search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nipah virus"

    நிபா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை கேரள அரசு வழங்கியது. #Nipahvirus
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலத்தை சமீபத்தில் உலுக்கிய நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 17 பேர் வரை பலியாகினர். நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கியவர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வந்த லினி என்ற நர்சும் நிபா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார். 

    ப்க்ரைனில் பணிபுரிந்து வரும் தன்னுடைய கணவரை சந்திக்க முடியாது என்ற நிலையில் லினி எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று இணையத்தில் வைராலானது.

    மேலும், நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு  வேலை மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்திருந்தது. 

    இந்நிலையில், லினியின் கணவர் சஜேஷ்க்கு, கோழிக்கோடு மாவட்ட சுகாதார அதிகாரியின் கீழ் பணியாற்றும் கிளர்க் வேலைக்கான பணி ஆணையை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.

    இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி  விஜயன் , ‘ லினியின் குடும்பத்திற்கு அறிவித்திருந்த நிவாரண உதவிகள் அனைத்தையும்  அரசு நிறைவேற்றிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.  #Nipahvirus           
    கேரளாவில் நிபா வைரஸ் பரவ காரணமாக இருந்தவர் யார்? என்பது பற்றி கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. #NipahVirus
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த மே மாதம் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக நர்சு உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

    ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியதற்கு பழந்திண்ணி வவ்வால்கள் காரணம் என்று கூறப்பட்டதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதன் பிறகு மாநில அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக கேரளாவில் ‘நிபா’ வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    இந்த நிலையில் கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பரவ காரணமாக இருந்தவர் யார்? என்பது பற்றி கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கோழிக்கோடு மாவட்டம் பெரும்பரா பகுதியை சேர்ந்த முகம்மதுசபீத் (வயது 26) என்பவர் மூலம் இந்த வைரஸ் காய்ச்சல் பரவியது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


    வளைகுடா நாட்டில் பணியாற்றி வந்த முகம்மது சபீத் கேரளாவுக்கு திரும்பிய போது கடந்த மே மாதம் 2-ந்தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனே அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நர்சு லினி உள்பட 4 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பரவியது.

    கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு முகம்மது சபீத்தை ஸ்கேன் எடுக்க அழைத்துச் சென்றபோது அங்கும் 4 பேருக்கு பரவியது. இதற்கிடையில் 5-ந்தேதி முகம்மது சபீத் பலியானார். அதைதொடர்ந்து அவரது தந்தை, சகோதரன், மாமியார் ஆகியோரும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் காரணமாக பலியானார்கள். இதுபோல 17 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தகவல்கள் மாநில சுகாதாரத்துறை ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #NipahVirus
    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவிய டாக்டர்களுக்கு தங்கப்பதக்கமும் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #Nipahvirus
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். காய்ச்சல் பாதிப்புகளின் தாக்கத்தை உணர்ந்து மாநில அரசு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தற்போது நிபா காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

    இந்நிலையில், தங்களது பாதுகாப்பை பொருட்படுத்தாமல் நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கேரள அரசு பரிசு மற்றும் உதவித்தொகையை அறிவித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நான்கு உதவி பேராசிரியர்கள், 19  செவிலியர்கள், 7 செவிலியர் உதவியாளர்கள், 17 துப்புரவு ஊழியர்கள், 4 மருத்துவமனை ஊழியர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள், 3 ஆய்வக நபர்கள் உள்ளிட்ட 61 பேருக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.



    டாக்டர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் இருந்த போது நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த செவிலியர் லினிக்கு கேரள அரசின் சிறந்த செவிலியர் விருது வழங்கப்பட உள்ளது. #Nipahvirus
    நிபா வைரஸ் பீதியால் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு வியாபாரம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. மாம்பழம் வாங்க வியாபாரிகள் தயங்குகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னேரி, நரசாரெட்டி கண்டிகை, புதுகுப்பம், ஆம்பாக்கம், பேரடம், மதனம்பேடு, என்.எம். கண்டிகை, தாராட்சி, நெல்வாய், பாலவாக்கம், கரடிபுத்தூர், செங்கரை, தேர்வாயகண்டிகை, கண்ணன்கோட்டை.

