் பல பாரம்பரிய கதைகளுக்கு முடிவு கட்டுவதாக இருக்கும். தென் இந்தியாவில் இந்த தடவை பாரதிய ஜனதாவுக்கு வாக்கு வங்கியும் கணிசமாக அதிகரிக்கும். தேர்தல் முடிவு வெளியாகும் போது அதை நீங்கள் பார்ப்பீர்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    • கட்சி மேலிட உத்தரவின் பேரில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
    • ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் நடிகை குஷ்பு பா.ஜ.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் 10 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக தெலுங்கானா மாநிலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக பணியாற்றி வந்தார்.

    அரசு திட்டங்கள் மற்றும் மக்களை நேரடியாக சந்திப்பதில் அவர் தீவிரம் கவனம் செலுத்தினார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலுங்கானாவில் செல்வாக்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கட்சி மேலிட உத்தரவின் பேரில் அவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

    ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் நடிகை குஷ்பு பா.ஜ.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடிகை ஜெயப்பிரதா ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கட்சி மேலிடம் உத்தரவிட்டால் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் என நேற்று தெரிவித்தார். வெளிமாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டி வருவதால் அங்குள்ள பா.ஜ.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • தமிழகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டுள்ளது.
    • வாக்குப்பதிவு இ.வி.எம். எந்திரத்தில் எதுவும் முறைகேடு செய்ய முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக பலமுறை விளக்கி இருக்கிறார்கள்.

    கோவை:

    மத்திய மந்திரி எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நீலகிரி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் கேமரா காட்சிகள் நேற்று திரையில் தெரியாமல் போய் உள்ளது. அதற்கு தொழில்நுட்ப கோளாறு என்று சொல்கிறார்கள். இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு வராமல் பார்த்துக் கொள்வது தேர்தல் ஆணையத்தின் முறையான பணியாக இருக்க வேண்டும்.

    கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெரியாமல் போனதற்கு காரணம் கால சூழ்நிலை, கடும் வெயில் என்றெல்லாம் சொல்கிறார்கள். நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் அடிக்கும் வெயிலை போன்று ஊட்டியில் வெயில் தாக்கம் இருப்பதில்லை. எனவே எதாவது காரணம் சொல்வதை விட்டுவிட்டு முறையாக தொழில்நுட்பத்தை சரிசெய்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும். எந்தவித சந்தேகத்துக்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையான பணி செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் வாக்காளர்களின் பெயர்கள் பல இடங்களில் விடுபட்டுள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியினர் அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் வாக்குகள் எல்லாமே விடுபட்டுள்ளது. நீலகிரி, கோவை, தென்சென்னை என தமிழகம் முழுவதுமே வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் தோல்வியை மறைப்பதற்காக அவர்கள் எங்களுடைய வாக்காளர்களை நீக்கி உள்ளனர்.

    வாக்குப்பதிவு இ.வி.எம். எந்திரத்தில் எதுவும் முறைகேடு செய்ய முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக பலமுறை விளக்கி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் விளக்கி உள்ளது. தோல்வி பயத்தில் காங்கிரசும், இந்தியா கூட்டணி கட்சியினரும் இதனை கையில் எடுத்துள்ளனர்.

    அயோத்தி ராமர் கோவில் மக்களின் ஒவ்வொருவரின் எண்ணம். இந்தியர்கள் ஒவ்வொருவரின் கனவு இன்று நிறைவேறி உள்ளது. அனைவரும் சென்று வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ராகுல்காந்தி அங்கு செல்லவில்லை என்பது அவர் ராமரை வெறுக்கிறாரா, அல்லது கடவுளை வெறுக்கிறாரா அல்லது இந்து மதத்தை வெறுக்கிறாரா என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு நிகராக இருந்தது.
    • தி.மு.க. அரசு சமூக விரோதிகளுக்கு துணை போகிறது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுமக்கள் கோடை காலத்தில் தாகம் தணிப்பதற்காக நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நீர்- மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், பழரசம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தமிழகத்தில் நிலவுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப நிச்சயமாக நல்ல மாற்றத்திற்கு வாக்களித்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.

    தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருள் பழக்கம், மின் கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். இவை எல்லாம் தேர்தலில் எதிரொலித்து இருக்கும் என நம்புகிறோம்.

    தி.மு.க. ஆட்சியில் சமூக விரோதிகளால் காவல்துறையினர் தாக்கப்படும் சம்பவத்தை பார்த்தால் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை எல்லாம் பார்க்கும் போது தி.மு.க. அரசு சமூக விரோதிகளுக்கு துணை போகிறது.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு நிகராக இருந்தது.

    பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று சசிகலா கூறுவது நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக இப்படி அறிக்கை விடுகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று யார் பிரதமராக வந்தாலும் மத்தியில் தமிழர் நலன் காக்கின்ற அரசுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலில் யார் மிரட்டல் விடுத்தாலும் பவன் கல்யாணை வெற்றி பெற செய்ய வேண்டும்.
    • பவன் கல்யாண் எப்போதும் மக்களின் குரலாகவும், அநீதியை எதிர்க்கும் அரசியல்வாதியாகவும் இருப்பார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    ஒரு புறம் அரசியல்வாதிகளும், மறுபுறம் சினிமா நடிகர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பவன் கல்யாணை ஆதரித்து நேற்று ஆந்திராவில் பிரபல நடிகரும், பவன் கல்யாணின் அண்ணன் மகனான வருண் தேஜ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கோடாவாலியில் ரோடு ஷோ நடத்தினார்.

    அதைத் தொடர்ந்து கூட்டத்தில் வருண் தேஜ் பேசியதாவது, எனது தந்தையை பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அதிகாரத்தை பொருட்படுத்தாமல் மக்களுக்காக போராடும் தலைவர் பவன் கல்யாண். எம்.பி., எம்.எல்.ஏ. யாகவோ இல்லாவிட்டாலும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக போராடியவர்.

    தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு துணை நின்றவர். எப்போதும் மக்கள் மத்தியில் வளம் வரும் தலைவர் வெற்றி பெற வேண்டும்.

    பவன் கல்யாண் மகனாக தேர்தல் பிரசாரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிதாபுரம் பகுதி மக்களின் அன்பும், பாசமும் தந்தையின் மீது என்றும் இருக்க வேண்டும்.

    தேர்தலில் யார் மிரட்டல் விடுத்தாலும் பவன் கல்யாணை வெற்றி பெற செய்ய வேண்டும். பிதாபுரம் மக்களை பவன் கல்யாண் தனது குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகிறார்.

    இங்குள்ள வாக்காளர்கள் பவன் கல்யாணை ஆசீர்வதித்து சட்டப்பேரவைக்கு அனுப்பினால் அவர் அனைவருக்கும் சேவகம் செய்வார். பவன் கல்யாண் எப்போதும் மக்களின் குரலாகவும், அநீதியை எதிர்க்கும் அரசியல்வாதியாகவும் இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஏற்கனவே பிதாபுரத்தில் பவன் கல்யாண் சார்பில் நடிகர் நாகபாபு பிரசாரம் செய்து வரும் நிலையில் வரும் நாட்களில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நடிகர் பவன் கல்யாணை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர்.

    • தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரத்தில் குதித்துள்ளார்.
    • தேர்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி குஷ்பு உற்சாகமாக பேசினார்.

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் தொடங்கினார்.

    வேலூரில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து நடிகர் குஷ்பூ பிரசாரம் செய்த அவர் திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கினார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரத்தில் குதித்துள்ளார். செகந்திராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் கிஷன் ரெட்டியை ஆதரித்து நேற்று குஷ்பு பிரசாரம் செய்தார்.

    அவரை காண உள்ளூர் தலைவர்களுடன் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி குஷ்பு உற்சாகமாக பேசினார். அவர் தனது ரசிகர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதியில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிகை குஷ்பு நடித்து பிரபலமானார்.

    இதனால் குஷ்புவை பாஜக மேலிடம் பிரசார களத்தில் இறக்கி உள்ளது. தமிழகத்தில் பிரசாரத்திற்கு மறுத்த குஷ்பு தெலுங்கானா மாநிலத்தில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×