search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- முதல் மந்திரி பினராய் விஜயன் தகவல்
    X

    கேரளாவில் நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- முதல் மந்திரி பினராய் விஜயன் தகவல்

    கேரளாவில் நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறியுள்ளார். #Nipahvirus #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது.

    நிபா வைரஸ் நோய் பாதித்து நர்சு, ஆட்டோ டிரைவர் உள்பட 18 பேர் பலியானார்கள். இதனால் கேரளா முழுவதும் பெரும்பீதி ஏற்பட்டது.

    நிபா வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க கோழிக்கோடு மாவட்டத்திற்கு செல்வதையே மக்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் தெருக்களில் முக கவசம் அணிந்து நடமாடினர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. மேலும் மத்திய சுகாதார துறை அதிகாரிகள், டாக்டர்கள் குழுவும் கேரளா வந்து ஆய்வு நடத்தியது. நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்தனர்.

    இதையடுத்து கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என 2400 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

    இதில் 2377 பேருக்கு நோய் அறிகுறி இல்லை என்பது தெரியவந்தது. இதனை கேரள சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

    கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவது பற்றி சட்டசபையிலும் பிரச்சினை எழுப்பப்பட்டது. முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அப்துல்லா முகத்திலும், கையிலும் கவசம் அணிந்து சட்டசபைக்கு வந்தார்.

    இதற்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும், முதல் மந்திரி பினராய் விஜயனும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இது தொடர்பாக பினராய்விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் முதல்-மந்திரி பினராய் விஜயன் பேசியதாவது:-

    கேரளாவில் நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த நோய் பாதித்த நாடுகளில் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை விட நவீன தடுப்பு நடவடிக்கைகள் கேரளாவில் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நோய் மேலும் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.



    இதற்காக கேரள சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

    நிபா வைரஸ் குறித்து சமூக ஊடகங்கள் பொதுமக்களிடம் பீதி கிளப்புவதை கைவிட வேண்டும். நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதாரத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ்சென்னிதலா பேசும் போது, நிபா வைரசை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கூட்டணி முழு ஒத்துழைப்பு அளிக்கும், என்றார்.#Nipahvirus #PinarayiVijayan
    Next Story
    ×