    பூண்டி, சீதஞ்சேரி, அம்மம் பாக்கம், காரணி, சுப்பாநாயுடு கண்டிகை, நந்தனம், கொடியமேபேடு, படயகொடியமேபேடு, வெள்ளாத்துக்கோட்டை, நம்பாக்கம், அரியத்தூர், சென்றான்பாளையம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மாந்தோட்டங்கள் உள்ளன.

    இங்கு பங்கினபள்ளி, ருமானி, ஜவாரி, சில்பசந்த், மல்கோவா, ஹாபிஸ், செந்துரை பழரகங்கள் பயிரிடப்படுகின்றன. இந்த மாம்பழங்களுக்கு கடும் கிராக்கி உண்டு.

    தஷ்போது சீசனையொட்டி ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அதிக அளவில் மாம்பழங்கள் வந்து குவிந்து வருகின்றன.

    இங்கு திருவள்ளூர், பூந்தமல்லி, போரூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், தாம்பரம், சென்னை போன்ற வெகு தூரத்தில் இருந்து வரும் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் மாம்பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நிபா வைரஸ் பழங்களால் பரவுகிறது என்ற பீதியால் பெரும்பாலான பொதுமக்கள் மாம்பழங்களை சாப்பிட தயங்குகின்றனர்.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஊத்துக்கோட்டை மாம்பழ மார்க்கெட்டு தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது

    பங்கனபல்லி கிலோ ரூ. 20-க்கு விற்கப்படுறது. அதேபோல் ஜவாரி கிலோ ரூ. 25, ருமானி ரூ. 8, செந்துரை ரூ. 8, நாட்டு ரகம் வெறும் ரூ. 5-க்கு விற்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பங்கனபல்லி ரூ. 40, ஜவாரி ரூ. 50, ருமானி ரூ. 25, செந்துரா ரூ. 30 நாட்டு ரகம் ரூ.20 விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நிபா வைரஸ் பீதி காரணமாக பொது மக்களிடத்தில் மாம்பழம் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளதாக புதுகுப்பத்தை சேர்ந்த மாரி என்ற வியாபாரி தெரிவித்தார்.

    வியாபாரம் இல்லாததால் ஊத்துக்கோட்டை மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்த மாம்பழங்கள் அழுகி வருகின்றன. விவசாயிகள் லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று கொட்டி அழித்து வருகின்றனர். #tamilnews
    நிபா காய்ச்சல் பாதிப்பினால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கோழிக்கோடு மாவட்டதில் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வரும் 12-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. #Nipahvirus
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை, நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த கோழிக்கோடு மாவட்டத்தில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் திறப்பதை 12-ம் தேதி வரை அம்மாநில அரசு ஒத்திவைத்திருந்தது.

    இந்நிலையில், வரும் 12-ம் தேதி கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு பின்னர் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நிபா காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் வரும் 12-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

    நோய் அறிகுறிகளுடன் இருந்த 371 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நிபா பாதிப்பு இல்லை சோதனையின் முடிவில் தெரிவந்துள்ளது. இதே போன்ற முடிவுகளையே, நோய் அறிகுறிகளுடன் மீதம் உள்ள நபர்களிடம் இருந்தும் நாங்கள் எதிர்பார்கின்றோம்.

    நிபா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் உள்ளது. மேலும், நோய் பாதிப்பினால் மாநிலத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Nipahvirus
    நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதியாகும் பழங்களுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. #NipahVirus
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் இந்த காய்ச்சல் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் பரவி உள்ள நிபா வைரஸ் காய்ச்சலுக்கு வவ்வால்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.

    எனவே வவ்வால் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம் என்றும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டனர். மேலும் வவ்வாலின் ரத்தம், எச்சம் மாதிரிகள் ஆய்வுக்காக புனேவில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் பிராய்லர் கோழிகள் மூலம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதாகவும், எனவே கோழி இறைச்சியை யாரும் சாப்பிட வேண்டாம் என்றும் கேரளாவில் சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவியது. ஆனால் இது வெறும் வதந்தி என்றும் இது போன்ற வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கேரள அரசு எச்சரித்தது.

    இந்த நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதியாகும் பழங்களுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல ஐக்கிய அரபு அமீரகமும், கேரள பழங்களுக்கு தடை விதித்துள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் இருந்து அனுப்பப்பட்ட 100 டன் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் திருப்பி அனுப்பி உள்ளன. #NipahVirus
    கேரளாவில் நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறியுள்ளார். #Nipahvirus #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.

    நிபா வைரஸ் நோய் பாதித்து நர்சு, ஆட்டோ டிரைவர் உள்பட 18 பேர் பலியானார்கள். இதனால் கேரளா முழுவதும் பெரும்பீதி ஏற்பட்டது.

    நிபா வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க கோழிக்கோடு மாவட்டத்திற்கு செல்வதையே மக்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் தெருக்களில் முக கவசம் அணிந்து நடமாடினர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. மேலும் மத்திய சுகாதார துறை அதிகாரிகள், டாக்டர்கள் குழுவும் கேரளா வந்து ஆய்வு நடத்தியது. நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தனர்.

    இதையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என 2400 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

    இதில் 2377 பேருக்கு நோய் அறிகுறி இல்லை என்பது தெரியவந்தது. இதனை கேரள சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

    கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவது பற்றி சட்டசபையிலும் பிரச்சினை எழுப்பப்பட்டது. முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அப்துல்லா முகத்திலும், கையிலும் கவசம் அணிந்து சட்டசபைக்கு வந்தார்.

    இதற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும், முதல் மந்திரி பினராய் விஜயனும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக பினராய்விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பேசியதாவது:-

    கேரளாவில் நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த நோய் பாதித்த நாடுகளில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை விட நவீன தடுப்பு நடவடிக்கைகள் கேரளாவில் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நோய் மேலும் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.



    இதற்காக கேரள சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

    நிபா வைரஸ் குறித்து சமூக ஊடகங்கள் பொதுமக்களிடம் பீதி கிளப்புவதை கைவிட வேண்டும். நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதாரத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ்சென்னிதலா பேசும் போது, நிபா வைரசை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கூட்டணி முழு ஒத்துழைப்பு அளிக்கும், என்றார்.#Nipahvirus #PinarayiVijayan
    ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்ட நர்சு, வாலிபர் கவலைக்கிடமாக உள்ளதால் கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் ஏராளமானவர்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 79 பேருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 22 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதைதொடர்ந்து அந்த 22 பேரும் கோழிக்கோடு, மலப்புரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் ஒரு நர்சு மற்றும் வாலிபருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 50 டோஸ் வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து கோழிக்கோட்டுக்கு விமானம் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி கிடைத்த பிறகுதான் அந்த மருந்தை நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று கோழிக்கோடு டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் அருகே மண்ணாச்சேரியில் உள்ள அரசு ஓமியோபதி மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து என்று கூறி மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் ஏராளமானோர் அந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டனர்.

    மாத்திரை சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக 30 பேர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி மருத்துவ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது டாக்டர்களின் அனுமதி இல்லாமல் அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒரு ஊழியர் இந்த மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறும்போது நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. எனவே பொதுமக்கள் இதுபோன்ற வி‌ஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

    கேரளா சென்று திரும்பிய திருச்சி பெண்ணுக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்று தெரிந்து கொள்வதற்காக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அவரின் ரத்தத்தை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தில்லைநகர் 10-வது குறுக்கு தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவர்களின் மகன் கார்த்திக். இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார்.

    அடிக்கடி கேரள மாநிலம் கல்கேட் செல்வது வழக்கம். சமீபத்தில் தாயார் ராஜேஸ்வரியை அழைத்து கொண்டு கார்த்திக் கேரளா சென்றார். அங்கு ராஜேஸ்வரிக்கு சளி, இருமல் ஏற்பட்டு காய்ச்சல் வந்தது. அதற்காக மகன் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் குணமாகவில்லை. பின்னர் ராஜேஸ்வரி திருச்சிக்கு வந்தார்.

    காய்ச்சல் குணமாகாததால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். கேரளா சென்று வந்தவருக்கு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் வந்திருக்கலாமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அனிதா தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் ராஜேஸ்வரியின் ரத்தம், சளி ஆகியவற்றை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    கொல்கத்தாவில் இறந்த கேரள வீரர் மரணத்துக்கு நிபா காய்ச்சல் காரணம் என அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. #Nipahvirus
    கொல்கத்தாவில் இறந்த கேரள வீரர் மரணத்துக்கு நிபா காய்ச்சல் காரணம்

    Deceased jawan's samples test negative for Nipah virus


    Nipah virus, நிபா காய்ச்சல்

    கொல்கத்தா :

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ராணுவ தலைமையகமான வில்லியம் ஃபோர்டில் பணி புரிந்து வந்த சீனு பிரசாத் (27) விடுமுறைக்காக சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்றிருந்தார்.

    விடுமுறை முடிந்து கடந்த மாதம் 13-ம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பிய அவர் கடும் காய்ச்சலால் அவதியுற்று வந்தார். அவரை சக ராணுவ வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் கடந்த மாதம் 20-ம் தேதி அனுமதித்தனர். ஆனால், சிக்கிச்சை பலனில்லாமல் கடந்த மாதம் 25-ம் தேதி சீனு பிரசாத் உயிரிழந்தார்.

    அவரது மரணத்துக்கு நிபா காய்ச்சல் தான் காரணமாக இருக்கும் என சந்தேகித்திருந்த வேலையில், அவரது ரத்த மாதிரிகள் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள தேசிய நோய் கிருமியியல் ஆய்வகத்தில் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், இன்று அவரது ரத்த மாதிரிகளின் முடிவு வெளியாகியுள்ளது. அதில் ராணுவ வீரர் சீனு பிரசாத் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தான் உயிரிழந்தார் என்பது உறுதியாகியுள்ளது. #Nipahvirus







    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டர், திருப்பதிக்கு வந்தபோது நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். #Nipahvirus

    திருப்பதி:

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 18 பேர் பலியான நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளாவை சேர்ந்த ஒரு பெண் டாக்டரும் சிகிச்சை அளித்து வந்தார்.

    இவர், ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று வந்தார். திடீரென அந்த பெண் டாக்டருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உறவினர்கள் மீட்டு திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    காய்ச்சல் ஏற்பட்ட பெண் டாக்டருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருந்ததால், உடனடியாக திருப்பதி ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். பரிசோதனையில் பெண் டாக்டருக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பெண் டாக்டரின் ரத்த மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆந்திர மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பில்லை என்பதால், பெண் டாக்டரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ரூயா மருத்துவமனை இயக்குனர் பாப்ஜி, கண்காணிப்பாளர் நாயக், பெண் டாக்டருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கவனித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கேரள அரசிற்கும், ஆந்திர மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் உயரதிகாரிகள் அனுமதியின்றி வேறு மாநிலங்களுக்கு செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால், அந்த பெண் டாக்டர் அனுமதியின்றி ஆந்திராவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. கலெக்டர் பிரதியும்னா ரூயா ஆஸ்பத்திரிக்கு சென்று நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் நிபா வைரஸ் காய்ச்சல் வேறு யாருக்கும் பராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். #Nipahvirus

    கேரளாவில் நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு நகரின் தாமரசேரி கிறிஸ்தவ டையோசீஸ் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. #NipahVirus #Kerala #holycommunion #Thamarasserydiocese

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 17 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிபா காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு நகரின் தாமரசேரி கிறிஸ்தவ டையோசீஸ் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி தாமரசேரி கிறிஸ்தவ டையோசீஸ் சார்பில் வெளியாகியுள்ள சுற்றறிக்கையில், கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் ரொட்டி மற்றும் திராட்சை ரசம் ஆகியவை கொண்ட நற்கருணையானது நாக்கில் கொடுப்பதற்கு பதிலாக அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளில் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    அதோடு ஞானஸ்நானங்கள், கிரகபிரவேசங்கள், திருமணங்கள் மற்றும் ஜெப கூட்டங்கள் ஆகியவற்றையும் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்கள், பொது கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இறை நம்பிக்கையாளர்கள் நிபா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்கவும், மாநில அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் பேராயர் தெரிவித்துள்ளார். #NipahVirus #Kerala #holycommunion #Thamarasserydiocese
    ×